Friday, 28 April 2017

பாகுபலி 2 - சினிமா விமர்சனம்

கண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல போய் பரவசத்தை அனுபவித்து விட்டு வாருங்கள். 


2009ல் இருந்து சினிமா விமர்சனம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். ரொம்ப வருடமாக வெள்ளிக்கிழமை சினிமாவுக்கு போகாமல் இருந்ததே இல்லை. ஆனால் அயனாவரத்துக்கு வீடு மாறிய பிறகு நேரமும் இடமும் தகையாமல் சினிமாவுக்கு போக முடியவில்லை, விமர்சனமும் எழுத முடியவில்லை. 

பைரவாவில் இருந்து விட்டுப் போனதை தொடரலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. இந்த படத்தில் இருந்து விமர்சனத்தை தொடர நினைக்கிறேன், பார்ப்போம் முடியுமா என்று. 

படத்தின் சுவாரஸ்ய முடிச்சுகள் என்னையறியாமல் நான் சொல்லி விடும் வாய்ப்பு இருப்பதால் சுவாரஸ்யத்துடன் பார்க்க நினைப்பவர்கள் இத்துடன் கழண்டு கொள்ளலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் துவங்குகிறது.


பிரபாஸை அரசனாக அறிவித்த பிறகு முடிசூட்டிக் கொள்ள நாடும் நாயகனும் தயாராகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாஸ் அனுஷ்காவை சந்திக்கிறார். அவரிடம் காதல் வயப்பட்டு மன்மத சாகசங்கள் புரிந்து கொண்டு இருக்கும் வேலையில் தகவல் தொடர்பு சிக்கல் காரணமாக பிரபாஸ்க்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடைவெளி ஏற்படுகிறது.

அதை பயன்படுத்தி ராணா அரசனாகிறார். மக்கள் பிரபாஸ் பக்கம் நிற்க வெறுப்படையும் ராணா சூழ்ச்சி செய்து பிரபாஸை கொல்கிறார் (தட் பாகுபலியை கட்டப்பா எந்துக்கு சம்ப்பயாடு மொமண்ட்), மகன் சரத் குமார் ச்சே (அப்பா மகன் கதையென்றாலே சரத்குமார் தான் நினைவுக்கு வருகிறார்) பிரபாஸ் பழிக்கு பழி வாங்குவதே பாகுபலி 2 படத்தின் கதை.

முதல் பாதி பரபரவென எங்கும் தொய்வில்லாமல் இடைவேளை வரை செல்கிறது. அதுவும் இடைவேளையில் பதவியேற்கும் நிகழ்வும் மக்களின் எதிர்வினையும் சிலிர்க்கிறது, வேறென்ன மயிர் தான். 

இன்டர்வெல் விட்டதும் ஒன்னுக்கு அடிக்க செல்பவன் கூட கக்கத்தில் கட்டி வந்தவன் போல் கையை அகட்டிக் கொண்டே செல்கிறான். அந்தளவுக்கு மக்கள் படத்துடன் ஒன்றியிருந்தார்கள்.


அதன் பிறகு சில காட்சிகள் லேக் ஆகிறது. அதுவும் க்ளைமாக்ஸ் ரொம்ப ஓவர்ர்ர்ரு. மேன் ஆப் ஸ்டீல் (படத்தின் பேரு அதுதான) படத்தில் வரும் ரோபோ சண்டை போல் ஆகிறது. இரும்பால் அடித்துக் கொள்கிறார்கள், கருங்கல்லால் அடித்துக் கொள்கிறார்கள். பனைமரத்தை ப்ளெக்ஸிபிலாக்கி 100 அடிக்கு கும்பலாக பறக்கிறார்கள். எப்படா படம் முடியும் என்பது போல் ஆகி விட்டது.

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தின் ஆக்கத்திற்காக கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம் இது. என்ன மாதிரியான காட்சிகள், என்ன மாதிரியான நுண்ணுழைப்புகள், நம்ம ஊரு சினிமாடா என்று காலரை தூக்கி விட்டுக்கலாம்.

படம் முழுக்க வருகிறார் சத்யராஜ், படத்தின் நாயகன் இவரோ என்று நமக்கு சந்தேகமே வருகிறது. சிறந்த பண்பட்ட நடிப்பு, காலம் கொடுத்த கொடை இப்படத்தில் பிரதிபலிக்கிறது. நாசர் அந்த நயவஞ்சகம், மகன் மீதான பாசம், குறுக்குபுத்தி, இறுதியில் எல்லாம் இழந்து அவமானத்தில் குறுகி சபையில் நிற்கும் போது அனுபவத்தை கொட்டியிருக்கிறார்.


நாயகனின் அறிமுக காட்சியில் மதம்பிடித்த யானை ஒரு  பக்கம் ஓடி வருகிறது, எதிரில் ரம்யா கிருஷ்ணன் நடந்து வர, கதவை உடைத்து நாயகன் என்ட்ரி, நான் கூட பயந்துட்டேன். முதல் பாகத்தில் காட்டெருமையை வில்லன் அடக்கி மண்டையில் மடாரென அடித்து வீழ்த்துவது போல் பிரபாஸ் ஒரே கொட்டுல யானையை வீழ்த்திடுவாரோ என, நல்ல வேளை அப்பயெல்லாம் ஒன்று நடக்க வில்லை, கோட்டான கோடி நன்றி ஏசப்பா, கோட்டான கோடி நன்றி.

அனுஷ்காவிடம் காதல் கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவியாக நடித்து விட்டு ஒரு எதிர்பாராத சமயத்தில் கத்துக்கிட்ட எல்லா வித்தையையும் இறக்கி அனுஷ்காவை கவரும் காட்சியில் மூளையை கழட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது. 

அனுஷ்கா, பிரபாஸ், ராணா பற்றி என்ன சொல்ல, படத்திற்காக 5 வருடம் உழைத்து உடம்பை ஏற்றி இறக்கி பாடுபட்டு இருக்கிறார்கள், அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள். ராஜமௌலியின் முத்திரை படம் நெடுக இருக்கிறது. 

யார் என்ன சொன்னாலும், யார் இழந்து பேசினாலும், யார் கழுவி ஊத்தினாலும், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தயவு செய்து படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். ஒரு நல்ல அனுபவம் காத்திருக்கிறது. 

ஆரூர் மூனா

Thursday, 12 January 2017

பைரவா - சினிமா விமர்சனம்

படம் விமர்சனம் பண்ணி ரொம்ப நாளானதால் இப்ப டைப் பண்ணும் போது கையெல்லாம் குதூகலிக்குது.


கம்ப ராமாயணத்துல கண்டேன் சீதையைனு சொன்ன மாதிரி படத்தின் விமர்சனத்தை முதல் பாரவுலயே சொல்லிடுறேன், என்னடா இவன் கம்பராமாயணமெல்லாம் படிச்சிருப்பானோன்னு நினைக்க வேண்டாம், ஏதோ ஒரு கம்பர் கழக விழாவில் ஒரு பேச்சாளர் சொன்னது மனதில் பச்சக் கென்று ஒட்டிக்கிட்டது, அனுமன் சீதைய பார்த்த பின் ராமரை சந்திக்க சென்று சந்திக்கும் போது, போன விஷயம் வந்த விஷயம் எல்லாம் சொல்லி அவர் ஆர்வத்தை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று எடுத்ததும் கண்டேன் என்று சொல்லி பிறகு தான் சீதைன்னு சொல்லுவாராம், அந்த மாதிரி தான் இந்த விமர்சனத்தின் கடைசி பாராவை முதலிலேயே சொல்லி விடுகிறேன், 


படம் பக்கா தெலுகு மசாலா ஆக்சன் படம். லெஜண்ட், டெம்பர், தூக்குடு மாதிரி ஒரு படம். திருப்பாச்சி, சிவகாசி வரிசையில் இந்த படம் ஓடிவிடும். கலெக்சன் 100 கோடியை தொட்டு விடும். ஏன் எதற்கு என்று லாஜிக்கெல்லாம் இந்த படத்தில் பார்க்க கூடாது. விமர்சகர்கள் கிழி கிழி என்று கிழிப்பார்கள். 

இந்த படத்தை துப்பாக்கி, கத்தி வரிசையில் வைத்தால் சாமி வந்து கண்ணை குத்தி விடும். சரி இனி விமர்சனத்திற்கு போய் விடுவோம்.

ஸ்பாய்லர் இருக்கும் அதனால் படம் பார்த்து பிறகு படிக்க நினைக்கும் கண்மணிகள் ஜுட் விட்டு விடவும்.

--------------------------------------

சென்னையில் இருக்கும் விஜய், நெல்லையிலிருந்து சென்னை வரும் கீர்த்தியை பார்த்ததும் காதலிக்கிறார். பிறகு அவருக்கு படாபடா வில்லனான ஜெகபதிபாபுவினால் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்ளும் விஜய், தனியாளாக நெல்லை சென்று எல்லாப் பிரச்சனைகளையும் டபக்கு டபக்கு என்று தீர்த்து வைத்து ஜெகபதி பாபுவையும் தீர்த்து வைத்து படத்தை முடித்து வைக்கிறார். 


இது என்ன மாதிரியான படம் என்பது முதல் சண்டைக்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. கிரிக்கெட் பேட் பால் வைத்து முதல் வில்லனை பழி தீர்த்து அறிமுகமாகும் போதே நம் காதில் ரத்தம் வழிகிறது. விஜய் ரசிகன் என்னும் கண்ணாடி அணிந்து பார்ப்பவன் கும்மாளமிடுகிறான். 

கலர் கலரா உடைகளை அணிந்து க்ளைமாக்ஸுக்கு முன் ஹீரோ, ஹீரோயின் மற்றும் குடும்பங்களே ஆடும் குத்தாட்டம், லாஜிக் என்ற வஸ்து இல்லாத ஹீரோ ஓர்க்ஷிப் காட்சிகள், செம த்ரிலிங்கான இன்டர்வெல் ப்ளாக், கொஞ்சம் கூட சிரிப்பே வராத சதீஷின் காமெடி, பகுதி வில்லன் மைம் கோபி, மீடியம் வில்லன் டேனியல் பாலாஜி என அக்மார்க் தெலுகு படம் இது. டப்பிங் செய்து வெளியிட்டாலேயே போதும், தெலுகில் ஒரு 100 கோடி கலெக்சன் பார்த்து விடலாம்.



விஜய், சில வருடங்களாக மசாலா கொடுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து நம்மை பாதுகாத்து வைத்திருந்த விஜய், மீண்டும் அதே மசாலாவை அண்டா அண்டாவாக அள்ளி தெளித்து வைத்து மீண்டும் பல வருடங்கள் பின்னே சென்று விட்டார். படத்தில் மைனஸ் கதை திரைக்கதையை விட பெரியது விஜய்யின் ஹேர்ஸ்டைல் தான். சகிக்கல.

கீர்த்தி சுரேஷ் வந்து டங்கு டங்கு என்று குதித்து விட்டு போகாமல் பெர்பார்ம் பண்ணும் படியான கதாபாத்திரம், கவனிக்கும் படி செய்கிறார். க்ளைமாக்ஸ்க்கு முந்தைய குத்தாட்டத்தில் 3 கலர்ல பாவாடை தாவணி கட்டி பார்ப்பவர்களை கண்ணு வழியே ஜொள்ளு விட வைக்கிறார்.

படத்தில் மொக்க காமெடி போடும் சதீஷ், எதுக்கென்றே தெரியாமல் மொட்டை ராஜேந்திரன், இரண்டாம் பாதியில் கழுத்தறுக்கும் தம்பி ராமையா எல்லா காமெடிக்கான எல்லாம் பார்ட்ஸும் படு வீக்கு.


டேனியல் பாலாஜி நன்றாக பெர்பார்ம் செய்துள்ளார். கவனிக்க வைக்கும் நடிப்பு. ஜெகபதிபாபு லெஜண்ட் படத்தில் செய்துள்ளதை ரிபீட் செய்துள்ளார். 

இவ்வளவு கொடுமைகள் இருந்தும் படம் நல்லாயிருக்கு சீன் பார்மேட் சரியாக வைத்துள்ளார்கள், சில இடங்களை தவிர. க்ளைமாக்ஸ் காதில் பூ சுற்றுகிறது. 

கீர்த்தி சுரேஷின் ப்ளாஷ்பேக் முடிந்ததும் வரும் சண்டைக்காட்சியும் அதன் பின்னான பஞ்ச் வசனங்களும் செம செம, பொங்கல் போன்ற விழா சமயங்களில் இந்த மாதிரியான படங்கள் வெளி வந்தால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

ப்ளாஷ்பேக் வரும் வரையான காட்சிகள், இரண்டாம் பாதியில் அரைமணிநேரம் காட்சிகள் கடுப்படிக்கிறது, மிச்சமிருக்கும் இரண்டரை மணி நேரத்தை விசிலடித்து கொண்டாடி விட்டு தியேட்டரை விட்டு வெளியில் வந்தும் மறந்து விட்டால் இது பொங்கல் கொண்டாட்டத்திற்கான படமே. 

ரொம்ப நாளைக்கு பிறகு 
திருவாரூரிலிருந்து ஆரூர் மூனா

Thursday, 12 May 2016

வாக்களிப்போம் நல்லவருக்கு

தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக் கட்டத்தை எட்டி விட்டது. எங்கு பார்த்தாலும் பிரச்சாரங்கள். எந்த சானலை திருப்பினாலும் கட்சிகளின் விளம்பரங்கள், யுடியுப் சேனல், இணைய செய்தி இதழ்கள் என எங்கு பார்த்தாலும் பிரச்சாரம். வாக்களிக்க இருக்கும் மக்கள் குழம்பித் தான் போவார்கள்.
மதுவிலக்கு பற்றியும் ஊழல் பற்றியும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் பேசி வாக்கு கேட்பது தான் நகை முரண்.
மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருந்து நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். அனேகமாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் என் இறுதி கட்டுரை இதுவாக தான் இருக்கக் கூடும்.
ஆறு கட்சிகள் பெரும்பான்மையாக போட்டியிருகின்றன. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.
திமுக
இந்த மாநிலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி பெரிதாக சம்பாதித்தவர்கள் கலைஞர் குடும்பத்தினர் தான். கலைஞர் அவர்கள் குடும்பத்திற்கு எப்படி சொத்து சேர்ப்பார், எப்படி வாய்ப்புகளை தருவார் என்பதை 1970களிலேயே கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்துள்ளார். அதனால் கலைஞரின் குடும்பத்தினர் சொத்து சேர்ப்பது, அதிகாரத்தில தலையிடுவது கடந்த இருபது ஆண்டுகளுக்குள் வந்ததல்ல. தொன்று தொட்ட பழகக்கம்.
மாவட்ட செயலாளர்கள் எல்லாம் குறுநில மன்னர்கள், அவர்களை தாண்டி கட்சியில் மற்றவர்கள் வளரவே முடியாது. வளர நினைத்தாலும் அவர்கள் வளர விடமாட்டார்கள். கலைஞர் எவ்வழியோ அவ்வழி இரண்டாம் கட்ட தலைவர்கள் சொத்து சேர்ப்பதில்.
ஈழம் விஷயத்தில் பெரிதாக நாடகம் போட்டு ஏமாற்றியவர்கள், மே 2009 போர் உச்சத்தில் நடந்து கொண்டு இருக்கும் போது நிலைமை கவலை கொள்ள செய்தது. அப்போது கலைஞர் உண்ணாவிரதம் பெரிதும் மாற்றத்தை கொண்டு வரும் நம்பிய லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களில் நானும் ஒருவன். கடைசியில் நடந்தது எல்லாருக்கும் தெரியும். 
இப்போ இணைய திமுகவினர் ஒரு உண்ணாவிரதம் போரை நிறுத்தும் என்று நம்பும் அளவுக்கு நீ அப்பாவியா என்று கிண்டலடிக்கிறார்கள். அடேய் அந்த உண்ணாவிரதம் போரை நிறுத்தாது என்றால் என்னத்துக்கு உங்கள் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார்.
என்னதான் இப்போது சப்பைக் கட்டு கட்டினாலும் இமாலய ஊழலான 2ஜியில் திமுகவுக்கு பெரும் பங்கு இருந்தது, என்பதும் இவர்கள் திருந்தவே இல்லை என்பது மறுக்கவே முடியாத உண்மை.
சரி இவ்வளவு தவறு நடந்து போச்சே, இனியாவது தவறை திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால், ம்ஹும், கோடீஸ்வரர் வேட்பாளர் தேர்விலேயே தெரிந்து விட்டது இது மாறவே மாறாது என.
அதிமுக
இருப்பதிலேயே அதிகளவு கேவலமான ஆட்சி தந்தது அதிமுக தான். சர்வாதிகார மனப்பான்மை, கட்சிகாரர்களை மனிதனாக கூட மதிக்காத தலைமை. டயரை தொட்டுக் கும்பிடும் முன்னால் முதல்வர் என கோமாளி ஆட்சி தான் இந்த முறை நடந்தது.
ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை சென்றதும் நடந்த கூத்துகள் இனி ஒரு காலத்திலும் நம் மாநிலத்தில் நடக்க கூடாது என மக்கள் வெறுப்படைந்தார்கள். என்ன அழுகை, என்ன பிரார்த்தனை குற்றவாளிக்கு ஆதரவாக மாநிலமே முடக்கி வைக்கப்பட்டது நம் மாநிலத்தில் தான் இருக்கும்.
நான் தீர்ப்பு வந்த தினம் திருவாரூரில் இருந்தேன். பேருந்து நிலையத்தில் நடந்த களேபரத்தை கண்முன்னே பார்த்தேன். கடைகள் அனைத்தும் வலுக்கட்டாயமாக மூடவைக்கப்பட்டன.
பெட்ரோல் பங்குகள், மருந்துகடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. அன்று பெட்ரோல் இல்லாமல் தள்ளிக் கொண்டு சென்ற வண்டிகள் ஏராளம்.
வெள்ளத்தில் நடந்தது எல்லாம் கொடூரத்தின் உச்சம். அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மக்களே மக்களோடு கைகோர்த்து செய்தது, ஆளும் அரசுக்கு எவ்வளவு கேவலம். ஆனால் வெக்கமே இல்லாமல் உதவிப் பொருட்கள் மீது ஸ்டிக்கரை ஒட்டி இன்னும் கேவலப்படுத்தியது அதிமுக.
இதுவரை ஆட்சிக்கு வராமல் இனி வரவேண்டும் என்று போட்டியிடும் கட்சிகள்
பாமக 
இவர்கள் கட்சியாக பரிணமித்ததே சாதி சங்கத்தில் இருந்து தான், இது வரை சாதியைபின்புலமாக வைத்தே ஓட்டுகளை வாங்கி வந்த கட்சி பாமக. வட தமிழ்நாட்டை சேர்ந்த வன்னியர் பெரும்பான்மையாக வசிக்கும் பல கிராமங்களில் கட்டுப்பாட்டுடன் பாமகவுக்கு ஒட்டுப் போட வைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் ரொம்பவே மோசமானவர்கள், அதிகாரத்திற்கு வரவே கூடாது என நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள். தர்மபுரி இளவரசன் விவகாரத்தில். மற்ற கட்சிகள் சாதி மறுப்பு திருமணத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை விட இவர்கள் அந்த வார்த்தைகள் இடம் பெறாதவாறு கவனமுடன் பார்த்துக் கொண்டார்கள்.
இன்று வெளியில் மாற்றம் முன்னேற்றம் என்று பேசிக் கொண்டாலும் பின்புலம் சாதியை மையமாக வைத்தே இயங்குகிறது. இவர்கள் உண்மையாக சாதி ஆதரவை விட்டு நடுநிலைக்கு வந்தால் வன்னியர்களும் ஓட்டு போட மாட்டார்கள், மற்ற சாதிகாரர்களும் நம்பி ஓட்டு போட மாட்டார்கள்.
நாம் தமிழர் கட்சி
புதிதாக உருவான கட்சி, பிரச்சாரங்களும் கொள்கைகளும் ஆரம்பத்தில் என்னவோ இருக்கிறது என்று கவனிக்க வைக்கவே செய்தன. ஆனால் பின்பு முருகன் முப்பாட்டன் வீரப்பனுக்கு நினைவு மண்டபம் என மாறி சந்தேகம் கொள்ள வைத்தார்கள்.
இன்று ஆடு மாடு மேய்த்து, விவசாயம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற வாதங்கள் என்னை கவரவே செய்தது. ஏனென்றால் நான் அதிகாரத்திற்கு வந்தால் இது செய்வேன் என்று எல்லோருக்கும் ஒரு கனவு இருக்குமல்லவா, அந்த கனவு சீமானின் தேர்தல் அறிக்கையில் இருந்தது.
ஆனால் அவர் விலக ஆரம்பித்தது, தமிழ் தேசியத்தை முட்டாள்தனமாக விளக்கிய போது தான்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தால் அவர் தமிழர் அவ்வளவு தான் சிம்பிள். நாலு தலைமுறைக்கு முன் ஆந்திரா பகுதியில் இருந்து இங்கு வந்து செட்டிலாகி தமிழர்களோடு தமிழர்களாக வாழும் நாயுடு, நாயக்கர், ரெட்டியார், இசை வேளாளர் போன்றவர்களை தமிழர்கள் இல்லையென்றால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சீக்கியரையே நாங்கள் தமிழர்களாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். என்னுடன் தான் படித்தான், என்னை விட பக்காவாக மெட்ராஸ் ஸ்லாங் பேசுவான், தமிழ் பெண்ணை கட்டிக் கொண்டு இங்கேயே வேலை பார்க்கிறான், அவன் தமிழனில்லை என்பது சரியான காமெடி.
இவர் பேச்சு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது கலவரத்திற்கே வழி வகுக்கும்.
பாஜக
இவர்களை பற்றி என்ன சொல்ல, இவர்களின் பிரச்சனையே மதவாதம் தான். இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதால் அவர்களின் உணர்வுகளை உசுப்பி வளர்ந்த கட்சி. மாநிலத்தில் ஒற்றை இலக்கத்திற்கே நொண்டி அடிப்பதற்கு காரணம் பெரியார் ஏற்படுத்திய மாற்றம். அதை எளிதில் மாற்ற முடியாமல் ஒரு பிரச்சனையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிரச்சனையின் களமிறங்கி தங்களை வளர்த்துக் கொள்ள.
மாட்டுக்கறி தின்பது அவன் அவன் உரிமை, இந்தியாவில் இருந்தால் நீ மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பது, பாரத் மாதாகீ ஜே என்று சொல்ல கட்டாயப்படுத்துவதும் வட மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும், இங்கே வேலைக்காகாது.
எல்லா மதத்துக்காரனும் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் இவர்கள் கண்டிப்பாக ஒற்றை இலக்கத்தை தாண்டவே கூடாத கட்சி.
மநகூ தேமுதிக தமாகா கூட்டணி
ஒரு கட்சி ஆட்சி தான் இந்த நிலைமைக்கு நம்மை கொண்டு வந்து இருக்கிறது. நமக்கு தேவை கூட்டணிஆட்சி தான். ஒருவர் தப்பு செய்தால் ஒரு தட்டி கேட்க முடியும். இது வரை இவர்கள் செயல்பாட்டில் பெரிய அதிருப்தி இல்லை.
நிர்வாகம் என்பதை பொறுத்தவரை சிறப்பாக இருக்குமென்றே நம்புகிறேன். விஜயகாந்த் என்ற தனிமனிதரின் கை ஓங்கியிருக்காமல் எல்லோரின் ஆலோசனைப்படி முடிவெடுப்பதால் சர்வாதிகாரம் தலை தூக்காது.
சிறந்த நிர்வாகிகளை கொண்டு சிறந்த திட்டங்கள் மூலம் ஒரு மாற்றம் நிகழும் என்றே நம்புகிறேன்.

நன்றி

இந்த ஒரு கட்டுரை எந்த மாற்றத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் சிந்திக்க வைக்கலாம் அல்லவா. சிந்தியுங்கள், யாருக்கு ஓட்டு போடுவது என்பது உங்கள் உரிமை, அதை சரியாக செய்து நம் மாநிலத்தை வரும் 5 ஆண்டுகளுக்கு வளமோடு வைத்திருக்க உதவுங்கள்.

ஆரூர் மூனா

Thursday, 14 April 2016

Theri Review | தெறி விமர்சனம்

தெறி சினிமாவுக்கு போவதே  பெரும் விஷயமாக இருந்தது. எல்லா அரங்குகளும் டிக்கெட்டுகளை பதுக்கி விட்டன. சமீபத்தில் டிக்கெட் விலையை உயர்த்தி விற்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக டிக்கெட்டுகள் கள்ள சந்தைக்கு போனதால் சற்று திணறித்தான் போனேன். வழக்கமாக பிருந்தாவில் டிக்கெட் வாங்கி விடுவேன். ஆனால் அவர்கள் முதல் நாள் இரவு வரை படம் போடுவதை இறுதி செய்யவில்லை.

பிறகு தம்பி தினேஷ் அவனுடைய டிக்கெட்டை எனக்கு விட்டுக் கொடுத்தான். அதையும் சினிமாவுக்கு நிகராக சேஸ் பண்ணி படம் போடுவதற்கு சரியாக நாலு நிமிடம் முன்பு தான் டிக்கெட்டை கைப்பற்றினேன். நன்றி டின்.



படத்தின் பெயருக்கும் படத்தின் கதைக்கு என்ன சம்பந்தம் என்றால் இறுதியில் வில்லனை வீழ்த்தும் போது தெறிபேபின்னு சொல்லுது. அவ்வளவு தான். அதனால் படத்தின் பெயர் தெறியாம். 

படத்தின் கதை என்னவென்றால் கேரளாவில் பேக்கரி வைத்து இருப்பவர் ஜோசப் குருவில்லா எனும் விஜய். அவரது மகள் நைனிகா, நைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் எமி ஜாக்சன். பேக்கரியில் உதவியாளராக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன். 

விஜய்யை சைட் அடிக்கிறார் எமி. அதனை அறிந்த நைனிகா விஜய்க்கு எமி மேல் காதல் வரவைக்க முயற்சிக்கிறார். ஒரு நாள் உள்ளூர் ரவுடியுடன் வம்பு ஏற்பட விஜய்யின் பெயர் குருவில்லா கிடையாது. அவர் ஐபிஎஸ் ஆபீசர் விஜய்குமார் என அறிகிறார்.


விஜய் சென்னையில் டிசிபியாக இருக்கும் போது ஒரு பெண்ணை கற்பழித்து கொன்ற அமைச்சர் மகேந்திரனின் மகனை துன்புறுத்தி கொன்று விடுகிறார். அதற்காக விஜய்யை பழிவாங்க விஜய்யின் குடும்பத்தை கொன்று விடுகிறார் மகேந்திரன். மகளுக்காக ஊரை விட்டு வந்து கேரளாவில் வாழ்கிறார். 

விஜய் இருக்குமிடம் மகேந்திரனுக்கு தெரிய வர மறுபடியும் மோதல் வர யார் ஜெயித்தார்கள் என்பதே தெறி படத்தின் கதை.

விஜய் நடிப்பில் குறை வைக்க வில்லை. ஆனால் வயதாகி வருவது நன்றாக நடனத்தில் தெரிகிறது. சும்மா பாலீஷாக பட்டும் படாமலும் தான் ஆடுகிறார். பல காட்சிகளில் ஓவர் ஆக்சன் போல் தெரிந்தாலும் சில காட்சிகளில் அட போட வைக்கிறார். 


சமந்தா அவரது முகம் பூசினாற் போல் இருந்தால் தான் அழகாக இருக்கும். டயட்டில் இருந்து முகத்தில் டொக்கு விழுந்து அவரது அழகை குறைத்து விடுகிறது. சில காட்சிகளில் நடித்து உள்ளார்.

எமி என்னும் ஆங்கில நடிகை எதற்காக மலையாள டீச்சர் பாத்திரத்திற்கு என்று தான் தெரியவில்லை. விக்கு கூட மக்காக தான் தெரிகிறது.

நைனிகா க்யூட்டாக இருக்கிறார். அந்த க்யூட்னஸ் தான் படத்துடன் நம்மை ஒன்ற செய்கிறது. எக்ஸ்பிரசன்ஸ் பிரமாதம். பதின்ம வயதில் கண்டிப்பாக விஜய்யுடன் நடிக்க வாய்ப்புகள் பிரகாசம். 


மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளில் காமெடியிலும் ஒரு காட்சியில் சென்ட்டிமென்ட் பெர்பார்மன்ஸிலும் பின்னியிருக்கிறார். எனக்கு அவரது செய்கைகளும் சேட்டைகளும் பிடித்து இருந்தது.

காட்சிகளில் நம்பகத் தன்மை சுத்தமாக இல்லை. முதல் காட்சியில் ஐந்து வயது பெண் குழந்தை ஊரின் மிகப் பெரிய ரவுடியுடன் மோதுவது போல் இருப்பது எல்லாம் அதீ தீவிர லாஜிக் பொத்தல். 

அது போல் பரிதாபம் வரவைக்க திணித்தது போல் பிச்சை எடுக்கும் குழந்தைகளை விஜய் காப்பாற்றுவது போல் இருக்கும் காட்சி. யோசிச்சி காட்சிகளை வைத்து இருக்கலாம். 

படத்தின் கதைக்கு வரவே ஒன்னேகால் மணிநேரம் எடுத்துக் கொள்கிறார்கள். அது போல் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சவசவன்னு இருக்கு. 

லாஜிக் பொத்தல்கள் நிறைய இருக்கிறது. ஆக்சன் சீக்வன்ஸ்க்காக எடுத்து இருக்கிறார்கள். அது போல் பள்ளிக்கூடத்தில் நிறைய அடியாட்களை வைத்து சண்டை போட வேண்டிய இடத்தில் ஒரு குச்சியை வைத்து பாடம் எடுப்பது போல் அடிப்பது செம போர். 

புலி அளவுக்கு மோசமில்லை என்றாலும் துப்பாக்கி, கத்தி அளவுக்கு சிறப்பும் இல்லை. நேரம் இருந்தால் அரங்கில் பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Friday, 18 March 2016

புகழ் - சினிமா விமர்சனம்

படத்தின் முதல் காட்சியிலேயே நான் யுகித்த விஷயம் இது நெடுநாள் கிடப்பில் இருந்த படம் என்பது தான். அதை நேக்கா மறைத்து படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி முகம் பிஞ்சாக இருக்கிறது என்பதை வைத்தே படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தை அனுமானிக்கலாம்.

முழு வீடியோ விமர்சனம் பார்க்க 



ஒரு சாமானிய இளைஞனுக்கும் ஒரு அமைச்சருக்கும் மைதானத்தை அபகரிப்பது தொடர்பாக ஏற்படும் மோதலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே புகழ் படத்தின் ஒன்லைனர்.

வாலாஜாபேட்டை என்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். அங்குள்ள வாலிப பசங்களுக்கு ஒரு மைதானமே பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது. அந்த இடத்தில் பயற்சி செய்து அதன் மூலம் அரசு வேலை கிடைக்கப் பெற்றவர்கள் அனேகம் பேர்.


அந்த இடத்தை உள்ளூர் நகர மன்ற சேர்மன் உதவியுடன் வளைத்து போட நினைக்கிறார் அமைச்சர். அதனை தடுக்கிறார் ஜெய். உள்ளூர் மக்களிடையே நல்லபெயர் இருக்கும் ஜெய்க்கு வாலிப பசங்க பட்டாளமே பின்நிற்கிறது. 

மைதானத்தை யார் கைப்பற்றினார்கள் என்பதே புகழ் படத்தின் கதை.

இதே ப்ளாட்டில் தெலுகில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் 10 வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது. ஷை என்ற அந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி, இன்று வரை நான் பார்த்த மிகச் சிறந்த ஸ்போர்ஸ் மூவிகளில் இதுவும் ஒன்று.

சிறு நகரங்களுக்கு இது போன்ற பொழுதுபோக்கு இடங்கள் ஊருக்கு ஒன்று தான் இருக்கும் திருவாரூரில் பெரிய கோவில், மன்னார்குடியில் பின்லே மைதானம் என எங்கள் ஏரியாவில் கூட இது மாதிரி செண்ட்டிமெண்ட் இடங்கள் உண்டு.


படத்தின் குறையே மைதானத்திற்கும் நாயகனுக்குமான பிணைப்பை காட்சிப் படுத்த தவறி விட்டார். சும்மா உட்கார்ந்து கதையடிக்கவும் ராத்திரிக்கு சரக்கடிக்கவும் மட்டுமே நாயகன் அந்த இடத்தை பயன்படுத்துகிறார். இன்னும் சற்று நம்பகத்தன்மையுடனும் நெகிழ்ச்சியுடனும் காட்சி அமைத்திருந்தால் நாமும் படத்துடன் பயணித்து இருப்போம். 

ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு என்ன பாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதை செவ்வனே செய்து முடித்து இருக்கிறார். சில இடங்களில் மட்டும் அட போட வைக்கிறார். சுரபிக்கும் அவருக்கும் காதல் மலரும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்.

சுரபி படத்திற்கு உண்மையிலேயே மைனஸ் தான். இவன் வேற மாதிரி படத்திற்கும் இந்த படத்திற்கும் கம்பேர் செய்தோமானால் கன்றாவியாக இருக்கிறார். நம்ம ஆட்களுக்கு சற்று ச்சப்பியாக இருந்தால் தான் பிடிக்கும். உடலை குறைக்கிறேன் என்று கன்னத்தை டொக்கி வைத்திருக்கிறார். ஹீரோயின் லுக்கே வரமாட்டேன் என்கிறது.


கருணாஸ் சிடுசிடுவென விழுந்து கொண்டே இருக்கும் பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். எப்பொழுதும் தம்பியை கண்ட்ரோலில் வைத்து அடக்கிக் கொண்டே இருப்பவர் ஒரு காட்சியில் மாரிமுத்து ஜெய்யை கொன்று போட்டு விடுவதாக மிரட்ட ஜெய்யை முன் இழுத்து விட்டு முடிந்தால் வெட்டிப் பார் என்று பொங்கும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார்.

வழக்கம் போலவே ஒன்லைனர்களில் ஆர்ஜே பாலாஜி கவனம் ஈர்க்கிறார். ஜெய்யின் நண்பர்களாக வருபவர்களில் சிலர் கவனிக்க வைக்கின்றனர் .முக்கியமாக அந்த கவுன்சிலர் நண்பர். 

கவனிக்க தக்க அறிமுகம் கவிஞர் பிறைசூடன், கம்யுனிஸ்ட்டாக வருகிறார். எல்லா ஊர்களிலும் ஊருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் வறுமையில் வாடும் வயதான கம்யுனிஸ்ட்கள் பாத்திரத்தை சரியாக செய்துள்ளார்.

படத்தின் பெரும்குறை முதிர்ச்சியில்லாத இயக்கம் தான். காட்சிக்கும் காட்சிக்கும் லிங்க்கே இல்லை. ஜம்ப் அடிக்கிறது. அது போல் ஒரு காட்சிக்கும் நிறைவு இல்லை, எல்லாமே தொங்கலில் இருக்கிறது. படத்தில் நிறைய ஏன்கள் தொக்கி நிற்கிறது. 

ஒன்னும் அவசரமே இல்லை, என்றாவது டிவியில் போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி

ஆரூர் மூனா

Tuesday, 15 March 2016

ஒரு நாயகன் உருவாகிறான்

போன வருசம் ஊருக்கு போயிருந்தப்போ ஒரு நண்பனின் கேமராவை வைத்து விருச்சிககாந்த் அப்படினு ஒரு குறும்படத்தின் முழு படபிடிப்பையும் முடிச்சிட்டு வந்தோம்.

வீடியோவின் லிங்க். முழுதாக பார்க்கலைனாலும் பரவாயில்லை. சப்ஸ்கிரைப்பாவது பண்ணுங்கள். (தட் படுத்தே விட்டான்யா மொமண்ட்)


பணக்கார நபரை ஏமாத்தி, நடிப்பு ஆசை காட்டி நாலு காலேஜ் பசங்க குறும்படம் எடுத்து தர்றேன் என்ற பெயரில் தினமும் அவர் காசில் தண்ணியடித்து வருகிறார்கள். ஒரு நாள் உண்மை தெரிய அவர் அந்த பசங்களை கடைக்குள் வச்சி வெளுத்தெடுக்கிற மாதிரி கதை. 

நான் ஒரு விஷயத்தில் உறுதியா இருந்தேன். இது ஜீரோ பட்ஜெட்டில் தான் எடுக்கப்படனும். எந்த தொழில்நுட்பத்துக்காகவும் வெளியில் போக கூடாது என முடிவெடுத்து விட்டேன். ஆனால் எனக்கு எடிட்டிங் தெரியாது. 

ரெண்டு நாள்ல எடிட்டிங் கத்துக்கலாம்னு நினைச்சேன். படம் பிடிச்சிட்டு வந்து எடிட்டிங் பண்ணலாம்னு உக்கார்ந்தா எடிட்டிங் சுலபம் கிடையாதுன்னு தெரிஞ்சிப் போச்சி. அந்த புட்டேஜ்களை அப்படியே எடுத்து மூட்டை கட்டி வச்சிட்டேன். 

ஒரு வருசமாச்சி. கம்ப்யூட்டரில் இருந்து தேவையில்லாத பைல்களை கழிச்சி கட்டலாம்னு அலசும் போது இந்த பைல் கண்ல மாட்டுச்சி. வீடியோக்களை பார்வையிட்டால் சில வீடியோக்கள் சுவாரஸ்யமா இருந்தது. 

அந்த படத்தின் சமயம் எடுக்கப்பட்ட காட்சிகள் தவிர பிற காட்சிகளை எடுத்துப் பார்த்தால் படு மொக்கையாக இருந்தது. ஆனால் ஒரு நக்கல் தெரிந்தது. அதனை எடுத்து சின்ன வீடியோவாக மாத்தி விட்டேன். 

இது டப்பிங், ரீரெக்கார்டிங் எல்லாம் சரியாக செய்யப்பட்ட முழு படமல்ல. ஸ்பூப் மூவி மாதிரியான வீடியோ தான். பாருங்கள், பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

இந்த பதிவை படிப்பவர்கள் பட்டியல் நாலாயிரம் ஐந்தாயிரம் என காட்டுகிறது. ஆனால் சப்ஸ்கிரைப் ஒன்றோ இரண்டோ தான் வருகிறது. பார்ப்பவர்கள் சப்ஸ்கிரைப் செய்தால் தானே அது என்னை மேம்படுத்திக் கொள்ள ஊக்கமாக இருக்கும்.

நன்றி 

ஆரூர் மூனா

Saturday, 12 March 2016

ஆட்டு ரத்தப் பொறியலும், ஆத்தாவின் மரணமும்

நான் எப்படிப்பட்ட ஆளுங்கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு நண்பனின் வீட்டில் கறி விருந்து நடந்து கொண்டு இருந்தது. இலையை போட்டாச்சி. நான் லைட்டா ஒரு கட்டிங் போட்டு பந்தியில் உக்கார்ந்து விட்டேன். பிரியாணி பக்கத்து இலையில் போட்டுக்கிட்டு இருக்காங்க. அடுத்தது எனக்கு தான், அப்ப பார்த்து எனக்கு போன் வந்தது.

ஆட்டு ரத்தப் பொறியல் செய்முறை


போனை எடுத்து பார்த்தேன், அப்பாவின் கால். எடுத்து பேசுகிறேன். அப்பா கதறி அழுகிறார். ஒரு நிமிடம் படபடப்பாகி விட்டது. ஆத்தா செத்துட்டாங்கடான்னு அழுகிறார். 

அதாவது என் அப்பாவின் அம்மா இறந்து விட்டார். துக்கம் தொண்டையை அடைக்கிறது. உடனே தஞ்சாவூர் கிளம்ப வேண்டும். நான் தான் நெய் பந்தம் எடுக்க வேண்டிய ஆள். அந்த நிமிடம் . . . . . 

என் இலையில் பிரியாணி பறிமாறப்பட்டது. இறப்பு நடந்தால் 16ம் நாள் வரை அசைவம் சாப்பிடக் கூடாது என்பது குடும்ப நடைமுறை. வாசனை மூக்கை துளைத்தது. அடுத்த போன் வந்தது. 

மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்முறை


பெரியப்பா கூடுவாஞ்சேரியில் இருந்து பேசினார். ஆத்தாவின் மூத்த மகன். நீ அனிதாவை அழைச்சிக்கிட்டு இங்க வந்துடு. எல்லோரும் சேர்ந்தே போயிடுவோம் என்றார். இலையில் சிக்கன் 65 வைத்தார்கள். அடுத்த போன் வந்தது. 

தங்கமணி தான் அழைத்தார். துணிமணி எல்லாம் எடுத்து வச்சாச்சி. இன்னும் வரலையா என்றார். அவருக்கு பதிலளித்து இலையை நோக்கினால் வஞ்சிரம் மீன் துண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தது. 

என்னுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் பால்ய நண்பர்கள். விவரம் சொன்னால் உடனே அனுப்பி வைத்து விடுவார்கள். போன் வேறு தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. மனசை கல்லாக்கிக் கொண்டு. . . . 

செல்லை ஆப் பண்ணி வைத்தேன். ஆத்தாவை நினைவில் மட்டும் நிறுத்தி விட்டு பிரியாணியுடன் கோதாவில் குதித்து ஏப்பம் வரும் வரை மல்லுகட்டி வீழ்த்தினேன். 

பிறகு நண்பர்களிடம் விவரம் சொன்னால் கலாய்த்து தள்ளி விட்டார்கள். வெக்கப்பட்டுக் கொண்டே போனை ஆன் செய்து பெரியப்பாவிடம் மேல் விவரம் விசாரிக்க போன் செய்தேன். அவர் எடுத்து பேசும் போது கூடவே டிங்கு டிங்குனு சத்தம் கேட்டது. 

என்ன பெரியப்பா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே சொன்னார். இன்னும் 16 நாளைக்கு கறிகஞ்சி அடிக்க முடியாது. அதான். . . . . ஹிஹி னு.

அப்படியாப்பட்ட பரம்பரையாக்கும் நான். 

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆட்டு ரத்தப் பொறியல்  எனக்கு மிகவும் பிடித்த சைட்டிஷ்ஷாகும். இந்த சுவை எந்த ஹோட்டலிலும் அனுபவித்ததில்லை. கால் கிலோ கறியும், ரத்தமும் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தால் போதும். கோலா உருண்டை குழம்பும் ரத்தப் பொறியலும் செய்து 40 பேருக்கு கூட பறிமாறுவார். 

நீங்கள் கூட முயற்சித்து பாருங்கள். அந்த அனுபவத்தை அனுபவியுங்கள்.

ஆரூர் மூனா