Showing posts with label நாலு போலீஸும் நல்லாஇருந்த ஊரும் விமர்சனம். Show all posts
Showing posts with label நாலு போலீஸும் நல்லாஇருந்த ஊரும் விமர்சனம். Show all posts

Friday, 24 July 2015

நாலு போலீஸும் நல்லாஇருந்த ஊரும் - சினிமா விமர்சனம்

டிரைலரே படத்தின் நாட் என்னவென்று தெளிவாக சொன்னது, அதனாலேயே ரிலீஸ் அன்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. ஆனால் நாலைந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது கடுப்பை ஏற்படுத்தியது. ஆனால் என்ன காரணம் என்று இப்பத்தான் தெரிகிறது.


ஐந்து வருடங்களாக ஜனாதிபதி விருது வாங்கி நல்லாயிருக்கும் ஒரு ஊர், அந்த ஊரில் ஒரு அமைதியான போலீஸ் ஸ்டேசன், சாத்வீக நிலையில் நான்கு காவலர்கள். ஸ்டேசன் அமைதியா இருப்பதினாலேயே அரசாங்கம் அதனை ஊரை விட்டு மாற்ற நினைக்கிறது. அதை தவிர்க்க நினைக்கும் காவலர்கள், ஊரில் எதாவது பிரச்சனையை கிளப்பி ஸ்டேசனை தக்க வைக்க நினைக்கிறார்கள். அதனால் சின்னச் சின்ன பிரச்சனைகளை கிளப்ப எல்லாம் சொதப்பலாக நடக்கிறது.

ஒரு கட்டத்தில் ஸ்டேசனை காலி செய்யும் முடிவை அரசாங்கம் கைவிடுகிறது. ஆனால் காவலர்கள் கிளப்பி விட்டிருந்த சின்ன பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து ஊரின் அமைதிக்கு வேட்டு வைக்கிறது. முடிவு என்ன என்பதே படத்தின் கதை.


ஒரு சின்ன நாட், அதனை இரண்டரை மணிநேரப் படமாக எடுக்க வேண்டுமெனில் கன்டெண்ட்டுகள் சரியான அளவில். சரியான இடத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் அந்த நாட்டையே புடிச்சி இழு இழு என இழுத்தால் என்ன ஆகும். இந்த படம் மாதிரி தான் ஆகும்.

படுஅமெச்சூர்த்தனமான காட்சியமைப்புகள், மொன்னை காமெடிகள், தேவையில்லாத இடத்தில் பாட்டுகள், பொருந்தாத க்ளைமாக்ஸ் இன்னும் பல இருக்கிறது. ஆர்வமாகத்தான் படம் பார்க்க உட்கார்ந்தேன். பத்து நிமிசத்திலேயே பல்லை இளிச்சிடுச்சி படம். 


அருள்நிதி எப்படி இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்றே தெரியவில்லை. அவருக்கென்று ஹீரோயிச காட்சியமைப்புகள், வலுவான காட்சிகள் என்று எதுவுமே இல்லை. சிங்கம்புலியை விட குறைவான காட்சிகளே படத்தில் அவருக்கு இருக்கிறது.

ஹீரோயின் வேண்டுமென்ற கட்டாயத்திற்காக ரம்யா நம்பீசன். படத்தின் கதைக்கோ கதையின் ஓட்டத்திற்கோ எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை அவரது கதாபாத்திரம். 


சிங்கம்புலி சில இடங்களில் புன்னகைக்க மட்டுமே (கவனிக்க புன்னகைக்க மட்டுமே) வைக்கிறார். பல இடங்களில் கடுப்பேத்துகிறார். பகவதியுடன் சேர்ந்து பெட்ரோலை ஊற்றி கடையை எரிக்க முயற்சிக்கும் காட்சியில் மட்டுமே கவனிக்க வைக்கிறார். 

பாடல்கள் சுமாரோ சுமார். பின்னணி இசை இருப்பது மாதிரியே தெரியவில்லை.

யோகிபாபு எதற்கு வில்லனாகிறார் என்றும் தெரியவில்லை. கோவிலில் அர்ச்சனை செய்யும் பசங்க அவருடன் இணைந்து திருடர்கள் ஆவதும் பொருந்தவில்லை. நாலு தெரு மட்டுமே இருக்கும் ஊரை காவலர்களால் காக்க முடியவில்லை என்பது காதுல பூ தான்.

எதோ ஆரம்பிச்சி எங்கேயோ போய் எப்படியோ முடிந்த இந்த படத்தை பார்க்கனும் என்று நீங்கள் நினைத்தால் சத்தியமாக அதற்கு நான் பொறுப்பில்லை.

இதற்கு மேல் இந்த படத்தை விமர்சித்து எழுதவும் மனசில்லை.

ஆரூர் மூனா