Friday 26 June 2015

இன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்

ஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையில்லா பட்டதாரியான விஷ்ணு விஷாலிடம் அந்த மெஷின் வந்து சேருகிறது. அதனை வைத்து நண்பனான ஜோசியக்காரர் கருணாகரனுடன் இணைந்து பணம் சம்பாதிக்கிறார். 


ஷேர் ப்ரெடிக்ஷனை துல்லியமாக கொடுத்து காதலியான மியா ஜார்ஜின் அப்பாவை அசர வைத்து திருமணத்தை உறுதி செய்கிறார். அதே சமயம் போலீஸ் என்கவுண்டடரில் இறந்து போன வில்லன் சாய் ரவியை இறந்த காலத்திற்கு போய் தவறுதலாக பிழைக்க வைக்கின்றனர். பிழைத்து வரும் சாய்ரவி மியா ஜார்ஜின் அப்பாவான ஜெயப்பிரகாஷை கொல்ல நினைக்கிறார்.

அதனால் ஏற்படும் குளறுபடிகளை எப்படி சரி செய்து காதலியை கைப்பிடிக்கிறார் என்பதே இன்று நேற்று நாளை படத்தின் கதை.


திரைக்கதையை பிரமாதமாக அமைத்துள்ளனர். ஒரு நிமிடம் கூட அசர வைக்காமல் பரபரவென்று காட்சிகள் நகர்கின்றது. ஆனால் படத்தின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இல்லை. எல்லா சாகசங்களையும் செய்து விட்டு இறுதியில் எந்த ஏற்ற இறக்கமும் இல்லாமல் செல்வதே வாழ்க்கை என்று படத்தை முடித்திருப்பது நெருடுகிறது. இது தான் படத்தின் கருத்து என்றால் என்னத்துக்கு பேன்டஸி பேக் ட்ராப், டைம் ட்ராவல் மெஷின் எல்லாம்.

அது போல் வில்லன். அதிபயங்கர கொடூர வில்லன்கள் எல்லாம் வேட்டைக்காரன் படத்தோடு வழக்கொழிந்து போய் விட்டார்கள். நிஜத்திற்கு கொஞ்சம் கூட ஒத்து வராமல் பொது இடங்களில் சர்வசாதாரணமாக துப்பாக்கியை வைத்து கொலை செய்யும் வில்லன் பொருந்தவில்லை. கொஞ்சம் நிஜத்திற்கு அருகில் யதார்த்தத்தோடு வில்லன் கதாபாத்திரம் படைக்கப்பட்டு இருக்கலாம்.


ஆக்சன் ரீப்ளே என்றொரு இந்திப் படம் 5 வருடத்திற்கு முன்பு வந்தது. அதாவது அம்மாவும் அப்பாவும் எப்பவும் சண்டைப் போட்டு கொண்டே இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத மகன் இவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்ததால் தான் இந்த பிரச்சனை, இவர்களை திருமணத்திற்கு முன்பு காதலிக்க வைத்தால் தான் பாசத்துடன் இருப்பார்கள் என முடிவு செய்து டைம் ட்ராவல் மெஷினில் முந்தைய காலத்திற்கு பயணித்து அப்பாவையும் அம்மாவையும் காதலிக்க வைத்து திருமணம் செய்து வைப்பான். அப்பாவாக அக்ஷய் குமார், அம்மாவாக ஐஸ்வர்யா ராய். பேண்டஸி டைம் டிராவல் கதையென்றால் அப்படி இருக்க வேண்டும். படம் சும்மா பட்டைய கௌப்பி இருக்கும். 

திரும்பவும் இன்று நேற்று நாளை படத்திற்கு வருவோம்.


நாயகனாக விஷ்ணு விஷால். நன்றாகவே நடித்து இருக்கிறார். கொடூரமான வில்லன் என்பதால் அவரை லெக் ஷாட்டில் எல்லாம் அடித்து வீழ்த்தாமல் சாதாரணமாக அடிப்பதாலேயே கவனிக்க வைக்கிறார். இந்த படம் அவருக்கு கண்டிப்பாக ப்ளஸ் தான்.

இரண்டாம் கதாநாயகன் ரேஞ்சில் கருணாகரன். டுபாக்கூர் ஜோசியக்காரனாக வந்து காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தரும் போது நகைக்க வைக்கிறார். நாயகனுக்கு நிகராக படம் முழுக்கவே வரும் வாய்ப்பு. நன்றாகவே செய்திருக்கிறார். 

மியா ஜார்ஜ் டிபிக்கல் கேரள முகம். கிடைத்த வாய்ப்பில் சரியாக செய்திருக்கிறார். முகத்தில் அவரது எக்ஸ்பிரசன்கள் கவனிக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸில் அவர் மணமகள் அறையில் இருப்பதை பார்க்கும் போது நாயகனைப் போல் நமக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.

இந்த டைம் ட்ராவல் மெஷின் என்ற பேண்டஸியை எடுத்து விட்டால் வெகு சுமாரான கதை தான். சதுரங்க வேட்டை படத்திற்கு திருந்துவது போன்ற க்ளைமாக்ஸ் எடுபடலாம். ஆனால் இந்த படத்திற்கு டைம் டிராவல் மெஷின் சாகசங்கள் இல்லாமல் இருப்பதே வாழ்க்கை என்று முடித்திருப்பது ஒப்பவில்லை. அதன் சாகசங்களுடன் முடித்திருக்கலாம்.

அதி சிறந்த சமையற்காரர்கள் 5 பேர் சேர்ந்து ஒரு சமையல் செய்தால் உணவின் ருசி எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது சிறந்த திரைக்கதையாளர்கள் இணைந்து மெருகேற்றிய இப்படம்.

மற்றபடி நேரம் கிடைத்தால் பார்க்க வேண்டிய திரைப்படம் தான். 

ஆரூர் மூனா

Sunday 21 June 2015

ஆரூர்மூனா எக்ஸ்பிரஸ் - 9

ரயில்வேயில் அதிகாரிகள் லெவல் என்பது வேறு. அவர்கள் நல்ல சம்பளத்துடன் நல்ல செட்டில்மெண்ட் என அருமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.


பணிமனையில் பழுதுநீக்கும் டெக்னீசியன்கள், ஓப்பன் லைனில் ட்ராக் பழுது நீக்கும் டெக்னீசியன்கள், சிக்னல் ஆப்பரேட்டர்கள், ஸ்டேசன் பணியாளர்கள் என அளவான சம்பளத்தில் பணிபுரிபவர்கள் தான் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களுக்கு தான் இப்போ ஆப்பு தயாராகிக் கொண்டு இருக்கிறது.

ரயில்வே ஊழியர்களுக்கு ரிட்டையர்மெண்ட் சமயத்தில் பணம் தராமல் 20 வருடத்திற்கு வட்டி போட்டு 20 வருடம் கழித்து கிடைப்பது போல் செட்டில்மெண்ட் வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு விவேக் தேவராய் கமிட்டி பரிந்துரைத்துள்ளதாம். இது அமலுக்கு வந்தால் அந்த இருபது வருடத்திற்கு அசலையோ வட்டியையோ எடுக்க முடியாதாம்.

இது மட்டும் நடைமுறைக்கு வந்தால் கண்டிப்பாக ஓய்வுபெறும் ரயில்வேகாரர்களில் பலர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வார்கள். புல் செட்டில்மெண்ட் பணத்தோடு ரிட்டையர் ஆனவர்களையே மதிக்காம வாசல்ல நிறுத்துறானுங்க புள்ளைங்க. 


ரிட்டையர்மெண்ட் ஆகி ஒன்னுமே இல்லாம வர்ற தகப்பன், புள்ளைங்க கண்ணுக்கு செல்லாக்காசா தான் தெரியப் போறான். சம்பளம் வந்த வரைக்கும் பந்தாவா இருந்த குடும்பத் தலைவன் அது நின்னு போனதும் கம்பீரம் சுருங்கிப் போவதை கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

இந்த லட்சணத்தில் இது நடந்தால் அவ்வளவு தான்.

மேலும் இந்த கமிட்டியின் முக்கிய பரிந்துரைகள்

புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனியாரிடம் ஒப்படைப்பது

ரயில் பயணிகள் கட்டணம், சரக்கு போக்குவரத்து கட்டணம் இரண்டையும் பெருமளவில் உயர்த்துவது

ரயில்வே பள்ளிகள், ரயில்வே மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைப்பது

ஐசிஎப் உற்பத்தி பணிமனை, பெரம்பூர் லோகோ, பெரம்பூர் கேரேஜ், போத்தனுர், திருச்சி, அரக்கோணம் பராமரிப்பு பணிமனைகள் போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைப்பது

ரயில்வே காவல் பணிகளை தனியார்  செக்யூரிட்டி வசம் ஒப்படைப்பது

பணியில் இறக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக வேலை மட்டுமே தருவது

மாணவர்கள், சீனியர் சிட்டிசன்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டண சலுகைகளை நிறுத்துவது

ரயில்வேயில் உள்ள 4 லட்சம் காலியிடங்களை நிரப்பாமல் அப்படியே தனியாரிடம் அந்தந்த வேலைகளை ஒப்படைப்பது

-----------------------------

நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான் 

ஆப்கி பார் மோடி சர்க்கார். 

வௌங்கிடும்.

ஆரூர் மூனா

Thursday 11 June 2015

இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

கொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் கம்ப்யூட்டர் எனக்கு கிடைப்பதேயில்லை. ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் எழுத ஏகப்பட்ட கண்டென்ட்டுகள் எடுத்து வைத்துள்ளேன். நான் பதிவெழுத அமர்ந்தாலே முல்லை வந்து மடியில் அமர்ந்து கீபோர்டு மவுஸை பெரட்டிப் போட்டு மானிட்டரை கீழே தள்ளி விட்டு தான் இறங்குகிறாள். மகளதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நேரம் கிடைக்கும்போது பதிவுகள் தருகிறேன். நன்றி.

------------------------------------------------------

சந்தானத்திற்கு ஹீரோவாகவே தொடர வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தனக்கான ட்ரெய்லராக பார்த்தவர் இந்த படத்தில் துணிவுடன் நடித்து தனது வளர்ச்சிக்கு முதல் படியை வெற்றிகரமாக தொட்டுள்ளார்.


பெரிய அப்பாடக்கர் கதையெல்லாம் கிடையாது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து தொங்கப் போட்ட முக்கோண காதல் கதை தான். சொன்ன விதத்தில் எடுபட்டு இருக்கிறது. 

சந்தானத்தின் பெற்றோர் ஜாதகம் பார்க்கும் போது மூன்று மாதத்திற்குள் சந்தானத்திற்கு கல்யாணம் பண்ணியே ஆக வேண்டும் இல்லையென்றால் பெரும் தோஷம் வரும் என ஜோசியர் சொல்கிறார். அவசர அவசரமாக பெண் பார்க்கும் படலம்  தொடங்குகிறது. 

பார்க்கும் பெண்ணெல்லாம் சரியாக அமையாமல் போக ஆஷ்னா ஜவேரியை காதலிக்க தொடங்குகிறார். அவரோ சந்தானத்தின் காதலை மறுக்கிறார். அதே நேரம் சந்தானத்தின் பெற்றோர் அகிலா கிஷோரை சந்தானத்திற்கு பேசி முடிக்கின்றனர். 


தாய்மாமன் தம்பி ராமையாவின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் சந்தானம். அகிலா கிஷோருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஆஷ்னா ஜவேரிக்கு சந்தானத்தின் மீது காதல் பிறக்கிறது. ஒரே நேரத்தில் சந்தானம் இருவரையும் சமாளிக்க பிரச்சனைகள் கூடுகிறது. 

இறுதியில் யாரை சந்தானம் திருமணம் செய்தார் என்பதே படத்தின் கதை. கட்டக் கடைசியாக பாக்யராஜின் சின்ன வீடு பட பாணியில் ஒரு தத்துவத்தை சொல்லி அனுப்புகிறார்கள்.

படத்தில் காமெடி முதல் பாதியை விட இரண்டாம் பாதியிலேயே நன்றாக எடுபட்டு இருக்கிறது. முதல் பாதி முடிவதற்குள் லேசாக அலுப்பு தட்டுகிறது. இரண்டாம் பாதி போனதே தெரியவில்லை. பட்டென்று க்ளைமாக்ஸ்க்கு வந்து படமும் முடிந்து போகிறது. 


சந்தானம் நாயகனாகி விட்டதால் பழைய கோக்குமாக்குத்தனங்களை விட்டு விட்டு கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். நடனமாடத் தொடங்கியிருக்கிறார். ஒரு சோலோ பைட்டு வேறு இருக்கிறது. ஒரு பாடலுக்கு என்டிஆர் ஸ்டைலில் பீச்சில் அசத்துகிறார். 

இந்த நடிப்பு, நடனம் எல்லாம் இந்த படத்திற்கு ஓகே. ஆனால் நாயகனாக தொடர வேண்டுமானால் இன்னும் மெருகேற வேண்டும். அழுத்தமுள்ள கதைகளில் அவ்வப்போது நடிக்க வேண்டும். வெறும் டைம் பாஸ் மூவியை வைத்து கரையேற முடியாது பாஸ்.

ஆஷ்னா ஜவேரியை விட அகிலா கிஷோர் பார்ப்பதற்கு அழகாகவும் ப்ரெஷ்ஷாகவும் இருக்கிறார். ஆஷ்னா முகம் பார்க்க சற்று தொங்கலாக இருக்கிறது. ஆனால் அவருக்கு தான் படத்தில் அதிக காட்சிகள் இருக்கிறது. அகிலா கிஷோர் ஒரு காட்சியை தவிர மற்ற இடங்களில் வந்து போகிறார். 


படத்தில் சந்தானத்திற்கு இணையாக அசத்தியிருப்பவர் தம்பி ராமையா. சந்தானத்திற்கு கல்யாணம் நடந்த பின்னே தான் தனக்கு பரம்பரை வீடு கிடைக்கும் என்பதற்காக அவர் விரைவாக கல்யாணத்தை நடத்த செய்யும் கலாட்டாக்கள் தான் படத்தை கூடுதல் சுவாரஸ்யமாக்குகிறது. 

குலதெய்வம் கோவிலில் சாமி வந்தது போல் தம்பி ராமையா ஆட்டம் போட அந்த நேரத்திற்கு அங்கு வரும் சிங்கமுத்து ஆறடி அலகை சாமி வந்த தம்பி ராமைய்யாவின் வாயில் குத்த நடக்கும் களேபரங்களில் சிரித்து சிரித்து வயித்து வலியே வந்து விடுகிறது.

திடீரென க்ளைமாக்ஸில் தம்பி ராமைய்யாவின் ட்விஸ்ட்டும் அதனால் நுழையும் வித்யூ ராமனும் பலே திருப்பங்கள். 

காக்கா முட்டை தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு படி மேலே உயர்த்தி கலக்கிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இந்த படத்தை நல்லாயிருக்கு என்று சொல்வது நல்லாயிருக்காது.

நன்றாக சிரிக்க வைத்து வெளியே வந்த பின் ஏண்டா சிரித்தோம் என்று யோசிக்க வைக்கும் ஜஸ்ட் டைம் பாஸ் படமே இந்த இனிமே இப்படித்தான்.

ஆரூர் மூனா

Tuesday 2 June 2015

பயன்பாட்டில் இருந்த இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ் இன்ஜின் - பழசு 2013

இந்தியா முழுவதும் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் ப்ராட்கேஜாக மாற்றப்பட்டு வருகின்றன. கிட்டத்த அனைத்து பாதைகளும் மாற்றப்பட்டு விட்ட நிலையில் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ் ரயில்கள் சென்று கொண்டிருந்தன.
கடந்த மாதம் அவையும் நிறுத்தப்பட்டு ப்ராட்கேஜாக மாற்ற வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதுநாள் வரை ஒடிக் கொண்டு இருந்த ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்கள் மற்றொரு ரயிலில் ஏற்றப்பட்டு திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. 

இந்தியாவின் கட்டேக்கடேசியான உபயோகத்தில் இருந்த மீட்டர்கேஜ் இன்ஜின்கள் இவை தான். திருவாரூரில் இருந்த தம்பி தியாகேசன் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த இன்ஜின்களை போட்டோ எடுத்து அனுப்பினார். அனுப்பிய தியாகேசனுக்கு நன்றிகள் பல. 
---
 
நீங்களும் பார்த்து வழியனுப்பி வையுங்கள். இனி மீட்டர்கேஜ் இன்ஜினை எங்கும் பார்க்க முடியாது.

ஆரூர் மூனா

புத்தக கண்காட்சி - அறியாத தகவல்கள் - அரிய புகைப்படங்கள் - பழசு 2013

இந்துவா பொறந்தவன் கோயிலுக்கு போகலைனா தெய்வகுத்தம்னு சொல்றது போல பதிவெழுதுறவங்கன்னா புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவா போடனும். கூடவே வாங்கின புத்தகங்களின் லிஸ்ட்டையும் விலையுடன் பகிரனும். இல்லைனா பிரபல(?) பதிவர்னு ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.


ஆனா எல்லாப் பதிவர்களின் புத்தக கண்காட்சி பதிவையும் படித்துப் பார்த்தால் ஒரே டெம்ப்ளேட் தான். நானும் அதே போல் எழுவில்லையென்றால் ஆடையில்லாதவன் ஊர்ல கோவணம் கட்டுனவன் பைத்தியக்காரன்கிற மாதிரி என்னையும் ஒதுக்கிடுவாங்களோன்னு பயத்துல தான் இந்த பதிவு.

என்னடா தலைப்புல என்னன்னவோ விஷயங்கள் இருக்கிற மாதிரி இருக்கு, ஆனா பதிவுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லையேன்னு நினைக்கிறவங்க புத்திசாலிகள், வருங்காலத்தில் பிலாசபி பிரபாகரன் அளவுக்கு வம்பு வளர்க்கும் பதிவரா வளர வாய்ப்பிருக்கிறது. இப்பதிவின் தலைப்பு உங்களுக்கு வீடுதிரும்பல் ப்ளாக்கை நினைவுபடுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.

தமிழ் டைப்பிங், பதிவை படிக்கிறது, பதிவை சுவைபட எழுதுவது போன்ற விஷயமெல்லாம் இரண்டு வருடத்திற்குள் தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு படிப்பது என்பது சிறுவயதில் இருந்தே ஊறிய விஷயம். எனக்கு தெரிந்து 2002ம் ஆண்டிலிருந்தே புத்தக கண்காட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அப்பொழுது காயிதே மில்லத் கல்லூரியில் நடந்து கொண்டு இருந்தது.

அப்பொதெல்லாம் எனக்கு கண்காட்சிக்கு வருபவர்களில் நிறைய பேரை தெரியாது. ஆனால் இன்றோ ஒரு வரிசைக்கு ஒருவர் தெரிந்தவராக மாட்டுகிறார்கள். அதிலும் முக்கால்வாசி பேர் பதிவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.

இதற்கு முன்பு நடந்த கண்காட்சிகளில் எல்லாம் என்னுடைய அக்காமார்கள், மற்றும் தமிழாசிரியர்கள் எனக்கு நல்ல புத்தகம் என்று அறிமுகப்படுத்திய புத்தகங்களையெல்லாம் வாங்கி விட்டேன், பிறகு சிறந்த நாவலாசிரியர்கள் என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கியாகி விட்டது.

இந்த வருடம் வாங்குவதற்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. விமலாதித்த மாமல்லன் எழுதிய சின்மயி விவகாரம் மற்றும் நண்பர் பாலகணேஷின் சரிதாயணம் மட்டும் வாங்கினால் போதும் பர்சை அவிழ்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கண்காட்சி உள்ளே நுழைந்ததும் காஞ்சமாடு கம்புல புகுந்தது போல நிறையவே புத்தகங்களை வாங்கி விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் கவர்ச்சிகரமான தலைப்பு மட்டுமே.

கூடுதலாக இரண்டு சாப்ட்வேர் தமிழ்வழிக் கல்வி சிடிக்களை வாங்கினேன். போட்டோஷாப் மற்றும் வெப்டிசைனிங் தான் அவை. நேற்று போட்டோஷாப் சிடியை போட்டுப் பார்த்தேன், ஓரளவுக்கு புரிந்தது. இதை வைத்து இரண்டிலும் புகுந்து பார்த்து விட வேண்டியது தான்.

படித்து பார்த்தால் தான் இந்த புத்தகங்களின் தரம் புரியும். மீனாட்சி புத்தக நிலையத்தில் புகுந்து சுஜாதாவின் புத்தகங்களை கன்னாபின்னாவென்று வாங்கி விட்டேன், வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்த்தால் தான் தெரிகறது. ஏற்கனவே என்னிடம் இருந்த பல சுஜாதாவின் தொகுப்புகளில் இந்த நாவல்கள் இருக்கிறது என்று. எல்லாம் படித்த நாவல்கள்.

ராஜூ முருகனின் வட்டியும் முதலும் எனக்கு மிகவும் பிடித்த தொடராக இருந்தாலும் ஏற்கனவே எல்லா பகுதியையும் படித்து விட்டதால் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அடுத்த முறை கண்காட்சிக்கு செல்லும் போது படித்ததெல்லாம் மறந்திருக்கும், அப்பொழுது வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு நாட்கள் பதிவுலக நண்பர்களோடு அளவளாவி கூத்தடித்தது நல்ல அனுபவம். நட்புகளை மேலும் நெருக்கமாக்கியது. நேற்று நானும் மெட்ராஸ் பவன் சிவாவும் சென்று பார்த்தால் ஒரு பதிவரையும் காணவில்லை. போரடிக்கவே அங்கிருந்து காமராஜர் அரங்கிற்கு கிரேசி மோகனின் கிரேசி கிஷ்கிந்தா நாடகத்திற்கு ஜூட் விட்டோம்.

பைக்கை எடுத்து வெளியில் வருவதே பெரும்பாடாகி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் போக்குவரத்து காவலர்கள் கார்களை உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். எப்படியும் ஆயிரம் கார்களுக்கு மேல் உள்ளே வரமுடியாமல் திரும்பி விட்டனர்.

நிர்வாகத்தினர் அடுத்த முறையாவது ஒழுங்கான இடத்தை தேர்வு செய்தால் வரும் மக்கள் நிம்மதியாக வந்து புத்தகங்களை பார்த்து வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். போதும் ரொம்பவே பேசியாச்சு.

இனி பதிவர் மரபுப்படி நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட்டை கொடுக்கிறேன். அதில் சிறந்த புத்தங்களாக நான் நினைப்பதின் விமர்சனங்களை பகிர்கிறேன்.

தூக்கு கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுச்சாமி - விலை ரூ.200/-

மரப்பசு - தி.ஜானகிராமன் - விலை ரூ.100/-

வீடு கனவு இல்லத்துக்கான கைடு - தாஸ் - விலை ரூ.125/-

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன் - விலை ரூ.120/-

9/11 மாபெரும் சதியின் பின்னணி - பா.ராகவன் - விலை ரூ.150/-

தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - விலை ரூ.250/-

வெளிச்சத்தின் நிறம் கருப்பு  மர்மங்களின் சரித்திரம் - முகில் - விலை ரூ.200/-

மோஸாட் இஸ்ரேலிய உளவுத்துறை - என்.சொக்கன் - விலை ரூ.110/-

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் - எஸ்.ராமக்கிருஷ்ணன் - விலை ரூ.225/-

அரவாணிகள் - மகாராசன் - விலை ரூ.210/-

சம்பிரதாயங்கள் சரியா - மஞ்சை.வசந்தன் - விலை ரூ.40/-

உடலினை உறுதி செய் - சி.சைலேந்திரபாபு - விலை ரூ.120/-

தோல் - டி.செல்வராஜ் - விலை ரூ.400/-

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - பா.ராகவன் - விலை ரூ.110/-

அமெரிக்க உளவுத்துறை FBI ரகசியங்கள் - என்.சொக்கன் - விலை ரூ.110/-

ISI நிழல் அரசின் நிஜ முகம் - பா.ராகவன் - விலை ரூ.120/-

கொலம்பிய போதை மாபியா - பா.ராகவன் - விலை ரூ.140/-

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - ராமன் ராஜா - விலை ரூ.220/-

தரணிகண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர் - எ.சங்கர்ராவ் - விலை ரூ.150/-

பாட்ஷாவும் நானும் சுரேஷ்கிருஷ்ணா - விலை - ரூ.125/-

போட்டோஷாப் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

வெப்டிசைனிங் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

21ம் விளிம்பு - சுஜாதா - விலை ரூ.43/-

உயிராசை - சுஜாதா - விலை ரூ.22/-

24ரூபாய் தீவு - சுஜாதா - விலை ரூ.24/-

60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா - விலை ரூ.24/-

கமிஷனருக்கு கடிதம் - சுஜாதா - விலை ரூ.19/-

வடிவங்கள் - சுஜாதா - விலை ரூ.22/-

விபரீதக் கோட்பாடு - சுஜாதா - விலை ரூ.20/-

நீர்க்குமிழிகள் - சுஜாதா - விலை ரூ.11/-

ஓடாதே சுஜாதா - விலை - ரூ.24/-

சரிதாயணம் - பாலகணேஷ் - விலை ரூ.60/-

நோயினை கொண்டாடுவோம் - நம்மாழ்வார் - விலை ரூ.15/-

கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார் - விலை ரூ.10/-

இது தான் மகாமகம் - தந்தை பெரியார் - விலை ரூ.3/-

புரோகிதர் ஆட்சி - கந்தையா பிள்ளை - விலை ரூ.12/-

யார் இந்த இராமன்? - அறிவரசன் - விலை ரூ.12/-

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள் - திக வெளியீடு - விலை ரூ.12/-

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் - விலை ரூ.15/-

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - திக வெளியீடு - விலை ரூ.10/-

சோதிட ஆராய்ச்சி - தந்தை பெரியார் - விலை ரூ.15/-

கடவளர் கதைகள் - சாமி - விலை ரூ.12/-

செயின்ட் கிட்ஸ் வழக்கும் பொது வாழ்க்கையும் - கி.வீரமணி - விலை ரூ.10/-

பலிபீடம் நோக்கி - கலைஞர் மு.கருணாநிதி -விலை ரூ.8/-

திராவிடர் ஆரியர் உண்மை - தந்தை பெரியார் - விலை ரூ.5/-

ஆர்.எஸ்.எஸ் பற்றி - கி.வீரமணி - விலை ரூ.8/-

பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள் - திக வெளியீடு - விலை ரூ.20/-

திருக்குர்ஆன் - திருக்குர்ஆன் அறக்கட்டளை - இலவசம்

அம்மா நீ வருவாயா - கவியாழி கண்ணதாசன் - இலவசம்


----------------------------

ஆரூர் மூனா

பஞ்சேந்திரியா - பழசு ஜனவரி 2013

மாட்டுப் பொங்கல் அன்னைக்கு மறுபடியும் கண்ணா லட்டு தின்ன ஆசையா இரண்டாவது முறையாக இரவுக் காட்சிக்கு சென்றேன். தியேட்டரில் எதிர்பார்த்ததை விட அளவுக்கு அதிகமான கூட்டம் அலைமோதியது. இன்னும் சொல்லப் போனால் ஹவுஸ்புல்.

கடந்த பதினைந்து வருடங்களாக திருவாரூர் தைலம்மை திரையரங்கம் அரங்கு நிறைந்து நான் பார்த்ததே இல்லை. ரஜினி, கமல் படங்கள் கூட முதல் இரண்டு வரிசை காலியாகத்தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்திற்கு அமர நாற்காலியின்றி நின்று பார்த்தவர்கள் பலர்.

எனக்கு தெரிந்து தைலம்மையில் தேவர் மகன் படத்திற்கு தான் அரங்கு நிறைந்த காட்சி என்று போர்டு மாட்டப்பட்டிருந்ததை கடைசியாக கண்டேன். சோழாவில் படையப்பா. அதன் பிறகு எந்த படத்திற்கும் கூட்டம் என்பதே இல்லாமல் போயிருந்தது. இருந்த திரையரங்கங்களும் ஒவ்வொன்ற மூடும் நிலைக்கு சென்று விட்டிருந்தன. செங்கம், பேபி, கருணாநிதி ஆகிய திரையரங்கள் மூடப்பட்டு விட்டன.

எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விட்டது கண்ணா லட்டு தின்ன ஆசையா. மக்கள் குடும்பம் குடும்பமாக படத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் படத்தில் விழுந்து விழுந்து சிரித்து பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த பிறகு ஏன் சிரித்தோம் என்று யோசிக்கிறோம் என்பது வேறு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா - தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குளில் கொண்டாடுகிறார்கள்.

------------------------------------------

அறிவாளி பெத்த மவனே


------------------------------------------

இந்த பொங்கல் விடுமுறைக்கு ஊரிலிருந்து கிளம்பும் தேதியை முடிவு செய்யவில்லை அதனால் முன்னெற்பாடாக முன்பதிவு செய்யாமல் கடைசி தினத்தன்று டிக்கெட் எடுக்க சென்றால் எல்லா ஆம்னி பேருந்துகளும் புல்லாகி விட்டது.

அரசுப் பேருந்தில் ஏசி, டீலக்ஸ் எல்லாம் இருக்கை நிறைந்து விட்டதால் சாதாரண பேருந்தில் பயணித்தேன். பேருந்து புல் ஸ்டாண்டிங், காலுக்கருகில் ஓருவன் அமர்ந்து வந்தான். காலை அசைக்க முடியவில்லை. சுத்தமாக தூக்கமும் இல்லை.

அதிகாலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக பேருந்துகள் வந்ததால் மற்ற பேருந்துகளை மதுரவாயிலிலேயே நிப்பாட்டி விட்டார்கள். ஒரு கிலோமீட்டர் நடந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால் மாநகரபேருந்தும் டிராபிக் ஜாம்மில் மாட்டிவிட்டது.

பிறகு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வர 8 மணியாகி விட்டது. தூக்கமுமில்லாமல் வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு நேரே தொழிற்சாலைக்கு கிளம்பினேன். இப்ப கண்ணெல்லாம் எரியுது. ஆனால் ஒரு சந்தோசம் என்னவென்றால் இதுபோல் சிரமப்பட்டு ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆனது. வேலைக்கு வந்த பிறகு காரிலோ அல்லது ரயிலிலோ பயணிப்பதே வழக்கமாக இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது அரசுப்பேருந்தில் செல்வதே வழக்கம். அது போல் இன்று வந்தது பழைய நினைவுகளை கிளறி விட்டது.

இனிமேலாவது இதுபோன்ற பண்டிகை காலங்களில் முன்னேற்பாடாக தோராயமாக இரண்டு மூன்று நாட்களுக்கு ரயிலில் டிக்கெட் போட்டு விடுவது. பிறகு பயண தேதி முடிவானதும் மற்ற டிக்கெட்டுகளை கேன்சல் செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன். பார்ப்போம்.

-----------------------------------------------

ஆயிரம் காலத்து பயிரான கல்யாணம்

--------------------------------------------

நேற்று திருவாரூரில் ஆருரான் பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது. கடந்த முப்பது வருடங்களாக திருவாரூரில் நான்கு வீதியை சுற்றுவது போட்டியாக வைத்து ஒட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், ரிக்ஷா ரேஸ், ரேக்ளா ரேஸ், 50cc மொபெட் ரேஸ், கமலாலயத்தில் நீச்சல் போட்டி நடைபெறுவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் திருவாரூரினை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் வண்டிக்கட்டி வந்து நான்கு வீதிகளிலும் நின்று விளையாட்டுப் போட்டியை வேடிக்கைப் பார்ப்பார்கள். எங்களுக்கும் மிகவும் சந்தோசத்தை கொடுக்கும் விழா அது.

நான் 2001க்கு பிறகு ஊருக்கு செல்வதை மிகவும் குறைத்துக் கொண்டதால் இந்த போட்டியை தவறவிட்டுக் கொண்டே இருந்தேன். இந்த வருடம் தான் மீண்டும் காண வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் குழாமை சேர்த்துக் கொண்டு தெற்கு வீதி முனையில் நின்றுக் கொண்டு பயங்கர கலாட்டா செய்து கொண்டு போட்டியை ரசித்துக் கொண்டு அவ்வப்போது சைட் அடித்துக் கொண்டு பார்த்தேன்.

முன்னைப் போல் இந்த போட்டிக்கு கூட்டம் வருவது குறைந்திருந்தது நன்றாகவே தெரிந்தது. இது எங்கள் ஊரின் பெருமை. இனிமேல் எல்லா வருடமும் கலந்து கொண்டு போட்டியை என்ஜாய் செய்வேன் என்று முடிவெடுத்து விட்டேன்.

ஆரூர் மூனா

கண்ணா லட்டு தின்ன ஆசையா - பழசு 2013

ம்





முன்பதிவு செய்யாமல் பயணித்து பலத்த சிரமங்களுக்கிடையே நள்ளிரவு 2 மணிக்கு ஊருக்கு வந்து சேர்ந்தேன். அந்த நேரத்திலும் கடமை தவறாமல் நண்பர்களுக்கு போன் போட்டு காலையில் சினிமாவுக்கு வாங்கடா என்று கூப்பிட்டால் அவனவன் கெட்ட வார்த்தையாலேயே திட்டுகிறான். எல்லாத்தையும் உதிர்த்து விட்டு கிடைத்து நண்பனை பிடித்துக் கொண்டு திருவாரூர் தைலம்மை திரையரங்கிற்கு சென்றேன்.
எங்கள் ஊரில் எல்லாம் முன்னணி ஹரோக்கள் படமே காத்து வாங்கும் காலம் இது. இதில் எங்க கூட்டம் இருக்கப் போகிறது என்று யோசித்து சென்றால் கூட்டம் அலைமோதியது. படம் தொடங்கிய பிறகு தான் தெரிகிறது. எல்லாம் பவர் ஸ்டார் ரசிகர்கள் என.
படத்தில் பெயர் போடும் போதே அறிவித்து விட்டார்கள், இது இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக் என. ஆனால் இத்தனை நாட்களாக என்ன வெங்காயத்துக்கு இதனை மறைத்து வந்தார்கள் என்று தான் புரியவில்லை. பாடல் வெளியீட்டு விழாவில் சந்தானத்தின் பேச்சைக் கேட்டால் கதையே இல்லாமல் காமெடி மட்டுமே உள்ள படம் என்றார். என்ன எழவோ போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.
சேது, சந்தானம், பவர் ஸ்டார் மூவரும் நண்பர்கள். புதிதாக குடிவரும் விசாகாவை மூவரும் காதலிக்கின்றனர். இவர்களில் விசாகா யாரை காதலித்து கரம் பிடிக்கிறார் என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கின்றனர்.
எனக்கு கொஞ்சம் கடும் வேலை மற்றும் பணநெருக்கடி. இதன் காரணமாக நான் பயங்கர அப்செட்டில் இருந்தேன். கூடுதலாக நேற்று ஆரம்பிக்க இருந்த ஒரு பிஸினஸ் சற்றே டொய்ங் என நொண்டி போட்டு போனது. கூடுதலாக அலெக்ஸ் பாண்டியன் பார்த்த கடுப்பு. அதனால் இரண்டு நாட்களாக கொஞ்சம் உம் என்றே இருந்தேன்.
ஆனால் படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் எல்லாம் பறந்து போய் வாய் விட்டு கண்ணில் நீர் வர சிரித்தேன். படம் முடியும் வரை டென்சனெல்லாம் மறந்து போய் விட்டது. கண்டிப்பாக தெரியும் படம் பார்த்து சிரித்து முடித்த பின் ஏண்டா சிரித்தோம் என்று நினைக்கத் தோன்றும் என்று. ஆனால் படம் முடியும் வரை நமது மூளையை கழட்டி வைத்து விட்டு சிரிக்கிறோம் பாருங்கள் அங்கு நிற்கிறது படத்தின் வெற்றி.
படத்தின் பெயர் போடும் போதே சந்தானத்தை விட பவருக்குத்தான் கூடுதல் கைதட்டல் கிடைத்தது. அதனை கடைசி வரை மெயிண்டெயின் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் சிரிக்க முடியாமல் வயிற்றை வலிக்க ஆரம்பித்தது. ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டூ பவர் ஸ்டார்.
சந்தானத்தின் கவுண்ட்டர் காமெடிகள் வழக்கம் போல் சிரிக்க வைக்கின்றன. விடிவி கணேஷை சுடுகாட்டில் வைத்து அடிக்கும் காட்சியில் பழைய சந்தானத்தை பார்த்தேன். அலெக்ஸ் பாண்டியனால் ஏற்பட்ட வருத்தம் குறைந்து மீண்டும் சந்தானத்தை பிடிக்க ஆரம்பித்தது.
டல் திவ்யா விசாகா பிடிச்சிருக்கு படத்தில் நடித்த போது நல்ல ஹோம்லி நடிகை என்று பெயரெடுத்தார், அதன் பிறகு வாய்ப்பில்லாததற்கும் அது தான் காரணம் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் அதையெல்லாம் பொய்யாக்கும் வண்ணம் பாடலில் உரித்த கோழியாக வந்து செல்கிறார். நல்ல வடிவமைப்பு.
கரகர கணேஷ் பாட முடியாமல் தவித்து பிறகு வாய்ஸ் போனதற்கான காரணம் சொல்லும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. அதே போல் டிபிக்கல் கொங்கு பாஷையில் சரளா வழக்கம் போல் அசத்தி செல்கிறார். 
பட்டிமன்றம் ராஜா, வனிதா, சிவசங்கர் ஆகியோர் மிகக் குறைந்த அளவுள்ள கதாபாத்திரத்தில் வந்து செல்கின்றனர். தேவதர்ஷினி ஒட்டாத அய்யர் ஆத்து பாஷையில் பேசி செல்கிறார்.
எல்லாவற்றையும் மீறி எல்லைகளை மீறி இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கும் ரீபீட்டட் ஆடியன்ஸ்க்கும் காரணம் என்னவாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள். சந்தேமில்லாமல் நம்ம பவர் ஸ்டார் தான்.
படம் முழுக்க அவருக்கு பேக்டிராப்பில் ப்ரியா என்ற பெண் அவருக்கு போனில் செய்து காதலை சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் கடைசியில் ஹீரோயின் அவருக்கு இல்லை என்று தெரிந்ததும் ப்ரியாவுக்கு காதலை சொல்ல கடைசியில் அந்த ப்ரியா இவருக்கு செய்தது ராங் கால் என தெரிய வர சிரித்து வலி தாங்காமல் வயித்தை பிடித்துக் கொண்டேன்.
சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நட்புக்காக வந்து செல்கின்றனர். சுமாரான இந்த படத்தை பிரம்மாண்டமான வெற்றிக்கு கொண்டு செல்லப்போவது சந்தேகமில்லாமல் அலெக்ஸ் பாண்டியனின் தோல்வி தான் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.
மீண்டும் இந்த படத்தை பார்த்து சிரிப்பேன் என்பதை சந்தேகமில்லாமல் சொல்லும்
ஆரூர் மூனா

Monday 1 June 2015

பஞ்சேந்திரியா - பழசு 2013

மறுபடி மறுபடி தெலுகில் ஹீரோக்களின் சலம்பலை பார்ப்பது எனக்கு விதிக்கப்பட்ட சாபமோ தெரியவில்லை. நேற்று முன்தினம் கூட அப்படி ஒரு கொடுமை என் முன்னாடி ஜிங்கு ஜிக்குனு ஆடுச்சி.

அந்த படத்தின் பெயர் யுத்தபூமி, கதாநாயகன் சிரஞ்சீவி, கதாநாயகி விஜயசாந்தி, வில்லன் மோகன்பாபு. கிளைமாக்ஸ் மட்டும் தான் பார்த்தேன். கடுமையான சண்டையின் கடைசியில் எல்லா வில்லன்களையும் ஹீரோ வீழ்த்திய பிறகு மெயின் வில்லனான மோகன்பாபுவை கொல்லத்துரத்த அவரோ ஹெலிகாப்டரில் ஏறி தப்பிக்கிறார்.

இதனை கண்டு பொறுக்காத ஹீரோ அப்படியே ஓடிச்சென்று யாரோ ஒரு அப்பாவி விவசாயி உழுதுக் கொண்டு இருக்க அவரிடம் இருந்து ஏர்கலப்பையை புடுங்கி சென்று ரெண்டு சுத்து சுத்தி மேலே வீச அது பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ரெக்கையின் நடுவில் விழ ஹெலிகாப்டர் வெடித்து சிதறுகிறது.

அதப்பார்த்துக் கொண்டிருந்த நான் அப்படியே ஷாக்காயிட்டேன். நல்ல வேளை இந்த படம்லாம் அந்த காலத்துல தமிழ்ல வரல. நாம அப்பவே பார்த்திருந்தம்னாக்கா தறிகெட்டு திரிஞ்சிருப்போம். நல்லவேளை நம்ம ரசனை உயர்ந்து இருப்பதனால் தப்பித்தோம். இன்னொரு முறை அது போன்ற படம் என் கண்ணுல மாட்டிச்சி கிறுக்கு புடிச்சி திரிய வேண்டியது தான்.

--------------------------------------------------------
மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், மாயமோகினி, இந்தியில் ஜோக்கர், அய்யா படங்களை சமீபத்தில் பார்த்தேன். ஒவ்வொரு படங்களையும் சிலாகித்து ஒவ்வொரு பதிவெழுதலாம், அவ்வளவு அருமை.

உஸ்தாத் ஹோட்டல் கோழிக்கோடு முஸ்லீம்களின் வாழ்க்கை முறையை பேக்டிராப்பாக வைத்து நடக்கிறது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பே படத்தின் மிளகுரசம் ச்சே.. சாராம்சம்.

வாரிசுநடிகர்கள் என்றால் முதல் படத்திலேயே நூறு பேரை அடித்து வீழ்த்தி அறிமுகம் கொடுக்கும் இந்த காலத்தில் எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் அசத்தியிருக்கிறார் துல்ஹர் சல்மான். எனக்கு முதலில் அவரின் நடிப்பில் பெரிய ஈர்ப்பில்லாமல் இருந்து நேரம் செல்லச் செல்ல எனக்குள் அட்டகாசமாக சாய்வு நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறார். இனி எனக்கு மலையாளத்தில் அபிமான நடிகர் துல்ஹர் தான்.

தமிழகத்தில் இருக்கும் நமக்கு தெரியாத நாரயணன் கிருஷ்ணன் கேரக்டரை ஜெயப்பிரகாஷ் கண்முன்னே நிறுத்துகிறார். அவருக்கு இந்த ரோட்டோரம் இருக்கும் வயதானவர்களுக்கு உணவு கொடுக்க துவங்கிய காரணத்தை சொன்ன போது நான் நெகிழ்ந்து விட்டேன்.

நீங்களும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

--------------------------------------------------------
மாயமோகினி படம் ஆரம்பித்ததிலிருந்து பாபுராஜூம் பிஜுமேனனும் மட்டுமே வந்து கொண்டிருக்க திலீப் கெஸ்ட் ரோல் மட்டும் தானோ என்று பயந்து விட்டேன், ஆனால் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பார்க்காத கதாபாத்திரமாக அறிமுகமாகும் போது வெடித்து சிரித்தேன்.

ஒரு பெண்ணை வைத்து எந்தெந்த போஸ்களை எடுக்கக்கூடாதோ அத்தனை போஸ்களையும் திலீப்பை வைத்து எடுத்து விட்டனர். ஆனால் ஒன்னு குடும்பம் சகிதம் படம் பார்க்க சிரமம் தான், பல இடங்களில் நெளிய வேண்டியதாகி விட்டது.

அதை தாண்டி சுவாரஸ்மான படம் தான் மாயமோகினி. ஒரு காட்சியில் பாபுராஜுக்கு முத்தம் கொடுப்பார் பாருங்கள். அதிர்ந்து விட்டேன். டேய் இது U சர்டிபிகேட் படம் என்று கூவ வேண்டியதாகி விட்டது.

பிகினி உடையில் ஒரு ஆட்டம், அழகிய லைலா பாடலில் ரம்பா பாவாடை பறக்க ஆட்டம் போடுவாரே அப்படி ஒரு ஆட்டம், புடவை கட்டியிருக்கும் போது அவசரமாக ஒன்னுக்கு வந்து விட மரத்தடி பின்பு ஓதுங்கும் காட்சி என அனைத்துமே காமெடியின் உச்சம். வழக்கம் போல சினிமா கிளைமாக்ஸ் தான். ஆனால் இரண்டு மணிநேரம் பார்த்து ரசிக்க சூப்பர் டைம்பாஸ் படம். மொழி புரியாவிட்டாலும் பார்த்து ரசியுங்கள்.

-------------------------------------------------------
ஜோக்கர் படம் துவங்கி அரைமணிநேரத்திலேயே படம் மொக்கை என்று தெரிந்து விட்டது. சிடி வாங்கி விட்டோமே என்ற காரணத்தினால் பார்க்க வேண்டியதாகி விட்டது. மூன்று மாநில எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தை அனைத்து மாநிலங்களும் புறக்கணிக்க அந்த கிராமத்தில் இருந்து படித்து அமெரிக்காவுக்கு வேலைக்கு போன அக்சய் குமார் தனது கிராமத்திற்கு விடிவுகாலம் வர விண்கலங்கள் கிராமத்தில் இறங்குவதாக கதையடித்து ஊரை நம்ப வைக்கிறார்.

அதன் பரபரப்பு காரணமாக உலக மீடியாக்களின் கவனம் அந்த கிராமத்தினுள் விழ மூன்று மாநில அரசுத்துறைகளும் விழுந்தடித்து ஊரை கவனிக்கிறது. அதில் ஒரு இடைஞ்சல் வர அதனை சமாளித்து எப்படி வெற்றி காண்கிறார் என்பதே படத்தின் கதை.

சுமாரான படம் தான்.


ஆரூர் மூனா

பழசு 2013 - பஞ்சேந்திரியா - வாட்டர் பாட்டில் ஊழலும் மலையாளப்படமும்

அலெக்ஸ் பாண்டியன் என்ற உலக சினிமாவை பார்த்ததனால் பிடித்த பித்து இப்போது தான் தெளிந்தது. மணியாகி விட்டது, இரண்டு மணிக்கு திருவாரூர் செல்ல பேருந்தை கோயம்பேட்டில் இருந்து பிடித்தாக வேண்டும். இது போன்ற பண்டிகைள நாட்களில் எப்பொழுதும் முன்பதிவு செய்தே பயணம் மேற்கொண்டிருந்த நான் இந்த முறை, என்று கிளம்புவது என்று குழப்பத்தினாலும், ரயிலா பேருந்தா என்ற குழப்பத்தினாலும், அலெக்ஸ் பாண்டியன் பார்த்ததால் ஏற்பட்ட குழப்பத்தினாலும் முன்பதிவு செய்யவில்லை.

இன்று இரவு புறப்பட்டால் பேருந்து கிடைக்காமல் கூட போகலாம், அல்லது பேருந்தில் நின்று கொண்டே பயணிக்க வேண்டியிருக்கும். அதனால் ஒரு சேப்டிக்கு பகல் பயணமாக கிளம்புகிறேன். மீண்டும் பொங்கலுக்கு பிறகே சந்திப்பேன் என்று எண்ணுகிறேன். ஒருவேளை நாளை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறேன். இல்லையென்றால் அடுத்த வாரம் புதனுக்கு பிறகு சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------
நக்கீரன் பிச்சாவரம் காட்டில்
-------------------------------------------------------------

சிஐடியு யூனியனில் ஒரு விஷயம் அரசல் புரசலாக தெரியவந்தது. சென்னையில் சென்ட்ரல் மற்றும் எக்மோரில் மட்டும் ஆண்டுக்கு 300 டன் காலி வாட்டர் பாட்டில்கள் குப்பையில் வந்து சேருகின்றனவாம். இதற்கென இரண்டு உயரதிகாரிளை கொண்ட குழு அமைத்து அந்த காலி பாட்டிகளை சேகரிக்கின்றனர்.

அப்படி சேகரித்த பாட்டில்களை ரெட்ஹில்ஸில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கிலோ ரூ.35/- வுக்கு விற்கின்றனர். இதில் முறைகேடாக ரூ.1,05,00,000/- கடந்த மூன்று வருடத்திற்குள் ஸ்வாகா செய்திருக்கின்றனர்.

கண்ணுக்கு தெரிந்தே இவ்வளவு கொள்ளை. இதை கேட்பதற்கு யாருமில்லை. கம்யூனிஸ்ட்டுகள் பகிரங்கமாக நோட்டீஸ் போட்டு ஒப்பாரி வைத்தும் இதனை கவனிக்கவோ விசாரணை செய்யவோ யாருமில்லை. ஜனநாயக தேசமடா.
----------------------------------------------------------------

இந்த படுக்கைக்கு சொந்தக்காரன் நக்கீரனின் நண்பனாக இருப்பானோ

--------------------------------------------------------------

நீண்ட நாட்களாக தட்டத்தின் மறயத்து படம் பார்க்காமல் இருந்தேன். பர்மா பஜாரில் போய் எப்போது கேட்டாலும் 5.1 டிவிடி வரவில்லை என்றே சொல்லிக் கொண்டு இருந்தார்கள். கடந்த வாரம் போய் கேட்ட போது கிடைத்தது.

படம் பார்த்ததும் நெகிழ்ந்து போய் விட்டேன். என்னா மேக்கிங். என்னா புரொபசனலிசம். கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம் பெண்ணுடனாக காதல், அதன் எதிர்ப்பு என இந்த படத்தை சீரியஸாக கொண்டு செல்ல வாய்ப்புகள் இருந்தும் கடைசி வரை மெல்லிய நகைச்சுவையுடனே சற்று கூட போரடிக்காமல் கொண்டு சென்றதே மிகப் பெரிய ப்ளஸ்.

இந்த சுராஜ், பேரரசு, தரணி போன்ற பத்துக்கும் மேற்பட்ட இயக்குனர்களை கேரளாவுக்கு தள்ளி விட்டு இந்த வினித்தை தமிழுக்கு கொண்டு வாங்கப்பா. அப்பவாவது இந்த தமிழ் சினிமா உருப்படுதா பார்ப்போம். விமர்சனத்தை ஊருக்கு போய் விட்டு வந்து எழுதுகிறேன்.

 ஆரூர் மூனா

அலெக்ஸ் பாண்டியன் - பழசு 2013

எப்பொழுதுமே எனக்கு வெள்ளிக்கிழமையானால் ஏதாவது வேலை வந்து சினிமாவுக்கு செல்வதை தாமதப்படுத்தி விடும். ஆனால் இன்று காலை காட்சிக்கு முன்பே வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டேன். ஆனால் படம் 08.30 மணி காட்சியே பார்த்து விட்டு இப்பொழுது வரை எனக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை என்றால் எவ்வளவு கடுப்பில் இருந்திருப்பேன் என்று பாருங்கள்.

ஆனாலும் நாளை பொங்கல் தினத்தை கொண்டாட திருவாரூர் செல்கிறேன் எனவே இன்னும் ஒரு வாரத்திற்கு பதிவு போட முடியாது என்பதனால் வேறு வழியின்றி மனசை தேற்றிக் கொண்டு பதிவிடுகிறேன்.

இந்த வெளங்காவெட்டி படத்தின் கதை என்னவென்றால் ஒரு மாநிலத்தின் முதல்வர் மகளான அனுஷ்காவை காசுக்காக கார்த்தி கடத்தி விடுகிறார். கடத்திய பிறகு அனுஷ்காவுக்கு கார்த்தி மட்டுமே ஆண்மகனாக தெரிய காதலித்து தொலைகிறார். எனவே கடத்த சொன்னவர்களிடம் இருந்து கார்த்தி அனுஷ்காவை காப்பாற்றி அவரது அப்பாவிடம் ஒப்படைத்து பிறகு கல்யாணத்தையும் முதல்இரவையும் ஒருசேர அரங்கேற்றுகிறார். அவ்வளவு தான் படத்தின் கதை.
எவ்வளவு தான் மொக்கைப் படமாக இருந்தாலும் நான் அவ்வளவு சீக்கிரம் கழுவி ஊத்த மாட்டேன். ஆனால் இந்த படத்தின் விமர்சனத்தில் சாணி ஊற்றி மொழுக வேண்டும் என்ற அளவுக்கு ஆத்திரம் வந்தது.

நேற்று தான் டிவிடியில் மலையாளத்தில் தட்டத்தின் மறயத்து படம் பார்த்தேன். நெகிழ்ந்து போனேன். இன்று இந்த படத்தை பார்த்ததும் குலைந்து போனேன். இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஒரளவுக்கு பல அபத்தங்களை வெளியேற்றி விட்டு சற்றே தலைநிமிர்ந்த தமிழ்சினிமாவை இரண்டு படி கீழிறக்கியிருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளர் அதுவும் பணத்தை தண்ணீராக செலவழிக்கும் ஒருவர் கிடைத்து விட்டால் எப்படியெல்லாம் அருமையாக எடுத்து அசத்தலாம். இவர்கள் அவரது சொத்தில் பல கோடிகளை குறைப்பது என்று முடிவெடுத்து விட்டே களத்தில் இறங்கியிருப்பார்கள் போல.

இது வரை எந்த படத்திலும் சந்தானத்தின் காமெடி இந்தளவுக்கு கடுப்பேற்றியது இல்லை. சந்தானம் தனது பாணியை மாற்றிக் கொள்வது நல்லது. இல்லையென்றால் மீண்டும் விஜய்டிவிக்கு வந்து லொள்ளு சபா செய்ய வேண்டியது தான். காமெடிக்காக பயங்கரமாக உழைத்திருக்கறார் ஆனால் நமக்கு தான் சிரிப்பு வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.

சிறுத்தை படத்தின் டிரெய்லரை பார்த்த போது எனக்கு இந்த அளவுக்கு மசாலா படம் தெலுகிற்கு தான் சரிப்பட்டு வரும், தமிழில் ஊத்திக் கொள்ளும் என்றே நினைத்தேன். ஆனால் நினைத்ததற்கு மாறாக படம் காமெடியிலும் ஆக்சனிலும் அசத்தியிருந்தது.

அது போலவே இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த போதே மொக்கையாக தெரிந்தது. ஆனாலும் கார்த்தி படங்களை தேர்வு செய்யும் போது கவனமாக செய்வார். நாம் ஏற்கனவே சிறுத்தையில் ஏமாந்து இருக்கிறோம். அதுபோலவே இந்த படத்தையும் அசத்தி விடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் டிரெய்லரை விட பயங்கர மொக்கையாக படம் வந்திருக்கிறது.

தியேட்டரில் உக்கார்ந்திருந்த அனைவரும் இடைவேளையின் போதே கடுப்பாகி திட்டிக் கொண்டு இருந்தார்கள். அதிலும் சிலர் படம் முடியும் முன்பே எழுந்து சென்று விட்டார்கள் என்றால் மேக்கிங்கில் எப்படி கொடுமைப்படுத்தி இருக்கார்கள் தனியாக விம் போட்டு விளக்கவா வேண்டும்.

அனுஷ்காவிற்கு கால்கள் மட்டுமே நடித்திருக்கிறது, அதுவும் வெள்ளை சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு தரையில் அமர்ந்திருக்கும் மனோபாலாவின் பனியனுக்குள் இருந்து கால்களாலேயே செல்போனை எடுப்பார் பாருங்கள். யாருய்யா ரம்பாவை பார்த்து தொடையழகி என்று சொன்னது. இந்த காட்சியை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.

படத்தில் தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாடல்கள். பி அண்ட் சி பக்கம் கேண்டீனில் இந்த சமயத்தில் எல்லாம் வியாபாரம் பிச்சிக்கும். இது சென்னை என்பதனால் பாடல்கள் காட்சிகளில் வெளியில் வந்து தம்மடிக்க முடியவில்லை.

ஒரு இயக்குனருக்கு பத்து வருடம் மட்டுமே எண்ணங்கள் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு என்னதான் முக்கினாலும் செல்ப் எடுக்காது. மிகச்சிலருக்கு மட்டுமே அது கூட பத்து வருடம் இருக்கும். சுராஜூக்கு அவரின் முதல் படமான மூவேந்தர் வந்து பதினைந்து வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. டிரெண்ட் மாறி விட்டது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். அட்லீஸ்ட் உதவி இயக்குனர்களிடம் இருந்தாவது யோசனைகள் பெற்று சீன்கள் அமைத்து இருக்கலாம்.

படத்தின் பயங்கர கொடுமையான அபத்தங்களில் ஒன்று சந்தானத்தின் தங்கச்சிகளிடம் கார்த்தி கடலை போடும் காமெடி தான். எந்த வீட்ல சார் உங்களுக்கு வயசுக்கு வந்த பெண் பச்சக்குதிர தாண்ட குனிஞ்சி பின்பக்கத்த காட்டி நிக்கும். அதிலும் ஜென்டில்மேன் படத்தில் வருவது போல வில்லங்கமான விளையாட்டுகள் ஆடுவதும் அதற்கு கேவலமான பெயர்கள் வைத்திருப்பதும் தான். அந்த வசனத்தையெல்லாம் நான் சொன்னால் இருக்கும் ஒன்றிரண்டு பெண் வாசகர்கள் கூட பிஞ்ச செருப்பை என் வீட்டுக்கு பார்சல் அனுப்புவார்கள்.

ரயில் சேசிங் காட்சி இருக்கே அதன் அபத்தங்களை பட்டியலிட்டோம் என்றால் இன்னும் கொடுமையாக இருக்கும், எந்த ஊரு ரயிலுல ராசா கடைசி பெட்டியில வெஸ்டிபுள் கதவு இருக்கும். அதுவும் திறந்து வேற இருக்கும். நான் வேலை பார்க்கிறது வெஸ்டிபுள் கதவு பழுதுபார்க்கும் பணி தான். நிற்கும் வண்டியில் மற்றொருவர் தூக்கி விட்டாலொழிய நம்மால் வெஸ்டிபுள் பக்கம் ஏற முடியாது. இதில் அனுஷ்கா ஒடும் ரயிலில் வெஸ்டிபுள் பக்கமாக ஏறுகிறார். கொடுமைடா சாமி.

நண்பர்கள் படத்திலிருந்து அந்த காலில் கயிறு கட்டி தூங்கும் காட்சி, கன்னிராசி படத்திலிருந்து சிக்கன் சூப் காட்சி, ஜல்லிகட்டு படத்தில் இருந்து போட்டில் செல்லும் போது பெட்ரோல் தீருவது போன்ற காட்சி ஆகியவைகளை சுடும் அளவுக்கா உங்களுக்கு சிந்தனை பஞ்சம். என்னவோ போங்க சார்.

அலெக்ஸ் பாண்டியன் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு பதில் திருத்தணி படத்தின் டிவிடியை போட்டு பார்த்து விட்டு ஆறுதல் அடைந்து கொள்ளவும். திருத்தணியே சூப்பர் படம் என்றால் இந்த படத்தின் நிலையை அறிந்து கொள்ளவும்.


ஆரூர் மூனா

அய்யா - தமிழ்ப்பையனை டாவடிக்கும் மராத்திய பெண்ணின் கதை - பழசு 2013

அய்யா இந்தப் படத்தின் டிரெய்லரை பார்த்த போதே படம் வெளியானதும் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஏனென்றால் கதைப்படி படத்தின் நாயகன் ஒரு தமிழ்ப்பையன். அதனால் தமிழை போற்றியிருப்பார்கள் அதனால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் படம் வெளியான போது நான் சென்னையில் இல்லாமல் போனதால் பார்க்க முடியவில்லை. பிறகு சிலநாட்கள் கழித்து பர்மா பஜாரில் சிடி வாங்கி பார்த்தேன். சொல்லிக் கொள்ளுமளவுக்கு சிறப்பாக இல்லையென்றாலும் மும்பையில் இருக்கும் தமிழர்களைப் பற்றி இந்தி சினிமாவில் காட்டியிருப்பதை பார்த்து ரசிக்கலாம்.

ஹீரோயினாக ராணி முகர்ஜி, அவருக்கு தான் ஒரு புகழ்பெற்ற கதாநாயகியைப் போல் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஆனால் அவர் டேஸ்ட்டுக்கு ஏற்றது போல் ஒரு ஆண்மகன் அமையவில்லை.
அவரது குடும்பமும் அவருக்கு ஏகப்பட்ட மாப்பிள்ளைகளை பார்க்கிறார்கள். ஆனால் ஒரே சமயத்தில் மூன்று சிகரெட்டுகளை பிடிக்கும் செயின் ஸ்மோக்கர் அப்பா, தலைவிரித்துப் போட்டு பேய் போல் வீல்சேரில் வீட்டை சுற்றும் பாட்டி ஆகியோரினால் வரும் மாப்பிள்ளைகள் ராணி முகர்ஜியை நிராகரிக்கின்றனர்.

அவர்கள் வீட்டு வாசலில் தெருவுக்கே உரிய குப்பைத்தொட்டி இருப்பதனால் எந்நேரமும் வீடு நாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் ராணிக்கு வீட்டில் சாப்பிடும் சாப்பாடுகளிலும், உடைகளில் அந்த குப்பை நாற்றம் வீசிக் கொண்டு இருப்பதைப் போல் ஒரு எண்ணம். மாப்பிள்ளை அமையாததால் ஒரு ஓவியக்கல்லூரியில் நூலக உதவியாளராக வேலையில் சேருகிறார்.
அங்கு அவருக்கு சக ஊழியரான மைனாவை சந்திக்கிறார். அவர் சினிமாவில் சேரும் ஆசையினால் ஹிந்தி படத்தில் வரும் கதாநாயகியைப் போல் உடையணிந்து வலம் வரும் தெத்துப் பல்லழகி.

அந்த நூலகத்தில் திடீரென அவருக்கு வித்தியாசமான ஒரு வாசனை தோன்றுகிறது. அது அவருக்கு பிடித்துப் போகவே வாசனையில் நூலைப் பிடித்துப் போகிறார். அந்த வாசனை அந்த கல்லூரியில் படிக்கும் தமிழனான ப்ரித்விராஜிடம் இருந்து வருகிறது என்று தெரிகிறது. அந்த வாசனையின் காரணமாகவே ப்ரித்விராஜை ஒரு தலையாக காதலிக்கிறார்.

ஆனால் ப்ரித்வி முசுடாகவும் எந்நேரமும் தூங்கிக் கொண்டு இருப்பதுமாக இருக்கிறார். மற்றவர்கள் ப்ரித்வி தூங்கிக் கொண்டே இருப்பதற்கும் கண்கள் சிவப்பாக இருப்பதற்கு காரணம் குடிப்பழக்கம் என ராணியிடம் சொல்கிறார்கள்.

அவரைப்பற்றிய எந்த விவரங்களும் கிடைக்காமல் போகவே அந்த கல்லூரியில் ப்ரித்விக்கு பழக்கமான கேண்டீன் சப்ளையராக இருக்கும் தமிழனான பசங்க படத்தில் நடித்த பக்கடாவை சினேகம் பிடிக்கிறார். அவனிடம் ப்ரித்வியைப் பற்றிக் கேட்க அவனோ ப்ரித்வி ஹெராயின் பயன்படுத்துவதால் தான் அந்த வாசனை வருகிறது என்று கூறுகிறான்.

ஆனாலும் நம்பாத ராணி அவரது வீட்டை கண்டுபிடித்து அவரின் அம்மாவிடம் சினேகம் கொள்கிறார். இந்நிலையில் ராணிமுகர்ஜிக்கு மாதவ் என்ற மராத்தியருடன் திருமணம் உறுதியாகிறது. நிச்சயத்திற்கு முன்பு தான் எப்படியாவது ப்ரித்வியிடம் வரும் வாசனையை கண்டுபிடித்து அவரிடம் தன் காதலை சொல்ல முனைகிறார்.

நிச்சய தினத்தன்று விடாமல் ப்ரித்வியை தொடர்ந்து சென்று வாசனையின் மூலகாரணத்தை கண்டு பிடிக்கிறார். தன் காதலையும் சொல்கிறார். ப்ரித்வி ஏற்றுக் கொண்டாரா நிச்சயம் என்னவானது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

இது ஹீரோயின் ஓரியண்டட் படம். ராணி முகர்ஜியை சுற்றியே படம் செல்கிறது. 90களில் குலாம் மற்றும் குச் குச் ஹோத்தா ஹை படங்களில் அவரை பார்த்து வெறி கொண்டு அலைந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

15 வருடங்களுக்கு பிறகு பார்க்கும் போது சற்று வற்றிப் போய் தான் இருக்கிறார். ஆனாலும் வசீகரம் குறையவில்லை. படத்தினை மொத்தத் தூணாக தாங்கிப் பிடிக்கிறார். ட்ரீமம் வேக்கப்பம் என்ற பாடலுக்கு போடுகிறாரே ஒரு கெட்ட ஆட்டம், யப்பா பார்த்தாலே டென்சனாகிறது நமக்கு.

நாயகனாக ப்ரித்வி, படம் முழுவதும் அதிக நடிப்போ ஆக்சனோ இல்லாமல் அண்டர்பிளே செய்கிறார். இறுதியில் அவர் யாரென்று தெரிய வந்ததும் நமக்கே வியப்பாக இருக்கிறது. தனது அப்பாவின் தொழிலை இரவு முழுவதும் கண்முழித்து செய்து விட்டு தனது ஆசைக்காக பகலில் தூக்கக் கலக்கத்துடன் கல்லூரிக்கு வருகிறார்.

படத்தின் கலகலப்புக்கு முக்கியமாக கதாபாத்திரத்தில் மைனாவாக வரும் அனிதா தாத்தே தான் காரணம். அவர் படத்தில் ஒரு கரடிபொம்மை வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து யாருக்கும் தராமல் குடிப்பதும் இறுதியில் அவர் குடிப்பது வெறும் தண்ணியல்ல, வோட்கா என்று தெரிய வரும் போது சிரித்து மாளவில்லை.

சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.


ஆரூர் மூனா