Sunday 2 August 2015

கடல் - பழசு பிப்ரவரி 2013

எப்பொழுதுமே எனக்கு வெள்ளிக் கிழமை யென்றால் எதாவது வேலை வந்து இடைஞ்சல் செய்து 11 மணிக்கு படம் பார்க்க முடியாமல் செய்து விட்டு பிறகு 12 மணி காட்சி AGS வில்லிவாக்கத்தில் தொங்குவதாகவே அமையும். ஆனால் இன்றோ 10 மணிக்கே வேலைகளை முடித்து விட்டு காத்திருந்தேன். நண்பன் அசோக் 11 மணிக்கு வந்தான்.


எந்த படம் என்று முடிவு செய்யாமல் இருவரும் சேர்ந்து AGS சென்றோம். கூட்டமேயில்லை. அந்த சமயம் ஒரு குழப்பம் வந்தது. கடல் பார்க்கலாமா இல்லை டேவிட் பார்க்கலாமா என்று ஆனால் 12 மணிக்காட்சி டேவிட் இல்லாததால் வேறு வழியின்றி கடலுக்கு செல்ல நேர்ந்தது. ஆனால் கடல் என்னை கவுத்தது தான் மிச்சம்.  இன்னைக்கும் எனக்கு ரூ.240/- அவுட்டு.

எனக்கு மட்டும் ஏண்டா இந்த மாதிரியெல்லாம் நடக்குது.

படத்தின் கதை பெரிசா சொல்லிக்கிற மாதிரியெல்லாம் இல்லை. அரவிந்தசாமியும் அர்ஜூனும் பாதிரியாராக பயிற்சியில் இருக்கிறார்கள். ஒரு பிரச்சனையால் எல்லாத்தையும் கைவிட்டு அர்ஜூன் வெளியேறுகிறார். அரவிந்தசாமியை எப்படியாவது பழிவாங்குவேன் என்று சவால் விட்டு செல்கிறார்.

அதே போல் பல வருடங்கள் கழித்து பெரிய மீசைக்காரராக ஆனதும் அரவிந்தசாமி பாதிரியாராக இருக்கும் ஊருக்கு வந்து அவரை பழிவாங்குகிறார். பாப்கார்ன் விக்கிறவர் வேண்டுகோளுக்கு இணங்க இடைவேளை விடப்படுகிறது.

அதன் பிறகு அரவிந்தசாமி அர்ஜூனை பழிவாங்கினாரா மன்னித்தாரா என்பதை பின்பாதியில் காட்டியிருக்கிறார்கள். இப்படியே படம் பார்த்தால் நமக்கு கடுப்படித்து விடுமே என்பதற்காக கெளதம் மற்றும் துளசியை வைத்து ஒரு காதல் எபிசோடை மேற்சொன்ன கதையுடன் கலந்து விட்டு இருக்கிறார்கள்.

மணி ரத்னம் படத்தில் எனக்கு பாடல் படமாக்கப்பட்ட விதம் மிகவும் பிடிக்கும். அதுவும் அலைபாயுதே படத்தில் பச்சைநிறமே பாடல் எத்தனை ஆயிரம் முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் அதே போல் இதிலும் முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஆரம்பமே கடுப்பாகி விட்டதால் பிறகு படத்துடன் ஒன்ற முடியாமல் போய்விட்டது.

‘சாமர்த்தியக்காரர்களைக் கொன்று விட்டு நிம்மதியாக வாழ்வது சோம்பேறியின் பழக்கம். திறமைசாலியை பக்கத்தில் வைத்து வளர்த்துக் கொண்டே ஜாக்கிரதையாக ராஜ்ஜியம் வளர்ப்பது உஷாரான ஆசாமியின் பழக்கம், நான் உஷாரான ஆசாமி என்று அர்ஜூன் படத்தில் சொல்லுவார். நான் கூட கொஞ்சம் உஷாராகியிருந்தால் கொஞ்சம் தப்பித்து இருப்பேன். இப்ப ஙே என்று முழிக்கும்படி ஆகிவிட்டது.


கிறித்துவ இறையியலை மற்ற மதத்து மக்களுக்கு சற்று டீடெய்லாகவே விளக்குகிறார்கள். நமக்கு தான் ரசிக்கும் மனநிலை இல்லையே என்ன செய்ய.

படத்தின் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால் அரவிந்தசாமியின் கம்பேக் மற்றும் கெளதமின் அறிமுகம் தான். அரவிந்தசாமி என்ன கிளாமருடே. இந்த வயதிலேயே நமக்கு ரசிக்கும் அளவுக்கு இருக்கே. வயசில எப்படியெல்லாம் பெண்கள் ரசித்து வைத்திருப்பார்கள். மச்சமுள்ள மனுசன்யா.

கெளதம் நன்றாக நடனமாடுகிறார். சண்டை போடுகிறார். ஓரளவுக்கு நடிக்க முயற்சித்து இருக்கிறார். ஒரு சாயலில் அலைகள் ஒய்வதில்லை காலத்து கார்த்திக்கை நினைவு படுத்துகிறார். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அர்ஜூன் எதற்கு இந்த நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்றே தெரியவில்லை. எந்த வித சமரசமும் இல்லாத வில்லன் கதாபாத்திரம். இனி எல்லா இளம் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கவே வாய்ப்பு வரும்.

ஹீரோயின் துளசிக்கு வயது 15 என்று பத்திரிக்கையில் பார்த்தேன். ஆனால் பார்த்தால் சத்தியமாக சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சரியான அளவில் நிறைந்து காணப்படுகிறார். இன்னும் கொஞ்சம் உடம்பை இளைத்தால் தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது.

அந்த கேரக்டருக்கு எதற்கு மோகன்பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சுவை நடிக்க வைத்தார்கள் என்றே தெரியவில்லை.

படத்தின் பலங்கள் ஒளிப்பதிவும் இசையும் தான். ராஜீவ் மேனன் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். எனக்கு பல இடங்களில் அவரது ஒளிப்பதிவு பிரமிக்க வைத்தது.

ஏ.ஆர்.ரகுமான் பற்றி நான் என்ன சொல்ல. மணிரத்னத்துடன் சேர்ந்தாலே பாடல்கள் தூள் டக்கர் தான். அது தான் இந்த படத்திலும் நடந்திருக்கிறது. மணிரத்னம் படங்களில் பொதுவாக சில விஷயங்கள் புரியாது. அதுதான் இந்த படத்திலும் நடந்திருக்கிறது.

மாடர்ன் ஆர்ட் என்றால் பெரும்பாலானோருக்கு புரியாது. ஆனால் அதன் மொழி புரிந்தவர்கள் ஆகா ஓகோ என புகழுவார்கள். அது போல் சாமானியான எனக்கு படம் பிடிக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல என்னுடன் படம் பார்த்த பெரும்பாலானோருக்கும் தான்.

ஆனால் சினிமாவின் மொழி அறிந்தவர்களுக்கு வேண்டுமென்றால் பிடிக்கலாம். என்னைப் பொறுத்த வரை என் டிக்கெட் காசு கடலில் கரைத்த பெருங்காயம்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment