Thursday 18 October 2018

சண்டைக்கோழி 2 - சினிமா விமர்சனம்

ட்ரெண்ட் எனப்படுவது பத்து வருசத்துக்கு ஒரு முறை மாறிக்கிட்டே இருப்பது. ட்ரெண்டுக்கு ஏத்த மசாலாப் படங்களின் லாவகம் 80களில் எஸ்.பி. முத்துராமனுக்கு வசப்பட்டது, 90களில் கே.எஸ். ரவிக்குமாருக்கு வசப்பட்டது. 2000த்தில் லிங்குசாமிக்கு கைவந்த கலையானது.


80களில் சாதித்த எஸ்.பி. முத்துராமன் 90களில் தடுமாறினார். கே.எஸ். ரவிக்குமாரும் அவர் சாதிச்ச காலம் முடியும் நேரத்தில் தடுமாறினார். இப்போ லிங்குசாமிக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தடுமாற்றம்னா ட்ரெண்ட் மாறிடுச்சினு அர்த்தம். அப்டேட் பண்ணாலும் பழைய வேகம் இருக்காது. 

இப்போ சண்டைக்கோழி 2க்கும் அது தான் நடந்துள்ளது. கரெக்ட்டான மசாலா பேக்கேஜ். ஆனால் 2000த்தின் ட்ரெண்ட். இப்போ பார்க்கும் போது எதுவும் குறையா தெரியல. ஆனால் சிலாகிக்க ஒன்னுமில்லை. அதுவும் வடசென்னை பார்த்து அவனவன் அடுத்த கட்டத்துல டியுன் ஆகி நிக்கும் போது போது இரண்டு படி கீழே நிற்கிறது சண்டைக்கோழி 2.


படத்தின் கதைனா மதுரைக்கு மேற்கே இருக்கும் பகுதிகளின் பெரும்பான்மை சாதியின் அதிகாரமிக்க தலைவரான ராஜ்கிரண் வரலட்சுமி குடும்பத்திடம் இருந்து ஹரிகிருஷ்ணனை காப்பாற்றுவதாக வாக்கு கொடுக்கிறார். அவரால் செயல்பட முடியாத சூழ்நிலையில் அவரது மகன் விஷால் அந்த வாக்கை காப்பாற்றினாரா என்பது தான். 

சண்டைக்கோழி 1 படத்தின் பலமே அந்த பேருந்தின் சண்டைக்காட்சியும் விஷாலின் பின்புலம் லாலுக்கு தெரிய வருவதும் தான். அதுவரை விஷால் ஆக்சன் நாயகன் என்பதை அறியாத நாம் இந்த மேஜிக்கை ஏற்றுக் கொண்டதுடன் பெரும் வெற்றியையும் கொடுத்தோம். ரன் படத்துல ஷட்டர் இறக்கி அடிக்கும் காட்சியும் இதே மாதிரி யான விளைவை ஏற்படுத்தியது. 


ஆனால் இது சண்டைக்கோழியின் 2ம் பாகம் என்பதால் விஷாலின் பின்புலம் படம் தொடங்கும் முன்பே தெரிந்து போவதும் அதன் பிறகான காட்சிகள் நாமே அரங்கில் அமர்ந்து யூகிக்கும் அளவு இருப்பதும் தான் நமக்கு அயர்ச்சியை கொடுக்கிறது. 

விஷால் நாற்பத்தி ஐந்து வயசுலயும் பிட்டா நரம்பு புடைக்க வலுவை காட்டும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். சண்டைக்காட்சிகளில் கடும் உழைப்பை கொடுத்துள்ளார். இதுக்கு மேல எதுனா சொல்லலாமான்னு யோசிச்சிப் பாக்குறேன் ஒன்னும் நினைவுக்கு வர மாட்டேங்குது. ஏற்கனவே துப்பறிவாளன், இரும்புத்திரை னு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்ததால் இந்த படம் எந்த விளைவையும் அவர் மார்க்கெட் நிலவரத்தில் ஏற்படுத்தாது.

ஜெனிலியா டைப் லூசுப் பெண் கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு. தொடரி படத்துலயும் இதே மாதிரி தான். ஆனால் இதில் புல் மேக்கப்புடன் லூசா குறும்பா நடிக்க முயற்சித்து இருக்கிறார். அவ்வப்போது இவர் குறும்பாய் புன்னகைக்கும் போது வாய்  ஒரு விளைவை காட்டி டரியலாக்குகிறது.

ராஜ்கிரண் அதே டெய்லர், அதே வாடகை. ஒரு மாற்றமும் இல்லை. ராமதாஸ் சில சமயம் வியக்க வைக்கிறார். பல சமயம் சுளிக்க வைக்கிறார். ஹரீஷ் பெராடி போன்ற பெர்பார்மர்களை வீணடித்து இருக்கிறார்கள்.

பிரமாதமா சொல்லும் அளவுக்கு ஒன்னுமில்லை. அதுபோல் பயங்கர கடியுமில்லை. வடசென்னை படத்துக்கு குடும்பத்தோடு போக முடியாத சூழ்நிலையில் இந்த படத்துக்கு நம்பி போகலாம். பக்கா பேமிலி எண்டர்டெயினர்.

வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரம் வித்தியாசமாக எதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் காஞ்சனா லாரன்ஸ் மாதிரி எப்பவும் சிகப்பு புடவையில் ஆய் ஊய்னு கத்திப் போகிறார். க்ளைமாக்ஸ்ல விஷாலுடன் மல்லுக்கு நிற்கிறார். அவ்வளவு தான், 

நல்லா மொழு மொழுன்னு செம ஆண்ட்டிடா என்னும் கமெண்ட்டு தான் சரியா இருக்கும். டேய் அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைடான்னு கால்ல விழுந்தாலும் ஒரு பய நம்பப் போறதில்லை. என்னா உடம்புடா இது. 

படம் பத்து வருசத்துக்கு முன்பு வந்திருந்தா ஒரு வேளை ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கலாம். இப்போதைய ட்ரெண்ட்டுக்கு ரொம்பவே பழசா தெரியுது. கதை சொல்லும் முறை மாறி விட்டது என்பதை இப்போதாவது லிங்குசாமி புரிந்து கொண்டால் சரி.

கடும் வீழ்ச்சிக்கு பின் எழுந்து தடுமாறும் இந்த சமயத்தில் லிங்குசாமிக்கு தேவை ஒரு சூப்பர் ஹிட் படம். ஆனால் இது ஆவரேஜ் என்பது தான் சோகம். ட்ரெண்ட்டு மாறிடுச்சி, நீங்களும் மாறுங்க இயக்குனரே.

ஆரூர் மூனா

Wednesday 17 October 2018

வடசென்னை - சினிமா விமர்சனம்

சுவாரஸ்யமான கதையின் இலக்கணம் ஒன்று இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரஸ்யமான முடிச்சை முன்பாதியில் போடுகிறோமோ அதை விட சுவாரஸ்யமாய் பின்பாதியில் முடிச்சை அவிழ்க்க வேண்டும். நூத்துக்கு 95 பேர் சுவாரஸ்யமாய் முடிச்சை போடுவார்கள். ஆனால் அவிழ்ப்பதில் சொல்லி வைத்த மாதிரி கோட்டை விட்டுவிடுவார்கள்.


உதாரணம் வேண்டுமென்றால் ராசுக்குட்டி படத்தை சொல்லலாம். சித்தப்பா நளினிகாந்தும் அவன் மகன் சூர்யகாந்தும் பாக்யராஜுக்கு எதிராக அப்பா கல்யாண்குமாரிடம் போட்டுக் கொடுத்து முடிச்சைப் போட்டு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பொய் சத்தியம் செய்து வைத்திருக்க ஒரே காட்சியில் அப்பாவிடம் பொய் சொல்லி பைக்கை வாங்கி நளினிகாந்த் வீட்டின் வாசலில் ஒரு ஜபரு காட்டி குழப்பி விட்டு தீர்வை சொல்லியிருப்பார். தெளிவான முடிச்சவிக்கி னா அவர் தான்.

அதே மாதிரி கார்த்தி நடிச்ச சகுனி னு ஒரு படம் ஒன்னுமில்லாத ராதிகாவை மேயராகவும் கோட்டா சீனிவாசராவையும் முதல்வராக்குவார். அதில் முடிச்சை அவிழ்ப்பது கூட சுவாரஸ்யம் தான்னு டயலாக் வேற இருக்கும். ஆனால் படம் பார்க்குறவன் கொட்டாவி விட்டு வழிவான். ஒரு கட்டத்தில் கார்த்தியின் திட்டங்களுக்கான விளக்கமான டயலாக் கூட எழுத முடியாமல் பேக் ட்ராப்பில் பிஜிஎம்மை வைத்து சமாளித்து இருப்பார்கள். இது தான் பார்க்கக் கூடிய படத்திற்கும் பார்க்க முடியாத படத்திற்குமான வித்தியாசம்.


வெற்றி மாறனின் ஆகச் சிறந்த பலமே இந்த முடிச்சை கச்சிதமா போடுவதும் சுவாரஸ்யமா அவிழ்ப்பதும் தான். எங்கு முடிச்சு அவிழ்ந்து சுவாரஸ்யமா மக்களை உக்கார வைக்க வேண்டும் என்பதை சரியாக அறிந்த சினிமா க்ராப்ட்ஸ்மேன் வெற்றிமாறன். 

வெற்றி மாறனுக்கு சிறந்த கதை கூட தேவையில்லை. பாட்டி வடை சுட்ட கதையை மறுபடியும் சுவாரஸ்ய கண்டென்ட் சேர்த்து ரசிக்கும் படி கொடுக்கும் வித்தை அறிந்த மனுசன். அவருக்கு ஒரு நல்ல கதைக்களம் அமையும் போது வடசென்னை மாதிரியான படங்கள் வந்து மக்களின் ரசனைக்கு தீனி போடுகின்றன.

இந்த முதல் பாகத்தின் கதை கேரம் போர்டில் பெரிய அளவில் வெற்றியை ஈட்டி அதன் மூலம் அரசு வேலை பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் தனுஷை காலமும் சூழ்நிலையும் எப்படி உருமாற்றி மண்ணை காவல் காக்கும் அய்யனாராக மாற்றுகிறது என்பதே.


படத்தின் குறை என்பது இந்த படத்தில் இரண்டு படங்களுக்கான கன்டென்ட்டுகள் இருக்கிறது என்பதே. நிறைய காட்சிகள், சம்பவங்கள், மெனக்கெடல்கள் அதிகமாக இருப்பதால் ஆழ்ந்து கவனிப்பதற்குள் ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுகிறது. 

அமீர் எபிசோடு தனியாகவும் அதிலிருந்து தனுஷின் விஸ்வரூபம் வரை தனி எபிசோடாகவும் எடுத்து இரண்டு படங்களாக மக்களுக்கு கொடுத்திருந்தால் இன்னும் ரகளையாக இருந்திருக்கும். ஒரே சமயம் இரண்டு படங்களை தொடச்சியாக பார்க்கிறோமோ என்ற அயர்ச்சியை கொடுத்து விட்டது படம்.

இதை தாண்டி வேறெந்த குறைகளும் படத்தில் கிடையாது. 


தனுஷ் பற்றி என்னத்த சொல்ல வருட ஓட்டங்களின் வரிசைக்கிருமத்தின் படி நடிப்பிலும் தோற்றத்திலும் பின்னி இருக்கிறார் மனுசன்.அப்பாவியாய் கேரம் போர்டு ஆட்டத்தில் தொடங்கி சூழ்நிலையை புரிந்து தீனாவுடன் மோதும் போது ஒரு வளர்ச்சியும், சிறை பகுதியில் புத்தி சாதுர்யத்துடன் சேம் சைடு கோல் போட்டு ஒரு மெச்சூரிட்டியும் நிலத்தின் பால் நடக்கும் அரசியலை புரிந்து எதிர்த்து தலைவனாக உருவெடுக்கும் கள எதார்த்தத்தையும் அளவெடுத்து செய்து சிறப்பித்து இருக்கிறார். 

படத்தின் முதல் டயலாக்கே ஐஸ்வர்யாவுக்கு கூ... என்று சொல்வதில் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் காட்டும் ஜபுரும் முத்தம் கொடுத்து மாட்டிக் கொண்டு சந்திக்கும் கிண்டல்களையும் சீண்டல்களையும் எதிர்கொள்ளும் விதமும் ரசிக்க வைக்கிறது.

ஆண்ட்ரியாவின் அறிமுகமும், படிப்படியாக கவனம்பெறும் அவருக்கான முக்கியத்துவமும் நன்றாகவே இருக்கிறது. துணிச்சலுடன் போட்ல அமீருடன் இருக்கும் காட்சியில் கூடுதலாக கைத்தட்டல் பெறுகிறார். அவருக்கான பின்புலம் எதாவது இருந்திருந்தால் இந்த ஸ்கின்டோன் பெண் ராயபுரத்துல இருப்பதற்கு காரணம் ஒத்துக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். 

சிறைக் காட்சிகளும் நடைமுறைகளும் நிஜத்தை பிரதிபலிக்கிறது. அது நிஜமான நிஜம்னு எனக்கு நல்லாவே தெரியும், அதனால் இந்த காட்சிகளுக்கான மெனக்கெடல்களில் வியந்து போகிறேன்.

ஹோட்டலில் அமீருடன் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், தீனா, பவன் அளவளாவும் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும் ஏ ஒன். அதே போல் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், பவன் போன்றோர் நடிப்பு சிறப்பு.

இன்னும் காதுகளில் படத்தின் பிஜிஎம் ஒலித்துக் கொண்டே இருப்பது சந்தோஷ் நாராயணனின் திறமைக்கு சான்று. 

ராஜீவ் காந்தி கொலையான போது கடைகள் வடசென்னையில் சூறையாடப்பட்டது கூட உண்மையான சம்பவம். ப்ளாக்கர் நண்பன் செல்வின் அவர்களின் தகப்பனார் அவர்களின் ஐஸ் பாக்டரி இதே சம்பவத்தில் திருவொற்றியூரில் அடித்து நொறுக்கப்பட்டது என்பதை முன்பே நான் அறிவேன்.

நிறைய க்ரவுண்ட் ஒர்க், அதை விட நிறைய பேப்பர் ஒர்க், பொருத்தமான காஸ்ட்டிங், குழப்பமில்லாத திரைக்கதை, தனுஷின் திறமையான நடிப்பு, சிறந்த பிஜிஎம் என எல்லா ப்ளஸ்களும் சேர்ந்து ஒரு ப்ளஸ்ஸான படத்தை கொடுத்து இருக்கிறது. 

கண்டிப்பாக தனித்தனியாக நாம் தியேட்டரில் போய் ரசித்து பார்க்க வேண்டிய படம் இது. 

ஆரூர் மூனா