Thursday 26 November 2015

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

சோறுன்னா சட்டி திம்போம், சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்னு ஒரு பாட்டு கன்னிராசி படத்துல இருக்கும். சின்ன வயசுல அந்த பாட்டு தான் எங்களுக்கு தேசிய கீதம். அந்த பாட்டின் இலக்கணப்படி நொறுக்கிக் கொண்டே இருக்கிறார் அனுஷ்கா. குண்டாக இருப்பதாலேயே வரன்களால் தட்டிக் கழிக்கப்பட்ட அவரது வாழ்க்கையில் விரும்பியவரை எப்படி திருமணம் செய்தார் என்பதே இஞ்சி இடுப்பழகி.


இந்த உலகமகா காவியத்தை அரங்கில் ஆர்வமுடன்(!!!) பார்க்க விரும்புபவர்கள் இத்துடன் ஸ்கிப் செய்து விடவும். விமர்சனத்தில் ஸ்பாய்லர்கள் இருக்கலாம். (நன்றி விக்கி நண்பா). இந்த ஸ்பாய்லர் மேட்டர் ஒரு விவாதப் பொருளாகி பெரும் சச்சரவை கிளப்பியதால் இனி வரும் விமர்சனங்களில் இந்த பாரா தவறாமல் இடம் பெறும்.

எனக்குன்னு ஒரு ராசி இருக்கு. நான் பார்க்க நினைக்கும் படங்களின் முதல் காட்சி எதாவது ஒரு காரணத்தால் தடைபடும். இல்லாவிடில் என்னால் போக முடியாமல் போகும். காட்சி ரத்தாகும். சில சமயம் படமே வெளிவராது. சிக்கலில்லாமல் டிக்கெட் கிடைக்கும் படங்கள் சூரமொக்கையாக இருக்கும். 


இன்றும் அது தான் நடந்தது. நான் போக விரும்பியது உப்புகருவாடு அல்லது 144 படத்துக்கு தான். 9 மணிக்கு கவுண்ட்டரில் போய் டிக்கெட் கேட்டால் 144 காட்சி ரத்து. வாலிபராஜா படம் வெளிவருமா என தெரியாது, உப்புகருவாடு 9.45க்கு தான் காட்சி என்றார்கள். 

9.45க்கு படம் பார்த்து விமர்சனம் எழுதி விட்டு வேலைக்கு போக முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் 9.10 காட்சிக்கு டிக்கெட் எடுத்தேன். அது. . . . நான் போகவே கூடாது என்று முடிவெடுத்திருந்த இஞ்சி இடுப்பழகிக்கு. 

இந்த படம் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்ய சில காரணங்கள் இருந்தன. ஒன்று சில வருடங்களுக்கு முன்பு கீதகீதலு என்று ஒரு தெலுகு படம் வந்திருந்தது. அல்லரி நரேஷ் ஹீரோ. ஒரு குண்டு பொண்ணை கல்யாணம் பண்ணி விட்டு சிரமப்பட்டு கடைசியில் குணம் தான் முக்கியம் என்று ஏற்றுக் கொள்ளும் படம். கிட்டத்தட்ட பாக்யராஜின் சின்ன வீடு மாதிரியான கதை. ஆனால் பக்கா ஆந்திரா மசாலா படம்.


இந்த படத்தின் போஸ்டர்கள் அந்த படத்தை தான் நினைவு படுத்தின. அந்த படமே கடுப்பா இருக்கும், அதே போல் இருக்கும் படத்தை ஏன் பார்ப்பானேன் என்று முடிவு செய்திருந்தேன். போதாக்குறைக்கு ட்ரெய்லர் செம மொக்கையாக இருந்தது. விதி எப்படியாவது சதி பண்ணி என்னை இந்த படத்தை பார்க்க வைத்த விந்தையை எண்ணி வியக்கிறேன். 

படத்தில் நாயகி குண்டாக இருப்பதால் கிண்டலடிக்கப்படுவது ஒரு காட்சிக்கு ஓகே ஆனால் முன் பாதி முழுக்கவே தொடர்வதால் கடுப்பாகிறது. எந்த குண்டு பொண்ணுய்யா உங்களுக்கு தின்னுக்கிட்டே இருக்கு. அதை குறைத்திருந்தால் கூட பார்க்கிறவனுக்கு கொஞ்சம் ஆசுவாசம் கிடைச்சிருக்கும். கேப் விடாம அடிச்சி கொல்லுறானுங்க படம் பாக்குறவங்களை.


படத்தின் நாயகனாக ஆர்யா. கச்சிதமாக மிக்சர் மட்டும் சாப்பிடும் கதாபாத்திரம். வரிசையான ப்ளாப்புகளால் இந்த லெவலுக்கு இறங்கிப் போன ஆர்யாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது. 

படம் தமிழ் தெலுகில் சேர்த்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்வதை விட தெலுகு டப்பிங் என்று சொல்வது தான் சாலப் பொருத்தமாக இருக்கும். க்ளோசப்புகளுக்கு மட்டும் தான் தமிழ் வெர்சன் வருகிறது. மிட்ஷாட், லாங் ஷாட் எல்லாமே தெலுகில் இருந்து தமிழுக்கு டப் தான் பண்ணியிருக்கிறார்கள்.

அனுஷ்காவுக்கு நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரம் என்று சொல்லி தான் புக் செய்திருப்பார்கள் போல. அவரும் பாவம் சிரமப்பட்டு உடல் எடையை ஏற்றி இறக்கியிருக்கிறார். ஆனால் எல்லாம் வீணாப் போச்சே.

படத்தின் நாட் மட்டும் எடுத்துக் கொண்டால் கேட்க நல்லாயிருக்கு. சமூகத்திற்கு தேவையானதும் கூட. ஆனால் அதனை படமாக்க பொட்டு வைத்து பூச்சூடியிருப்பது தான் சகிக்கலை. 

உடல் எடையை குறைக்கனும் என்று ஆசைப்பட்டால் வாயைக் கட்டி உடற்பயிற்சி மூலம் படிப்படியாக குறையுங்கள். ஒரு வாரத்தில் பத்து கிலோ எடையை குறைக்கிறேன் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள். இவ்வளவு தான் படம். ஆனால் சொன்ன விதம் பார்ப்பவனை சாவடிக்கிறது. 

படத்தில் காமெடிக்கு நிறைய முயற்சிக்கிறார்கள். நமக்கு சிரிப்பு வரமாட்டேன் என்கிறது. 

படத்தில் பெர்பார்மென்ஸில் பின்னி பெடலெடுப்பவர் ஊர்வசி தான். மகளுக்கு குண்டாக இருப்பதால் திருமணம் தட்டிக் கொண்டே போவதை நினைத்து கடவுளிடமும், காலஞ்சென்ற கணவனின் போட்டோவிடமும் புலம்பும் காட்சிகளில் நடிப்பில் சீனியர் என்பதை நிருபிக்கிறார். 

பிரகாஷ் பாத்திரப்படைப்பு எரிச்சலுட்டுகிறது. 

இந்த படம் முழுக்க முழுக்க ஏ சென்ட்டர் ஆடியன்ஸை குறிவைத்தே எடுத்திருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் பப்படமாவது தான் கொடுமை. தெலுகில் படம் வெற்றியடையும் அபாயமிருக்கிறது. 

பொங்கலுக்கோ காதலர் தினத்துக்கோ சின்னத்திரையில் முதன்முறையாக போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா

Monday 16 November 2015

டாஸ்மாக்கு சைட்டிஸ்கள்

டாஸ்மாக்குகளில் கிடைக்கும் சைட்டிஷ்கள் எப்போதுமே சுமாராகவும் சுவையிலும் தரத்திலும் குறைந்ததாகவும் தான் இருக்கும் என்று நம் அனைவருக்கும் ஒரு எண்ணமுண்டு.


ஆனால் விதிவிலக்காக சில பார்களில் நாம் யோசித்து கூட பார்க்க முடியாத சுவையில் சைட்டிஷ்கள் பறிமாறப்படுவதுண்டு. அவற்றைப் பற்றி நான் அறிந்தவை உங்களுக்காக.

இந்த கட்டுரையில் பப்புகளும் ஏசி பார்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எல்லாம் லோக்கல் டாஸ்மாக் பார்களில் கிடைக்கும் சைட்டிஷ்கள் மட்டும் தான்.

காசி தியேட்டர் எதிர்ப்புறம் பாலத்தின் அடியில் கார்டன் ஒயின்ஸ் என்று ஒரு ஒயின்ஷாப் இருந்தது. 2002 காலக்கட்டத்தில் செம கூட்டம் அம்மும் அங்கே, அப்போது ஒயின்ஷாப்புகள் தனியார் வசம் இருந்தன. அங்கே வெங்காய பஜ்ஜி செம டேஸ்ட்டாக இருக்கும். 


அதிக ஆயில் இல்லாமல் டிஷ்யு பேப்பரின் மேல் அடுக்கப்பட்ட சூடான வெங்காய பஜ்ஜி தொட்டுக்கொள்ள கார வெங்காய சட்னி கொடுப்பார்கள். சரக்குக்கு ஆன செலவை விட சைட்டிஷ்க்கு தான் அதிக செலவாகும் எனக்கு. நடுராத்திரி வரைக்கும் பஜ்ஜிக்காக சண்டைப் போட்டுக் கொண்டு இருப்போம்.

கழுத்தைப் புடிச்சி  வெளிய தள்ளி தான் பாரை மூடுவார்கள். அந்த அளவுக்கு பழக்கமான பார் அது. டாஸ்மாக்காக மாற்றப்பட்டு பார் மட்டும் வேறொருவரிடம் சென்ற பிறகு நல்ல சைட்டிஷ் கிடைக்காததால் அங்கே செல்வதை கைவிட்டேன். காலம் செய்த கோலம்  அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. 

டிஸ்கவரி புக் பேலஸ் அருகில் ஒரு டாஸ்மாக் பாரில் மினி மசால் வடை நல்லாயிருக்கும். நல்லா மொறுமொறுன்று இருக்கும். பாதி கடித்து மிச்சம் வைப்பது எல்லாம் அதில் ஆகாது. ஒரு சிப் சரக்கு, ஒரு வடை என்பது தான் இதன் கான்செப்ட்.


ஆர்டர் செய்து விட்டு அரைமணிநேரமாவது காத்திருந்தால் தான் வடை வரும். மற்ற இடங்களில்  சொல்வது போல் இப்ப பத்து வடை அப்புறம் பத்து வடை என்றெல்லாம் ஆர்டர் செய்தால் ஒன்னும் வேலைக்காகாது. 

டிஸ்கவரியில் மீட்டிங் முடித்து விட்டு பதிவர்கள் குழு கடைக்கு போனதுமே ஐம்பது வடை என்று ஆர்டர் செய்து வடை வரும் வரை சரக்கு வாங்காமல் காத்திருப்போம். வடை வந்தால் தான் என்ன ப்ராண்ட் சொல்வது என்றே முடிவாகும்.

பார்ட்டி முடியும் தருணத்தில் ஒரு வடைக்காக உலகப் போர் மூளும் அபாயம் கூட ஏற்படுவதுண்டு. ஒரு முறை இப்படி தான் நம்ம அரசப் பதிவர் கடைசி வடையை எடுக்கப் போக அஞ்சா சிங்கம் வடையை எடுத்த வெட்டிபுடுவேன் என்று மிரட்ட, மிரட்சியுடன் வடையை பார்த்துக் கொண்டே குடித்த கதையும், டீடோட்லர் சென்னைப் பதிவர் வடையை சாப்பிட மட்டுமே எங்களுடன் அந்த கடைக்கு வருவதும் அந்த வடையின் சுவைக்கு சான்று.

கேகேநகர் டபுள் வாட்டர் டேங்க் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் பணியாரம் செம டேஸ்ட்டாக இருக்கும். மாலை வேளையில் மட்டும் தான் கிடைக்கும். இதே பதிவர்கள் குழு இங்கும் அடிக்கடி செல்வதுண்டு. 

பணியாரமும் அதற்கு என்றே ஸ்பெசலாக வைக்கப்பட்டு தரப்படும் காரக்குழம்பும் எங்குமே கிடைக்காது. சுவையும் அடிச்சிக்க முடியாது. ஆர்டர் செய்து கொண்டே இருப்போம் வந்து கொண்டே இருக்கும். நல்லா மெத்து மெத்துன்னு பணியாரம் குழம்பில் முக்கி எடுத்து சுவைக்கும் போது காரம் கபாலத்தில் தெரியும். அடடா இது போன்ற சுவையை எங்குமே கண்டதில்லை.

கேரளாவில் இருந்த சமயம் அதாவது 2005ல் எப்பவுமே ரெகுலர் சைட்டிஷ் கப்பாவும் பீப் கறியும் தான். சில நாட்கள் மட்டும் மத்தி மீன். அங்கே ஒயின்ஷாப்பில் பார் இருக்காது. நாங்க பேச்சிலர்கள் ஒரு வீடாக எடுத்து தங்கியிருந்ததால் அங்கே தான் சங்கமம் அரங்கேறும். 

அங்கு உள்ள கள்ளுக்கடையில் நமக்கு தெரிந்தவர் வேலை பார்த்து வந்ததால் ரெகுலராக கப்பாவும் பீப் கறியும் கொண்டு வந்து கொடுத்து விடுவார். பலா இலையில் வேயப்பட்ட தொன்னையில் கப்பாவை வைத்து அதன் மீது கறியை ஊற்றி பனை மர ஓலையை மடக்கி ஸ்பூனாக்கி சாப்பிடும் சுவை இனி எங்கும் கிடைக்காது. மனதில் பசுமையாக நினைவுகளை அடக்கி வைத்து இருக்கிறேன். 

ஒரு நண்பர் வீட்டு கல்யாணத்திற்காக தூத்துக்குடிக்கு போயிருந்தோம். திருமணம் முடிந்து பார்ட்டிக்காக மதிய உணவுக்கு முன் ஒரு மொட்டக் காட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டு போனாங்க. பக்கு பக்குன்னு தான் இருந்தது. ஒரு இடம் வந்தது. உள்ளே நுழைந்தால் அழகான மூங்கில் காடு. அதில் சாராயம் சமைக்க ஒரு  பெண்மணி என செட்டப்பே அமர்க்களம்.

கயித்துக் கட்டில்ல உட்கார்ந்து ஒரு பாட்டிலை கையில் கொடுத்தார்கள், மடக்கென கவிழ்த்து காலி செய்ததும் வயிறு பகபகவென எரிந்தது. பனை ஓலையை குழிவாக முடிந்து அதில் சுடுசோத்தைப் போட்டு அதில் திக்கான மட்டன் குழம்பு, சோத்துக்கு நிகரான அளவுக்கு மட்டனையும் போட்டு சடுதியில் பிசைந்து உள்ளே தள்ளினால் கிடைத்த கிளர்ச்சியை எதனுடனும் ஒப்பிட முடியாது. செம காரம். எரிச்சலை காரம் அடக்கும் என்பதை அங்கே தான் தெரிந்து கொண்டேன். 

அகரம் காமராஜர் சிலையில் இருந்து ரெட்டேரி செல்லும் பேப்பர் மில்ஸ் சாலையில் கொளத்தூரில் முதல் பெட்ரோல் பங்கிற்கு முன்னால் இருக்கும் பாரில் தந்தூரி சிக்கன் லெக் பீஸ் மட்டும் ஒரு பிளேட் கிடைக்கும். நல்லா முறுகலாக தந்தூர் செய்யப்பட்ட சிக்கன் மேல் மசாலாப் பொடி தூவப்பட்டு, புதினா கொத்தமல்லி தேங்காய் சேர்த்து அரைக்கப்பட்ட சட்னியுடன் கொடுப்பார்கள். 

சிக்கனை எடுத்து நன்றாக சட்னியில் தோய்த்து சூட்டுனே சுவைக்கும் போது கிடைப்பது ஆனந்தம் பேரானந்தம். கிச்சன்லயே போய் விசாரித்தேன். தந்தூரி சிக்கன் மேல் தூவப்படும் மசாலாவில் என்னென்ன சேர்க்கிறீர்கள் என. கம்பெனி சீக்ரெட் என்று கடைசி வரை சொல்ல மறுத்து விட்டார்கள். எப்ப இந்த கடைக்கு போனாலும் ரெண்டு மூணு லெக் பீஸ் ஆர்டர் செய்து மொக்கினால் தான் திருப்தி கிடைக்கும்.

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும் என்ற பழமொழிக்கேற்ப ஒரு விடாத மழைப் பொழுதில் மிலிட்டரி சரக்குக்கு துணையாக எதுவும் கிடைக்காமல் திடீரென ஐடியா செய்து ஒரு கிளாஸில் சரக்கும், மற்றொரு டம்ளரில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கிய ரசத்தையும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி குடித்தது எல்லாம் நம்ம வரலாற்றுல வரும். 

ஆரூர் மூனா

Tuesday 10 November 2015

தூங்காவனம்

படத்தின் ஒரு காட்சியை பார்த்து நான் மிகவும் வருந்தினேன். மனசு வலித்தது. ஆம் நம்புங்கள் கமலுக்கு வயதாகி விட்டது. இன்டர்வெல் காட்சியில் கமல் கதவை தட்டும் போது கையின் தசைகள் தளர்ந்து கமலுக்கு 60க்கும் வயதாகி விட்டது என்பதை உறுதி படுத்துகிறது. ஆனால் அந்த காட்சியை தவிர வேறெங்கும் கமலுக்கு நாற்பதுக்கு மேல் மதிப்பிடவே முடியாது. அந்தளவுக்கு ஆக்சனில் பின்னியிருக்கிறார்.


இப்பல்லாம் சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது தன்னிலை விளக்கம் கொடுப்பது மிகவும் முக்கியமாக படுகிறது. வேதாளத்திற்கு மனதில் பட்டதை எழுதப் போக காலையில் இருந்து ட்விட்டர், வாட்ஸ் அப், பேஸ்புக் எல்லாத்திலும் என் தலை கிடந்து உருள்கிறது. நான் அஜித்தின் எதிர்ப்பாளனாம். அவர் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் எழுதி அவர் மதிப்பை குறைக்க பார்க்கிறேனாம்.

நான் ரஜினி ரசிகன், அதி தீவிர ரசிகன். ரஜினியை பூஜிக்கும் ரசிகன், ஆராதிக்கும் ரசிகன். அதனால் கமல் படத்தை பாராட்டினால் நான் கமல் ரசிகன் என்று சொல்லக் கூடாது. புரிஞ்சதா.

நான் ஸ்லீப்லெஸ் நைட் படம் பார்க்கவில்லை. பொதுவாக ஆங்கிலம் தவிர மற்ற வெளிநாட்டு மொழிப்படங்கள் பார்ப்பதில்லை. ஆங்கிலம் கூட விமர்சனத்தை படித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டா தான். அதன் கதையையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.


காலையில் எழுதிய வேதாளம் விமர்சனம் ஏகப்பட்ட இடங்களில் சர்ச்சையை உண்டாக்கி அதன் வேலையை காட்டிக் கொண்டு இருந்தது. முதல் பாதி முழுக்க போன் கால்கள் வந்து என்னை தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. அதனால் உன்னிப்பாக படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. பிறகு போனை ம்யூட்டில் போட்டு விட்டேன். அதற்கப்புறம் படம் குதிரைப் பாய்ச்சலில் சென்று படக் கென்று முடிந்து விட்டது. ஆச்சரியம் தான், கமல் படத்தில் நான் இந்த அளவுக்கு இறங்கி கவனம் செலுத்தியது.

ஒரு இடத்தில் கொக்கையினை வழிப்பறி செய்கிறார் கமல் யூகிசேது உதவியுடன். மறுநாள் அந்த சரக்கை பறி கொடுத்த பிரகாஷ்ராஜ் கமல் மகனை கடத்தி வைத்து சரக்கை திரும்ப கேட்க காவல் அதிகாரியான கமல் அந்த சரக்கை திரும்ப கொடுக்க போக அவரை பின்தொடர்ந்து காவல் அதிகாரியான த்ரிஷா போக சரக்கை பெற கடத்தல்காரர் சம்பத் வர சரக்கை பிடுங்க கெட்ட காவல் அதிகாரி கிஷோர் வர அனைவரும் ஒரு பப்பில் சந்திக்கிறார்கள். முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. 

படத்தில் கமல் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு உதாரணம் ஜெகன் ஒரு இடத்தில் கூட அவரது அதிகபிரசங்கித்தனத்தை காட்ட வில்லை. தேவையை விட அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்ன படத்துக்கு தேவையோ அதை மட்டும் பேசியிருக்கிறார்.

பப்பிற்குள் கொஞ்சம் கூட அலுக்காமல் ஒரு படம் முழுக்க எடுப்பது பெரிய கலை. அதை சரியாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். எனக்கு ஒரு இடத்தில் கூட அயர்ச்சி ஏற்படவே இல்லை. 

நடிப்பு ராட்சசன்களான பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர் ஆகியோர்களை படத்தில் பயன்படுத்தியிருப்பதே படத்தின் சிறந்த ப்ளஸ். பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோருக்கு நல்ல ஸ்கோப் உள்ள காட்சிகள் இருக்கிறது. சம்பத் மட்டும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார். 

கண்டிப்பாக கொடுத்த காசுக்கு ஒர்த் உள்ள படம். பார்த்து மகிழுங்கள். 

ஆரூர் மூனா

Monday 9 November 2015

வேதாளம் - சினிமா விமர்சனம்

எல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட்ட தலைமை, நகர தலைமை என்று இருப்பார்கள். எங்கள் ஊரில் மட்டும் ரெண்டு மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்கள் இருக்கு. புதுசா வந்து பார்ப்பவனுக்கு எது ஒரிஜினல் எது நியு ஒரிஜினல் என்று வித்தியாசம் தெரிஞ்சிக்க முடியாது.


அது மாதிரி தான் அஜித் ரசிகர்கள் நிலைமையும். அவரே அதிகாரப்பூர்வமாக மன்றங்களை கலைத்து விட்டார். இவனுங்களோ சொரணையே இல்லாம நகர தலைமை, மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்கள் என்று ப்ளெக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். ஏண்டா கொஞ்சமாவது மானம் ரோசம் வேணாம். சோத்துல உப்பு தான போட்டு துன்றீங்க. 

இது எதுக்கு இப்பவா, நான் பார்த்த காட்சிக்கான டிக்கெட் மாவட்ட தலைமை அஜித் ரசிகர் மன்றத்தின் சார்பாக அச்சிடப்பட்டு இருந்தது. 

சரி படத்துக்கு வருவோம். 

நான் ஒரு படத்தின் கதையை சொல்றேன். கவனமா படிங்க. பத்து வருடத்துக்கு முன்பு சரத்குமார் நமீதா (ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ) நடித்த ஏய்ன்னு ஒரு படம். வடிவேலு காமெடி கூட செமயா இருக்கும்.


பழனியில் சரத் டியுப் லைட் விற்பவராக வருவார். அவருடன் இணைந்து வடிவேலு தொழில் பண்ணுவார். அவருக்கு ஒரு தங்கச்சி, தங்கச்சிக்காக உயிரையே கொடுப்பார். தங்கச்சி கலெக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக சிரமப்பட்டு படிக்க வைப்பார். கோவமே படாமல் சிரித்த முகத்துடன் வடிவேலுவை இணையாக வைத்து காமெடி செய்து வருவார்.

தங்கச்சிக்கு பிரச்சனை கொடுப்பதால் வின்சென்ட் அசோகனை போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். இடைவேளையில் நமீதா ஒரு உண்மையை கண்டுபிடிக்க சரத்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.


இப்போ வேதாளம் படத்தின் கதை. அஜித் கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டும் அப்பாவி, சூரி டாக்ஸியின் ஓனர். கோவமே வராத சாது, அப்பாவி, தங்கையான லட்சுமிமேனனை படிக்க வைக்க சிரமப்படும், தங்கை மேல் உயிரையே வைத்து இருக்கும் ஒரு அன்பு அண்ணன். 

ஒரு கெட்டவனை போலீஸில் காட்டி கொடுத்து விட்டு அதற்காக வில்லன்களிடம் சாக இருக்கும் போது எல்லாரையும் போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். ஸ்ருதி அஜித் பயங்கர கொலைகாரன் என்பதை கண்டு பிடிக்க அஜித்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.


ஏய் படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் கலாபவன் மணி. அவரது தங்கையை  தான் பழனியில் சரத் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.

இந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் தம்பி ராமையா. அவரது மகளை  தான் கொல்கத்தாவில் அஜித் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.

இறுதியில் வில்லன்களை கொன்று படத்தை சுபமாக முடிக்கிறார்கள் சரத்தும் அஜித்தும்.

சாரி. கம்பேரிசன் கூடாதுல்ல. ஆனா அந்த படத்தை அப்பட்டமாக காப்பி அடித்தால் என்ன செய்வது. 

படத்தின் ஆகச் சிறந்த எரிச்சல் சூரி. அவருக்கு ஒரு பர்சென்ட் கூட காமெடி வரவில்லை. மொத்த படத்தின் காமெடியை அவருக்கு கொடுத்து நம்மையும் சாகடிச்சியிருக்கிறார்கள்.

முதல் பாதி செம அறுவை. உக்காரவே முடியலை. இரண்டாம் பாதி கொஞ்சம் தேவலாம் முன்பாதியுடன் ஒப்பிடுகையில்.

ஒரே ஒரு காட்சி விளக்குகிறேன், இந்த இயக்குனர்கள் ரசிகர்களை எவ்வளவு மடையன் என்று நினைத்து காட்சிகளை அமைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

தம்பியை கொன்றவன் யாரென தெரியாத வில்லன், 3 ஐடி வல்லுனர்களை வைத்து ரெண்டு ஆப்பிள் மேக் கம்ப்யுட்டர்கள் , ஒரு புரொஜக்டர். ஒரு ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஒரு கம்ப்யுட்டர் ஆபீஸ் வைத்து சிரமப்பட்டு ஜப்பானுக்கெல்லாம் போன் செய்து அது அஜித் தான் என கண்டு பிடிக்கும் ஒரு தருணத்தில் வெறும் பட்டன் உள்ள செல்போனை வைத்துக் கொண்டு அதை கூட யூஸ் செய்யாமல் வில்லன் இடத்தை கண்டு பிடித்து வந்து அவர்களை கூண்டோடு கொலை செய்வார். . . . த்தா எங்களையெல்லாம் பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு. 

அதை விட கொடுமை பத்து கிமீ தள்ளி யிருந்த ஸ்ருதி அடுத்த வினாடி அந்த கட்டிடத்தின் பதினைந்தாவது மாடியில் அஜித் செய்யும் கொலையை நேரில் பார்ப்பது.

ரெட்னு ஒரு சூர மொக்கை பார்த்து விட்டு வரும்போது எப்படி ஒரு எரிச்சல் தோன்றியதோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே இப்போ எரிகிறது.

ஆரூர் மூனா

Sunday 8 November 2015

குடும்பத்துடன் கொண்டாடும் தீபாவளி

பதிவு போடுவது எதாவது ஒரு காரணத்தினால் தடைபட்டால் அந்த இடைவெளியை கடந்து அடுத்த பதிவு போடுவதென்பது சாமானியமான காரியமன்று. கண்டென்ட்டும் சிக்காது. வலுக்கட்டாயமாக போட்டு இழுத்தாலும் வெறும் காத்து தான் வரும்.


அந்த கேப்பை உடைப்பதற்காக செய்யப்பட்ட பகீரபிரயத்தனம் தான் இது.

தீபாவளிக்கு சிரமப்பட்டு சொந்தஊருக்கு வருவதை விட சுலபமானதும், வசதியானதும் சென்னையில் இருந்து விடுவதே. முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்து விடலாம். அதுவும் அதிகாலை காட்சிகள் சென்னையில் பிரத்யேகமாக திரையிடப்படும். எல்லாருக்கும் முன்னர் விமர்சனம் போடலாம். ஹிட்ஸ் அள்ளலாம்.

விடியற்காலை எழுந்து எண்ணெய் தேய்த்து சாமி கும்பிட்டு குளிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. முன்னிரவு மகா தியானத்தில் மூழ்கி விட்டு காலையில் சாவகாசமாக எழலாம். பலகாரங்கள் கூட கடையில் வாங்கி தீபாவளியை நடத்திக் கொள்ளலாம். 

ஆனால் சொந்த ஊருக்கு போய் கொண்டாட நினைப்பவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள், சிக்கல்கள் உண்மையிலேயே கொடுமையானது. 


இப்பொழுதாவது முன்பதிவு, சிறப்பு பேருந்துகள் போன்ற வசதிகள் இருக்கிறது. 1998 தீபாவளிக்கு முதல் நாள் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு வந்தேன். அப்பொழுது எல்லாம் கணினி முன்பதிவு கிடையாது. நேரில் பாரிமுனை வந்து தான் டிக்கெட் புக் செய்ய வேண்டும். 

அதனால் இரவு ஒன்பது மணிக்கு பேருந்தை எதிர்நோக்கி நின்றேன். தீபாவளி ஒரு நாள் மட்டுமே எனக்கு விடுமுறை. திருவாரூர் போய் சேர்ந்த அன்று இரவே சென்னைக்கு கிளம்பியாகனும்.

முன்பதிவில்லாத பேருந்தில் ஏறுவதற்கு டோக்கன் கொடுக்கிறார்கள். 4000 பேருக்கு நாற்பது டோக்கன் எம்மாத்திரம். டோக்கன் வாங்கவே முடியவில்லை. நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு பேருந்து கிளம்புவதை நிறுத்துகிறார்கள். இனி விடியற்காலை தான் பேருந்து என்ற அறிவிப்பு செய்கிறார்கள். அன்று இரவு முழுக்க பேருந்து நிலையத்தில் காத்திருந்து காலை நாலு மணிக்கு வந்த பாண்டி பேருந்தில் ஏறி, அங்கிருந்து மாறி மாறி மதியத்திற்கு மேல் திருவாரூருக்கு வந்தடைந்தேன். 

வந்து குளித்து சாப்பிட்டு விட்டு பேருக்கு ரெண்டு வெடி வெடித்து விட்டு கிளம்பி பேருந்து நிலையத்தை வந்தடைந்தேன். சென்னைக்கு திரும்புவதற்காக. வாழ்க்கையே வெறுத்து விடும், இது போன்ற கொடுமையான பயணங்களில். 

2003 தீபாவளி இன்னும் கொடுமை. அப்போ வேலையில் சேர்ந்திருந்ததால் கையில் காசு எக்கச்சக்கமாக இருந்த நேரம். ஏதோ ஒரு தனியார் பேருந்தில் ஒரு மாதத்திற்கு முன்பே கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். பேருந்தில் ஏறி அமரும் போது இரவு, பத்து மணி பேருந்து கோயம்பேட்டை தாண்டிய போது விடிந்திருந்தது. அப்படி ஒரு டிராபிக். அண்ணாநகர் முதல் அசோக் நகர் வரை ஒரு வாகனம் நகர முடியவில்லை. சென்னையே ஸ்தம்பித்த நாள் அன்று. 

நம்மிடம் காசு இருந்தால் கூட நேரம் சரியில்லை என்றால் தீபாவளி, பொங்கல் போன்ற விஷேசங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவது கேள்விக்குறியாகி விடும்.

இப்பவும் வீட்டில் அம்மா பாரம்பரியமாக எல்லா பலகாரங்களையும் வீட்டில் தான் செய்வார். நான் தான் இப்பக் கூட, ஏன் இன்று கூட நான் தான் மில்லுக்கு போய் அரிசி, ரவை, பயித்தம்பருப்பு, சர்க்கரை எல்லாத்தையும் அரைத்து வந்தேன். அங்கே க்யூ நிற்கும். அவமானமெல்லாம் இதில் பார்க்க முடியாது. 

சினிமா சென்னையில் இருப்பது போல் அதிகாலை காட்சிகள் இருக்காது. 1 1 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும். அதற்குள் சென்னையில் இருந்து விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கும். முக்கிய நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு பலகாரங்கள் கொடுப்பது, ஆட்டுக்கறியும், கோழிக்கறியும் வாங்கி வந்து கொடுப்பது போன்ற வேலைகள் நம் தலையில் தான் கட்டப்படும்.

இந்த வேலைகளை முடித்து விட்டு சினிமா முதல் காட்சி பார்ப்பதென்பது சாத்தியமே இருக்காது. அதுவும் இப்போ நாம அரைக்கிழம். திருவாரூர் மாதிரியான ஊர்களில் 25-30 வயதுடைய சின்னப்பசங்க மட்டும் தான் முதல் காட்சி டிக்கெட் எடுக்க நிற்பார்கள். அவர்களுக்கு நிகராக போட்டிப் போட்டு படம் பார்க்கவும் வெட்கமாக இருக்கும். என் வயதுடைய நண்பர்கள் எவனும் முதல் காட்சிக்கு வரமாட்டான். சென்னையில் இந்த பிரச்சனையே இருக்காது.

இதை ஜஸ்ட் லைக் தட் நாம் வேலை இருக்கு, தீபாவளிக்கு வரமுடியாது என்று சொல்லி விட்டால் எல்லாம் சுபமாகவே இருக்கும். ஆனால் என் அம்மா அப்பாவுடன் பண்டிகையை கொண்டாடும் மகிழ்வை அது தருமா. 

தீபாவளியன்று அதிகாலை நாலு மணிக்கு என் அப்பா தான் இப்பவும் எனக்கு எண்ணெய் தேய்த்து விடுவார், எண்ணெய் தேய்த்த தலையுடன் அப்படியே வந்து ரெண்டு சரத்தை கொளுத்திப் போட வேண்டும், ரெண்டு உலக்கை வெடியும் சேர்த்து வெடிக்கனும். 

அப்புறம் கொல்லையில் மர அடுப்பில் சூடாக்கப்பட்ட வெந்நீரை எடுத்து பதமாக வெளாவி கூப்பிடுவார். போய் குளித்து விட்டு வந்து புத்தாடைகளை அணிந்து ஒரு பண்டில் சரம், பத்து உலக்கை வெடி போன்றவற்றை வெடிக்க வைத்து வாசலை பேப்பர் குப்பைகளால் நிறைத்து முடிப்பதற்குள், மற்றவர்கள் வந்து குளித்து முடித்ததும் சாமி கும்பிட்டு, இலை போட்டு இட்லி, வடை, சுளியன் மேலும் பலகாரங்கள் வைத்து சாம்பார், தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்ததும் அம்மா பலகாரங்கள் நிரப்பிய பையை கையில் கொடுப்பார். 

நண்பர்கள் வீடுகளில் கொடுத்து அவர்கள் வீட்டு பலகாரங்களை திரும்ப பெற்று வீட்டில் கொடுத்து விட்டு கடும் கூட்டத்திற்கு இடையே பாய் கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறியை வாங்கி, வழியில் கோழிக்கறியையும் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டு சினிமாவுக்கு போய் விசிலடித்து பேப்பர் பறக்க விட்டு படம் பார்த்து வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்கு வந்து தோசை, ஆட்டுக்கறி குழம்பு, கோழிக்கறி வறுவல் ஒரு காட்டு காட்டி விட்டு நண்பர்களை சந்திக்க கிளம்பி விடுவேன். 

மாலை வந்து மிச்சமிருக்கும் வெடிகளை வெடித்து சில வெடிகளை கார்த்திகைக்கு ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிட்டு அரக்கப் பறக்க சென்னைக்கு கிளம்ப வேண்டும். ஆனால் அந்த ஒரு நாள் மகிழ்ச்சியும் அனுபவமும் நம்மை பல மாதங்களுக்கு தெம்புடனே வழிநடத்தும்.

அதனாலேயே இந்த அனுபவத்தை என் மகளுக்கும் கொடுப்பதற்காக என் அம்மா, அப்பா காலம் வரை, எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் கொண்டாடும் பழக்கத்தை கைவிடக் கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

ஆரூர் மூனா