சில சமயம் சில வெள்ளிக்கிழமைகளில் அசூயையாக இருக்கும். எந்த முக்கியத்துவமும் இல்லாத படங்கள் வெளிவரும் தினத்தன்று அரங்கிற்கு போகலாமா வேண்டாமா என்று மனசும் மூளையும் பட்டிமன்றம் நடத்தும்.
இன்று கூட அப்படியான பட்டிமன்றம் நடக்கும் நாள் தான். ஆனால் சிவா போன் செய்து தமிழ்சினிமாவை விமர்சனம் செய்யும் நம்மளைப் போன்ற ஆட்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். கதைக்களமும் இணைய சினிமா விமர்சனம் தான் என கூறினார்.
நண்பர் ஒருவர் இன்று ஹயாத்தில் நடக்க இருக்கும் ஒரு சினிமாவின் பாடல்
வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார். பிரமாதமான லஞ்ச் என்று
உசுப்பேத்தியிருந்தார்கள், போகலாம் என்ற யோசனையும் இருந்தது.
இப்போ மனசு பட்டிமன்ற தலைப்பை ஹயாத் லஞ்ச்சா அல்லது சினிமாவா என்று மாற்றிக் கொண்டது. நெடுநேர வாக்குவாதத்திற்கு பிறகு சினிமாவை ஜெயிக்க வைத்து அரங்கிற்கு கிளம்பினேன்.
ஒரு படம் வெளியானதும் நம்மைப் போல் ஒரு இணைய சினிமா விமர்சகர் அந்த படத்தை கிழித்து தோரணம் கட்டி தொங்க விடுகிறார். அந்த படத்தின் வசூர் பாதிக்கப்பட்டதால் கோவப்பட்ட தயாரிப்பாளர் அந்த விமர்சகரை தாக்கி காயப்படுத்துகிறார்.
பின்னர் ஒரு தொலைக்காட்சியில் நடக்கும் வாக்குவாதத்தில் விமர்சகர்களைப் பார்த்து 120 ரூவாய் கொடுத்து படம் பார்க்கும் உனக்கு, கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தை விமர்சிக்க என்ன தகுதியிருக்கு என்று கேட்க வாக்குவாதம் முற்றி அந்த விமர்சகர்கள் க்ளிஷேவே இல்லாத ஒரு மசாலாப் படத்தின் கதையை தயாரிப்பாளருக்கு கொடுப்பதாகவும், அதை அவர் தயாரிப்பதாகவும் முடிவாகிறது. நேரம் ஆறு மாத காலம்.
அந்த காலக்கட்டத்திற்குள் கதையை உருவாக்க வேண்டி அந்த விமர்சகர் குழுவினர் மிடில் கிளாஸ் இளைஞன் மிர்ச்சி சிவா, கொடூர கொலைகாரன் பாபி சிம்ஹா, பொறுப்பில்லா பணக்கார இளைஞன் கௌரவ் ஆகியோரின் வாழ்க்கையை லட்சுமி தேவியின் துணை கொண்டு தொடர்கிறார்கள்.
அவர்கள் லைப்பில் இருந்து என்ன எடுத்தார்கள், அந்த மூவரின் நிலை என்ன, விமர்சகர்கள் க்ளிஷே இல்லாத மசாலாப் படத்தை எடுத்தார்களா என்பதே மசாலா படத்தின் கதை.
ஆரம்பம் என்னவோ சுவாரஸ்யமாக தான் இருந்தது. என்னவோ சொல்லப் போறங்க என்பது மாதிரியே காட்சிகள் ஆரம்பித்தது. ஆனால் போகப் போக நிலைமை பாதாளத்திற்கு போய் இருக்கை உறுத்தலாகி மனசு ஹயாத் லஞ்ச் நோக்கி பறக்க ஆரம்பித்து விட்டது.
படத்தில் நடிப்பிலும், கதாபாத்திரத்திர வடிவிலும் சுவாரஸ்யப்படுத்தும் ஒரே நபர் சிவா மட்டும் தான். டிப்பிகல் சென்னையில் லோ மிடில் கிளாஸ் இளைஞனாக நன்றாகவே செய்துள்ளார். நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட், வேலைநேரங்களில் பாஸிடம் மாட்டுவது, வீட்டில் ஒரு நவநாகரீகப் பெண் வந்ததும் காட்டும் படபடப்பு, இறுதியில் அந்த பெண் தனக்கு ஏன் செட்டாக மாட்டாள் என்று விளக்கும் விதம் என கவனம் ஈர்க்கிறார்.
கொலைகார அமுதனாக பாபி சிம்ஹா, தமிழ் சினிமாவில் இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் இடம் ரொம்பவே அதிகம் என்று நினைக்கிறேன். வில்லத்தனம் என்றால் இறுக்கமாக முறைப்பது என்று யார் இவருக்கு சொல்லிக் கொடுத்தது என்று தான் தெரியவில்லை.
அது போல இடது கை பழக்கமுள்ளவர் போல் இருக்க இயல்பு மாறாமல் இருக்க வேண்டும். வலது கையில் அடிபட்டவன் இடது கையில் சாப்பிடுவது போல் இருக்கிறது. அது போல் காரணமேயில்லாமல் லட்சுமி தேவியிடம் நெருங்குவதும் பொருந்தவில்லை.
பணக்கார இளைஞனாக கௌரவ். அவரது பாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. டிக்கெட் எக்ஸ்ட்ரா வைத்திருந்து கொடுத்தவளிடம் காதல் வயப்படுவது என்னா கன்றாவி லாஜிக்கோ.
ஆரம்பித்த பொழுதில் சினிமா பார்ப்பது, உடனுக்குடன் விமர்சனம் போடுவது, யூடியுபில் வீடியோ விமர்சனம், அதனால் படத்தில் வசூலுக்கு பாதிப்பு என்று கவனம் ஈர்த்தவர்கள் போகப் போக என்ன செய்வது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறி படத்தை குழப்பி பார்ப்பவனையும் குழப்பி விட்டு இருக்கிறார்கள்.
படம் போட்ட 45 நிமிடத்திற்குள் இன்டர்வெல் ஒரு அதிர்ச்சி என்றால் அதற்கு பிறகு வரும் காட்சிகள் இன்னும் அதிர்ச்சி. நினைவுகள் எல்லாம் ஹயாத் சாப்பாட்டிற்குள் இருக்கிறது. கண்ணை சொருகுகிறது. என்னைக் கட்டுப்படுத்தி தான் மிச்சப்படத்தை பார்த்து முடித்தேன்.
மிர்ச்சி சிவா சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் இல்லையென்றால் படம் பார்ப்பவர்களின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். ஹீரோயினி லட்சுமி தேவி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, பார்க்க சில காட்சிகளில் மட்டும் நன்றாக இருக்கிறார். அவ்வளவு தான்.
தியேட்டரில் போய் படம் பார்க்கும் அளவுக்கு ஒன்றுமில்லை. எப்பவாவது ஒரு விஷேச நாளில் டிவியில் போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆரூர் மூனா


