Thursday 12 May 2016

வாக்களிப்போம் நல்லவருக்கு

தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக் கட்டத்தை எட்டி விட்டது. எங்கு பார்த்தாலும் பிரச்சாரங்கள். எந்த சானலை திருப்பினாலும் கட்சிகளின் விளம்பரங்கள், யுடியுப் சேனல், இணைய செய்தி இதழ்கள் என எங்கு பார்த்தாலும் பிரச்சாரம். வாக்களிக்க இருக்கும் மக்கள் குழம்பித் தான் போவார்கள்.
மதுவிலக்கு பற்றியும் ஊழல் பற்றியும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் பேசி வாக்கு கேட்பது தான் நகை முரண்.
மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருந்து நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். அனேகமாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் என் இறுதி கட்டுரை இதுவாக தான் இருக்கக் கூடும்.
ஆறு கட்சிகள் பெரும்பான்மையாக போட்டியிருகின்றன. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.
திமுக
இந்த மாநிலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி பெரிதாக சம்பாதித்தவர்கள் கலைஞர் குடும்பத்தினர் தான். கலைஞர் அவர்கள் குடும்பத்திற்கு எப்படி சொத்து சேர்ப்பார், எப்படி வாய்ப்புகளை தருவார் என்பதை 1970களிலேயே கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்துள்ளார். அதனால் கலைஞரின் குடும்பத்தினர் சொத்து சேர்ப்பது, அதிகாரத்தில தலையிடுவது கடந்த இருபது ஆண்டுகளுக்குள் வந்ததல்ல. தொன்று தொட்ட பழகக்கம்.
மாவட்ட செயலாளர்கள் எல்லாம் குறுநில மன்னர்கள், அவர்களை தாண்டி கட்சியில் மற்றவர்கள் வளரவே முடியாது. வளர நினைத்தாலும் அவர்கள் வளர விடமாட்டார்கள். கலைஞர் எவ்வழியோ அவ்வழி இரண்டாம் கட்ட தலைவர்கள் சொத்து சேர்ப்பதில்.
ஈழம் விஷயத்தில் பெரிதாக நாடகம் போட்டு ஏமாற்றியவர்கள், மே 2009 போர் உச்சத்தில் நடந்து கொண்டு இருக்கும் போது நிலைமை கவலை கொள்ள செய்தது. அப்போது கலைஞர் உண்ணாவிரதம் பெரிதும் மாற்றத்தை கொண்டு வரும் நம்பிய லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களில் நானும் ஒருவன். கடைசியில் நடந்தது எல்லாருக்கும் தெரியும். 
இப்போ இணைய திமுகவினர் ஒரு உண்ணாவிரதம் போரை நிறுத்தும் என்று நம்பும் அளவுக்கு நீ அப்பாவியா என்று கிண்டலடிக்கிறார்கள். அடேய் அந்த உண்ணாவிரதம் போரை நிறுத்தாது என்றால் என்னத்துக்கு உங்கள் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார்.
என்னதான் இப்போது சப்பைக் கட்டு கட்டினாலும் இமாலய ஊழலான 2ஜியில் திமுகவுக்கு பெரும் பங்கு இருந்தது, என்பதும் இவர்கள் திருந்தவே இல்லை என்பது மறுக்கவே முடியாத உண்மை.
சரி இவ்வளவு தவறு நடந்து போச்சே, இனியாவது தவறை திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால், ம்ஹும், கோடீஸ்வரர் வேட்பாளர் தேர்விலேயே தெரிந்து விட்டது இது மாறவே மாறாது என.
அதிமுக
இருப்பதிலேயே அதிகளவு கேவலமான ஆட்சி தந்தது அதிமுக தான். சர்வாதிகார மனப்பான்மை, கட்சிகாரர்களை மனிதனாக கூட மதிக்காத தலைமை. டயரை தொட்டுக் கும்பிடும் முன்னால் முதல்வர் என கோமாளி ஆட்சி தான் இந்த முறை நடந்தது.
ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை சென்றதும் நடந்த கூத்துகள் இனி ஒரு காலத்திலும் நம் மாநிலத்தில் நடக்க கூடாது என மக்கள் வெறுப்படைந்தார்கள். என்ன அழுகை, என்ன பிரார்த்தனை குற்றவாளிக்கு ஆதரவாக மாநிலமே முடக்கி வைக்கப்பட்டது நம் மாநிலத்தில் தான் இருக்கும்.
நான் தீர்ப்பு வந்த தினம் திருவாரூரில் இருந்தேன். பேருந்து நிலையத்தில் நடந்த களேபரத்தை கண்முன்னே பார்த்தேன். கடைகள் அனைத்தும் வலுக்கட்டாயமாக மூடவைக்கப்பட்டன.
பெட்ரோல் பங்குகள், மருந்துகடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. அன்று பெட்ரோல் இல்லாமல் தள்ளிக் கொண்டு சென்ற வண்டிகள் ஏராளம்.
வெள்ளத்தில் நடந்தது எல்லாம் கொடூரத்தின் உச்சம். அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மக்களே மக்களோடு கைகோர்த்து செய்தது, ஆளும் அரசுக்கு எவ்வளவு கேவலம். ஆனால் வெக்கமே இல்லாமல் உதவிப் பொருட்கள் மீது ஸ்டிக்கரை ஒட்டி இன்னும் கேவலப்படுத்தியது அதிமுக.
இதுவரை ஆட்சிக்கு வராமல் இனி வரவேண்டும் என்று போட்டியிடும் கட்சிகள்
பாமக 
இவர்கள் கட்சியாக பரிணமித்ததே சாதி சங்கத்தில் இருந்து தான், இது வரை சாதியைபின்புலமாக வைத்தே ஓட்டுகளை வாங்கி வந்த கட்சி பாமக. வட தமிழ்நாட்டை சேர்ந்த வன்னியர் பெரும்பான்மையாக வசிக்கும் பல கிராமங்களில் கட்டுப்பாட்டுடன் பாமகவுக்கு ஒட்டுப் போட வைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் ரொம்பவே மோசமானவர்கள், அதிகாரத்திற்கு வரவே கூடாது என நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள். தர்மபுரி இளவரசன் விவகாரத்தில். மற்ற கட்சிகள் சாதி மறுப்பு திருமணத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை விட இவர்கள் அந்த வார்த்தைகள் இடம் பெறாதவாறு கவனமுடன் பார்த்துக் கொண்டார்கள்.
இன்று வெளியில் மாற்றம் முன்னேற்றம் என்று பேசிக் கொண்டாலும் பின்புலம் சாதியை மையமாக வைத்தே இயங்குகிறது. இவர்கள் உண்மையாக சாதி ஆதரவை விட்டு நடுநிலைக்கு வந்தால் வன்னியர்களும் ஓட்டு போட மாட்டார்கள், மற்ற சாதிகாரர்களும் நம்பி ஓட்டு போட மாட்டார்கள்.
நாம் தமிழர் கட்சி
புதிதாக உருவான கட்சி, பிரச்சாரங்களும் கொள்கைகளும் ஆரம்பத்தில் என்னவோ இருக்கிறது என்று கவனிக்க வைக்கவே செய்தன. ஆனால் பின்பு முருகன் முப்பாட்டன் வீரப்பனுக்கு நினைவு மண்டபம் என மாறி சந்தேகம் கொள்ள வைத்தார்கள்.
இன்று ஆடு மாடு மேய்த்து, விவசாயம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற வாதங்கள் என்னை கவரவே செய்தது. ஏனென்றால் நான் அதிகாரத்திற்கு வந்தால் இது செய்வேன் என்று எல்லோருக்கும் ஒரு கனவு இருக்குமல்லவா, அந்த கனவு சீமானின் தேர்தல் அறிக்கையில் இருந்தது.
ஆனால் அவர் விலக ஆரம்பித்தது, தமிழ் தேசியத்தை முட்டாள்தனமாக விளக்கிய போது தான்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தால் அவர் தமிழர் அவ்வளவு தான் சிம்பிள். நாலு தலைமுறைக்கு முன் ஆந்திரா பகுதியில் இருந்து இங்கு வந்து செட்டிலாகி தமிழர்களோடு தமிழர்களாக வாழும் நாயுடு, நாயக்கர், ரெட்டியார், இசை வேளாளர் போன்றவர்களை தமிழர்கள் இல்லையென்றால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சீக்கியரையே நாங்கள் தமிழர்களாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். என்னுடன் தான் படித்தான், என்னை விட பக்காவாக மெட்ராஸ் ஸ்லாங் பேசுவான், தமிழ் பெண்ணை கட்டிக் கொண்டு இங்கேயே வேலை பார்க்கிறான், அவன் தமிழனில்லை என்பது சரியான காமெடி.
இவர் பேச்சு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது கலவரத்திற்கே வழி வகுக்கும்.
பாஜக
இவர்களை பற்றி என்ன சொல்ல, இவர்களின் பிரச்சனையே மதவாதம் தான். இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதால் அவர்களின் உணர்வுகளை உசுப்பி வளர்ந்த கட்சி. மாநிலத்தில் ஒற்றை இலக்கத்திற்கே நொண்டி அடிப்பதற்கு காரணம் பெரியார் ஏற்படுத்திய மாற்றம். அதை எளிதில் மாற்ற முடியாமல் ஒரு பிரச்சனையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிரச்சனையின் களமிறங்கி தங்களை வளர்த்துக் கொள்ள.
மாட்டுக்கறி தின்பது அவன் அவன் உரிமை, இந்தியாவில் இருந்தால் நீ மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பது, பாரத் மாதாகீ ஜே என்று சொல்ல கட்டாயப்படுத்துவதும் வட மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும், இங்கே வேலைக்காகாது.
எல்லா மதத்துக்காரனும் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் இவர்கள் கண்டிப்பாக ஒற்றை இலக்கத்தை தாண்டவே கூடாத கட்சி.
மநகூ தேமுதிக தமாகா கூட்டணி
ஒரு கட்சி ஆட்சி தான் இந்த நிலைமைக்கு நம்மை கொண்டு வந்து இருக்கிறது. நமக்கு தேவை கூட்டணிஆட்சி தான். ஒருவர் தப்பு செய்தால் ஒரு தட்டி கேட்க முடியும். இது வரை இவர்கள் செயல்பாட்டில் பெரிய அதிருப்தி இல்லை.
நிர்வாகம் என்பதை பொறுத்தவரை சிறப்பாக இருக்குமென்றே நம்புகிறேன். விஜயகாந்த் என்ற தனிமனிதரின் கை ஓங்கியிருக்காமல் எல்லோரின் ஆலோசனைப்படி முடிவெடுப்பதால் சர்வாதிகாரம் தலை தூக்காது.
சிறந்த நிர்வாகிகளை கொண்டு சிறந்த திட்டங்கள் மூலம் ஒரு மாற்றம் நிகழும் என்றே நம்புகிறேன்.

நன்றி

இந்த ஒரு கட்டுரை எந்த மாற்றத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் சிந்திக்க வைக்கலாம் அல்லவா. சிந்தியுங்கள், யாருக்கு ஓட்டு போடுவது என்பது உங்கள் உரிமை, அதை சரியாக செய்து நம் மாநிலத்தை வரும் 5 ஆண்டுகளுக்கு வளமோடு வைத்திருக்க உதவுங்கள்.

ஆரூர் மூனா

Thursday 14 April 2016

Theri Review | தெறி விமர்சனம்

தெறி சினிமாவுக்கு போவதே  பெரும் விஷயமாக இருந்தது. எல்லா அரங்குகளும் டிக்கெட்டுகளை பதுக்கி விட்டன. சமீபத்தில் டிக்கெட் விலையை உயர்த்தி விற்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக டிக்கெட்டுகள் கள்ள சந்தைக்கு போனதால் சற்று திணறித்தான் போனேன். வழக்கமாக பிருந்தாவில் டிக்கெட் வாங்கி விடுவேன். ஆனால் அவர்கள் முதல் நாள் இரவு வரை படம் போடுவதை இறுதி செய்யவில்லை.

பிறகு தம்பி தினேஷ் அவனுடைய டிக்கெட்டை எனக்கு விட்டுக் கொடுத்தான். அதையும் சினிமாவுக்கு நிகராக சேஸ் பண்ணி படம் போடுவதற்கு சரியாக நாலு நிமிடம் முன்பு தான் டிக்கெட்டை கைப்பற்றினேன். நன்றி டின்.



படத்தின் பெயருக்கும் படத்தின் கதைக்கு என்ன சம்பந்தம் என்றால் இறுதியில் வில்லனை வீழ்த்தும் போது தெறிபேபின்னு சொல்லுது. அவ்வளவு தான். அதனால் படத்தின் பெயர் தெறியாம். 

படத்தின் கதை என்னவென்றால் கேரளாவில் பேக்கரி வைத்து இருப்பவர் ஜோசப் குருவில்லா எனும் விஜய். அவரது மகள் நைனிகா, நைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் எமி ஜாக்சன். பேக்கரியில் உதவியாளராக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன். 

விஜய்யை சைட் அடிக்கிறார் எமி. அதனை அறிந்த நைனிகா விஜய்க்கு எமி மேல் காதல் வரவைக்க முயற்சிக்கிறார். ஒரு நாள் உள்ளூர் ரவுடியுடன் வம்பு ஏற்பட விஜய்யின் பெயர் குருவில்லா கிடையாது. அவர் ஐபிஎஸ் ஆபீசர் விஜய்குமார் என அறிகிறார்.


விஜய் சென்னையில் டிசிபியாக இருக்கும் போது ஒரு பெண்ணை கற்பழித்து கொன்ற அமைச்சர் மகேந்திரனின் மகனை துன்புறுத்தி கொன்று விடுகிறார். அதற்காக விஜய்யை பழிவாங்க விஜய்யின் குடும்பத்தை கொன்று விடுகிறார் மகேந்திரன். மகளுக்காக ஊரை விட்டு வந்து கேரளாவில் வாழ்கிறார். 

விஜய் இருக்குமிடம் மகேந்திரனுக்கு தெரிய வர மறுபடியும் மோதல் வர யார் ஜெயித்தார்கள் என்பதே தெறி படத்தின் கதை.

விஜய் நடிப்பில் குறை வைக்க வில்லை. ஆனால் வயதாகி வருவது நன்றாக நடனத்தில் தெரிகிறது. சும்மா பாலீஷாக பட்டும் படாமலும் தான் ஆடுகிறார். பல காட்சிகளில் ஓவர் ஆக்சன் போல் தெரிந்தாலும் சில காட்சிகளில் அட போட வைக்கிறார். 


சமந்தா அவரது முகம் பூசினாற் போல் இருந்தால் தான் அழகாக இருக்கும். டயட்டில் இருந்து முகத்தில் டொக்கு விழுந்து அவரது அழகை குறைத்து விடுகிறது. சில காட்சிகளில் நடித்து உள்ளார்.

எமி என்னும் ஆங்கில நடிகை எதற்காக மலையாள டீச்சர் பாத்திரத்திற்கு என்று தான் தெரியவில்லை. விக்கு கூட மக்காக தான் தெரிகிறது.

நைனிகா க்யூட்டாக இருக்கிறார். அந்த க்யூட்னஸ் தான் படத்துடன் நம்மை ஒன்ற செய்கிறது. எக்ஸ்பிரசன்ஸ் பிரமாதம். பதின்ம வயதில் கண்டிப்பாக விஜய்யுடன் நடிக்க வாய்ப்புகள் பிரகாசம். 


மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளில் காமெடியிலும் ஒரு காட்சியில் சென்ட்டிமென்ட் பெர்பார்மன்ஸிலும் பின்னியிருக்கிறார். எனக்கு அவரது செய்கைகளும் சேட்டைகளும் பிடித்து இருந்தது.

காட்சிகளில் நம்பகத் தன்மை சுத்தமாக இல்லை. முதல் காட்சியில் ஐந்து வயது பெண் குழந்தை ஊரின் மிகப் பெரிய ரவுடியுடன் மோதுவது போல் இருப்பது எல்லாம் அதீ தீவிர லாஜிக் பொத்தல். 

அது போல் பரிதாபம் வரவைக்க திணித்தது போல் பிச்சை எடுக்கும் குழந்தைகளை விஜய் காப்பாற்றுவது போல் இருக்கும் காட்சி. யோசிச்சி காட்சிகளை வைத்து இருக்கலாம். 

படத்தின் கதைக்கு வரவே ஒன்னேகால் மணிநேரம் எடுத்துக் கொள்கிறார்கள். அது போல் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சவசவன்னு இருக்கு. 

லாஜிக் பொத்தல்கள் நிறைய இருக்கிறது. ஆக்சன் சீக்வன்ஸ்க்காக எடுத்து இருக்கிறார்கள். அது போல் பள்ளிக்கூடத்தில் நிறைய அடியாட்களை வைத்து சண்டை போட வேண்டிய இடத்தில் ஒரு குச்சியை வைத்து பாடம் எடுப்பது போல் அடிப்பது செம போர். 

புலி அளவுக்கு மோசமில்லை என்றாலும் துப்பாக்கி, கத்தி அளவுக்கு சிறப்பும் இல்லை. நேரம் இருந்தால் அரங்கில் பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Friday 18 March 2016

புகழ் - சினிமா விமர்சனம்

படத்தின் முதல் காட்சியிலேயே நான் யுகித்த விஷயம் இது நெடுநாள் கிடப்பில் இருந்த படம் என்பது தான். அதை நேக்கா மறைத்து படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி முகம் பிஞ்சாக இருக்கிறது என்பதை வைத்தே படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தை அனுமானிக்கலாம்.

முழு வீடியோ விமர்சனம் பார்க்க 



ஒரு சாமானிய இளைஞனுக்கும் ஒரு அமைச்சருக்கும் மைதானத்தை அபகரிப்பது தொடர்பாக ஏற்படும் மோதலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே புகழ் படத்தின் ஒன்லைனர்.

வாலாஜாபேட்டை என்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். அங்குள்ள வாலிப பசங்களுக்கு ஒரு மைதானமே பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது. அந்த இடத்தில் பயற்சி செய்து அதன் மூலம் அரசு வேலை கிடைக்கப் பெற்றவர்கள் அனேகம் பேர்.


அந்த இடத்தை உள்ளூர் நகர மன்ற சேர்மன் உதவியுடன் வளைத்து போட நினைக்கிறார் அமைச்சர். அதனை தடுக்கிறார் ஜெய். உள்ளூர் மக்களிடையே நல்லபெயர் இருக்கும் ஜெய்க்கு வாலிப பசங்க பட்டாளமே பின்நிற்கிறது. 

மைதானத்தை யார் கைப்பற்றினார்கள் என்பதே புகழ் படத்தின் கதை.

இதே ப்ளாட்டில் தெலுகில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் 10 வருடங்களுக்கு முன்பே வந்துள்ளது. ஷை என்ற அந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி, இன்று வரை நான் பார்த்த மிகச் சிறந்த ஸ்போர்ஸ் மூவிகளில் இதுவும் ஒன்று.

சிறு நகரங்களுக்கு இது போன்ற பொழுதுபோக்கு இடங்கள் ஊருக்கு ஒன்று தான் இருக்கும் திருவாரூரில் பெரிய கோவில், மன்னார்குடியில் பின்லே மைதானம் என எங்கள் ஏரியாவில் கூட இது மாதிரி செண்ட்டிமெண்ட் இடங்கள் உண்டு.


படத்தின் குறையே மைதானத்திற்கும் நாயகனுக்குமான பிணைப்பை காட்சிப் படுத்த தவறி விட்டார். சும்மா உட்கார்ந்து கதையடிக்கவும் ராத்திரிக்கு சரக்கடிக்கவும் மட்டுமே நாயகன் அந்த இடத்தை பயன்படுத்துகிறார். இன்னும் சற்று நம்பகத்தன்மையுடனும் நெகிழ்ச்சியுடனும் காட்சி அமைத்திருந்தால் நாமும் படத்துடன் பயணித்து இருப்போம். 

ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு என்ன பாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதை செவ்வனே செய்து முடித்து இருக்கிறார். சில இடங்களில் மட்டும் அட போட வைக்கிறார். சுரபிக்கும் அவருக்கும் காதல் மலரும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்.

சுரபி படத்திற்கு உண்மையிலேயே மைனஸ் தான். இவன் வேற மாதிரி படத்திற்கும் இந்த படத்திற்கும் கம்பேர் செய்தோமானால் கன்றாவியாக இருக்கிறார். நம்ம ஆட்களுக்கு சற்று ச்சப்பியாக இருந்தால் தான் பிடிக்கும். உடலை குறைக்கிறேன் என்று கன்னத்தை டொக்கி வைத்திருக்கிறார். ஹீரோயின் லுக்கே வரமாட்டேன் என்கிறது.


கருணாஸ் சிடுசிடுவென விழுந்து கொண்டே இருக்கும் பாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். எப்பொழுதும் தம்பியை கண்ட்ரோலில் வைத்து அடக்கிக் கொண்டே இருப்பவர் ஒரு காட்சியில் மாரிமுத்து ஜெய்யை கொன்று போட்டு விடுவதாக மிரட்ட ஜெய்யை முன் இழுத்து விட்டு முடிந்தால் வெட்டிப் பார் என்று பொங்கும் காட்சியில் கைதட்டல் வாங்குகிறார்.

வழக்கம் போலவே ஒன்லைனர்களில் ஆர்ஜே பாலாஜி கவனம் ஈர்க்கிறார். ஜெய்யின் நண்பர்களாக வருபவர்களில் சிலர் கவனிக்க வைக்கின்றனர் .முக்கியமாக அந்த கவுன்சிலர் நண்பர். 

கவனிக்க தக்க அறிமுகம் கவிஞர் பிறைசூடன், கம்யுனிஸ்ட்டாக வருகிறார். எல்லா ஊர்களிலும் ஊருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் வறுமையில் வாடும் வயதான கம்யுனிஸ்ட்கள் பாத்திரத்தை சரியாக செய்துள்ளார்.

படத்தின் பெரும்குறை முதிர்ச்சியில்லாத இயக்கம் தான். காட்சிக்கும் காட்சிக்கும் லிங்க்கே இல்லை. ஜம்ப் அடிக்கிறது. அது போல் ஒரு காட்சிக்கும் நிறைவு இல்லை, எல்லாமே தொங்கலில் இருக்கிறது. படத்தில் நிறைய ஏன்கள் தொக்கி நிற்கிறது. 

ஒன்னும் அவசரமே இல்லை, என்றாவது டிவியில் போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி

ஆரூர் மூனா

Tuesday 15 March 2016

ஒரு நாயகன் உருவாகிறான்

போன வருசம் ஊருக்கு போயிருந்தப்போ ஒரு நண்பனின் கேமராவை வைத்து விருச்சிககாந்த் அப்படினு ஒரு குறும்படத்தின் முழு படபிடிப்பையும் முடிச்சிட்டு வந்தோம்.

வீடியோவின் லிங்க். முழுதாக பார்க்கலைனாலும் பரவாயில்லை. சப்ஸ்கிரைப்பாவது பண்ணுங்கள். (தட் படுத்தே விட்டான்யா மொமண்ட்)


பணக்கார நபரை ஏமாத்தி, நடிப்பு ஆசை காட்டி நாலு காலேஜ் பசங்க குறும்படம் எடுத்து தர்றேன் என்ற பெயரில் தினமும் அவர் காசில் தண்ணியடித்து வருகிறார்கள். ஒரு நாள் உண்மை தெரிய அவர் அந்த பசங்களை கடைக்குள் வச்சி வெளுத்தெடுக்கிற மாதிரி கதை. 

நான் ஒரு விஷயத்தில் உறுதியா இருந்தேன். இது ஜீரோ பட்ஜெட்டில் தான் எடுக்கப்படனும். எந்த தொழில்நுட்பத்துக்காகவும் வெளியில் போக கூடாது என முடிவெடுத்து விட்டேன். ஆனால் எனக்கு எடிட்டிங் தெரியாது. 

ரெண்டு நாள்ல எடிட்டிங் கத்துக்கலாம்னு நினைச்சேன். படம் பிடிச்சிட்டு வந்து எடிட்டிங் பண்ணலாம்னு உக்கார்ந்தா எடிட்டிங் சுலபம் கிடையாதுன்னு தெரிஞ்சிப் போச்சி. அந்த புட்டேஜ்களை அப்படியே எடுத்து மூட்டை கட்டி வச்சிட்டேன். 

ஒரு வருசமாச்சி. கம்ப்யூட்டரில் இருந்து தேவையில்லாத பைல்களை கழிச்சி கட்டலாம்னு அலசும் போது இந்த பைல் கண்ல மாட்டுச்சி. வீடியோக்களை பார்வையிட்டால் சில வீடியோக்கள் சுவாரஸ்யமா இருந்தது. 

அந்த படத்தின் சமயம் எடுக்கப்பட்ட காட்சிகள் தவிர பிற காட்சிகளை எடுத்துப் பார்த்தால் படு மொக்கையாக இருந்தது. ஆனால் ஒரு நக்கல் தெரிந்தது. அதனை எடுத்து சின்ன வீடியோவாக மாத்தி விட்டேன். 

இது டப்பிங், ரீரெக்கார்டிங் எல்லாம் சரியாக செய்யப்பட்ட முழு படமல்ல. ஸ்பூப் மூவி மாதிரியான வீடியோ தான். பாருங்கள், பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

இந்த பதிவை படிப்பவர்கள் பட்டியல் நாலாயிரம் ஐந்தாயிரம் என காட்டுகிறது. ஆனால் சப்ஸ்கிரைப் ஒன்றோ இரண்டோ தான் வருகிறது. பார்ப்பவர்கள் சப்ஸ்கிரைப் செய்தால் தானே அது என்னை மேம்படுத்திக் கொள்ள ஊக்கமாக இருக்கும்.

நன்றி 

ஆரூர் மூனா

Saturday 12 March 2016

ஆட்டு ரத்தப் பொறியலும், ஆத்தாவின் மரணமும்

நான் எப்படிப்பட்ட ஆளுங்கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு நண்பனின் வீட்டில் கறி விருந்து நடந்து கொண்டு இருந்தது. இலையை போட்டாச்சி. நான் லைட்டா ஒரு கட்டிங் போட்டு பந்தியில் உக்கார்ந்து விட்டேன். பிரியாணி பக்கத்து இலையில் போட்டுக்கிட்டு இருக்காங்க. அடுத்தது எனக்கு தான், அப்ப பார்த்து எனக்கு போன் வந்தது.

ஆட்டு ரத்தப் பொறியல் செய்முறை


போனை எடுத்து பார்த்தேன், அப்பாவின் கால். எடுத்து பேசுகிறேன். அப்பா கதறி அழுகிறார். ஒரு நிமிடம் படபடப்பாகி விட்டது. ஆத்தா செத்துட்டாங்கடான்னு அழுகிறார். 

அதாவது என் அப்பாவின் அம்மா இறந்து விட்டார். துக்கம் தொண்டையை அடைக்கிறது. உடனே தஞ்சாவூர் கிளம்ப வேண்டும். நான் தான் நெய் பந்தம் எடுக்க வேண்டிய ஆள். அந்த நிமிடம் . . . . . 

என் இலையில் பிரியாணி பறிமாறப்பட்டது. இறப்பு நடந்தால் 16ம் நாள் வரை அசைவம் சாப்பிடக் கூடாது என்பது குடும்ப நடைமுறை. வாசனை மூக்கை துளைத்தது. அடுத்த போன் வந்தது. 

மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்முறை


பெரியப்பா கூடுவாஞ்சேரியில் இருந்து பேசினார். ஆத்தாவின் மூத்த மகன். நீ அனிதாவை அழைச்சிக்கிட்டு இங்க வந்துடு. எல்லோரும் சேர்ந்தே போயிடுவோம் என்றார். இலையில் சிக்கன் 65 வைத்தார்கள். அடுத்த போன் வந்தது. 

தங்கமணி தான் அழைத்தார். துணிமணி எல்லாம் எடுத்து வச்சாச்சி. இன்னும் வரலையா என்றார். அவருக்கு பதிலளித்து இலையை நோக்கினால் வஞ்சிரம் மீன் துண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தது. 

என்னுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் பால்ய நண்பர்கள். விவரம் சொன்னால் உடனே அனுப்பி வைத்து விடுவார்கள். போன் வேறு தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. மனசை கல்லாக்கிக் கொண்டு. . . . 

செல்லை ஆப் பண்ணி வைத்தேன். ஆத்தாவை நினைவில் மட்டும் நிறுத்தி விட்டு பிரியாணியுடன் கோதாவில் குதித்து ஏப்பம் வரும் வரை மல்லுகட்டி வீழ்த்தினேன். 

பிறகு நண்பர்களிடம் விவரம் சொன்னால் கலாய்த்து தள்ளி விட்டார்கள். வெக்கப்பட்டுக் கொண்டே போனை ஆன் செய்து பெரியப்பாவிடம் மேல் விவரம் விசாரிக்க போன் செய்தேன். அவர் எடுத்து பேசும் போது கூடவே டிங்கு டிங்குனு சத்தம் கேட்டது. 

என்ன பெரியப்பா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே சொன்னார். இன்னும் 16 நாளைக்கு கறிகஞ்சி அடிக்க முடியாது. அதான். . . . . ஹிஹி னு.

அப்படியாப்பட்ட பரம்பரையாக்கும் நான். 

இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆட்டு ரத்தப் பொறியல்  எனக்கு மிகவும் பிடித்த சைட்டிஷ்ஷாகும். இந்த சுவை எந்த ஹோட்டலிலும் அனுபவித்ததில்லை. கால் கிலோ கறியும், ரத்தமும் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தால் போதும். கோலா உருண்டை குழம்பும் ரத்தப் பொறியலும் செய்து 40 பேருக்கு கூட பறிமாறுவார். 

நீங்கள் கூட முயற்சித்து பாருங்கள். அந்த அனுபவத்தை அனுபவியுங்கள்.

ஆரூர் மூனா

Friday 11 March 2016

காதலும் கடந்து போகும்

நளன் குமாரசாமி, விஜய்சேதுபதி காம்பினேசன் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு அரங்கை நிறைத்திருந்தது. வண்டி பார்க்கிங் பண்ணுவதே பெரும்பாடாகி போனது, ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ததா படம்.


விழுப்புரத்தில் இருந்து ITயில் வேலை கிடைத்து சென்னை வருகிறார் மடோனா செபாஸ்டியன். சென்னை வாழ்க்கையில் குதூகலமாக இருக்க ஒரு நாள் வேலை பறிபோகிறது. பெற்றோருக்கு விஷயத்தை மறைத்து சென்னையில் வேலை தேடுகிறார். 

ரிட்டையர்டு ரவுடியான விஜய்சேதுபதி வீட்டிற்கு எதிர் வீட்டில் குடிபோகிறார் மடோனா. ஆரம்பத்தில் இருவருக்கும் ஒத்து போகாமல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. பின்னர் படிப்படியாக இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. கெமிஸ்ட்ரி வேலை செய்கிறது. மனதிற்குள் காதலை வைத்துக் கொண்டு தயக்கம் காட்டுகின்றனர் இருவரும். மடோனாவிற்கு வேலை கிடைத்ததா, அவர்கள் காதல் என்னவானது என்பதே காதலும் கடந்து போகும் படத்தின் கதை.


விஜய் சேதுபதி வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார். ஒயின்ஷாப் பாரில் நாலு அடியாட்களிடம் அடிவாங்கி கெத்தை குறைக்காமல் எழுந்து கூலிங் கிளாஸை மாட்டிக் கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு வரும் தியேட்டர் கரவொலியில் குலுங்குகிறது. இது போலவே படம் முழுக்கவும் விஜய்சேதுபதி அதகளம் பண்ணியிருக்கிறார். 

அழகு சுந்தரி மடோனா செபாஸ்டியன் ஜொள்ளு விட வைக்கிறார். கோயிலே கட்டலாம். திருத்தப்பட்ட புருவம், தீட்டப்பட்ட மை, ரோஸ் கலர் உதடு என அணு அணுவாய் ரசிக்க வைக்கிறார். வெறும் அழகு பதுமையாக வந்து போகாமல் பெர்பார்மன்ஸும் பண்ணுகிறார். 


படமே இவர் பார்வையில் தான் இயங்குகிறது. பெரம்பூரில் மடோனா செபாஸ்டியன் ரசிகர் பேரவை ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன். ரெண்டு கண்ணும் பத்தலை மடோனாவை ரசிக்க.

படம் மிக மெதுவாக நகர்கிறது. ஆனாலும் போரடிக்கவில்லை. படத்தின் தன்மையே மெதுவாக நகர்வதாக இருக்கிறது. ஆனால் ரசிச்சி ரசிச்சி எடுத்திருக்கிறார் இயக்குனர். 

காவல் நிலையத்தில் தனக்காக ஒருத்தனை விஜய் சேதுபதி அடித்தார் என்று தெரிந்து பிறகு ஏற்படும் நெருக்கம், பின்பு எடுக்கப்படும் செல்பியில் அவ்வளவு கெமிஸ்ட்ரி.

ரொம்ப வருடமாக கவனிக்கப்படாமலே இருந்த சுந்தர் இனியாவ கவனிக்கப்படுவார் என நினைக்கிறேன். சத்யா படத்தில் கமலுக்கு நண்பராக வந்து செத்துப் போவார். எப்படியும் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் லைம் லைட்டுக்கு வராமலே போனவர் ரீஎன்ட்ரியாகி இருக்கிறார். 

ஆரம்பத்தில் படம் ரொம்ப ஸ்லோவாக போனது சற்று உறுத்தியது. ஆனால் நேரம் போகப் போக அதனை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். 

காதலும் கடந்து போகும் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் தான்.

வீடியோ விமர்சனத்திற்கு





ஆரூர் மூனா

மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்

ட்ரெய்லரை பார்க்கும் போது மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா சாயலில் இருந்தது. அந்த படங்கள் சுமாராக இருந்தாலும் காமெடி நல்லாயிருக்குமே என்ற ஆவல் தான் இந்த படத்தை தேர்வு செய்ய காரணம்.


ஆனால் நடந்தது. 

தமிழகத்தின் எந்த பகுதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு பேரூராட்சி. அங்கு இரண்டு ஆதிக்க சாதிகள் இடையே எப்பொழுதும் பகை இருக்கிறது. 20 வருடங்களாக தேர் இழுக்க முடியாமல் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய வரும் கலெக்டரையே மண்டையை உடைத்து அனுப்பும் அளவுக்கு பிரச்சனை.


ஒரு சாதி தலைவரான ராதாரவியின் தம்பி மகன் விமல். சாதி பாசத்தில் ஊரில் கலப்பு காதலில் இருக்கும் ஜோடிகளை பேசியே பிரித்து வைத்து விடுகிறார். ராதாரவியின் மகளை எதிர்சாதியில் உள்ள ஒருத்தன் காதலிக்கிறான். 


அங்கு பிரச்சனைக்கு போனால் அஞ்சலியை சந்திக்கிறார் விமல். கண்டதும் காதலாகிறது. அஞ்சலி மீதுள்ள காதலால் காதல் ஜோடியை சேர்க்க நினைக்கிறார். சாதி பெரியவர்கள் எதிர்ப்பையும் மீறி காதலை சேர்த்து வைத்தாரா, அஞ்சலியை காதல் மணம் புரிந்தாரா, தேர் இழுக்கப்பட்டதா என்பதே படத்தின் கதை.

இந்த படத்தில்விமலை எனக்கு பிடித்ததற்கு ஒரே காரணம் அவர் என் மச்சான் சதீஷ் போலவே தான் இருக்கிறார். என் வயதுடைய என் மச்சான் மன்னார்குடி பக்கம் ஒரு கிராமத்தின் தலைவராக இருக்கிறான். 

இந்த படத்தில் விமல் எப்படி காதல் பஞ்சாயத்துக்கு போகிறாரோ, எப்படி அவர் கூட நான்கு அல்லக்கைகள் இருக்கின்றனரோ, எப்படி மொட்டை மாடியில் குடிப்பதற்கென்று ஒரு இடம் அமைத்து குடிக்கிறாரோ, எப்படி தங்கமணியிடம் பம்முகிறாரோ அப்படியே என் மச்சானை கண்முன்னே நிறுத்தி விட்டார்.


நான் கூட வருடத்தில் சில நாட்கள் மச்சான் கூட்டத்தில் இணைந்து மகாதியான ஜோதியில் கலப்பதுண்டு. செம என்ஜாயாக இருக்கும். நமக்கு வேலை சென்னையில் இருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் தான் இந்த அனுபவம் நமக்கு கிட்டும்.

மற்றபடி விமல் எல்லாபடங்களிலும் எப்படி ரியாக்சன் காட்டுவாரோ அப்படியே தான் இந்த படத்திலும். மாற்றி நடியுங்கள் பாஸு, பாக்குற எங்களுக்கு கண்ணை கட்டுது.

அஞ்சலி இதற்கு முந்தைய படத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருப்பதை பார்த்து வருத்தப்பட்டேன். ஆனால் எடையை குறைத்து வயித்தில் பாலை வார்த்து இருக்கிறார். அஞ்சலி வரனும், பழைய பன்னீர்செல்வமா வரனும்.


சூரி மொக்கை போடுகிறார். அவரது காமடி பெரிதாக சொல்லிக் கொள்வது போல் ஒன்னுமில்லை. சிறு நகைப்பு கூட வர மாட்டேன் என்கிறது. இப்படியே போய்க்கிட்டு இருந்தால் சிரமம் தான் சூரி.

காளி கொஞ்சம் இன்னொசண்ட் காமெடியில் புன்னகைக்க வைக்கிறார். முனிஸ்காந்த் படத்தின் ஆரம்பத்தில் காமெடியில் கவனிக்க வைத்தாலும் போகப் போக வலுவிழந்து போகிறது. 

எதிர்சாதிகாரன் நம்ம பொண்ணை கூட்டிக்கிட்டு போயிட்டால் நாம் உடனே அவன் சாதிகாரன் பொண்ணை கூட்டியாந்துடனும் என்கிறதே படத்தின் மையக்கரு. இதெல்லாம் எப்படி வௌங்கும்.

படத்தில் இரண்டு சாதிகளை இலைமறை காயாக காட்டுகிறார்கள். நாயகன் முறுக்கு மீசையும் முரட்டுத்தனமாகவும் இருப்பதையும் பார்த்தால் தேவர் இனத்தையும், நாயகி வீட்டில் மட்டும் தெலுகில் பேசுவதை பார்த்தால் நாயக்கர் இனத்தையும் குறிப்பது போல்  தெரிகிறது. 

ஆனால் படத்தில் பேசுபவர்கள் ஸ்லாங் எல்லாம் கொங்கு மண்டலத்தில் பேசுவது போல் இன்னும் குழப்புகிறது.

படம் 15 வருடத்திற்கு முன்பு வந்தால் ஓடியிருந்தாலும் ஓடியிருக்கும். இப்போ முதல் வார இறுதி நாட்களை தாண்டுவது சந்தேகம் தான்.

ஆரூர் மூனா

Monday 7 March 2016

பள்ளிப்பாளையம் சிக்கன்

வீட்டில் தங்கமணி ஊருக்கு போயிருந்த சமயம் ஜப்பானிலிருந்து பிரபாவின் நண்பர் கொண்டு வந்திருந்த மகாதியான நீர் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு பிலாசபி பிரபாகரனும் அஞ்சா சிங்கமும் முகாமிட்டார்கள். 

வித்தியாசமான சைட் டிஷ் செய்கிறேன் என்று செல்வின் சிக்கனும் வெங்காயமும் வாங்கி வரச் சொன்னார். நானும் வாங்கி வந்தேன். அதுநாள் வரை நாங்கள் பார்த்து பழகிய மசாலாப் பொருட்களை புறந்தள்ளி விட்டு வெறும் வெங்காயம், காய்ந்த மிளகாயை மட்டும் வைத்து ஒரு சிக்கன் அயிட்டம் செய்து வந்தார். 

எந்த நிறமும் இல்லை. பார்வைக்கு வசீகரமும் இல்லை. தயக்கத்துடன் தான் முதல் துண்டை எடுத்து வாயில் வைத்தேன். உச்சி மயிர் நட்டுக்கிட்டது. சுவையில் இது ராஜ சுவை என்பது மட்டும் புரிந்து போனது. செய்து வந்த சிக்கனில் பெரும் பகுதி நான் மட்டும் தான் சாப்பிட்டேன். 

பிறகு எப்ப வீட்டில் சமைக்க சிக்கன் வாங்கினாலும் கூடுதலாக கால்கிலோவாவது வாங்குவேன் இந்த பள்ளிப்பாளையம் சிக்கனுக்காக. சுவையில் இதை அடிச்சிக்கவே முடியாது. 

அந்த ரெசிபியை உங்களுக்காக பகிர்ந்து இருக்கிறேன், அனுபவியுங்கள் ராஜசுவையை.



ஆரூர் மூனா

Friday 5 February 2016

பெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்

படம் பார்க்க சுவாரயமில்லாமல் தான் கிளம்பினேன். உண்மைய சொல்லனும்னா நிறைய பதிவர்கள் விசாரணை படத்தை முன்னதாகவே பார்த்து விமர்சனம் செய்து விட்டார்கள். இனி அந்த படத்துக்கு போய் பயனில்லை. சாஹசம் படத்துக்கு போவதற்கு பதில் கேரளாவுக்கு அடிமாடா போகலாம். என்ன செய்வது என்று யோசித்த போது, கேஆர்பி தான் இந்த படத்தை சஜஸ்ட் செய்தார்.


ஏற்கனவே மலையாளத்தில் நான்கைந்து தடவை பார்த்த படம் என்றதால் யோசனையாக இருந்தது. அதுவும் பிவிபியின் படம் என்றால் கண்டிப்பாக மொக்கையாக தான் இருக்கும். எனவே இந்த வாரம் படத்துக்கு போவதை கேன்சல் செய்து விடலாம் என்று தான் நினைத்தேன். கேஆர்பியின் பரிந்துரையினால் இந்த படத்துக்கு போவது என்று முடிவு செய்து விட்டேன். 

அரங்கில் படம் துவங்கும் போது இருந்த ஆட்கள் 50க்கும் குறைவே. முதல் பாதி அசுவாரஸ்யமாக தான் சென்றது, ராணா டகுபதியுடன் ஸ்ரீதிவ்யாவை இணையாக பார்க்கும் போது கடாமாடு கழுத்தில் கனகாம்பர மாலையை சுத்தின மாதிரி இருந்தது. 

ஆனால் இரண்டாம் பாதி துவங்கிய சிறிது நேரத்திலேயே படத்துடன் ஒன்றி விட்டேன். இந்த பீல் படம் முடியும் வரை இருந்தது தான் இயக்குனரின் ஸ்பெஷாலிட்டி.

கண்டிப்பாக பெங்களூர் நாட்கள் பார்க்க வேண்டிய பீல் குட் மூவி.

மேலும் விரிவான விமர்சனத்திற்கு இந்த வீடியோவை பாருங்கள். ஆடியோ வால்யும் குறைவாக இருக்கும், குறையை பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை இந்த குறை இல்லா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன்.





----------------------------------------------------

எப்பொழுதும் படம் பார்த்து விட்டு வந்து அரை மணிநேரத்திற்குள் ப்ளாக் போஸ்ட் செய்து விடுவேன். வீடியோ விமர்சனத்திற்கு முயற்சித்ததால் அது நிறைய நேரத்தை விழுங்கி விட்டது. 

யோசித்து வீடியோவில் பேச அரை மணிநேரம் ஷேர் இட் ல் கம்ப்யூட்டருக்கு ட்ரான்ஸ்பர் செய்ய அரைமணிநேரம், எடிட் பண்ண அரைமணிநேரம் யுடியுபில் சேர்க்க அரை மணிநேரம் என இரண்டு மணிநேரத்தை தாண்டி விட்டது.

அதற்குள் வேலைக்கு போக வேண்டிய நேரம் வந்து விட்டதால் யுடியுபில் மட்டும் போஸ்ட் செய்து விட்டு கிளம்பி விட்டேன். அதனால் தான் ப்ளாக் போட தாமதமாகி விட்டது. 

----------------------------------------------

என் போனில் ரெக்கார்டு செய்ய முயற்சித்த போது வால்யும் குறைவாக பதிவானது. நண்பர்கள் நிறைய பேர் அதை குறிப்பிட்டு சொன்னதால் ரிச்சி ஸ்ட்ரீட் போய் அலைந்து ஒரு மைக் வாங்கி வந்து பயன்படுத்தினால் அது நார்மல் ப்ளேயரில் ரெக்கார்டு ஆக மாட்டேங்குது. யாருக்காவது வேறு சாப்ட்வேர் வைத்து இந்த மைக்கை பயன்படுத்தி விடியோவுடன் ஆடியோவையும் துல்லியமாக பதிவுசெய்யும் விதம் தெரியுமா, தெரியுமெனில் தகவல் தெரிவியுங்கள் நன்றி.

ஆரூர் மூனா

Friday 29 January 2016

இறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்

படத்தின் ட்ரெய்லரை பார்த்ததுமே இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படத்தின் பட்டியலில் சேர்ந்து விட்டது. காலையில் அரங்க வளாத்தினுள் வண்டியை நுழைத்தால் பகீரென்று இருந்தது. அரண்மனை 2 படத்திற்கு கூட்டம் பம்மியது. வண்டி போடவே இடமில்லை. தப்பான படத்தை தேர்வு செய்து விட்டோமே என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. 


வெறும் கதைன்னு பார்த்தால் சக் தே இந்தியா படத்தின் அதே டெம்ப்ளேட் தான். வீரராக தோற்ற ஒருவன் சில வருடங்களுக்கு பிறகு பயிற்சியாளராகி சாதாரண ஒருத்தரை பயிற்சி கொடுத்து உலக சாம்பியன் ஷிப் ஆக்குதே கதை, இரண்டு படத்திற்கு ஒரு வித்தியாசமும் இல்லை. 

ஆனாலும் இறுதிசுற்று படம் சக்தே இந்தியாவை விட நாலு அடி முன்னே நிற்கிறது. காரணம் மிக மிக எதர்த்தமான திரைக்கதை. சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக பிரம்மாண்டமாக நிற்கிறது படம்.

மாதவன் மேன்லினஸ்ஸில் அடித்து தூள் பறத்துகிறார். வயசானாலும் அந்த ஆண்மையின் வசீகரத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. என்னா ஹேர்ஸ்டைல். அதை விட பெரிய விஷயம். பெர்பார்மன்ஸில் பின்னுகிறார். 


இந்த மனிதனுக்குள் இருந்த ஆக்டிங் சென்ஸ் குறைந்து விட்டதோ என்று எண்ணினேன். காரணம் மன்மதன் அம்பு. ஆனால் மின்னலேயில் பார்த்த மாதவன் எந்த சேதாரமும் ஏற்படாமல் கண் முன்னே நிற்கிறார். 

க்ளைமாக்ஸில் ஜாகீர் உசேனிடம் எல்லா திமிரையும் விட்டு ரித்திகாவுக்காக கெஞ்சும் போது பெர்பார்மன்ஸில் பின்னியிருக்கிறார். அதே போல் இறுதியாக தூரத்தில் இருந்தபடி எப்படி அடிப்பது என்று ரித்திகாவுக்கு ஹிண்ட் கொடுப்பது வரை பின்னி பெடலெடுக்கிறார் மனுசன். 

அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள் மாதவன். ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறோம்.


ரித்திகா சிங் முதல் காட்சி முதலே ஆச்சரியப்பட வைக்கிறார். படத்திற்கான ப்ரோமோவில் பார்த்தேன், ஒரு வார்த்தை கூட அவருக்கு தமிழ் பேச வரவில்லை. ஆனால் படத்தில் ப்ராம்ப்ட்டில் வசனம் சொல்லாமல் அட்சர சுத்தமாக பேசுகிறார். அதுவே படத்தின் ஆகச் சிறந்த ப்ளஸ். 

மீன் விற்கும் காட்சியில் ஆரம்பித்து படிப்படியாக ஸ்கோர் செய்து கொண்டே போகிறார். முதல் ரவுண்ட்டில் வேண்டும் என்றே பவுல் செய்ய அம்பயரை முகத்தை பேர்க்கும் போது அப்ளாஸ் அள்ளுகிறார். 

திருட்டுப் பட்டம் சுமந்து வெறுமையுடன் ஆட்டோவில் மாதவனுடன் வரும் போது நடிக்க தெரிந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். இன்னும் என்ன சொல்ல, முழுசா சொல்லனும்னா சொல்லிக்கிட்டே போகலாம். இந்த ஒரு பதிவு பத்தாது. 


நாசர் லோக்கல் பாக்சர் எப்படி இருப்பார்கள் என்பதை கண்முன்னே நிறுத்துகிறார். முதலில் அலட்சியமாக மாதவனை அணுகும் போது பிறகு அவரைப் பற்றி படிப்படியாக புரிந்து கொண்டு அவருக்கு துணை நிற்கும் போதும் செம செம. 

இந்த மாதிரி படங்களில் ஒரு சின்ன அபாயம் இருக்கிறது. நாம் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே இணைந்து பயணிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் சொதப்பி விடும். அப்படி நம்மை படத்துடன் பயணிக்க வைக்க வேண்டியது இயக்குனர் கடமை. அதை சரியாக செய்து வெற்றிக் கனியை பறித்து இருக்கிறார் இயக்குனர். 

படத்திற்கு தேவையில்லாத ஒரு சீன் ஒரு ப்ரேம் கிடையாது. அவ்வளவு நறுக் எடிட்டிங். அந்த செங்கிஸ்கான் பற்றிய விவாதம் சம்பந்தமில்லாமல் இருக்கும் போதே நினைத்தேன். அது க்ளைமாக்ஸ்க்கான லீட் என்று. அதை சரியாக ப்ளேஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர். 

எல்லாம் முடிந்து வெற்றி பெற்ற பிறகு மாதவன் ஒதுங்கியிருக்க ஜாகீர் உசேன் முன்னின்று பெருமை பட்டுக் கொள்ளும் போதே தியேட்டரே எதிர்பார்க்கிறது அந்த காட்சியில் ரித்திகா அவரை அடித்து  பொளக்க வேண்டுமென. அது நடந்ததும் அரங்கில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இது தான் இந்த படத்தின் வெற்றிக்கு சான்று.

நாயகி வட இந்திய முகமாக தெரிகிறதே, அன்னியமாக இருக்கிறதே என்று யோசிக்கும் போது அதற்கு சரியான காரண காரியம் அமைத்து நம்ப வைத்து இருக்கிறார் இயக்குனர். 

பாடல்கள் எல்லாம் ஏஒன். எல்லாமே மான்டேஜ் சாங்ஸ். அதற்கேற்ற சரியான காட்சிகள். 

சினிமா ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்ற வகையில் ஒரு சிறந்த படம் இறுதிச்சுற்று. 

படம் பார்த்து முடித்ததும் மனமெல்லாம் நிறைந்து விமர்சனம் எழுத வீட்டுக்கு வரும் போது ஒரு போன் வந்தது. யூனியன் ஆபீஸில் வெள்ள நிவாரண பொருட்கள் கொடுக்கிறார்கள், வந்து பெற்றுக் கொள்ளவும் என. இப்ப அது அவசியமில்லை கூட. ஆனால் யூனியன் காரர்கள் தயவு வேண்டுமே. அதனால் எதுவும் சொல்ல முடியாமல் நேரே யூனியன் ஆபீசுக்கு போய் விட்டேன். 

எல்லாம் முடியும் நேரம் வேலைக்கு செல்ல வேண்டிய நேரமாகிடுச்சி. அதனால் தான் விமர்சனம் லேட்டு.

ஆரூர் மூனா

Thursday 14 January 2016

ரஜினி முருகன்

பண்டிகைகளின் கொண்டாட்ட மனநிலை அன்று வெளியாகும் சினிமாவின் மூலம் இன்னும் அதிகமாகனுமே தவிர மூடையே சங்கடத்தில் ஆழ்த்தி விட கூடாது. துப்பாக்கி படம் சரியான உதாரணம், அந்த வருட தீபாவளி மக்களிடையே அதிக கொண்டாட்டமானதற்கு துப்பாக்கிக்கும் பங்கிருக்கிறது.


அது போன்ற கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் சினிமாவாக வந்திருக்கிறது ரஜினிமுருகன். இந்த பொங்கலுக்கு வெளியான மற்ற படங்கள் எல்லாம் முரட்டு பணக்கார நாயகர்கள் படமே. சாமானியனாக மல்லுக்கு நின்று மக்களின் ஆதரவை ஏகோபித்த அளவில் பெற்று சினிமா வணிகத்தில் முன்னுக்கு நிற்பது சிவகார்த்திகேயன்.

படத்திற்கு அலைஅலையென வரும் மக்களே மேற்கூறிய வார்த்தைகளுக்கு சாட்சி. டிரெய்லர் பார்க்கும் போது பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை, மசாலாப் படமாகவோ வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இன்னுமொரு வர்ஷனாகவோ இருந்து விட வாய்ப்பிருக்கிறது என்றே நினைத்திருந்தேன். 


அழகியல் சினிமாவுக்கான எந்த கட்டமைப்பும் இல்லை, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இல்லை, மனதை உருக்கும் கதை இல்லை ஆனாலும் மக்களுக்கு படம் மிகவும் பிடித்து இருக்கிறது. 

அரங்கு நிரம்ப அமர்ந்து வலிக்க வலிக்க சிரித்து செல்கிறார்கள். பாடலுக்கு ஆண்பெண் பேதமில்லாமல் திரையின் முன் நின்று ஆட்டம் போடுகிறார்கள். எந்த பாடலுக்கும் ஒரு ஆண்மகன் கூட தம்மடிக்க வெளியே போகவில்லை. பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்கு இந்த படம் போதும்.

அப்பா, அம்மாவிடம் காசை களவாண்டு நண்பனுடன் செலவழித்து வேலைக்கு போகாமல் அழகான பெண்ணை காதலித்து அவளை கைப்பிடிக்க முயற்சித்து சொத்து பிரச்சனையில் வில்லனுடன் மோதி ஜெயித்து வணக்கம் போடும் வணிக சினிமா தான் ரஜினி முருகன்.

திரையில் பார்க்கும் போது அவ்வளவு ப்ரெஷ்ஷாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். நமக்கு அவரை ரொம்ப பிடிக்குமென்பதால் அவரது எல்லா செய்கைகளையும் ரசிக்கிறோம். நடிப்பில் நல்ல கம்பர்டபிளாக செட்டாகி விட்டார். 

இனி சிவகார்த்திகேயன் தேர்வு செய்யும் சினிமாவே அவரது பாதையை தீர்மானித்து விடும். உடலை வளைத்து, வெயிலில் கறுத்து வருத்தப்பட்டு ஜெயிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை. குழந்தைகள் அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் ஆகர்ஷமாக கொண்டாடுகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ், பல ஆங்கிள்களில் எனக்கு வரலட்சுமியை நினைவுபடுத்துகிறார். நல்ல வேளை காலையில் தாரை தப்பட்டை பார்த்து வரலட்சுமி பற்றிய மனநிலை எனக்கு மாறியிருந்ததால் அதையும் கூடுதல் தகுதியாக எடுத்துக் கொண்டே கீர்த்தி சுரேஷை ரசிக்க முடிந்தது. 

நல்ல இளமையும் அழகிய கேரள தேசத்து முகவெட்டும் அவருக்கான கூடுதல் பலம். நன்றாகவே இருக்கிறார்.

வேதாளம் படம் பார்த்து விட்டு சூரியை யாராவது காமெடி நடிகர்கள் என்றால் வாயில் குச்சியை விட்டு குத்திக் கொண்டு இருந்தேன். ஆனால் அவர் மாட்ட வேண்டிய இயக்குனர்களிடம் மாட்டினால் மிளிர்வார் என்பதை இந்த படம் உறுதி செய்கிறது. 

இடைவேளை வரை டம்மியாக வந்து கொண்டிருந்த ராஜ்கிரண் அதன் பிறகு நடிப்பில் பின்னி எடுக்கிறார். சிவகார்த்திகேயன் லெவலுக்கு இறங்கி காமெடியில் கலக்கியிருக்கிறார். 

80களில் எல்லா நடிகர்களுக்கும் போட்டு வெளுத்து எடுத்த இந்த பார்முலாவை இந்த காலத்தில் போட்டு வெற்றிகரமாக கலகலக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். 

இந்த படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைத்து மகிழும் அற்புத படமல்ல. படம் பார்க்கும் வரை சிரித்து விட்டு அந்த நாளை மட்டும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் கமர்ஷியல் படம் ரஜினி முருகன். 

ஆரூர் மூனா

தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்

சென்னையில் முதல் காட்சி பார்ப்பதென்றால் வீட்டுப் பக்கத்தில் இருக்கும்  ஏஜிஎஸ்ஸில் காலை 9 மணிக்காட்சி எப்படியும் பார்த்து விமர்சனம் போட்டு விடுவேன். விமர்சனத்திற்காக வரும் லைக்கை விட குடும்பத்துடன் கொண்டாடும் விஷேசங்கள் தான் முக்கியம் என்பதால் எப்பொழுதுமே அம்மா அப்பாவுடன் திருவாரூரில் தான் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு கொண்டாட்டங்கள்.


இங்கு முதல் காட்சியே 11 மணிக்கு தான் அதிலும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 25 பேர் தான். இது தான் சிறுநகரங்களின் லட்சணம். சரி விமர்சனத்திற்கு போவோம்.

பாலாவுக்கென ஒரு டிபிக்கல் டெம்ப்ளேட் இருக்கு.  அந்த இலக்கணத்தை துளியும் மாறாமல் எடுத்திருக்கும் படம் தான் தாரை தப்பட்டை. நல்ல சந்தோஷமான கொண்டாட்டாமான கதையில் கனக்கும் க்ளைமாக்ஸ். இது தான் பாலாவுக்கான டெம்ப்ளேட். இது வரை இதை மாற்றி எடுத்த ஒரே படம் பரதேசி, படம் முழுவதுமே கனக்கும்.

தஞ்சாவூரின் மிகப் பாரம்பரிய கர்நாடக இசைக் கலைஞர் ஜிஎம் குமார். பாரம்பரிய கலைகளில் மீது மக்களின் கவனம் குறைந்து போனதால் வறுமையில் இருக்கும் அவரது மகன் சசிக்குமார் ஒரு பாரம்பரிய நடனக் குழு வைத்திருக்கும் கலைஞர். அங்கு ஆட்டக்காரியாக இருக்கும் வரலட்சுமி, புரிதலுடன் இருக்கும் சசிக்குமாரின் காதலி. எங்கு சென்று ஆடினாலும் கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம் தான் குழுவுக்கு. 


காதலை வெளியில் சொல்லாமல் தயக்கத்துடன் இருக்கிறார் சசிக்குமார். சசியின் மீது அதி தீவிர காதலுடன் இருக்கும் வரூவை பெண் கேட்டு வருகிறார் சுரேஷ். வரூவின் அம்மா, மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என சசியிடம் சொல்லி அவர் மூலமாகவே சம்மதிக்க வைக்கிறார். 

சசியின் வார்த்தைக்காக கல்யாணம் செய்து கொள்கிறார் வரூ. சில மாதங்கள் கழித்து வரூ ஏமாற்றப்பட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டதை அறிகிறார் சசி. வரூவுக்கு என்ன ஆனது, ஏமாற்றியவன் யார், அவரை சசி இக்கட்டில் இருந்து மீட்டாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

சசிக்கு ஆல்டைம் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் இந்த படம், கடுமையான உழைப்பை படத்திற்காக கொடுத்து இருக்கிறார். க்ளைமாக்ஸில் அவருக்கான அடியை வாங்கியிருந்தால் எவனும் செத்தே போயிருப்பான். 


எப்பொழுதும் வருமான குறைச்சலால் தாழ்வு மனப்பான்மையில் வரூவிடம் காதலை சொல்ல தயங்கும் சசி மனதை கவர்கிறார். க்ளைமாக்ஸ் விஸ்வரூபம் பயத்தை  உண்டாக்குகிறது. 

படத்தின் ஆகச் சிறந்த பலம் சந்தேகமேயில்லாமல் வரூ தான். என்னா பெர்பார்மன்ஸ், என்னா ப்ரசன்டேன்சன். தலையை குனிந்து வணக்கம் செலுத்துகிறேன் வரலட்சுமி.

சத்தியமாக எந்த நடிகையும் நடிக்க முன் வராத கதாபாத்திரம் அது. முதலில் குட்டைப் பாவாடையுடன் ஆடும் கரகாட்டகாரிகளுக்கான உடையை அணிவதற்கே பெரிய தைரியம் வேண்டும். சசி பசிக்கிறது என்று சொன்னதற்காக காலில் காயத்துடன் தெறிக்க நடனமாடி மயங்கி விழும் காட்சியிலும், சசிக்கு பசிக்கும் என்றால் அம்மணமாக கூட ஆடுவேன் என்று சொல்லும் காட்சியிலும் பெர்பார்மன்ஸில் தெறிக்க விடுகிறார். 

வில்லன் சுரேஷால் ஏமாற்றப்பட்டு ப்ராவுடன் ஒருத்தனை அடித்து துவைத்து வில்லனிடம் சாவு அடி வாங்கும் காட்சியிலும், குடித்து விட்டு ஜிஎம் குமாரிடம் மல்லுக்கு நிற்கும் காட்சியிலும் பட்டைய கிளப்புகிறார். அவருக்கான மாஸ்டர் பீஸ் படம் இது.

காலமாற்றத்தினால் வலுவிழந்தும் கம்பீரம் குறையாமல் திமிருடன் திரியும் ஜிஎம் குமார் மனதை நெருடுகிறார். அத்தனை அவமானங்களையும் கடந்து சாதித்து விட்ட திருப்தியில் சாகும் போது மனதை தொடுகிறார்.

கர்ண கொடூர கதாபாத்திரம் சுரேஷுக்கு, இனி கோலிவுட்டை ஒரு வலம் தில்லாக வருவார். 

அமுதவாணன் ஆனந்தி சம்பந்த பட்ட காட்சிகள் வருத்தத்தை, இயலாமையை அப்படியே கண்முன், நிறுத்துகிறது.

இத்தனை பாராட்டுகள் இருந்தாலும் அத்தனையும் போய் சேரும் நதிமூலம் பாலா. இத்தகையப்பட்ட ஆட்களிடம் இருந்து வாங்கியிருக்கும் பெர்பார்மன்ஸ் தான் படத்தை எடுத்து நிப்பாட்டுகிறது. 

பின்னணி இசையும் பாடல்களும் இளையராஜா தான் இசையின் கடவுள் எனும் பெயரை நிரந்தரமாக்கி நிறுத்துகிறது. 

இவ்வளவு இருந்தும் பாலாவின் அசைக்க முடியாத டெம்ப்ளேட், யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸ் படத்தின் பலவீனம். இந்த டெம்ப்ளேட்டை விட்டு வெளியில் வராவிட்டால் பாலா இனி தொடர்ந்து முன்னணியில் இருப்பது சிரமம். 

தனிமனித உணர்வுகளை இந்த அளவுக்கு மெருகூட்டி மக்களுக்கு படைப்பது பாலாவுக்கு மட்டுமே கிடைத்த வரம்.

ஆரூர் மூனா

Monday 11 January 2016

லோயர் பெர்த்தும் மிலிட்டரி ரம்மும்

கிறிஸ்துமஸ் சமயத்திலேயே குடும்பத்துடன் போய் திருவாரூரில் உட்கார்ந்தாச்சி. பொங்கல் வரை வீட்டம்மாவும் முல்லையும் திருவாரூர் வாசத்தில். புத்தாண்டுக்கு பிறகு நான் மட்டும் சென்னை வந்து வேலைக்கு போய்க் கொண்டு இருக்கிறேன். 


முல்லையை விட்டு இருக்க மனமில்லாததால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை திருவாரூர் விஜயம் நடந்துக் கொண்டு இருக்கிறது. நேற்றிரவு சென்னைக்கு பயணமானேன். 

எப்போதுமே அரிசி, உளுந்து, புளி போன்ற பொருட்கள் திருவாரூரில் இருந்து தான் எடுத்து வந்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியே பழகிப் போச்சி. நேற்றும் நாற்பது கிலோவுக்கு மேல் வெயிட்டுகளை சுமந்து கொண்டு ரயிலேறுவதால் சைடு லோயர் பெர்த் புக் பண்ணியிருந்தேன். 

எப்பொழுமே எனக்கான லோயர் பெர்த்தை கடன் கொடுத்தே பழகிப் போன நான் இந்த முறை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கடுகடுப்பான முகமூடி அணிந்து பெட்டியில் ஏறினேன். 

முகமூடியை கழற்றி எறியும் நிலையை உறுதிப்படுத்த வழக்கம் போல ஒரு பெண்மணி வந்து பெர்த்தை மாற்றிக் கொண்டு அப்பர் பெர்த்துக்கு  செல்லும்படி கேட்டார். கையில் நிறைய பொருட்கள் இருப்பதால் யோசித்து மறுத்தேன். "செங்கல்பட்டுல இறங்கிடுவோம் தம்பி. வயதானவள், அப்பர் பெர்த்தில் ஏறமுடியாது" என்று கெஞ்சினார். 

சில நிமிடங்களில் மனசு கேட்காமல் அவரிடம் பெர்த்தை கொடுத்து விட்டு சைடு அப்பருக்கு மாறினேன். கடுகடுப்பான முகமூடி என்னைப் பார்த்து சிரித்தது. தூக்கம் வரவில்லை. மனசு முழுக்க பொருட்களின் மீது தான் இருந்தது. 

அந்த அம்மா செங்கல்பட்டில் இறங்க பெர்த்தை விட்டு அகன்ற சமயம் அப்பர்பெர்த்தில் இருந்து இறங்கினேன். லோயர் பெர்த்தில் அடுத்த கூபேயில் இருந்து வந்து வேறொரு பெண்மணி அமர்ந்தார். கடுப்பாகி அம்மா நகருங்க, இது என் பெர்த்து என்று சொல்ல முனங்கிக் கொண்டே எழுந்து சென்றார்.

5 நிமிடம் கழித்து ஒன்னுக்கு போய்விட்டு வந்தால் மிடில்பெர்த்தில் படுத்திருந்த பெண்மணி வந்து சைடு லோயரில் படுத்து இருந்தார். மண்டை காயும் அளவுக்கு சூடாகிப் போனேன். அவரிடமும் சத்தம் போட்டு எழுப்பி விட்டு பெர்த்தில் படுத்தேன். 

போராளி சட்டை போட்டு லோயர் பெர்த் கேட்கும் வயதான ஆட்களையெல்லாம் டிஸ்சும் டிஸ்சும்னு சுட்டு விடும் அளவுக்கு கோவத்தில் பொங்கிப் போனேன். என் அம்மாவுக்கு கூட என்றாவது இந்த நிலை வந்தால் அவரும் லோயர் பெர்த் கேட்பாரே என்று சமாதானமானேன்

படக்கென போராளி சட்டையை கழட்டி விட்டு சமூக ஆர்வலர்சட்டையை மாட்டிக் கொண்டு இனி வயதானவர்கள் கேட்டால் எப்போதும் போல் லோயர் பெர்த் கொடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். 

எழும்பூரில் இறங்கிய போது செம குளிர், நடுக்க ஆரம்பித்தது. ரெண்டு நாளைக்கு முன் நள்ளிரவிலும் வேர்த்துக் கொட்டிய சென்னையா இது என்று ஆச்சரியமானது. 

சமூக ஆர்வலர் சட்டையை கழட்டி கடாசி விட்டு மகாதியான பிரபுவாகிப் போனேன். இன்னும் இருக்கும் இரண்டு நாட்களும் மிலிட்டரி ரம் இருந்தால் தான் குளிரும் சென்னையை சமாளிக்க முடியும் போல.

ஆரூர் மூனா