Friday, 29 January 2016

இறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்

படத்தின் ட்ரெய்லரை பார்த்ததுமே இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படத்தின் பட்டியலில் சேர்ந்து விட்டது. காலையில் அரங்க வளாத்தினுள் வண்டியை நுழைத்தால் பகீரென்று இருந்தது. அரண்மனை 2 படத்திற்கு கூட்டம் பம்மியது. வண்டி போடவே இடமில்லை. தப்பான படத்தை தேர்வு செய்து விட்டோமே என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. 


வெறும் கதைன்னு பார்த்தால் சக் தே இந்தியா படத்தின் அதே டெம்ப்ளேட் தான். வீரராக தோற்ற ஒருவன் சில வருடங்களுக்கு பிறகு பயிற்சியாளராகி சாதாரண ஒருத்தரை பயிற்சி கொடுத்து உலக சாம்பியன் ஷிப் ஆக்குதே கதை, இரண்டு படத்திற்கு ஒரு வித்தியாசமும் இல்லை. 

ஆனாலும் இறுதிசுற்று படம் சக்தே இந்தியாவை விட நாலு அடி முன்னே நிற்கிறது. காரணம் மிக மிக எதர்த்தமான திரைக்கதை. சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக பிரம்மாண்டமாக நிற்கிறது படம்.

மாதவன் மேன்லினஸ்ஸில் அடித்து தூள் பறத்துகிறார். வயசானாலும் அந்த ஆண்மையின் வசீகரத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. என்னா ஹேர்ஸ்டைல். அதை விட பெரிய விஷயம். பெர்பார்மன்ஸில் பின்னுகிறார். 


இந்த மனிதனுக்குள் இருந்த ஆக்டிங் சென்ஸ் குறைந்து விட்டதோ என்று எண்ணினேன். காரணம் மன்மதன் அம்பு. ஆனால் மின்னலேயில் பார்த்த மாதவன் எந்த சேதாரமும் ஏற்படாமல் கண் முன்னே நிற்கிறார். 

க்ளைமாக்ஸில் ஜாகீர் உசேனிடம் எல்லா திமிரையும் விட்டு ரித்திகாவுக்காக கெஞ்சும் போது பெர்பார்மன்ஸில் பின்னியிருக்கிறார். அதே போல் இறுதியாக தூரத்தில் இருந்தபடி எப்படி அடிப்பது என்று ரித்திகாவுக்கு ஹிண்ட் கொடுப்பது வரை பின்னி பெடலெடுக்கிறார் மனுசன். 

அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள் மாதவன். ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறோம்.


ரித்திகா சிங் முதல் காட்சி முதலே ஆச்சரியப்பட வைக்கிறார். படத்திற்கான ப்ரோமோவில் பார்த்தேன், ஒரு வார்த்தை கூட அவருக்கு தமிழ் பேச வரவில்லை. ஆனால் படத்தில் ப்ராம்ப்ட்டில் வசனம் சொல்லாமல் அட்சர சுத்தமாக பேசுகிறார். அதுவே படத்தின் ஆகச் சிறந்த ப்ளஸ். 

மீன் விற்கும் காட்சியில் ஆரம்பித்து படிப்படியாக ஸ்கோர் செய்து கொண்டே போகிறார். முதல் ரவுண்ட்டில் வேண்டும் என்றே பவுல் செய்ய அம்பயரை முகத்தை பேர்க்கும் போது அப்ளாஸ் அள்ளுகிறார். 

திருட்டுப் பட்டம் சுமந்து வெறுமையுடன் ஆட்டோவில் மாதவனுடன் வரும் போது நடிக்க தெரிந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். இன்னும் என்ன சொல்ல, முழுசா சொல்லனும்னா சொல்லிக்கிட்டே போகலாம். இந்த ஒரு பதிவு பத்தாது. 


நாசர் லோக்கல் பாக்சர் எப்படி இருப்பார்கள் என்பதை கண்முன்னே நிறுத்துகிறார். முதலில் அலட்சியமாக மாதவனை அணுகும் போது பிறகு அவரைப் பற்றி படிப்படியாக புரிந்து கொண்டு அவருக்கு துணை நிற்கும் போதும் செம செம. 

இந்த மாதிரி படங்களில் ஒரு சின்ன அபாயம் இருக்கிறது. நாம் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே இணைந்து பயணிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் சொதப்பி விடும். அப்படி நம்மை படத்துடன் பயணிக்க வைக்க வேண்டியது இயக்குனர் கடமை. அதை சரியாக செய்து வெற்றிக் கனியை பறித்து இருக்கிறார் இயக்குனர். 

படத்திற்கு தேவையில்லாத ஒரு சீன் ஒரு ப்ரேம் கிடையாது. அவ்வளவு நறுக் எடிட்டிங். அந்த செங்கிஸ்கான் பற்றிய விவாதம் சம்பந்தமில்லாமல் இருக்கும் போதே நினைத்தேன். அது க்ளைமாக்ஸ்க்கான லீட் என்று. அதை சரியாக ப்ளேஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர். 

எல்லாம் முடிந்து வெற்றி பெற்ற பிறகு மாதவன் ஒதுங்கியிருக்க ஜாகீர் உசேன் முன்னின்று பெருமை பட்டுக் கொள்ளும் போதே தியேட்டரே எதிர்பார்க்கிறது அந்த காட்சியில் ரித்திகா அவரை அடித்து  பொளக்க வேண்டுமென. அது நடந்ததும் அரங்கில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இது தான் இந்த படத்தின் வெற்றிக்கு சான்று.

நாயகி வட இந்திய முகமாக தெரிகிறதே, அன்னியமாக இருக்கிறதே என்று யோசிக்கும் போது அதற்கு சரியான காரண காரியம் அமைத்து நம்ப வைத்து இருக்கிறார் இயக்குனர். 

பாடல்கள் எல்லாம் ஏஒன். எல்லாமே மான்டேஜ் சாங்ஸ். அதற்கேற்ற சரியான காட்சிகள். 

சினிமா ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்ற வகையில் ஒரு சிறந்த படம் இறுதிச்சுற்று. 

படம் பார்த்து முடித்ததும் மனமெல்லாம் நிறைந்து விமர்சனம் எழுத வீட்டுக்கு வரும் போது ஒரு போன் வந்தது. யூனியன் ஆபீஸில் வெள்ள நிவாரண பொருட்கள் கொடுக்கிறார்கள், வந்து பெற்றுக் கொள்ளவும் என. இப்ப அது அவசியமில்லை கூட. ஆனால் யூனியன் காரர்கள் தயவு வேண்டுமே. அதனால் எதுவும் சொல்ல முடியாமல் நேரே யூனியன் ஆபீசுக்கு போய் விட்டேன். 

எல்லாம் முடியும் நேரம் வேலைக்கு செல்ல வேண்டிய நேரமாகிடுச்சி. அதனால் தான் விமர்சனம் லேட்டு.

ஆரூர் மூனா

Thursday, 14 January 2016

ரஜினி முருகன்

பண்டிகைகளின் கொண்டாட்ட மனநிலை அன்று வெளியாகும் சினிமாவின் மூலம் இன்னும் அதிகமாகனுமே தவிர மூடையே சங்கடத்தில் ஆழ்த்தி விட கூடாது. துப்பாக்கி படம் சரியான உதாரணம், அந்த வருட தீபாவளி மக்களிடையே அதிக கொண்டாட்டமானதற்கு துப்பாக்கிக்கும் பங்கிருக்கிறது.


அது போன்ற கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் சினிமாவாக வந்திருக்கிறது ரஜினிமுருகன். இந்த பொங்கலுக்கு வெளியான மற்ற படங்கள் எல்லாம் முரட்டு பணக்கார நாயகர்கள் படமே. சாமானியனாக மல்லுக்கு நின்று மக்களின் ஆதரவை ஏகோபித்த அளவில் பெற்று சினிமா வணிகத்தில் முன்னுக்கு நிற்பது சிவகார்த்திகேயன்.

படத்திற்கு அலைஅலையென வரும் மக்களே மேற்கூறிய வார்த்தைகளுக்கு சாட்சி. டிரெய்லர் பார்க்கும் போது பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை, மசாலாப் படமாகவோ வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இன்னுமொரு வர்ஷனாகவோ இருந்து விட வாய்ப்பிருக்கிறது என்றே நினைத்திருந்தேன். 


அழகியல் சினிமாவுக்கான எந்த கட்டமைப்பும் இல்லை, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இல்லை, மனதை உருக்கும் கதை இல்லை ஆனாலும் மக்களுக்கு படம் மிகவும் பிடித்து இருக்கிறது. 

அரங்கு நிரம்ப அமர்ந்து வலிக்க வலிக்க சிரித்து செல்கிறார்கள். பாடலுக்கு ஆண்பெண் பேதமில்லாமல் திரையின் முன் நின்று ஆட்டம் போடுகிறார்கள். எந்த பாடலுக்கும் ஒரு ஆண்மகன் கூட தம்மடிக்க வெளியே போகவில்லை. பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்கு இந்த படம் போதும்.

அப்பா, அம்மாவிடம் காசை களவாண்டு நண்பனுடன் செலவழித்து வேலைக்கு போகாமல் அழகான பெண்ணை காதலித்து அவளை கைப்பிடிக்க முயற்சித்து சொத்து பிரச்சனையில் வில்லனுடன் மோதி ஜெயித்து வணக்கம் போடும் வணிக சினிமா தான் ரஜினி முருகன்.

திரையில் பார்க்கும் போது அவ்வளவு ப்ரெஷ்ஷாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். நமக்கு அவரை ரொம்ப பிடிக்குமென்பதால் அவரது எல்லா செய்கைகளையும் ரசிக்கிறோம். நடிப்பில் நல்ல கம்பர்டபிளாக செட்டாகி விட்டார். 

இனி சிவகார்த்திகேயன் தேர்வு செய்யும் சினிமாவே அவரது பாதையை தீர்மானித்து விடும். உடலை வளைத்து, வெயிலில் கறுத்து வருத்தப்பட்டு ஜெயிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. குழந்தைகள் அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் ஆகர்ஷமாக கொண்டாடுகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ், பல ஆங்கிள்களில் எனக்கு வரலட்சுமியை நினைவுபடுத்துகிறார். நல்ல வேளை காலையில் தாரை தப்பட்டை பார்த்து வரலட்சுமி பற்றிய மனநிலை எனக்கு மாறியிருந்ததால் அதையும் கூடுதல் தகுதியாக எடுத்துக் கொண்டே கீர்த்தி சுரேஷை ரசிக்க முடிந்தது. 

நல்ல இளமையும் அழகிய கேரள தேசத்து முகவெட்டும் அவருக்கான கூடுதல் பலம். நன்றாகவே இருக்கிறார்.

வேதாளம் படம் பார்த்து விட்டு சூரியை யாராவது காமெடி நடிகர்கள் என்றால் வாயில் குச்சியை விட்டு குத்திக் கொண்டு இருந்தேன். ஆனால் அவர் மாட்ட வேண்டிய இயக்குனர்களிடம் மாட்டினால் மிளிர்வார் என்பதை இந்த படம் உறுதி செய்கிறது. 

இடைவேளை வரை டம்மியாக வந்து கொண்டிருந்த ராஜ்கிரண் அதன் பிறகு நடிப்பில் பின்னி எடுக்கிறார். சிவகார்த்திகேயன் லெவலுக்கு இறங்கி காமெடியில் கலக்கியிருக்கிறார். 

80களில் எல்லா நடிகர்களுக்கும் போட்டு வெளுத்து எடுத்த இந்த பார்முலாவை இந்த காலத்தில் போட்டு வெற்றிகரமாக கலகலக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். 

இந்த படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்து மகிழும் அற்புத படமல்ல. படம் பார்க்கும் வரை சிரித்து விட்டு அந்த நாளை மட்டும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் கமர்ஷியல் படம் ரஜினி முருகன். 

ஆரூர் மூனா

தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்

சென்னையில் முதல் காட்சி பார்ப்பதென்றால் வீட்டுப் பக்கத்தில் இருக்கும்  ஏஜிஎஸ்ஸில் காலை 9 மணிக்காட்சி எப்படியும் பார்த்து விமர்சனம் போட்டு விடுவேன். விமர்சனத்திற்காக வரும் லைக்கை விட குடும்பத்துடன் கொண்டாடும் விஷேசங்கள் தான் முக்கியம் என்பதால் எப்பொழுதுமே அம்மா அப்பாவுடன் திருவாரூரில் தான் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு கொண்டாட்டங்கள்.


இங்கு முதல் காட்சியே 11 மணிக்கு தான் அதிலும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 25 பேர் தான். இது தான் சிறுநகரங்களின் லட்சணம். சரி விமர்சனத்திற்கு போவோம்.

பாலாவுக்கென ஒரு டிபிக்கல் டெம்ப்ளேட் இருக்கு.  அந்த இலக்கணத்தை துளியும் மாறாமல் எடுத்திருக்கும் படம் தான் தாரை தப்பட்டை. நல்ல சந்தோஷமான கொண்டாட்டாமான கதையில் கனக்கும் க்ளைமாக்ஸ். இது தான் பாலாவுக்கான டெம்ப்ளேட். இது வரை இதை மாற்றி எடுத்த ஒரே படம் பரதேசி, படம் முழுவதுமே கனக்கும்.

தஞ்சாவூரின் மிகப் பாரம்பரிய கர்நாடக இசைக் கலைஞர் ஜிஎம் குமார். பாரம்பரிய கலைகளில் மீது மக்களின் கவனம் குறைந்து போனதால் வறுமையில் இருக்கும் அவரது மகன் சசிக்குமார் ஒரு பாரம்பரிய நடனக் குழு வைத்திருக்கும் கலைஞர். அங்கு ஆட்டக்காரியாக இருக்கும் வரலட்சுமி, புரிதலுடன் இருக்கும் சசிக்குமாரின் காதலி. எங்கு சென்று ஆடினாலும் கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம் தான் குழுவுக்கு. 


காதலை வெளியில் சொல்லாமல் தயக்கத்துடன் இருக்கிறார் சசிக்குமார். சசியின் மீது அதி தீவிர காதலுடன் இருக்கும் வரூவை பெண் கேட்டு வருகிறார் சுரேஷ். வரூவின் அம்மா, மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என சசியிடம் சொல்லி அவர் மூலமாகவே சம்மதிக்க வைக்கிறார். 

சசியின் வார்த்தைக்காக கல்யாணம் செய்து கொள்கிறார் வரூ. சில மாதங்கள் கழித்து வரூ ஏமாற்றப்பட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டதை அறிகிறார் சசி. வரூவுக்கு என்ன ஆனது, ஏமாற்றியவன் யார், அவரை சசி இக்கட்டில் இருந்து மீட்டாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

சசிக்கு ஆல்டைம் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் இந்த படம், கடுமையான உழைப்பை படத்திற்காக கொடுத்து இருக்கிறார். க்ளைமாக்ஸில் அவருக்கான அடியை வாங்கியிருந்தால் எவனும் செத்தே போயிருப்பான். 


எப்பொழுதும் வருமான குறைச்சலால் தாழ்வு மனப்பான்மையில் வரூவிடம் காதலை சொல்ல தயங்கும் சசி மனதை கவர்கிறார். க்ளைமாக்ஸ் விஸ்வரூபம் பயத்தை  உண்டாக்குகிறது. 

படத்தின் ஆகச் சிறந்த பலம் சந்தேகமேயில்லாமல் வரூ தான். என்னா பெர்பார்மன்ஸ், என்னா ப்ரசன்டேன்சன். தலையை குனிந்து வணக்கம் செலுத்துகிறேன் வரலட்சுமி.

சத்தியமாக எந்த நடிகையும் நடிக்க முன் வராத கதாபாத்திரம் அது. முதலில் குட்டைப் பாவாடையுடன் ஆடும் கரகாட்டகாரிகளுக்கான உடையை அணிவதற்கே பெரிய தைரியம் வேண்டும். சசி பசிக்கிறது என்று சொன்னதற்காக காலில் காயத்துடன் தெறிக்க நடனமாடி மயங்கி விழும் காட்சியிலும், சசிக்கு பசிக்கும் என்றால் அம்மணமாக கூட ஆடுவேன் என்று சொல்லும் காட்சியிலும் பெர்பார்மன்ஸில் தெறிக்க விடுகிறார். 

வில்லன் சுரேஷால் ஏமாற்றப்பட்டு ப்ராவுடன் ஒருத்தனை அடித்து துவைத்து வில்லனிடம் சாவு அடி வாங்கும் காட்சியிலும், குடித்து விட்டு ஜிஎம் குமாரிடம் மல்லுக்கு நிற்கும் காட்சியிலும் பட்டைய கிளப்புகிறார். அவருக்கான மாஸ்டர் பீஸ் படம் இது.

காலமாற்றத்தினால் வலுவிழந்தும் கம்பீரம் குறையாமல் திமிருடன் திரியும் ஜிஎம் குமார் மனதை நெருடுகிறார். அத்தனை அவமானங்களையும் கடந்து சாதித்து விட்ட திருப்தியில் சாகும் போது மனதை தொடுகிறார்.

கர்ண கொடூர கதாபாத்திரம் சுரேஷுக்கு, இனி கோலிவுட்டை ஒரு வலம் தில்லாக வருவார். 

அமுதவாணன் ஆனந்தி சம்பந்த பட்ட காட்சிகள் வருத்தத்தை, இயலாமையை அப்படியே கண்முன், நிறுத்துகிறது.

இத்தனை பாராட்டுகள் இருந்தாலும் அத்தனையும் போய் சேரும் நதிமூலம் பாலா. இத்தகையப்பட்ட ஆட்களிடம் இருந்து வாங்கியிருக்கும் பெர்பார்மன்ஸ் தான் படத்தை எடுத்து நிப்பாட்டுகிறது. 

பின்னணி இசையும் பாடல்களும் இளையராஜா தான் இசையின் கடவுள் எனும் பெயரை நிரந்தரமாக்கி நிறுத்துகிறது. 

இவ்வளவு இருந்தும் பாலாவின் அசைக்க முடியாத டெம்ப்ளேட், யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸ் படத்தின் பலவீனம். இந்த டெம்ப்ளேட்டை விட்டு வெளியில் வராவிட்டால் பாலா இனி தொடர்ந்து முன்னணியில் இருப்பது சிரமம். 

தனிமனித உணர்வுகளை இந்த அளவுக்கு மெருகூட்டி மக்களுக்கு படைப்பது பாலாவுக்கு மட்டுமே கிடைத்த வரம்.

ஆரூர் மூனா

Monday, 11 January 2016

லோயர் பெர்த்தும் மிலிட்டரி ரம்மும்

கிறிஸ்துமஸ் சமயத்திலேயே குடும்பத்துடன் போய் திருவாரூரில் உட்கார்ந்தாச்சி. பொங்கல் வரை வீட்டம்மாவும் முல்லையும் திருவாரூர் வாசத்தில். புத்தாண்டுக்கு பிறகு நான் மட்டும் சென்னை வந்து வேலைக்கு போய்க் கொண்டு இருக்கிறேன். 


முல்லையை விட்டு இருக்க மனமில்லாததால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை திருவாரூர் விஜயம் நடந்துக் கொண்டு இருக்கிறது. நேற்றிரவு சென்னைக்கு பயணமானேன். 

எப்போதுமே அரிசி, உளுந்து, புளி போன்ற பொருட்கள் திருவாரூரில் இருந்து தான் எடுத்து வந்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியே பழகிப் போச்சி. நேற்றும் நாற்பது கிலோவுக்கு மேல் வெயிட்டுகளை சுமந்து கொண்டு ரயிலேறுவதால் சைடு லோயர் பெர்த் புக் பண்ணியிருந்தேன். 

எப்பொழுமே எனக்கான லோயர் பெர்த்தை கடன் கொடுத்தே பழகிப் போன நான் இந்த முறை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கடுகடுப்பான முகமூடி அணிந்து பெட்டியில் ஏறினேன். 

முகமூடியை கழற்றி எறியும் நிலையை உறுதிப்படுத்த வழக்கம் போல ஒரு பெண்மணி வந்து பெர்த்தை மாற்றிக் கொண்டு அப்பர் பெர்த்துக்கு  செல்லும்படி கேட்டார். கையில் நிறைய பொருட்கள் இருப்பதால் யோசித்து மறுத்தேன். "செங்கல்பட்டுல இறங்கிடுவோம் தம்பி. வயதானவள், அப்பர் பெர்த்தில் ஏறமுடியாது" என்று கெஞ்சினார். 

சில நிமிடங்களில் மனசு கேட்காமல் அவரிடம் பெர்த்தை கொடுத்து விட்டு சைடு அப்பருக்கு மாறினேன். கடுகடுப்பான முகமூடி என்னைப் பார்த்து சிரித்தது. தூக்கம் வரவில்லை. மனசு முழுக்க பொருட்களின் மீது தான் இருந்தது. 

அந்த அம்மா செங்கல்பட்டில் இறங்க பெர்த்தை விட்டு அகன்ற சமயம் அப்பர்பெர்த்தில் இருந்து இறங்கினேன். லோயர் பெர்த்தில் அடுத்த கூபேயில் இருந்து வந்து வேறொரு பெண்மணி அமர்ந்தார். கடுப்பாகி அம்மா நகருங்க, இது என் பெர்த்து என்று சொல்ல முனங்கிக் கொண்டே எழுந்து சென்றார்.

5 நிமிடம் கழித்து ஒன்னுக்கு போய்விட்டு வந்தால் மிடில்பெர்த்தில் படுத்திருந்த பெண்மணி வந்து சைடு லோயரில் படுத்து இருந்தார். மண்டை காயும் அளவுக்கு சூடாகிப் போனேன். அவரிடமும் சத்தம் போட்டு எழுப்பி விட்டு பெர்த்தில் படுத்தேன். 

போராளி சட்டை போட்டு லோயர் பெர்த் கேட்கும் வயதான ஆட்களையெல்லாம் டிஸ்சும் டிஸ்சும்னு சுட்டு விடும் அளவுக்கு கோவத்தில் பொங்கிப் போனேன். என் அம்மாவுக்கு கூட என்றாவது இந்த நிலை வந்தால் அவரும் லோயர் பெர்த் கேட்பாரே என்று சமாதானமானேன்

படக்கென போராளி சட்டையை கழட்டி விட்டு சமூக ஆர்வலர்சட்டையை மாட்டிக் கொண்டு இனி வயதானவர்கள் கேட்டால் எப்போதும் போல் லோயர் பெர்த் கொடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். 

எழும்பூரில் இறங்கிய போது செம குளிர், நடுக்க ஆரம்பித்தது. ரெண்டு நாளைக்கு முன் நள்ளிரவிலும் வேர்த்துக் கொட்டிய சென்னையா இது என்று ஆச்சரியமானது. 

சமூக ஆர்வலர் சட்டையை கழட்டி கடாசி விட்டு மகாதியான பிரபுவாகிப் போனேன். இன்னும் இருக்கும் இரண்டு நாட்களும் மிலிட்டரி ரம் இருந்தால் தான் குளிரும் சென்னையை சமாளிக்க முடியும் போல.

ஆரூர் மூனா

Thursday, 31 December 2015

வெறி கொண்ட புத்தாண்டு சபதம்

பொதுவா எந்த புத்தாண்டு சபதமும் எடுப்பதில்லை. ஏன்னா ஒரு நல்ல பழக்கமும் நமக்கு இருந்ததில்லை. எந்த கெட்டப் பழக்கத்தையும் விடனும்னு நினைச்சதில்லை. எந்த கெட்டப் பழக்கத்தையும் நாமளா தான் விடனும். கட்டாயப்படுத்தினா அது இன்னும் அதிகரிக்கும். தம்மை விடுறேன், தண்ணியை விடுறேன்னு எந்த வில்லங்க சபதமும் எடுத்ததில்லை. 


2014 என் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு. என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு போன ஆண்டு. ஒரு துர்சம்பவத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பையும், கேரியர் வீழ்ச்சியையும், உருவாக்கி விட்ட கெட்டப் பெயரையும் கடந்து சமநிலைக்கு வரவே 10 வருடங்களாவது ஆகும் என்று நினைத்தேன். ஏனென்றால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவு அவ்வளவு. அதன் பிறகு தானே உயரத்தைப் பற்றி யோசிக்க முடியும்.

கூடவே இருந்த உடன்பிறப்பும் கிடைத்தவரை லாபம் என பொது சொத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளிக் கொண்டு போக எல்லா சொத்துக்களையும் இழந்து கிட்டத்தட்ட காலாவதியான நிலை தான். மற்ற இழப்பை விட உடன்பிறப்பின் துரோகம் ரொம்பவே வலித்தது. 

2015ல் இவற்றை குறைக்க பெரும் பாடுபட்டேன் என்றே சொல்லலாம். கெட்டப் பெயரை நீக்குவது என்பது எல்லாம் சாத்தியமே இல்லை. அதுவும் திரும்பிய பக்கமெல்லாம் உறவினர்களையும், நண்பர்களையும் பெற்ற நான் வருட ஆரம்பத்தில் எந்த நிகழ்வுக்கு போனாலும் கூனிக்குறுகி தான் இருந்தேன். 

ஆண்டின் இறுதியில் இதன் மாற்றத்தை உணரத் தொடங்கினேன். உறவினர்களும், நண்பர்களும் பாசத்தையும், நட்பையும் பலப்படுத்தி என் இறுக்கத்தை குறைத்தனர். அவர்களுக்கு பெருமளவில் நன்றிகள்.

கேரியரில் துவங்கிய இடத்தில் இருந்தே திரும்ப ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை. பரவாயில்லை. கலங்காமல் துவக்கி ஆண்டின் இறுதியில் முன்னேற்றப் பாதையில் கேரியரை செலுத்தியாச்சி. 2016ல் இளநிலை பொறியாளராக பதவி உயர்வு கிடைக்க 99.99 சதவீத வாய்ப்பு வந்து விட்டது. இயல்புநிலையில் கேரியரும். உடன்பணிபுரிந்தோருக்கும் உயரதிகாரிகளுக்கும் நன்றிகள்.

பொருளாதார இழப்பு கடுமையான வலியை கொடுத்தது. நிம்மதியின்றி உறக்கமில்லாமல் எல்லா இரவுகளும் கழிந்தன. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த ஆண்டு நன்றாகவே உணர்ந்தேன். ஆண்டின் துவக்கத்தில் 30 லட்சம் கடன் இருந்தது. 

அம்மாவின் பூர்வீக நிலம் விற்று கிடைத்த என் பங்கு பணம், பொது சொத்தில் உடன்பிறப்பின் துரோகத்தால் ஏற்பட்ட இழப்பு போக கிடைத்த மிச்ச பணம், வங்கி லோன், வீட்டமணியின் நகை விற்ற பணம் எல்லாம் சேர்த்து முக்கால்வாசி கடன்களை அடைத்தாகி விட்டது. ஆண்டின் இறுதியில் இரண்டரை லட்சம் மட்டுமே கடன் என்ற நிலையை அடைந்தாகி விட்டது. 

2016 முதல் பே கமிஷனின் சம்பள உயர்வு அமலுக்கு வருவதால் மே அல்லது ஜுனில் இன்னொரு லோனை போட்டு மிச்ச கடனையும் முடித்து விட்டால் அவ்வளவு தான். கடனின்றி நிம்மதியாக உறங்கலாம். மாத சம்பளக்காரனுக்கு அது தானே வேண்டும்.

 திருவாரூரில் ஒரு ப்ளாட் வாங்கி லோன் போட்டு வீடு கட்டி குடியேறியாச்சி. உடன்பிறப்பின் தொல்லையில்லாமல் பங்கு கேட்க ஆள் வைத்துக் கொள்ளாமல் நானே நான் மட்டுமே அப்பாவின் உதவியுடன் கட்டிக் கொண்ட வீடு. சற்று கவுரவமாக இருக்கிறது.

ஆக 2014ல் ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் நீங்கி  இயல்புநிலையை அடைய எப்படியும் பத்து வருடம் ஆகும் என்ற நிலையில் இரண்டே வருடத்தில் சாதித்தது மகிழ்ச்சியே.

இந்த விஷயங்களையெல்லாம் ஏன் பதிவில் போட வேண்டும் நாசூக்காக தவிர்த்து விடலாமே என்று கூட தோணியது. இதை பதிவு செய்து வைத்திருப்பது அவசியம். மறுபடியும் ஆணவத்தில் ஆடத் தொடங்கினால் என் தலையைத் தட்டி நிலையை உணர்த்த இந்த பதிவு அவசியம் என மூளை சொன்னது. அதனால் பதிவிட்டு விட்டேன். 

இந்த ஆண்டு இறுதியில் நண்பர்களுடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சியையும் மனவலிமையையும் தந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் என்னைப் போல் பெங்களூருவில் இருந்து ஒரு நண்பனும், ஜப்பானில் இருந்து ஒரு நண்பனும், சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பனும் வந்திருந்தார்கள். கடந்த ஆறு நாட்களும் மகிழ்வுடனும், கும்மாளத்துடனும் கழிந்து விட்டது. 

இந்த மகிழ்வை ஆண்டு முழுவதும் நான் தக்க வைத்திருந்தால் பாக்கியசாலி தான். 

வரும் ஆண்டு லட்சியம் என்ன, 

கடன்களை அடைத்த பின்பு, எனக்கென வீட்டின் உள்ளேயே ஒரு ஸ்டுடியோ அமைத்து, யூடியுப் சேனல் துவக்கி, நல்ல கேமிரா வாங்கி, சினிமா விமர்சனங்களை வீடியோக்களாக போட்டுத் தள்ளி, முதல் நாள் முதல் விமர்சனம் நம்மளுதா இருக்கனும் என்ற கொள்கையை விட்டுத்தராமல் இருக்கனும். இதுக்கு எந்த சிக்கலையும் என் வீட்டம்மணி ஏற்படுத்தாமல் இருக்கனும்.

என் பொண்ணு செய்யும் சேட்டைகளை கட்டுக்குள் கொண்டு வரும் திறமையை கத்துக்கனும், வாரம் ஒரு நாள் மட்டும் மகாதியானத்தில் கலந்துக்கனும், வலைப்பூவில் எழுதுவதை விட்டு விடாமல் இருக்கனும், நக்கீரன் வாயை கட்டனும், பட்ஜெட் போட்டு செலவு செய்ய பழகிக்கனும், ரஜினி படம் முதல் காட்சியை எப்பாடு பட்டாவது பார்க்கனும். அவ்வளவு தான்.

வாசகர்களுக்கும், வாசக நண்பர்களும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன்பணிபுரிபவர்களுக்கும், துரோகத்தால் முதுகில் குத்திய உடன்பிறப்புக்கும், கடன் கொடுத்தவர்களுக்கும், இவனிடம் இருந்து எப்படிடா பணத்தை திரும்ப வாங்குவது என்று தவிப்பவர்களுக்கும், கடவுள் நம்பிக்கையில்லாத என்னிடம் சிக்கலை பயன்படுத்தி மதமாற்றம் ஏற்படுத்த முனைந்தவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முயன்ற உறவினர்களுக்கும், பெயர் விட்டுப் போன அன்பு உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஆரூர் மூனா

Wednesday, 23 December 2015

பசங்க 2 - சினிமா விமர்சனம்

படத்தின் ட்ரெய்லரை பார்த்த போதே தெரிந்து விட்டது. இது தாரே ஜமீன் பர் படத்தின் மறுஉருவாக்கமாக தான் இருக்கும் என்று. படமும் அந்த அளவுக்கு இருந்தால் கூட போதும் என்ற மனநிலையில் தான் படத்துக்கு போனேன். 


இப்பவும் தாரே ஜமீன் பர் படம் பார்த்தால் இறுதிக்காட்சியில் தேம்பித் தேம்பி அழுவேன். அந்த அளவுக்கு அந்த பையனின் இயலாமையை நமக்குள் கடத்தி அவனுடனே பயணிக்க வைத்திருப்பார்கள். 

நான் எதிர்பார்த்த மாதிரியே தாரே ஜமீன் பர் படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து பசங்க 2 வாக நமக்கு அளித்திருக்கிறார்கள். 

முனிஸ்காந்த் தம்பதிக்கு ஒரு பையனும் கார்த்திக் குமார் - பிந்து மாதவி தம்பதிக்கு ஒரு பொண்ணும் பிறக்கிறார்கள். அந்த பசங்க ஒன்னாம் நம்பர் வாலுவாக இருக்கிறார்கள். நன்றாக படித்தாலும் மார்க் எடுப்பதில்லை. அதனால் வருடத்திற்கு ஒரு ஸ்கூல் என மாறிக் கொண்டே இருக்கிறார்கள். 


ஒரு கட்டத்தில் ஒரு போர்டிங் பள்ளியில் சேர்ப்பதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து தாம்பரத்திற்கு குடி வருகிறார்கள். அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் சைல்ட் சைக்காலஜிஸ்ட் டாக்டர் சூர்யா - பள்ளி ஆசிரியை அமலா பால் தம்பதிகள் இவர்கள் சிக்கலை அறிந்து பசங்களின் திறமையை  மெருகேற்றி அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு தருகிறார்கள். அவ்வளவு தான். 

படத்தின் கதையே இது தான் என்பதால் சொல்லலாமா என்று  யோசித்தேன். தாரே ஜமீன் பர் கதை தான் என்று சொல்லி விட்டதால் அதில் என்ன ரகசியம் வைப்பது என்று சொல்லிவிட்டேன். 

முனிஸ்காந்த்தின் மகனாக வரும் நிசேஷ் பிரமாதமாக நடித்து இருக்கிறார். அவனது எக்ஸ்பிரசன்கள் பிரமாதம். பாத்ரூமில் பேய் இருப்பதாக சொல்லி பசங்களை பயமுறுத்தும் காட்சியிலும், அதிகாலையில் பாத்ரூமில் கொட்டமடிக்கும் காட்சியிலும் அசத்தி இருக்கிறான். 


கார்த்திக் குமாரின் மகளாக வரும் வைஷ்ணவி கூட நன்றாக நடித்து இருக்கிறார். 

சூர்யா கதையை கேட்டு தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதே படத்திற்கு கூடுதல் பலம். அஷ்ட கோணல் சேட்டைகள் வித்தியாசமான சூர்யாவை நமக்கு காட்டுகிறது. 

படத்தின் கலகலப்புக்கு ஆகச்சிறந்த உத்திரவாதமாக இருப்பது முனீஸ்காந்த். வாய்ப்புகள் கிடைக்காமல் சொற்ப கேரக்டர்களில் நடித்து வந்து முண்டாசுபட்டியில் கலக்கி எடுத்து லைம்லைட்டுக்கு வந்தவருக்கு இந்த படம் போனஸ். 

எல்லா பசங்க மனதிலும் இடம் பிடித்து விடுவார். க்ளெப்டோமேனியா பிரச்சனை இருப்பதால் போகும் இடங்களில் எல்லாம் சிறு பொருட்களை திருடி வந்து பிரச்சனையாவதால் மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்காக போய் அவரது ஸ்டெதஸ்கோப்பையே ஆட்டைய போட்டு வருவது செம ரகளை. 


இவ்வளவு சிறப்பு சொன்னாலும் படம் கொஞ்சம் டல்லடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் பசங்களின் குறையை நம்முள் கடத்தவில்லை. அவர்கள் பிரச்சனையை வெகு ஜாலியாக சொல்வதால், யாராவது வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைங்கோ என்று நாம் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் சூர்யா வந்து அவர்களின் குறைகளை சரிசெய்வது நமக்குள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. 

இந்த பிரச்சனை தாரே ஜமீன் பர் படத்தில் சரியாக பார்வையாளனுக்குள் கடத்தப்பட்டு இருக்கும். அப்புறம் அமீர்கான் வந்து சரி செய்து அந்த பையன் சாதிக்கும் போது நாமும் ஆனந்த கண்ணீர் விடுவோம். 

பசங்க 2 படத்தின் காட்சிகள் ஜாலியாக வந்து ஜாலியாகவே செல்வதால் நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவும் ஒரு படம் என்றே கடந்து செல்கிறது. இடைவேளைக்கு பிறகு சில காட்சிகள் லேக் ஆகி கடுப்பேத்துகிறது. 

அரசு பள்ளி ஆசிரியரே தன் மகனை தனியார் பள்ளியில் சேர்க்க வரிசையில் நிற்பதும் அதனை சமுத்திரக்கனி வந்து கண்டிப்பதும் சரியான சவுக்கடி. 

ஒரு டிஸ்லெக்சியா மாதிரி குறைபாடுகள் இருந்து சரி செய்தால் ஒகே. ஆனால் சூப்பர் ஆக்டிவ் அதாவது வாலுத்தனமாக இருக்கும் பிள்ளைகள் ஒரு குறை என்பது ஏற்றுக் கொள்ள சிரமமாக இருக்கிறது. 

தனியார் பள்ளிகளின் கண்டிப்பு, தேர்வுக்கான ஸ்ட்ரெஸ் போன்றவற்றை குறை சொல்லியிருப்பதற்கு வாழ்த்துகள். பசங்களை குறை சொல்லும் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய சினிமா பசங்க 2. 

ஆரூர் மூனா

Thursday, 17 December 2015

தங்கமகன் - சினிமா விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு பிறகு அதே டீம் தங்கமகனாக களமிறங்கியிருக்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சி தரும் இணைப்பாக தகதக எமியும், சமந்தாவும்.


இயக்குனரின் பலமே காட்சிக்கு காட்சி அலுக்காமல் இணைப்பது தான் அதுவும் முதல் பாதி செம ரகளை. ஒரு நொடி கூட சலிக்கவில்லை. ரொமான்ஸ், காமெடி, செண்ட்டிமெண்ட் என்று பிரமாதமாக போகிறது. 

கேஎஸ் ரவிக்குமார், ராதிகாவுக்கு ஒரே மகனாக தனுஷ். காலேஜில் படிக்கும் காலத்தில் எமியுடன் காதல் வந்து ஒரு சண்டையில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். 

இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கும் கேஎஸ் ரவிக்குமார் அவரது அலுவலகத்திலேயே தனுஷை வேலைக்கு சேர்த்து விட்டு சமந்தாவை திருமணமும் செய்து வைக்கிறார். இயல்பாக  செல்லும் வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் கேஎஸ் ரவிக்குமார் வீட்டிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். 


அப்பா ஒரு முக்கிய பைலை தொலைத்ததால் தனுஷ்க்கு வேலை போய் விடுகிறது. வீட்டையும் காலி செய்து ஒரு குடிசை மாதிரியான வீட்டு வருகிறார்கள். தனுஷ் பிரியாணி கடைக்கு வேலைக்கு போகிறார். 

என்ன நடந்தது, அப்பாவின் சாவுக்கு காரணம் யார். அப்பாவின் மீது விழுந்த பழியை எப்படி துடைத்து பழையபடி வேலைக்கு போகிறார் தனுஷ் என்பது தான் தங்கமகன் படத்தின் கதை.

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தில் வந்த மாதிரியே அசால்ட்டு பையன். எதற்கும் கவலைப்படாத இளைஞன் கதாபாத்திரம். அல்வா மாதிரி விழுங்கித் தள்ளுகிறார். எமியுடனான ஈர்ப்பும், சமந்தாவுடனான தாம்பத்யமும் இயல்பாக செய்து அசத்தியிருக்கிறார்.


ஒரே குறை முகத்தில் முத்தல் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் ஸ்கூல் பையன் பாத்திரத்திற்காக மீசையை வழித்து விட்டு வந்து நின்றால் யாரும் நம்ப மாட்டார்கள். வாலிபன் பாத்திரத்தை மெயின்டெயின் பண்ணுங்கள் போதும். 3 படத்துடன் அந்த பால்ய வயதுக்கான முகவெட்டு போய் விட்டது.

படத்தின் ஆகச் சிறந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது சமந்தாவின் பாத்திரப் படைப்பு. எல்லா தமிழ் ஆண்களுக்கும் பெண் என்றால் அச்சம், மடம், நாணத்துடன் இருக்க வேண்டும். வேலைக்கு போகும் போது அவசர அவசரமாக டிபன் பாக்ஸ் வாசலில் கொடுத்து ரொமான்ஸாக வழியனுப்ப வேண்டும். 


மாலை நேரம் வேலை முடிந்து கணவன் வீட்டுக்கு வரும் நேரம் வாசலில் சென்று டிபன் பாக்ஸை வாங்கி அன்புடன் வரவேற்க வேண்டும், பெற்றவர்களை விட கணவன் முக்கியம் என இருக்க வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு ஆண்கள் எதிர்பார்க்கிறார்களோ அப்படியெல்லாம் சமந்தா படத்தில் இருக்கிறார். 

அதனால் நம்மால் கூடுதல் ரொமான்ஸ் உடன் படத்தை ரசிக்க முடிகிறது. இது அழகு ரீதியிலான ஈர்ப்பு கேரக்டரைசேசன் பலம். இந்த திறமையை வில்லன் பாத்திரப்படைப்பிலும் செலுத்தியிருந்தால் இன்னும் கலக்கியிருக்கும்.

எமி ஜாக்சன் சிங் ஈஸ் ப்ளிங் படத்தில் செமத்தியாக இருப்பார். நமக்கே காதலிக்கனும் போல ஆசையாக இருக்கும். காஸ்ட்யூம் எல்லாம் அள்ளும். இந்த படத்தில் தமிழ்நாட்டு பொண்ணாக்குகிறேன் என்று அவருக்கு சுரிதார். நெற்றிப் பொட்டு கையில் வளையல் என்று கொடுத்து படுத்தி எடுத்து இருக்கிறார்கள். நமக்கு தான் கடுப்பாகிறது.

முதல் பாதி முழுக்க தனுஷ் உடன் சேர்ந்து கலகலப்பை குத்தகைக்கு எடுத்து இருப்பவர் சதீஷ். அவ்வப்போது ஒன்லைனில் கலகலக்க வைக்கிறார். 

காதலும் ஆரவாரமுமாக போகும் முதல் பாதி இரண்டாம் பாதியில் தொடர்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லனும். காட்சிகள் சலசலக்கின்றன. சில இடங்களில் கொட்டாவி வருகிறது. ஒரு வழியாக இழுத்துப் பிடித்து படத்தை முடித்து வைக்கிறார்கள். 

படத்தின் இன்னொரு மைனஸ் வில்லன். படு சொத்தையான கேரக்டரைசேசன். தீடீர் வில்லன் ஜெயப்பிரகாசம் கதாபாத்திரமும் சொத்தையாக தான் இருக்கிறது. வில்லன் எடுபடாததால் ஹீரோயிசமும் எடுபடவில்லை. 

படத்தில் சிங்கிள் பெட்ரூம் வீட்டில் அறைக்குள் மகனும் மருமகளும் இருக்க ஹாலில் அப்பாவும் அம்மாவும் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு படுப்பதும். ரூமுக்குள் கட்டிலில் படுத்தால் சத்தம் வரும் என்பதற்காக தனுஷும் சமந்தாவும் தரையில் ரகசியமாக படுத்து ரொமான்ஸ் பண்ணும் காட்சி செம க்ளாஸ். சென்னையில் ஒன்டு குடித்தன வீடுகளில் இந்த காட்சியை நேரில் கண்டு இருக்கிறேன்.

விஐபி படத்தில் அம்மா செண்ட்டிமெண்ட் என்றால் இந்த படத்தில் அப்பா செண்ட்டிமெண்ட். ஆனால் முதல் பாதியில் அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை குறிப்பிடும் படியான காட்சிகள் இல்லாததால் நமக்கு விஐபி படத்தில் வந்த பீல் இதில் வரவில்லை.

பாடல்கள் செமத்தியாக இருக்கிறது. பாடல்களுக்காக எடுக்கப்பட்டு இருக்கும் மாண்ட்டேஜ் சீன்ஸ் கூட ரசிக்கும்படி தான் இருக்கிறது. 

இரண்டாம் பாதியில் சுவாரஸ்ய குறைவு இருந்தாலும் படத்தை தாராளமாக பார்க்கலாம் படத்தின் சுவாரஸ்யமான காதல் காட்சிகளுக்காக.

ஆரூர் மூனா