Tuesday 2 June 2015

பஞ்சேந்திரியா - பழசு ஜனவரி 2013

மாட்டுப் பொங்கல் அன்னைக்கு மறுபடியும் கண்ணா லட்டு தின்ன ஆசையா இரண்டாவது முறையாக இரவுக் காட்சிக்கு சென்றேன். தியேட்டரில் எதிர்பார்த்ததை விட அளவுக்கு அதிகமான கூட்டம் அலைமோதியது. இன்னும் சொல்லப் போனால் ஹவுஸ்புல்.

கடந்த பதினைந்து வருடங்களாக திருவாரூர் தைலம்மை திரையரங்கம் அரங்கு நிறைந்து நான் பார்த்ததே இல்லை. ரஜினி, கமல் படங்கள் கூட முதல் இரண்டு வரிசை காலியாகத்தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்திற்கு அமர நாற்காலியின்றி நின்று பார்த்தவர்கள் பலர்.

எனக்கு தெரிந்து தைலம்மையில் தேவர் மகன் படத்திற்கு தான் அரங்கு நிறைந்த காட்சி என்று போர்டு மாட்டப்பட்டிருந்ததை கடைசியாக கண்டேன். சோழாவில் படையப்பா. அதன் பிறகு எந்த படத்திற்கும் கூட்டம் என்பதே இல்லாமல் போயிருந்தது. இருந்த திரையரங்கங்களும் ஒவ்வொன்ற மூடும் நிலைக்கு சென்று விட்டிருந்தன. செங்கம், பேபி, கருணாநிதி ஆகிய திரையரங்கள் மூடப்பட்டு விட்டன.

எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விட்டது கண்ணா லட்டு தின்ன ஆசையா. மக்கள் குடும்பம் குடும்பமாக படத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் படத்தில் விழுந்து விழுந்து சிரித்து பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த பிறகு ஏன் சிரித்தோம் என்று யோசிக்கிறோம் என்பது வேறு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா - தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குளில் கொண்டாடுகிறார்கள்.

------------------------------------------

அறிவாளி பெத்த மவனே


------------------------------------------

இந்த பொங்கல் விடுமுறைக்கு ஊரிலிருந்து கிளம்பும் தேதியை முடிவு செய்யவில்லை அதனால் முன்னெற்பாடாக முன்பதிவு செய்யாமல் கடைசி தினத்தன்று டிக்கெட் எடுக்க சென்றால் எல்லா ஆம்னி பேருந்துகளும் புல்லாகி விட்டது.

அரசுப் பேருந்தில் ஏசி, டீலக்ஸ் எல்லாம் இருக்கை நிறைந்து விட்டதால் சாதாரண பேருந்தில் பயணித்தேன். பேருந்து புல் ஸ்டாண்டிங், காலுக்கருகில் ஓருவன் அமர்ந்து வந்தான். காலை அசைக்க முடியவில்லை. சுத்தமாக தூக்கமும் இல்லை.

அதிகாலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக பேருந்துகள் வந்ததால் மற்ற பேருந்துகளை மதுரவாயிலிலேயே நிப்பாட்டி விட்டார்கள். ஒரு கிலோமீட்டர் நடந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால் மாநகரபேருந்தும் டிராபிக் ஜாம்மில் மாட்டிவிட்டது.

பிறகு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வர 8 மணியாகி விட்டது. தூக்கமுமில்லாமல் வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு நேரே தொழிற்சாலைக்கு கிளம்பினேன். இப்ப கண்ணெல்லாம் எரியுது. ஆனால் ஒரு சந்தோசம் என்னவென்றால் இதுபோல் சிரமப்பட்டு ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆனது. வேலைக்கு வந்த பிறகு காரிலோ அல்லது ரயிலிலோ பயணிப்பதே வழக்கமாக இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது அரசுப்பேருந்தில் செல்வதே வழக்கம். அது போல் இன்று வந்தது பழைய நினைவுகளை கிளறி விட்டது.

இனிமேலாவது இதுபோன்ற பண்டிகை காலங்களில் முன்னேற்பாடாக தோராயமாக இரண்டு மூன்று நாட்களுக்கு ரயிலில் டிக்கெட் போட்டு விடுவது. பிறகு பயண தேதி முடிவானதும் மற்ற டிக்கெட்டுகளை கேன்சல் செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன். பார்ப்போம்.

-----------------------------------------------

ஆயிரம் காலத்து பயிரான கல்யாணம்

--------------------------------------------

நேற்று திருவாரூரில் ஆருரான் பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது. கடந்த முப்பது வருடங்களாக திருவாரூரில் நான்கு வீதியை சுற்றுவது போட்டியாக வைத்து ஒட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், ரிக்ஷா ரேஸ், ரேக்ளா ரேஸ், 50cc மொபெட் ரேஸ், கமலாலயத்தில் நீச்சல் போட்டி நடைபெறுவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் திருவாரூரினை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் வண்டிக்கட்டி வந்து நான்கு வீதிகளிலும் நின்று விளையாட்டுப் போட்டியை வேடிக்கைப் பார்ப்பார்கள். எங்களுக்கும் மிகவும் சந்தோசத்தை கொடுக்கும் விழா அது.

நான் 2001க்கு பிறகு ஊருக்கு செல்வதை மிகவும் குறைத்துக் கொண்டதால் இந்த போட்டியை தவறவிட்டுக் கொண்டே இருந்தேன். இந்த வருடம் தான் மீண்டும் காண வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் குழாமை சேர்த்துக் கொண்டு தெற்கு வீதி முனையில் நின்றுக் கொண்டு பயங்கர கலாட்டா செய்து கொண்டு போட்டியை ரசித்துக் கொண்டு அவ்வப்போது சைட் அடித்துக் கொண்டு பார்த்தேன்.

முன்னைப் போல் இந்த போட்டிக்கு கூட்டம் வருவது குறைந்திருந்தது நன்றாகவே தெரிந்தது. இது எங்கள் ஊரின் பெருமை. இனிமேல் எல்லா வருடமும் கலந்து கொண்டு போட்டியை என்ஜாய் செய்வேன் என்று முடிவெடுத்து விட்டேன்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment