Thursday 18 October 2018

சண்டைக்கோழி 2 - சினிமா விமர்சனம்

ட்ரெண்ட் எனப்படுவது பத்து வருசத்துக்கு ஒரு முறை மாறிக்கிட்டே இருப்பது. ட்ரெண்டுக்கு ஏத்த மசாலாப் படங்களின் லாவகம் 80களில் எஸ்.பி. முத்துராமனுக்கு வசப்பட்டது, 90களில் கே.எஸ். ரவிக்குமாருக்கு வசப்பட்டது. 2000த்தில் லிங்குசாமிக்கு கைவந்த கலையானது.


80களில் சாதித்த எஸ்.பி. முத்துராமன் 90களில் தடுமாறினார். கே.எஸ். ரவிக்குமாரும் அவர் சாதிச்ச காலம் முடியும் நேரத்தில் தடுமாறினார். இப்போ லிங்குசாமிக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தடுமாற்றம்னா ட்ரெண்ட் மாறிடுச்சினு அர்த்தம். அப்டேட் பண்ணாலும் பழைய வேகம் இருக்காது. 

இப்போ சண்டைக்கோழி 2க்கும் அது தான் நடந்துள்ளது. கரெக்ட்டான மசாலா பேக்கேஜ். ஆனால் 2000த்தின் ட்ரெண்ட். இப்போ பார்க்கும் போது எதுவும் குறையா தெரியல. ஆனால் சிலாகிக்க ஒன்னுமில்லை. அதுவும் வடசென்னை பார்த்து அவனவன் அடுத்த கட்டத்துல டியுன் ஆகி நிக்கும் போது போது இரண்டு படி கீழே நிற்கிறது சண்டைக்கோழி 2.


படத்தின் கதைனா மதுரைக்கு மேற்கே இருக்கும் பகுதிகளின் பெரும்பான்மை சாதியின் அதிகாரமிக்க தலைவரான ராஜ்கிரண் வரலட்சுமி குடும்பத்திடம் இருந்து ஹரிகிருஷ்ணனை காப்பாற்றுவதாக வாக்கு கொடுக்கிறார். அவரால் செயல்பட முடியாத சூழ்நிலையில் அவரது மகன் விஷால் அந்த வாக்கை காப்பாற்றினாரா என்பது தான். 

சண்டைக்கோழி 1 படத்தின் பலமே அந்த பேருந்தின் சண்டைக்காட்சியும் விஷாலின் பின்புலம் லாலுக்கு தெரிய வருவதும் தான். அதுவரை விஷால் ஆக்சன் நாயகன் என்பதை அறியாத நாம் இந்த மேஜிக்கை ஏற்றுக் கொண்டதுடன் பெரும் வெற்றியையும் கொடுத்தோம். ரன் படத்துல ஷட்டர் இறக்கி அடிக்கும் காட்சியும் இதே மாதிரி யான விளைவை ஏற்படுத்தியது. 


ஆனால் இது சண்டைக்கோழியின் 2ம் பாகம் என்பதால் விஷாலின் பின்புலம் படம் தொடங்கும் முன்பே தெரிந்து போவதும் அதன் பிறகான காட்சிகள் நாமே அரங்கில் அமர்ந்து யூகிக்கும் அளவு இருப்பதும் தான் நமக்கு அயர்ச்சியை கொடுக்கிறது. 

விஷால் நாற்பத்தி ஐந்து வயசுலயும் பிட்டா நரம்பு புடைக்க வலுவை காட்டும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். சண்டைக்காட்சிகளில் கடும் உழைப்பை கொடுத்துள்ளார். இதுக்கு மேல எதுனா சொல்லலாமான்னு யோசிச்சிப் பாக்குறேன் ஒன்னும் நினைவுக்கு வர மாட்டேங்குது. ஏற்கனவே துப்பறிவாளன், இரும்புத்திரை னு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்ததால் இந்த படம் எந்த விளைவையும் அவர் மார்க்கெட் நிலவரத்தில் ஏற்படுத்தாது.

ஜெனிலியா டைப் லூசுப் பெண் கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு. தொடரி படத்துலயும் இதே மாதிரி தான். ஆனால் இதில் புல் மேக்கப்புடன் லூசா குறும்பா நடிக்க முயற்சித்து இருக்கிறார். அவ்வப்போது இவர் குறும்பாய் புன்னகைக்கும் போது வாய்  ஒரு விளைவை காட்டி டரியலாக்குகிறது.

ராஜ்கிரண் அதே டெய்லர், அதே வாடகை. ஒரு மாற்றமும் இல்லை. ராமதாஸ் சில சமயம் வியக்க வைக்கிறார். பல சமயம் சுளிக்க வைக்கிறார். ஹரீஷ் பெராடி போன்ற பெர்பார்மர்களை வீணடித்து இருக்கிறார்கள்.

பிரமாதமா சொல்லும் அளவுக்கு ஒன்னுமில்லை. அதுபோல் பயங்கர கடியுமில்லை. வடசென்னை படத்துக்கு குடும்பத்தோடு போக முடியாத சூழ்நிலையில் இந்த படத்துக்கு நம்பி போகலாம். பக்கா பேமிலி எண்டர்டெயினர்.

வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரம் வித்தியாசமாக எதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் காஞ்சனா லாரன்ஸ் மாதிரி எப்பவும் சிகப்பு புடவையில் ஆய் ஊய்னு கத்திப் போகிறார். க்ளைமாக்ஸ்ல விஷாலுடன் மல்லுக்கு நிற்கிறார். அவ்வளவு தான், 

நல்லா மொழு மொழுன்னு செம ஆண்ட்டிடா என்னும் கமெண்ட்டு தான் சரியா இருக்கும். டேய் அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைடான்னு கால்ல விழுந்தாலும் ஒரு பய நம்பப் போறதில்லை. என்னா உடம்புடா இது. 

படம் பத்து வருசத்துக்கு முன்பு வந்திருந்தா ஒரு வேளை ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கலாம். இப்போதைய ட்ரெண்ட்டுக்கு ரொம்பவே பழசா தெரியுது. கதை சொல்லும் முறை மாறி விட்டது என்பதை இப்போதாவது லிங்குசாமி புரிந்து கொண்டால் சரி.

கடும் வீழ்ச்சிக்கு பின் எழுந்து தடுமாறும் இந்த சமயத்தில் லிங்குசாமிக்கு தேவை ஒரு சூப்பர் ஹிட் படம். ஆனால் இது ஆவரேஜ் என்பது தான் சோகம். ட்ரெண்ட்டு மாறிடுச்சி, நீங்களும் மாறுங்க இயக்குனரே.

ஆரூர் மூனா

Wednesday 17 October 2018

வடசென்னை - சினிமா விமர்சனம்

சுவாரஸ்யமான கதையின் இலக்கணம் ஒன்று இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரஸ்யமான முடிச்சை முன்பாதியில் போடுகிறோமோ அதை விட சுவாரஸ்யமாய் பின்பாதியில் முடிச்சை அவிழ்க்க வேண்டும். நூத்துக்கு 95 பேர் சுவாரஸ்யமாய் முடிச்சை போடுவார்கள். ஆனால் அவிழ்ப்பதில் சொல்லி வைத்த மாதிரி கோட்டை விட்டுவிடுவார்கள்.


உதாரணம் வேண்டுமென்றால் ராசுக்குட்டி படத்தை சொல்லலாம். சித்தப்பா நளினிகாந்தும் அவன் மகன் சூர்யகாந்தும் பாக்யராஜுக்கு எதிராக அப்பா கல்யாண்குமாரிடம் போட்டுக் கொடுத்து முடிச்சைப் போட்டு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பொய் சத்தியம் செய்து வைத்திருக்க ஒரே காட்சியில் அப்பாவிடம் பொய் சொல்லி பைக்கை வாங்கி நளினிகாந்த் வீட்டின் வாசலில் ஒரு ஜபரு காட்டி குழப்பி விட்டு தீர்வை சொல்லியிருப்பார். தெளிவான முடிச்சவிக்கி னா அவர் தான்.

அதே மாதிரி கார்த்தி நடிச்ச சகுனி னு ஒரு படம் ஒன்னுமில்லாத ராதிகாவை மேயராகவும் கோட்டா சீனிவாசராவையும் முதல்வராக்குவார். அதில் முடிச்சை அவிழ்ப்பது கூட சுவாரஸ்யம் தான்னு டயலாக் வேற இருக்கும். ஆனால் படம் பார்க்குறவன் கொட்டாவி விட்டு வழிவான். ஒரு கட்டத்தில் கார்த்தியின் திட்டங்களுக்கான விளக்கமான டயலாக் கூட எழுத முடியாமல் பேக் ட்ராப்பில் பிஜிஎம்மை வைத்து சமாளித்து இருப்பார்கள். இது தான் பார்க்கக் கூடிய படத்திற்கும் பார்க்க முடியாத படத்திற்குமான வித்தியாசம்.


வெற்றி மாறனின் ஆகச் சிறந்த பலமே இந்த முடிச்சை கச்சிதமா போடுவதும் சுவாரஸ்யமா அவிழ்ப்பதும் தான். எங்கு முடிச்சு அவிழ்ந்து சுவாரஸ்யமா மக்களை உக்கார வைக்க வேண்டும் என்பதை சரியாக அறிந்த சினிமா க்ராப்ட்ஸ்மேன் வெற்றிமாறன். 

வெற்றி மாறனுக்கு சிறந்த கதை கூட தேவையில்லை. பாட்டி வடை சுட்ட கதையை மறுபடியும் சுவாரஸ்ய கண்டென்ட் சேர்த்து ரசிக்கும் படி கொடுக்கும் வித்தை அறிந்த மனுசன். அவருக்கு ஒரு நல்ல கதைக்களம் அமையும் போது வடசென்னை மாதிரியான படங்கள் வந்து மக்களின் ரசனைக்கு தீனி போடுகின்றன.

இந்த முதல் பாகத்தின் கதை கேரம் போர்டில் பெரிய அளவில் வெற்றியை ஈட்டி அதன் மூலம் அரசு வேலை பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் தனுஷை காலமும் சூழ்நிலையும் எப்படி உருமாற்றி மண்ணை காவல் காக்கும் அய்யனாராக மாற்றுகிறது என்பதே.


படத்தின் குறை என்பது இந்த படத்தில் இரண்டு படங்களுக்கான கன்டென்ட்டுகள் இருக்கிறது என்பதே. நிறைய காட்சிகள், சம்பவங்கள், மெனக்கெடல்கள் அதிகமாக இருப்பதால் ஆழ்ந்து கவனிப்பதற்குள் ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுகிறது. 

அமீர் எபிசோடு தனியாகவும் அதிலிருந்து தனுஷின் விஸ்வரூபம் வரை தனி எபிசோடாகவும் எடுத்து இரண்டு படங்களாக மக்களுக்கு கொடுத்திருந்தால் இன்னும் ரகளையாக இருந்திருக்கும். ஒரே சமயம் இரண்டு படங்களை தொடச்சியாக பார்க்கிறோமோ என்ற அயர்ச்சியை கொடுத்து விட்டது படம்.

இதை தாண்டி வேறெந்த குறைகளும் படத்தில் கிடையாது. 


தனுஷ் பற்றி என்னத்த சொல்ல வருட ஓட்டங்களின் வரிசைக்கிருமத்தின் படி நடிப்பிலும் தோற்றத்திலும் பின்னி இருக்கிறார் மனுசன்.அப்பாவியாய் கேரம் போர்டு ஆட்டத்தில் தொடங்கி சூழ்நிலையை புரிந்து தீனாவுடன் மோதும் போது ஒரு வளர்ச்சியும், சிறை பகுதியில் புத்தி சாதுர்யத்துடன் சேம் சைடு கோல் போட்டு ஒரு மெச்சூரிட்டியும் நிலத்தின் பால் நடக்கும் அரசியலை புரிந்து எதிர்த்து தலைவனாக உருவெடுக்கும் கள எதார்த்தத்தையும் அளவெடுத்து செய்து சிறப்பித்து இருக்கிறார். 

படத்தின் முதல் டயலாக்கே ஐஸ்வர்யாவுக்கு கூ... என்று சொல்வதில் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் காட்டும் ஜபுரும் முத்தம் கொடுத்து மாட்டிக் கொண்டு சந்திக்கும் கிண்டல்களையும் சீண்டல்களையும் எதிர்கொள்ளும் விதமும் ரசிக்க வைக்கிறது.

ஆண்ட்ரியாவின் அறிமுகமும், படிப்படியாக கவனம்பெறும் அவருக்கான முக்கியத்துவமும் நன்றாகவே இருக்கிறது. துணிச்சலுடன் போட்ல அமீருடன் இருக்கும் காட்சியில் கூடுதலாக கைத்தட்டல் பெறுகிறார். அவருக்கான பின்புலம் எதாவது இருந்திருந்தால் இந்த ஸ்கின்டோன் பெண் ராயபுரத்துல இருப்பதற்கு காரணம் ஒத்துக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். 

சிறைக் காட்சிகளும் நடைமுறைகளும் நிஜத்தை பிரதிபலிக்கிறது. அது நிஜமான நிஜம்னு எனக்கு நல்லாவே தெரியும், அதனால் இந்த காட்சிகளுக்கான மெனக்கெடல்களில் வியந்து போகிறேன்.

ஹோட்டலில் அமீருடன் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், தீனா, பவன் அளவளாவும் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும் ஏ ஒன். அதே போல் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், பவன் போன்றோர் நடிப்பு சிறப்பு.

இன்னும் காதுகளில் படத்தின் பிஜிஎம் ஒலித்துக் கொண்டே இருப்பது சந்தோஷ் நாராயணனின் திறமைக்கு சான்று. 

ராஜீவ் காந்தி கொலையான போது கடைகள் வடசென்னையில் சூறையாடப்பட்டது கூட உண்மையான சம்பவம். ப்ளாக்கர் நண்பன் செல்வின் அவர்களின் தகப்பனார் அவர்களின் ஐஸ் பாக்டரி இதே சம்பவத்தில் திருவொற்றியூரில் அடித்து நொறுக்கப்பட்டது என்பதை முன்பே நான் அறிவேன்.

நிறைய க்ரவுண்ட் ஒர்க், அதை விட நிறைய பேப்பர் ஒர்க், பொருத்தமான காஸ்ட்டிங், குழப்பமில்லாத திரைக்கதை, தனுஷின் திறமையான நடிப்பு, சிறந்த பிஜிஎம் என எல்லா ப்ளஸ்களும் சேர்ந்து ஒரு ப்ளஸ்ஸான படத்தை கொடுத்து இருக்கிறது. 

கண்டிப்பாக தனித்தனியாக நாம் தியேட்டரில் போய் ரசித்து பார்க்க வேண்டிய படம் இது. 

ஆரூர் மூனா

Thursday 13 September 2018

சீமராஜா - சினிமா விமர்சனம்

படத்தோட துவக்கத்தில் வில்லனின் மாப்ளை "நான் யாரு தெரியுமா" ன்னு எஸ்கேயிடம் சவால் விட "நீ யாரா வேணும்னாலும் இரு, எவனா வேணும்னாலும் இரு, ஆனா என்கிட்டயிருந்து தள்ளியே இரு" என்று பஞ்ச் பேசுகிறார். இது தனுஷுக்கான குறியீடு. 


க்ளைமாக்ஸ்ல வில்லன்கிட்ட ஒருவனுக்கு எப்படி நண்பன் தேவையோ அது மாதிரி வில்லனும் தேவை. நீ ஆளக் கூடாதுன்னு நினைச்சோம், ஆனா வாழக் கூடாதுன்னு நினைக்கலையே என்பது மாதிரியான ஒரு பஞ்ச் பேசுகிறார். இது அவரது எதிரிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை குறியீடு. இது மாதிரியான குறியீடுகளால் நிறைந்துள்ளது சீமராஜா படம். 

படத்தின் கதை என்னன்னா நாட்டுடமையாக்கப்பட்ட ஜமீன் ஒன்றிற்கு இளவரசனாக இருக்கிறார். மக்கள் பழைய மரியாதை வைத்திருந்தாலும் புது பணக்காரனான லாலுக்கு இந்த மரியாதை உறுத்துகிறது. 

ராஜாவான தந்தை நெப்போலியன் இறந்து போக ராஜாவாகிறார் எஸ்கே. புதுப் பணக்காரனிடம் இருந்து தம் மக்களின் நிலங்களை காப்பாற்றினாரா நாயகியை கைப்பிடித்தாரா என்பதை புத்தம் புதிய காட்சி அமைப்புகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.


சிவகார்த்திகேயன் என்னும் எஸ்கே பெயரை குறியீட்டுடன் தான் போடுகிறார்கள். தன்னைத் தானே பெரிய ஸ்டார் என்று எஸ்கே நம்ப ஆரம்பித்து இருக்கிறார். இது அவருக்கான எச்சரிக்கை. சிவகார்த்திகேயனை குடும்பம், பெண்கள், நண்டு, சிண்டு, குழந்தை குட்டிகள் முதல் ரிட்டையர்டு பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்குதுனா அது பக்கத்து வீட்டு பையன் மாதிரியான தோற்றம் தான். 

அண்ணன் ஸ்டார் அந்தஸ்துடன் நாலு படி மேல ஏறி உக்கார்ந்துட்டார்னா மக்கள்கிட்டயிருந்து விலகுகிறார்னு அர்த்தம். இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்ங்க எஸ்கே சாரி சிவகார்த்திகேயன். உங்க படத்தின் வியாபாரம் மட்டும் உச்சத்துல போகட்டும். உங்க பாத்திர வடிவமைப்பு அவசியப்படாம உச்சத்துக்கு போனா இழப்பு உங்களுக்கு தான், பாத்துக்கங்க.


மத்தபடி படம் முழுக்க நம்மளை என்டர்டெயின் பண்ணிக்கிட்டே இருக்கார். நல்ல டான்ஸ், பஞ்ச் வசனங்கள். சண்டை காட்சிகள், ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் னு எல்லாத்திலேயும் நல்ல முன்னேற்றம். 

சமந்தா படத்தின் பெரும்பலம், அந்த அழகும், பெர்பார்மன்ஸும், சிலம்பம் சுற்றும் காட்சிகளும், காஸ்ட்யூமும் அசத்துகிறது. உங்களுக்கு கல்யாணம் ஆனா என்ன, ஆகாட்டி என்ன, இப்போதைய உங்கள் பெர்பார்மன்ஸை இதே நிலையில் வைத்திருந்தால் நீங்க இன்னும் இன்னும் மேல போய்க்கிட்டே இருப்பீங்க.

படத்தின் பெரிய மைனஸ் சூரி தான். சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் சுத்தமா சிரிப்பே வரலை. மற்ற படங்களில் சொதப்பினாலும் பொன்ராம் படங்களில் சூரியின் காமெடி மிக நன்றாகவே இருக்கும். ரசித்து ரசித்து மகிழ்வோம். ஆனால்  நேருக்கு மாறாக இந்த படத்தில் பயங்கர கடியா இருக்கு. 


இமான் இசை கூட ரீபிட் மோட் தான். சிம்ரன் அன்றும் ஒல்லி தான், இன்றும் ஒல்லி தான். ஆனால் அன்று அழகாக இருந்தார், இன்று சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி வறண்டு இருக்கிறார். பேசாம நீங்க ரிட்டையர்டு ஆகிடுங்க மேடம். எங்களது பழைய படங்களின் கனவுக்கன்னி என்ற பெயராவது மிஞ்சட்டும்.

படத்துலயெ உருப்படியான காமெடினா அது நாய்க்கு உடல் முழுக்க கருப்பு பொட்டு வச்சி சிறுத்தைனு ஊருக்குள்ள கிளப்பி விட்டு அதகளம் பண்ணும் காட்சி தான். அது நம்பவே முடியாத அபத்தம்னாலும் என்னால் சிரிக்க முடிந்தது.

ஜனங்க ரசனைய புரிஞ்சிக்கவே முடியாது. படத்தை ஒரளவுக்கு சிரிச்சி ரசிச்சி தான் பார்த்தாங்க. ஆனா இது முழுக்க முழுக்க ப்ளூக் தான். ஆனால் படம் ஓடிடுச்சேன்னு அடுத்த படத்தையும் இதே மாதிரி எடுத்தா உங்க நிலைமை கஷ்டம் ஜி.

மூணு படத்துலயும் நாயகனின் கேரக்டரைசேஷன் ஒரே மாதிரி தான் தான் இருக்கு. அதாவது அப்பாவுக்கு அடங்காத பொறுப்பில்லாமல் ஊரை வெட்டியா சுற்றிக் கொண்டு இருக்கும் நாயகன் பின்னர் சூழ்நிலைக்காக பொறுப்புணர்ந்து செயல்படுவது, அடுத்த படத்துலயாவது மாத்துங்க இயக்குனரே.

படம் தப்பிச்சிக்கிச்சி. அதாவது படம் ஓடிடும். ஆனால் உங்களுக்கு இது எச்சரிச்கை மணி பொன்ராம். ஒரே மாதிரியான காட்சியமைப்பை இரண்டு படங்களில் லாபமாக பார்த்தீர்கள். ஆனால் இப்போது உறுத்துகிறது. சுதாரிக்கா விட்டால் அடுத்த படம் உங்களின் காலை வாரி விட்டுடும். 

ஒரே நாயகனிடம் பணிபுரிவதால் கூட இந்த தேக்கம் வந்திருக்கலாம். ஒரு கேப் தேவை. சிவகார்த்திகேயனை விட்டு வெளியில் வாருங்கள். மற்றவர்களிடம் சில படங்களை பண்ணுங்கள். வ,வா,ச பண்ணும் போது நாயகன் மீது எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை. ரஜினி முருகன் பண்ணும் போது சற்று காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியிருந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் நிறையவே காம்ப்ரமைஸ் செய்துள்ளீர்கள் என்று அனுமானிக்கிறேன். 

ஒரே மாதிரியான காட்சிகள், சுமாரான இன்டர்வெல் பிளாக் சண்டை, சூரியின் எடுபடாத நகைச்சுவை, அவசியமேயில்லாத ப்ளாஷ்பேக் ராஜா கதை என நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம் தான். 

ஆரூர் மூனா

Thursday 5 July 2018

மகாதியான சித்தப்பா

என் சித்தப்பா ஒருத்தர் இருக்காரு, வித்தியாசமான கேரக்டரு, ஒவ்வொரு குழுமத்துக்கும் இவர் மாதிரியான ஒரு ஆள் கண்டிப்பாக இருப்பார்கள்.
மகாதியானம்னா தெறிச்சி ஓடுவாரு, எப்படியாவது ஆசை காட்டி ஒரு கால் கல்லு வாங்கி வச்சி அவருக்கு ஒரு கட்டிங் கொடுத்துட்டா போதும். அன்றைய பொழுது முழுவதும் நமக்கு செலவு பண்ணி சரக்கு வாங்கிக் கொடுத்துக்கிட்டே இருப்பார்.


மறுநாள் தான் அவருக்கு நடந்ததெல்லாம் புரிந்திருக்கும். கையில இருக்குற காசு முழுவதையும் செலவழிக்க வச்சிட்டானேன்னு திட்டிக்கிட்டே நம்ம இருக்குற பக்கமே வர மாட்டார். மறுபடியும் ஒரு நாள் தொக்கா மாட்டிக்குவார். வச்சி செஞ்சிடுவோம் அவரை.
படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போவதற்குள் வெட்டியா சுத்துவோமே, அந்த காலகட்டத்தில் அவர் தான் எங்களுக்கு படியளக்கும் கடவுள்.
நானாவது பரவாயில்லை, பாவம் பார்த்து கொஞ்சமா செலவு பண்ண வைப்பேன். என் மச்சான் ஒருத்தன் இருக்கான் வெள்ளையும் சொள்ளையுமா மேலவாசல்ல. இப்ப சம்பாதிச்சி சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் அந்த சமயம் அவனும் வெட்டிப் பய தானே. கடைசி துட்டு வரைக்கும் அவரை செலவு பண்ண வச்சிடுவான்.
நானும் அவனும் வீட்டு வாசல்ல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். எங்களை கடக்கும் போது பார்க்காத மாதிரியே கடந்து போவார். "யோவ் சித்தப்பா" னு கூப்பிட்டா சிரிச்சிக்கிட்டே "அவசர வேலையே போய்க்கிட்டு இருக்கேன். இப்ப வந்துடுறேன்" னு நழுவிடுவார்.
கண்டிப்பா வேற வழில தான் போவார்னு தெரியும், அங்க ஒரு பட்றய போட்டுருப்போம். கையில இருக்குற ஐம்பது அறுவதுக்கு ஒரு கால் கல்லு மட்டும் தான் வாங்க முடியும். வாங்கி தயாரா உக்கார்ந்து இருப்போம்.
வர்றவர்கிட்ட நைஸா பேசி பம்புசெட்டுக்கு அழைச்சிக்கிட்டு போயிடுவோம். போகும் போதே சொல்லிக்கிட்டு வருவார், "டேய் என்கிட்ட காசே இல்லடா, நாளைக்கு சாப்பிடலாம்"னு நழுவுவார். "அட வாங்க சித்தப்பா, இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்"னு சொல்லி ஒரு கட்டிங் தான் கொடுப்போம்.
பத்து நிமிசம் கழிச்சி தலைய சிலுப்புவார். "மவனே, இந்தாடா காசு, ஒரு அரைக்கல்லு, ஒரு கால்கல்லு, ஒரு சோடா பாட்டிலு, சிக்கன் லாம் வாங்கியாடா" ன்னுவார். சாயந்திரம் ஆரம்பிச்ச மகாதியானம் நடுராத்திரி வரைக்கும் நிக்காம ஒடும்.
மறுநாள் மதிய சோறு நேரம் வரைக்கும் வெளிய தென்படவே மாட்டார். வீட்டுக்குள்ள பார்த்தா கொல்லப் பக்கமா தலைல துண்டு போட்டு உக்கார்ந்து விக்ஸ் தேச்சிக்கிட்டு இருப்பார்.
அடுப்பாங்கரையிலிருந்து சித்தி குரல் கேக்கும். கன்னாபின்னான்னு எங்களை தான் திட்டிக்கிட்டு இருக்கும். எங்களை பார்த்ததும் "வாங்கடா கண்ணுகளா, லட்டு சாப்பிடுங்கடா" னு சாப்பிட கொடுக்கும். எங்களுக்கு தெரியாம நைஸா மாமாகிட்ட "வெளியில இவனுங்களோட போன தொலைச்சிப்புடுவேன்"னு மிரட்டி வைக்கும்.
2000 சமயத்துல சில மாதங்கள் எங்களுக்கு இப்படி தான் போய்க்கிட்டு இருந்தது.
ஒரு முறை இப்படி தான் ஓவரா குடிச்சிப்புட்டு சித்தப்பா சைக்கிளை மறந்து வச்சிட்டு நடந்தே வீட்டுக்கு போயிட்டார். நானும் மச்சானும் கொடுக்கலாம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்கு போய் பார்த்தா சித்தி அவரை அடி வெளுத்துக்கிட்டு இருக்கு. நின்ன மேனிக்கு காலை தூக்கி அவர் தாவாடைலயே ஒரு கிக்கு விட்டது பாருங்க.
சித்தி ஒரு பொடவ கட்டுன பொன்னம்பலம் னு அன்னைக்கு தான் தெரிஞ்சது. மறுநாள் கேக்கும் போது தான் சித்தப்பா சொன்னார். அன்னைக்கு விக்ஸ் தடவிக்கிட்டு இருந்தது ஹேங் ஓவர்னால இல்ல, சித்தி விட்ட அறைல காது கொய்ய்னு ஆகி வலி தாங்க முடியாம தான் ன்னு.

ஆரூர் மூனா

Friday 29 June 2018

அசுரவதம் - சினிமா விமர்சனம்

சசிகுமார் படத்துக்கும் எனக்கும் ஒரு சோக நிகழ்வு இருக்கு. சுப்ரமணியபுரம் படமும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படமும் ஒரே நாளில் வெளியானது. சாந்தியில் சுப்ரமணியபுரமும் தேவிபாலாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படமும் வெளியாகி இருந்தது.


நானும் என் நண்பனும் சாந்தி தியேட்டர் வாசலில் நின்று பேசிக்கிட்டு இருந்தோம். நான் சுப்ரணியபுரம் படத்துக்கு போகலாம்னு சொல்ல அவனோ புது இயக்குனர் படம் எப்படியிருக்கும்னு தெரியாது, ரிஸ்க் எடுக்க வேண்டாம் எம்டன் மகன் இயக்குனரின் அடுத்த படம் முனியாண்டி, வா இதற்கே போகலாம்னான்.

போய் தலைவலி வாங்கி வந்தது தான் மிச்சம். ரெண்டு நாள்ல மக்களிடையே மவுத் டாக் பரவி சுப்ரமணியபுரம் பிச்சிக்கிட்டு ஓடுது. எந்த தியேட்டர்லயும் டிக்கெட் கிடைக்காம அல்லாடுறோம். 15 நாளுக்கு பிறகு பாடாவதி தியேட்டரான மடிப்பாக்கம் குமரனில் பார்த்தோம். நல்ல படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தவற விட்ட வருத்தம் இப்பவும் உண்டு.


தாரை தப்பட்டை, பலே வெள்ளைய தேவா படங்களை தவிர வேற படங்கள் என்னை ஏமாற்றியதில்லை. நவீன உலகின் ராமராஜன் சசிகுமார் தான். இவர் படங்களுக்கு மக்கள் குடும்பமாக வருவதே இந்த நூற்றாண்டின் அதிசயம்.

இந்த படத்துக்கு வருவோம். ட்ரெய்லரே பெரும் கவனம் ஈர்த்தது. நம்பி அயனாவரம் கோபிகிருஷ்ணா தியேட்டருக்கு போனால் படம் பார்த்தவங்க மொத்தமே பத்து பேரு தான்.

ஸ்பாய்லர்ஸ் இருக்கும், மத்தவங்க ஒதுங்கிக்கங்க.


ஒரு சாதாரண மளிகை கடை நடத்தி வரும் வசுமித்ர வுக்கு போன் வருகிறது. ஒரு வாரத்தில் கொல்லப் போவதாகவும் அதுவரை சித்ரவதைகளை அனுபவிக்கனும்னு சசிகுமார் சொல்ல வசுமித்ர பாதுகாப்புக்கு ரவுடிகளை அமர்த்திக் கொள்கிறார். 

சொன்னபடி சசிகுமார் கொன்னாரா இல்லையா, என்ன காரணம் அவ்வளவு தான் படத்தின் கதை. 

படத்தில் சிறந்த கதைலாம் கிடையாது. கதையா பார்த்தா தமிழ் சினிமா அடிச்சி துவைச்சி எடுத்த பழிவாங்கல் கதை தான். படம் ஒரு விஷுவல் ட்ரீட். இந்த வகை மேக்கிங் நம்மூருக்கு புதுசு. 

கேமரா ஆங்கிள் முதற்கொண்டு சண்டை காட்சிகள் வரை எல்லாமே புதுசு. டெக்னீசியன்களின் களமான இதில் ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் ஆகியோர் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.

படத்தின் கதை சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவுமில்லாமல் வெறும் மிரட்டலை மையமாக வைத்தே பரபரவென்று இடைவேளை வரை வந்து விடுகிறார்கள். நமக்கே புதுசா இருக்கு. 

இரவில் சசிகுமாரை வசுமித்ர தேடிக் கொண்டிருக்க இருட்டில் ஒரு சிகரெட் கங்கு தெரிய கூடவே புகை படர மின்னல் வெளிச்சத்தில் சசிகுமார் நிற்கும் காட்சி செம அப்ளாஸ் வாங்குகிறது.

வசுமித்ர இந்த பாத்திரத்திற்கு பொருத்தமான காஸ்டிங் கிடையாது. சுமை தாங்க முடியாமல் திணறுகிறார். உடல்மொழி னு ஒன்னு இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை போல. நடக்கும் போதும் ஒடும் போதும் கோவப்படும் போதும் அந்த தாக்கம் நம்மை பற்றிக் கொள்ளவே இல்லை. அந்நியமாக இருக்கிறது. 

பாம்பு எதற்கு வருகிறது அதனால் சொல்ல விழைவது என்னன்னு புரியல. துப்பாக்கி சசிகுமாருக்கு எப்படி கிடைக்கிறது, கிராமத்தில் பட்டுபட்டுனு சாதாரணமா சுடுவதும் பொருந்தவில்லை. 

ப்ளாஷ்பேக் பழிவாங்கும் படத்திற்கு பொருத்தமான குரூரத்தை கொண்டிருக்கிறது. ஆனாலும் சாகும் போது வசுமித்ர பலாத்காரத்திற்கு உட்படுத்திய பெண்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே இருப்பது உறுத்துகிறது. அப்படி சொல்வது பொருந்தனும்னா சாதாரண மளிகை கடைக்காரர் என்ற பேக்ட்ராப் இருந்திருக்க கூடாது. இன்னும் குரூரமான பேக்ட்ராப் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

விஷூவலா புது முயற்சியை கொண்டிருக்கும் அசுரவதத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Friday 22 June 2018

டிக் டிக் டிக் - சினிமா விமர்சனம்

முன்னலாம் வெள்ளிக்கிழமையானா வண்டி நேரா தியேட்டருக்கு போயிடும். பல வருசமா பழகிப் போன விஷயம் அது. இடையில் சில வருடங்கள் பழக்கத்தை நிறுத்திட்டு, இன்னிக்கி படத்துக்கு போகலாம்னு கிளம்பும் போதே ஒரு மாதிரியான அன்கம்பர்ட்டபிள் பீல் வந்துச்சி. ஒரு வழியா தயக்கத்தை உடைச்சி தியேட்டருக்கு போயிட்டேன். 


படத்தின் விமர்சனத்தில் நிறைய ஸ்பாய்லர்ஸ் இருக்கும். படம் பார்க்கனும்னு நினைச்சா எஸ்ஸாகிடுங்க. கவனமா விமர்சனம் பழக்கம் விட்டுப் போச்சுல்ல, கொஞ்ச நாள்ல அந்த கான்சியஸ் வந்துடும்.

ஒரு பெரிய விண்கல், அதாவது 50 கிலோ மீட்டர் விட்டமுள்ள விண்கல், சென்னைக்கு அருகில் உள்ள கடலில் விழப் போகுது. அப்படி விழுந்தா தமிழ்நாடு, ஆந்திரா, இலங்கை போன்றவற்றின் கடல்பகுதியில் 1000 மீட்டர் அளவுக்கு எழும்பும் கடல் அளவுகள் உருவாகும். 

4 கோடி பேர் இறக்கும் வாய்ப்புள்ளதால் இந்திய அரசாங்கம் அந்த விண்கல்லை விண்வெளியிலேயே உடைத்து விட திட்டம் போடுது. திட்டத்தை செயல்படுத்த ஜெயிலில் இருக்கும் திருடன் ஜெயம் ரவி, ரிச்சி ஸ்ட்ரீட்ல செல்போன் ரிப்பேர் பண்ணும் திலக், ஹேக்கர் அர்ஜுனன் ஆகியோரை அனுப்புது, விண்கல்லை தகர்த்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.


படத்தின் கதை கேட்டதும் ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது. நான் ப்ளஸ் 2 படிக்கும் சமயம் விஜயகாந்தின் தாயகம் னு ஒரு படம் ரிலீசாச்சி. பள்ளியை கட்டடிச்சிட்டு நண்பர்களுடன் முதல் காட்சி பார்க்க உக்கார்ந்து இருக்கோம். ஒரு விஞ்ஞானியை காஷ்மீர் தீவிரவாதி கடத்தி விட தமிழ்நாட்டு மீனவரான விஜயகாந்த் கையில் அருவாளை எடுத்துக்கிட்டு காப்பாத்த கிளம்புவார். தியேட்டரே விழுந்து விழுந்து கைதட்டி கலாய்ச்ச சீன் அது. 


இந்த படமும் அப்படி தான் இருக்கு. இயக்குனர்  சக்தி சௌந்தர்ராஜனின் முந்தைய படங்களான நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்றவை சுவாரஸ்யமான கன்ட்டென்ட்டுகளை கொண்டிருக்கும் ஆனால் எக்ஸிக்யுசனில் கோட்டை விட்டுருப்பார்கள். சம்பவங்கள் இந்த படத்திற்கும் பொருந்துகிறது.


படத்தின் பலம்னா அது சிஜி தான். பெரிய அளவுல மெனக்கெடாம அதிக பொருட்செலவும் வைக்காம முடிந்த அளவுக்கு கச்சிதமா பண்ணியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் ப்ளூமேட் அபத்தங்கள் நிகழவேயில்லை. பல நூறு கோடிகள் போட்டு க்ராபிக்ஸ் கொடூரங்கள் நிகழ்த்தும் ஷங்கர்லாம் பத்து அடி தள்ளி நிக்கலாம்.

ஜெயம் ரவி நல்லா பண்ணியிருக்கார். கண்ணில் ஒரு மெல்லிய சோகம் தவழ்ந்து கொண்டே இருப்பது கச்சிதமாக பொருந்துகிறது. உடல்மொழி, உச்சரிக்கும் திறன் இவர் வேற கட்டத்தில் இருக்க வேண்டிய நடிகர் என்பதை நமக்கு குறியிட்டு குறியீட்டில் காட்டுகிறார். 

நிவேதா பெத்துராஜ் நாயகியாக வருகிறார். ஒரு உட்டாலக்கடி கிஸ்ஸிங் சீன் தவிர ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. ஒரு நாள் கூத்து படத்தில் இருக்கும் க்யூட்னஸ் இதில் மிஸ்ஸிங்.


மற்ற நடிகர்களும் பெரிய சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் கடனே னு நடித்திருக்கிறார்கள். 

அவ்வளோ பெரிய ஆபரேசன் நடத்த ஒரு ஜவான் கூடவா ராணுவத்தில் இல்லை. அதுவும் 200 கிலோ எடையுள்ள அணு ஆயுதம், விண்வெளியில் அக்கடா னு இருக்குமாம். போய் மேஜிக்லாம் பண்ணி பொத்துனாப்புல தூக்கிட்டு வந்துடுவாங்களாம். டேய். எங்களையெல்லாம் பார்த்தா எப்பட்றா தெரியுது. 

சீனா ஸ்பேஸ் ஸ்டேசன்ல இருக்கிறவன்லாம் பழைய ஜெய்சங்கர் பட வில்லனின் கையாள் போலவே இருக்கிறார்களே, மக்கள் கலாய்ப்பார்கள் என்று கூடவா தெரியவில்லை. சீன ராணுவ வீரன் சண்டை போடும் போது பஞ்சத்தில் அடிபட்ட கூர்க்கா மாதிரியே தெரிவது எனக்கு மட்டும் தானா,

20 முதல் 25 வயதுக்குள் இருக்கும் நாயகி எப்படி ராணுவத்தில் இவ்வளவு பெரிய நிலையில் இருக்கிறார் என்று சொல்லுங்கள் டாடி சொல்லுங்கள். ராணுவ விருது வழங்கும் விழாவில் முடியை விரித்துப் போட்டு மெடல் வாங்கும் பெண் அதிகாரியை இப்ப தான் பார்க்கிறேன். 

இந்த மாதிரி படங்களுக்கு டீட்டெயிலிங் ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு சொல்லனும்னா தெலுகுல ஷை னு ஒரு படம் வந்தது. ராஜமவுலி ஆரம்ப காலத்துல இயக்கிய படம். படம் ரக்பி விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு மசாலா படம். மசாலா படம் தானேன்னு அடிச்சி விடல. 

ரொம்பவும் பக்குவமா, படத்தின் ஆரம்பத்திலிருந்து ரக்பி பற்றிய விதிகளை கொஞ்சம் கொஞ்சமா பார்வையாளர்களுக்கு புரிய வைத்துக் கொண்டே இருப்பார் இயக்குனர். அது தான் க்ளைமாக்ஸ் மேட்ச்சுக்குள் மக்களை ஈர்க்க காரணமாக அமைந்தது. 

பல கோடி போட்டு எடுக்கிற படத்துக்கு இந்த மெனக்கெடல் கூட இல்லைனா எப்படி இயக்குனர் சார். பாக்குற எங்களைப் பார்த்தா  கேனப் பயலுக மாதிரியா தெரியுது. 

ஆரூர் மூனா 

Wednesday 20 June 2018

ரோஸ்மில்க்

மெர்சல் படத்துலயே எனக்கு புடிச்ச சீன், தம்பி ரோஸ்மில்க் வாங்கித் தர்றேண்டா என்பது தான். மத்தவன்லாம் சமந்தாவை ரசிச்சிக்கிட்டு இருந்தா நான் விஜய் ரோஸ்மில்க் குடிக்கும் அழகை ரசிச்சிட்டு இருப்பேன்.


ரோஸ்மில்க் பெருமையப் பத்தி நாளெல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம். கடைல வாங்கி குடிக்கிற ரோஸ்மில்க்கை விட அபூர்வமாக வீட்டு விஷேசங்களில் கிடைக்கும் ரோஸ்மில்க் அலாதி சுவையா இருக்கும்.
மைலாப்பூர் காளத்தி பேப்பர்ல கிடைக்கும் ரோஸ்மில்க் நல்ல டேஸ்ட்டா தான் இருக்கும், ஆனால் நான் சாப்பிட்ட ரோஸ்மில்க்குகளில் அது சிறந்ததுனுலாம் சொல்லமாட்டேன்.
திருவாரூர்ல ராம்ஜி மாமா னு ஒரு சமையற்காரர் இருந்தார். வடக்கு வீதி குடும்ப விழாக்களுக்கு அவர் தான் சமையல். எங்க ஊர் கல்யாணங்களில் முதல் நாள் மாலை கண்டிப்பாக ரோஸ்மில்க் இருக்கும்.
அதன் சுவையே அலாதி. கடையில் சிரப் வாங்கி பாலில் கலக்காமல் ரோஜா இதழ்கள், பன்னீர் சிரப், சர்க்கரை கலந்து அவரே தயாரிப்பார். அதுவும் கறந்த பாலை காய்ச்சி குளிர வைத்து அதில் செய்யப்படும் ரோஸ்மில்க்கின் சுவை மறக்கவே மறக்காது.
தரமான ரோஸ்மில்க் சுவைக்க ஒரு விதி இருக்கிறது.
நல்லா சில்லுனு இருக்கும் ரோஸ்மில்க்கை முகத்தருகே எடுத்து வரும் போது அதன் மணம் நாசியை துளைத்து, மயிர்கால்கள் சிலிர்க்கனும். பிறகு சுவைக்கும் போது பக்குவமாக கலக்கப்பட்ட எசன்ஸ் மற்றும் பாலின் கலவை வாயெல்லாம் பரவி ஒரு திருப்தி தரும் பாருங்க. எத்தனை டம்ளர் குடித்தாலும் அலுக்காது. மனமும் வயிறும் கேட்டுக்கிட்டே இருக்கும்.
சென்னையில் கொஞ்சம் வெயிலடித்தாலும் உடன் தேடும்பானம் ரோஸ்மில்க் தான். இப்பலாம் காலை மாலை வேளைகளில் காபி, டீயெல்லாம் குடிப்பதில்லை. ரோஸ்மில்க் தான்.
காதி பவனிலிருந்து சிரப் வாங்கி கொடுத்து விடுவேன். ரெண்டு ஐஸ் க்யூப்கள் டம்ளரில் போட்டு திக்கா பாலை ஊற்றி எனக்கு எந்தளவுக்கு புடிக்குமோ அந்தளவுக்கு மட்டும் எசன்ஸை ஊற்றி தருவார் வீட்டம்மா,
எவ்வளவு கொஞ்சமா இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் தரமான ரோஸ்மில்க் குடித்த திருப்தியை தரனும் அது. சந்தானம் கூட ஒரு படத்தில் சொல்வாரே, குடிச்சிட்டு வச்ச மாதிரி இருக்கனும்னு. அது தான் நம்ம பதம்.
இப்ப சில இடங்களில் ரோஸ்மில்க்கை அப்டேட் பண்றேன்னு சப்ஜா விதைகள் அல்லது பாதாம் பிசின் சேர்த்து தர்றாங்க. ரோஸ்மில்க் டேஸ்ட்டையே கெடுத்து விட்டுது அது. ரோஸ்மில்க் பாரம்பரியம் மாறாமல் இருந்தால் தான் அந்த சுவை கிடைக்கும்.
ஆரூரான் திருமண மண்டபத்தில் பெரும்பாலும் தெரிந்தவர்கள் திருமணம் தான் நடக்கும். வெங்கடேஸ்வரா பள்ளிக்கு பக்கத்தில் வேறு மண்டபம் இருக்குமா, பள்ளி முடிந்து வரும்போது நோட்டம் விட்டே வருவோம். சமையற்கூடத்தில் ராம்ஜி மாமா இருந்தால் சட்டு சட்டுனு பசங்களுக்கு தகவல் பரவி விடும்.
வீட்டுக்கு போய் டவுசர் மாற்றி, பேட்டும் பாலும் எடுத்துக்கிட்டு மண்டபத்துல பூந்துடுவோம். எங்களை பார்த்தவுடன் "வந்துட்டானுங்க, பிரம்மஹத்திங்க"னு திட்டுவார்.
ஆனால் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ரோஸ்மில்க் ஊத்திக் கொடுத்துக்கிட்டே இருப்பார். "போதும் மாமா" ன்னு சொன்னாலும் "இன்னும் குடிடா படுவா" ன்னு கொடுப்பார்.
இப்பலாம் திருமணங்களில் நுழைந்தவுடன் வெல்கம் ட்ரிங்க் னு ஒன்னு கொடுக்குறானுங்க. நல்லா கெமிக்கல் கலந்த க்ரேப் ஜுஸ் தான் பெரும்பாலும் இருக்கும். கொமட்டிக்கிட்டு வரும் நமக்கு.
இப்ப ஆரூரான் மண்டபத்துக்குள்ள போய் 20 வருசத்துக்கு மேல ஆயிடுச்சி, ராம்ஜி மாமாவையும் பார்த்து 15 வருசத்துக்கு மேல ஆச்சி. இப்ப எங்க இருந்தாலும் ரோஸ்மில்க்கை தயார் செய்து கொடுத்துக்கிட்டு தான் இருப்பார். இந்த பக்குவமெல்லாம் அதுவா அமையனும்.

ஆரூர் மூனா

Friday 12 January 2018

ஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ராபிக்குகள். எல்லாம் வழக்கொழிந்து விட்டது. ரங்கண்ணாவுக்கு பிறகான பாபு மாதிரி ஆகிடுச்சி, என் ப்ளாக்கு. 

தோத்தவண்டாவின் முதல் ப்ளாக்ஸ்பாட் களவாடப்பட்டது. புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி முதல் ப்ளாக் பெற்ற 11 லட்சம் ஹிட்டுகளுக்கு நிகராக இதையும் 7.5 லட்சம் ஹிட்ஸ்களுடன் உருவாக்கினால் உள்நாட்டு சிக்கல்களால் எழுதுவதே நின்று விட்டது.  

இந்த வருடமாவது விட்டுப் போன ப்ளாக்கை தூசு தட்டி மறுபடி நிமிர்த்தனும். பார்ப்போம்.

------------------------------------

ஸ்கெட்ச் போட்டு பைனான்ஸ் வண்டிகளை தூக்குவதில் வல்லவர் விக்ரம். ஹரீஷ் பெரேடிக்காக வேலை செய்கிறார். அவருக்காக ரிஸ்க் எடுத்து ராயபுரம் தாதா பாபுராஜ் வண்டியை தூக்குகிறார். அதனால் ஏற்படும் மோதலில் விக்ரம் வாழ்வில் ஏகப்பட்ட சிக்கல் உண்டாகிறது. எப்படி விக்ரம் சரி பண்ணுகிறார் என்பதே ஸ்கெட்ச் படத்தின் கதை.


நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது விக்ரமின் தோற்றம். ஐம்பதை கடந்து மாமனாராகவும் ஆயிட்டார். இன்னும் இளமையாகவே தெரிகிறார். பெர்பார்மன்ஸில் விக்ரமை மிஞ்ச ஆளேது. சண்டைக் காட்சிகள் துருதுருவென இருக்கிறார். மோர் சிகரெட்டை இழுக்கும் ஸ்டைலே தனி.

தமன்னா இந்த படத்துக்கு சம்பிரதாயத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் கதாபாத்திரத்தை நீக்கி விட்டாலும் படத்தின் ஓட்டத்துக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது. தோற்றத்தில் அத்தனை வசீகரம் இல்லை. அவரின் தோழியாக வருபவரே அதிக கவனம் ஈர்க்கிறார். பேசாம அவரையே நாயகியாக போட்டுருக்கலாம்.

பாபுராஜ் எத்தனை பெரிய பர்பார்மர் தெரியுமா, உடம்பு தாட்டியா இருந்ததால் ஆரம்ப காலகட்டத்துல அடியாள் கதாபாத்திரம் ஏற்று படிப்படியாக வளர்ந்து, சால்ட் அண்ட் பெப்பர் மூலமா நகைச்சுவையிலயும் பேர்எடுத்து இருக்கிறவரை சும்மா நிக்க வச்சி அனுப்பியிருக்காங்க. ஒரு கூடுதல் தகவல் ஆல்டைம் பேவரைட் ஆண்ட்டியான வாணி விஸ்வநாத்தின் கணவர் தான் இவர்.

சூரி என்ற ஜந்துவை எப்போது தமிழ் சினிமாவில் இருந்து விலக்குவார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். வாலு படம் காமெடி லாம் இயக்குனரின் திறமைன்னு நினைச்சிருந்தேன். அது சந்தானத்தின் தனிப்பட்ட குழுவின் திறமை என்பதை இந்த படம் சொல்லி விட்டது.

ஓவர் பில்ட்அப்கள் பொறுமையை சோதிக்கின்றன. ஸ்கெட்ச் ஸ்கெட்ச்னு சொல்றாய்ங்களே தவிர படத்தின் முக்கியமான காட்சியான இன்டர்வெல் ப்ளாக் ஸ்கெட்ச்சே மொக்கையா இருக்கு. மற்ற நேரம்லாம் வார்த்தை ல தான் விளையாடுறானுங்க.

ஸ்ரீமன் நிகழ்வு இப்படி தான் இருக்குமென்பதை கர்ப்பிணி மனைவி, போன் கால் வைத்து சின்னக் குழந்தை கூட சொல்லி விடும். எதுக்கு 60களில் வந்த மாதிரியான ஒரு இன்ட்ரோ.

ஜனதாகேரேஜில் வந்த அதே செட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

படத்தின் வில்லன்கள் யாராக இருக்கக்கூடும் என்பதை விஸ்வநாத், செல்போனை உடைக்கும் போதே கண்டுபிடித்து விட்டேன். அந்த ட்விஸ்ட்டை மக்கள் யூகிக்க கூடாது என்பதற்காக பெரேடி மேல் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.

பாடல்கள் எல்லாம் சுத்த வேஸ்ட். பார்க்கும்படியும் இல்லை, கேட்கும்படியும் இல்லை.

வாலு படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு கம்ப்ளீட் இருக்கும். எந்த காட்சியும் தொங்காது. போரடிக்கிற மாதிரி ஒரு சீன் கூட இருக்காது. காமெடில்லாம் ரசிக்கும்படி இருக்கும். இதெல்லாம் இயக்குனரின் திறமை. அந்த எதிர்பார்ப்பு தான் இந்த படத்திற்கு கூட்டிச் சென்றது. ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமேயில்லாமல் இருக்கிறது. பல காட்சிகள் போரடிக்கிறது. 

பார்த்தே தீர வேண்டிய படம்லாம் இல்லை. பண்டிகை காலம் நண்பர்களுடன் சந்தோஷத்தில் களிக்க இந்த படத்தை தேர்தெடுத்தால் தப்பு இல்லை. ஆவரேஜ் தான். 

ஆரூர் மூனா