Friday 28 August 2015

வாரம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்

2003 - 04ல் சென்னை வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் போது அந்த காண்ட்ராக்ட் நிறுவனத்தில் நான் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த சமயம் நடந்த சம்பவம்.


பொதுவாக கட்டுமான பணியில் இருப்பவர்களைப் பற்றி மற்ற துறை நண்பர்கள் வாத்துக்கூட்டமும் நீங்களும் ஒண்ணுதாண்டா என்றே கிண்டல் செய்து கொண்டு இருப்பார்கள். அதாவது ஒரு புராஜக்ட் முடிந்ததும் அடுத்த புராஜக்ட்டுக்காக வேறொரு ஊருக்கு இடம் மாறுவதை குறித்து சொல்வது. நண்பர்களாயிற்றே என்று பல்லைக் கடித்து பொறுத்துக் கொள்வேன்.

அது போலவே வீராணம் திட்டத்தில் தாம்பரம் போரூர் பைபாஸ் சாலையில் குழாய்கள் அமைப்பதற்காக ஒரு டீம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீக்காகுளத்தில் இருந்து சென்னை வந்து  சேர்ந்தது. அவர்களுக்காகவும் தற்காலிக அலுவலகம் அமைக்க வேண்டியும் பம்மலில் ஒரு பெரிய பங்களா டைப் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது.


பம்மல் அலுவலகத்திற்கு உட்பட்ட டீமில் பாதிக்கும் மேல் ஸ்ரீக்காகுளம் பகுதியில் முன்பே ஒரு டீமாய் பணிபுரிந்த குழுவினர்கள் தான். 20 மராட்டியர்களும் சொற்பமாய் தமிழர்களும் இடம் பெற்று இருந்தோம். வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கடைசி காலக்கட்டத்தில் வேலைகள் கடுமையாக இருந்தது. குறிப்பிட்ட வேலைநேரம் என்பது முடிவே கிடையாது என்று நிறுவனத்தில் சார்பில் அறிவுறுத்தப்பட்டதால் எல்லா பொறியாளர்களும் ஒரு நாளைக்கு 18 மணிநேரமாவது சைட்டில் இருக்கும்படி ஆனது.

24 மணிநேரமும் எல்லோரும் ஒன்றாகவே இருக்கும்படி ஆனதால் நட்புக்குள் நெருக்கம் அதிகரித்தது. ஆனால் சின்னச் சின்ன பிரச்சனைகளும் ஆரம்பித்தது. இவ்வளவு பேர் ஒன்றாக இருந்தாலும் அனைவருக்கும் சேர்த்து ஒரு கேன்டீன் தான் அமைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகப் பொறுப்பு தமிழர்கள் வசம் இருந்தது.


காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என நாங்கள் தீர்மானித்து உணவுகள் பறிமாறப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு பிறகு மராட்டியர்கள் காலை உணவாக பொகா தான் வேண்டும் என்று பிரச்சனை செய்தார்கள். பொகான்னா ஒன்னுமில்லைங்க. அவல் உப்புமாவை ஒரு ரகமாக செய்வார்கள். மராட்டியம், மத்திய பிரதேசம் பகுதிகளில் அது தான் காலை பிரதான உணவு. ஆந்திராக்காரன் அவன் பங்குக்கு பெசரட்டு தான் வேண்டுமென்று என்று பிரச்சனை செய்து கொண்டு இருந்தான்.

எல்லா பிரச்சனைகளும் காலை உணவில் ஆரம்பித்து இரவு  உணவு வரை நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் இரவு நேர மகா தியானங்கள் எல்லா பிரச்சனைகளையும் மறக்க வைத்து நட்பை பலப்படுத்திக் கொண்டு இருந்தது.

சுதந்திர தினம் பற்றி பேச்சு வந்தது. ஒரு நாள் நிறை போதையில் கொண்டையா எனும் பொறியாளர் ஸ்ரீக்காகுளத்தில் செய்தது போல் இனிமேல் நாம் வாரம் ஒரு நாள் சுதந்திர தினம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய்தான். நாமளும் மப்பில் ஆப்பாயில் மேல் சத்தியமெல்லாம் செய்தாயிற்று. அதன் அர்த்தம் என்னவென்றே தெரியாமல்.


மறுநாள் சனிக்கிழமை குளித்து உடை மாற்றி ரூமில் இருந்து வெளியே வந்தால் வர்றவனையெல்லாம் செக் செய்து கொண்ருந்தார்கள், ஸ்ரீக்காகுளம் புராஜக்ட்டில் ஏற்கனவே இருந்த தெலுகுகாரர்கள்.  என்னவென்று பார்த்தால் வாரம் ஒரு நாள் சுதந்திரமாக இருக்க வேண்டுமாம். அதாவது வெறும் சட்டை பேண்ட் மட்டும் தான். உள்ளே எதுவும் போடக் கூடாதாம்.

அடப்பாவிகளா என்று ரெண்டு வாரம் சனிக்கிழமை பக்கம் அவனுங்கங்களை தவிர்த்து விட்டு அதிகாலை கிளம்பி ஏதாவது காரணம் சொல்லி திருக்கழுக்குன்றத்தில் இருந்த புராஜக்ட் ஹெட் ஆபீஸ்சுக்கு போய் ஏமாற்றிக் கொண்டு இருந்தேன்.

ஒரு சனிக்கிழமையன்று மாட்டிக் கொண்டேன். காலையில் கிளம்பும் முன்னே பிடித்துக் கொண்டார்கள். டேய் வேண்டாம்டா, அசிங்கம்டா, விடுங்கடா என்று கெஞ்சிப் பார்த்தேன். மிரட்டிப் பார்த்தேன். ஒன்னும் வேலைக்காகலை. வேற வழியில்லாமல் நானும் சுதந்திர தினத்தில் பங்கு பெற வேண்டியதாயிற்று.

நாம் எல்லோரும் வீடு விட்டு மாநிலம் விட்டு வேறொரு இடத்தில் வாழ்கிறோம், இந்த மாதிரி எதாவது கிண்டலாக செய்து அதை நாம் ஒற்றுமையாக ஏற்றுக் கொண்டால் நட்பு பலப்படும், ஹோம் சிக் வராது என்று அதை இதை சொல்லி தொடர வைத்தார்கள். நாளாக நாளாக நல்லாத்தான் இருந்தது. என்ன சனிக்கிழமையா பார்த்து டார்க் கலர் பேண்ட் தான் போட்டாகனும். இல்லைனா உச்சா போயிட்டு ...... 

சனி வந்தால் கிண்டலும் கேலியும் மகிழ்ச்சியும் கூடியது. குழாய் பதிக்கப்படும் சாலையில் சுதந்திர தினம் கொண்டாடுபவர்கள் சந்தித்துக் கொண்டால் ஒரு குதி குதித்துக் காட்ட வேண்டும். எதுவும் போடவில்லை என்பதற்காக குறியீடாம். எல்லாம் செஞ்சோம் ஜாலியாக அந்த வயதில்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அதற்கும் வில்லங்கம் வந்தது. ஒரு விபத்து வடிவில். எங்களுடன் இந்த குழுவில் வசந்த் என்று ஒரு பையன் சிவில் இஞ்சினியராக இருந்தான். பழனியை சேர்ந்தவன்.

பஜாஜ் எம்80 வண்டியில் சைட்டுக்கு போய் விட்டு திரும்பும் வழியில் டாடா 709 வண்டியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. போனில் விவரம் வந்து நான் உடனடியாக அங்கு சென்றேன். வசந்துக்கு இரண்டு கால் தொடைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. உடனடியாக காரில் ஏற்றி அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

மருத்துவரும் செவிலியர்களும் அவனைச் சுற்றி இருந்தனர். மருத்துவர் என்னை அழைத்து அவன் பேண்ட்டை மெதுவாக கழட்டச் சொன்னார். வசந்தோ எனக்கு உள்ளே எதுவும் போடவில்லை என சைகை செய்தான். 

கடைக்கு போய் ஒரு லுங்கியை வாங்கி வந்து அதனை சுற்றி பிறகு பேண்ட்டை கழற்ற முற்படும் போது மருத்துவர் கேட்டார் என்னப்பா ஜட்டி போடலையா.

சுற்றியிருந்தவர்கள் கொல்லென சிரித்து விட அசிங்கமாக போய் விட்டது. நாளைக்கு எனக்கு எதாவது நடந்தால் கூட எனக்கும் இது தான் நிலையா என்று யோசித்தேன். பட்டென்று வண்டியை எடுத்து நான் மட்டும் தனியே எங்கள் கெஸ்ட் அவுசுக்கு சென்று எல்லாத்தையும் மாட்டி கொண்டு தான் திரும்ப மருத்துவமனைக்கு சென்றேன்.

சுதந்திரமாவது வெங்காயமாவது. மானம் தான் முக்கியம்

ஆரூர் மூனா

தனிஒருவன் - சினிமா விமர்சனம்

இந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு சிறந்த ஆண்டு போல. சிரமப்பட்டு வந்த ரவி இந்த ஆண்டு ரோமியோ ஜுலியட் படம் மூலம் பார்முக்கு திரும்பினார். சகலகலாவல்லவன் காறித்துப்புற ரேஞ்சுல தான் இருந்தது. ஆனால் ஊர்ப்பக்கம் செம ஓட்டம். சிறு நகரங்களில்(சி சென்ட்டர்னு சொன்னா சண்டைக்கு வர்றாரு கோவி. கண்ணன்) நல்ல வசூலாம். இப்போ தனிஒருவன் நன்றாகவே வந்திருக்கிறது.


ஒரு நல்ல படம் என்றால் துவங்கியதிலிருந்து போரடிக்காமல் போய் நல்ல அதிர்ச்சியுடன் இன்டர்வெல் விட்டு அதற்கு பிறகு கூட தொய்வில்லாமல்  முன்பாதியின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து திருப்தியான க்ளைமாக்ஸ் உடன் படம் முடிய வேண்டும். அதனை இந்த படம் செவ்வனே செய்திருக்கிறது. 

இதே ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில். இந்த வரையறைக்குள் இன்டர்வெல் வரை சென்று சரியான அதிர்ச்சி கொடுத்து இன்டர்வெல் விட்டு இருப்பார்கள்.  ஆனால் அதற்கப்புறம் சொதப்பி வைத்து முதல்பாதியின் கேள்விகளுக்கு சரியான விடையளிக்காமல் கன்னா பின்னாவென்று அலை பாய்ந்து படம் முடிந்தால் போதும் என்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டு இருப்பார்கள். 


கிட்டத்தட்ட இந்த படமும் அப்படித்தான். ஆனால் முதல் பாதி சுவாரஸ்யத்தை கெடுக்காமல் அப்படியே மெயின்டெயின் செய்திருப்பது தான் இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

ஐபிஎஸ் பாஸ் பண்ணி ட்ரெயினிங்கில் இருக்கும் ஜெயம்ரவியும் அவரது பேட்ச்மேட்களும் இரவு நேரங்களில் உளவுப் பார்த்து சிறு குற்றங்களை கண்டறிகிறார்கள். அதன் மூல ஆதாரங்களை ஆராயும் போது எல்லா சிறு குற்றங்களும் ஒரு பெரிய குற்றத்துடன் சம்பந்தப்பட்டு இருப்பதை கண்டறிகிறார்கள். அனைத்து பெரிய குற்றங்களும் ஹோம் மினிஸ்டர் மகன் அரவிந்த்சாமியிடம் இருந்து தொடங்குவதை அறிகிறார்கள். 

ட்ரெயினிங் முடிந்து வேலையில் சேரும் ஜெயம்ரவி அரவிந்தசாமியை குறிவைத்து வீழ்த்த நினைக்கிறார். அவரை விட பெரிய மூளைக்காரரான அரவிந்தசாமி ஜெயம்ரவியை வீழ்த்தி அவர் உடலில் அவருக்கு தெரியாமல் ஒட்டுக் கேட்பு கருவியை பொருத்தி உளவு பார்க்கிறார். இறுதியில் யார் யாரை ஜெயித்தார்கள் என்பதே தனிஒருவன் படத்தின் கதை.


ரீமேக் படங்கள் மூலம் மட்டுமே ஜெயித்து வந்த மோகன் ராஜா இந்த முறை சொந்தக் கதையுடன் களமிறங்கி தன்னை நிரூபித்து இருக்கிறார். எந்த இடத்திலும் தொய்வு விழுந்து விடாமல் எடுத்துக் கொண்ட கதையை விட்டு விலகாமல் சரியான ஆக்சன் படத்தை கொடுத்துள்ளார்.

சுமாரான வெற்றிகளையே இந்த வருடம் பார்த்த ஜெயம் ரவிக்கு இந்த படம் கண்டிப்பாக ஹிட் படம் தான்.

ஐபிஎஸ் டிரெயினிங்கிற்கு ஏற்ற உடல்வாகு அவருக்கு அட்டகாசமாக பொருந்துகிறது. சண்டைகாட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். அவரது நண்பர் ஜனா வில்லன் கும்பலிடம் அடிவாங்கும் போது பதறும் இடத்தில் நடிக்கவும் செய்து இருக்கிறார்.


நயன்தாரா சும்மா ரெண்டு சீன் நாலு பாட்டுக்கு வந்து போகாமல் நாயகனுக்கு இணையாகவே படம் முழுக்க வரும் பாத்திரம். நன்றாவே செய்திருக்கிறார். ஒரே டூயட் தான். மான்டேஜ் சாங்கில் ஜெயம்ரவியிடம் வழியும் இடங்களில் எக்ஸ்பிரசன் பிரமாதம்.

முதல்முறை வில்லனாக அரவிந்த்சாமி. மனுசன் சும்மா பின்னி எடுக்கிறார். படித்த வில்லனுக்கான உடல்வாகு பிட்டாக மனுசனுக்கு செட்டாகிறது.அசால்ட்டாக நடித்து அனுபவஸ்தர் என்பதை நிருபிக்கிறார். என்னா மேன்லினஸ். படம் இந்தளவுக்கு ஆக்சனில் பொறி பறக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அரவிந்த்சாமி தான்.

ஒன்னும் தெரியாத அப்பாவி அமைச்சராகவும் அரவிந்த்சாமியின் அப்பாவாகவுமாக தம்பி ராமையா கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். பையன் சொன்னான் என்பதற்காக தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி நடந்து செல்லும் போது அப்ளாஸ் அள்ளுகிறார்.

 நெகிழ வைக்கும் படம், வித்தியாசமான கதைக்களம், தெறிக்கும் நகைச்சுவை, செண்ட்டிமெண்ட் என எதையும் தனக்குள் வைத்துக் கொள்ளாமல் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருப்பது காரணம். திரைக்கதையும் இயக்கமும் தான்.

துவங்கிய காட்சிகளில் அனல்பிடிக்கும் படம் கொஞ்சம் கூட குறையாமல் படம் இறுதி வரை வருவது தான் படத்தின் ஆகச்சிறந்த ப்ளஸ்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய பரபர ஆக்சன் படம் தான் இந்த தனிஒருவன்.

ஆரூர் மூனா

Sunday 9 August 2015

மாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே - பழசு ஏப்ரல் 2013

2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன் மாமன் மகள். எனக்கு கூட பள்ளிக் காலத்திலிருந்தே தோழி தான்.


சிறுவயதில் எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்த இருவரும் காதலித்து அந்தஸ்து பேதம் காரணமாக ஊரை விட்டு ஓடி வந்தது எனக்கு பெரும் ஆச்சரியம் தான். அம்பத்தூர் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து வைத்தேன்.

ஊருக்கு திரும்பி சொந்தமாக ஜெராக்ஸ் கடை வைத்தவன் இன்று பிளக்ஸ் கடை, ரீசார்ஜ் கடை என ஏகத்துக்கும் வளர்ந்து விட்டான். ஆனால் பயந்தாங்கொள்ளியான அவன் தைரியமாக ஊரை விட்டு ஒடி வந்தது பற்றி ஒரு போதைப்பின்னரவில் கேட்ட போது சொன்னான் "என் மாமா பொண்ணு தேவதைடா".

இது சாம்புவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உண்டு. பால்ய வயதில் ஒரு பெண்ணை கிளர்ச்சி காரணமாக சைட் அடிப்பதற்கும் பிறந்த காலத்திலிருந்து ஆண் பெண் வித்தியாச மில்லாமல் விளையாடி சண்டை போட்டு பிறகு கிண்டல் பேச்சை மட்டும் வளர்த்து பதிண்வயதில் சைட் அடிக்கும் போது கிடைக்கும் இன்பமே அலாதி தான்.

எனக்கு பாமா என்றொரு மாமன் மகள் இருந்தாள். கிராமத்தில் இருந்த அவள் வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் போது எல்லாம் அவளுடன் தான் விளையாடுவேன். நொண்டி ஆட்டம், கண்ணாமூச்சி முதல் விவரம் அறியா அப்பா அம்மா விளையாட்டு வரை.

அந்த வயதிலும் எனக்கு அவளைப் பற்றி தான் கனவு வரும். எங்கு சென்றாலும் நாங்கள் ஒன்றாகவே சுற்றித் திரிந்தோம். திடீரென ஒரு நாள் மாமாவுக்கு அத்தைக்கும் சண்டை வந்து அத்தை குழந்தைகளை தூக்கிக் கொண்டு அவரது அம்மா வீ்ட்டிற்கு சென்று விட்டது.

பல நாட்கள் அவளது நினைவு வந்து நாள் செல்ல செல்ல அவளது நினைவே மறந்து விட்டது. 20 வருடம் கழித்து என் வீட்டு பாட்டி இறந்த போது சாவு வீட்டிற்கு வந்திருந்தாள் தன் குழந்தையை தூக்கிக் கொண்டு. அவளது தாய் மாமனுக்கே திருமணம் செய்து வைத்து விட்டார்களாம். வருத்தத்தில் இரண்டு நாட்கள் குடித்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு பெரிய மாமன் மகள் ஒருத்தி இருந்தாள். என்னை விட 8 வயது பெரியவள். அவளுக்கு அம்மா கிடையாது. என் வீடு இருந்த தெருவிலேயே அவர்கள் வீடும் இருந்தது. என் அம்மாவுடன் அரட்டை அடித்துக் கொண்டு எப்பொழுதும் எங்கள் வீட்டிலேயே இருப்பாள். நாள் பள்ளிக்கு சென்று வந்தால் என்னை வம்பிழுப்பது மட்டுமே அவளது வேலை.

எனக்கு பத்து வயது இருக்கும் போது தான் எங்கள் வீட்டில் கேரம் போர்டு விளையாடுவோம். அதை விளையாடவென்றே ஒரு கூட்டம் எங்கள் வீட்டில் ஜெ ஜெ வென்று இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாளும் அவளும் மட்டுமே நிரந்தரமாக இருப்போம், மற்றவர்கள் மட்டும் சுழற்சி முறையில்.

அவள் விளையாடுவது பார்க்கவே அவ்வளவு அருமையாக இருக்கும். ஆள்காட்டி விரலை கட்டை விரலால் பிடித்துக் கொண்டு மூன்று விரல்களையும் தூக்கிக் அடிப்பதை பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கு மேல் எனக்கு விவரம் தெரியாது.

ஒரு நாள் அம்மாவுடன் அவள் பேசிக் கொண்டு பயிறு உடைத்துக் கொண்டு இருக்கும் போது அம்மா பசிக்கிறது என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது என்னை கட்டிக் கொண்டு "என்னைக் கல்யாணம் பண்ணிக்கோடா நான் உனக்கு சமைத்துப் போட்டுக் கொண்டே இருப்பேன்" என்றாள். எனக்கு அம்மா கொண்டு வந்த சாப்பாடு முக்கியமாக இருந்ததால் போடி என்று திட்டி விட்டு வந்து விட்டேன்.

சில வருடங்களுக்கு பிறகு அவளுக்கு ஒரு அமெரிக்க மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்கு பிறகு சமைக்க வேண்டியிருக்கும் என என் அம்மாவிடம் சமையல் கற்று வந்தாள்.

ஒரு நாள் என் அம்மாவிடம் ஏன் அத்தை எனக்கு முன்பே செந்திலை பெத்திருந்தால் நான் கல்யாணம் பண்ணிக் கொண்டு உங்களுடனே இருந்திருப்பேனே என்று கிண்டல் செய்யவும் என் அம்மா போடி குந்தாணி என்று கிண்டல் செய்தார்கள். எனக்கு 12 வயது என்பதால் நடந்தது புரிந்ததும் புரியாதுமாகவே இருந்தது.

திருமணம் முடிந்த அன்று என் வீட்டுக்கு வந்து எங்கள் வீட்டு பூஜையறையில் தம்பதி சகிதம் விழுந்து வணங்கினார்கள். நான் கொல்லைப்புறத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டு இருந்தேன். அனைவரும் சாப்பிட்டு விட்டு தாம்பூலம் போட்டுக் கொண்டு இருந்த போது பூஜையறையில் உள்ள ஒரு பொருளை எடுக்க வேண்டி என்னை அழைத்தாள் அவள்.

விளையாடிக் கொண்டு இருந்த நானும் பூஜையறையில் உள்ள பொருளை எடுப்பதற்காக உள்ளே வந்தேன். யாருமில்லாத அந்த சமயம் அலமாரியில் பின்னே அழைத்துச் சென்று என்னை கட்டிப் பிடித்து அழுது விட்டு நீ எனக்கு முன்பு பிறந்து என்னை கல்யாணம் செய்து கொண்டிருக்கலாமே என்று சொல்லி விட்டு கன்னத்தில் முத்தமிட்டு சென்று விட்டாள்.

எனக்கு அப்பொழுது ஒன்றுமே புரியவில்லை. சற்று நேரம் அவள் அழுததற்காக மட்டும் வருந்தி விட்டு கபடி விளையாட சென்று விட்டேன். நாட்கள் செல்லச் செல்ல தான் அவளின் உணர்வுகள் எனக்கு புரியவந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றக் கூட விவரமில்லையே என்று எனக்குள் கோவம் ரொம்ப வருடங்களுக்கு கனன்று கொண்டிருந்தது.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து தான் எனக்கு இன்னொரு விஷயம் புரிந்தது. அவளுக்கு அந்த எண்ணம் ஏற்பட காரணம் நான் மட்டுமல்ல. தாயில்லாத அவள் வாழ தேடிய வீட்டில் தேடியது என் தாயைப் போல இன்னொருவரும் கூட என்று.

இன்று எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் அவள் மீது இன்று கூட எனக்கு காதல் உண்டு. அது மனம் சார்ந்தது. இன்று கூட உரக்கச் சொல்வேன் எல்லாருக்கும் மாமன் பொண்ணுங்க தேவதைகள் தான்.

 ஆரூர் மூனா

உள்ளூர் அரசியல்வாதிகள் - பழசு ஏப்ரல் 2013

இது மாநிலத் தலைவர்களையோ மாவட்ட செயலாளர்களையோ பற்றிய பதிவல்ல. என்றாவது அரசியலில் பெரிய ஆளாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் முடிந்த வரை அந்த அளவுக்கு நேர்மையாக இருந்து இன்று வரை போராடி வரும் நான் அறிந்த அரசியல்வாதிகளின் அறிமுகம்.


முதல் அரசியல்வாதி சம்பந்தம் மாமா. அவர்கள் வீட்டில் நாங்கள் வெகுநாட்கள் குடியிருந்ததால் நான் இவரை மாமா என்றே கூப்பிடுவேன். இன்று வரை எங்கள் வீட்டில் எந்த விஷேசம் என்றாலும் முடிவு வரை இருந்து எல்லாத்தையும் முன்னின்று செய்பவர் இவர் தான்.

எனக்கு விவரம் தெரிந்த வயதில் எனக்கு கை சின்னத்தை சட்டையில் குத்தி பிரச்சாரத்திற்கு அனுப்பி விட்டவர். 87களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர் 13வது வார்டு வேட்பாளர். அப்பொழுது பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டார்.

எனக்கு எட்டு வயதில் பம்பரம் சின்னம் ஸ்டென்சிலையும் நீலக்கலர் சுண்ணாம்பு டப்பாவையும் கையில் எடுத்துக் கொண்டு வடக்கு வீதியில் அனைவரின் வீட்டு வாசலிலும் பம்பரம் சின்னத்தை வரைவது என் வேலை. அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். பிறகு காங்கிரஸில் இருந்து வாழப்பாடி காங்கிரஸை விட்டு பிரிந்து சென்ற போது இவரும் பிரிந்து சென்று மீண்டும் வந்து இன்று திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர்.

ஆனால் காங்கிரஸில் மட்டும் தான் நகர செயலாளருக்கு இருக்கும் மதிப்பு மா.செவுக்கு கிடையாது. என்னா கணக்கோ தெரியவில்லை. எனக்கு தெரிந்து கோஷ்டி அரசியல் செய்யாமல் யாரையும் ஏமாற்றாமல் 25 வருடங்களாக வளரும் அரசியல்வாதி.

அடுத்தவர் மற்றொரு மாமா A.D.மூர்த்தி. சிவாஜியின் வெறித்தனமான ரசிகரான இவர் அவர் கட்சி ஆரம்பித்த போது கடும் செலவு செய்து 1989 தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி வெற்றி பெற உழைத்தார்.

எல்லாம் வீணாகப் போனது. ஆனாலும் அடங்காமல் சிவாஜி ஜனதா தளத்திற்கு போன பிறகு இவரும் போனார். நகை வேலை செய்யும் அவர் கட்சிக்காக நல்ல வருமானம் வந்த கடையை இழந்தார். சிவாஜி அரசியலை விட்டு ஒதுங்கியதும் இவரும் சில காலம் ஒதுங்கியிருந்து விட்டு வை.கோவின் மேல் நம்பிக்கை வைத்து மதிமுகவில் சேர்ந்தார்.

இன்று மதிமுகவின் மாவட்ட பிரதிநிதி. கட்சியும் வளரவில்லை. இவரும் வளரவில்லை. எப்படியாவது வைகோ முதல்வராகி விடுவார் என்று நம்பும் அப்பாவி அரசியல்வாதி.

அடுத்ததாக என் நண்பனின் அப்பா, நீடாமங்கலத்திற்கு அடுத்த கிராமமான சித்தமல்லி தான் அவர்களது ஊர். அந்த ஊரின் அரசியல் களம் அவரது சைக்கிள் கம்பெனி தான். அரசியல் பேசுவதற்கென்றே அங்கீகாரம் பெற்ற இடம்.

கம்யூனிஸ்ட்டை சேர்ந்த அவர் உலகப் பொருளாதாரம் வரை பிரித்து பேசுவார். நமக்கு தான் ஒன்னும் புரியாது. நான் முதன் முதலில் மூலதனம் புத்தகத்தை அவரது கடையில் தான் பார்த்தேன். கேரள அரசியலை தஞ்சை பக்கமுள்ள குக்கிராமத்தில் அமர்ந்து அலசி எடுப்பார்.

பேசிப் பேசி கடைசியில் கடை தான் இல்லாமல் போனது. நல்லக்கண்ணு வரை 20 வருடங்களுக்கு முன்பு இருந்த பெரிய கம்யூனிஸ்ட்காரர்கள் வந்து போன இடம் கடைசியில் சைக்கிள் கடை நசிந்து போய் இன்று கூலி வேலைக்கு போய்க் கொண்டு இருக்கிறார்.

எப்பொழுதாவது ஒரு மேடையை கண்ட சந்தோஷத்துடன் ரஷ்ய அரசியலையும் மேற்கு வங்காளம் அரசியலையும் பேசுவார். அவர் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் காது கொடுத்து கேட்பேன். ஏன் அரசியலில் வளராமலே போனார் என்று தான் புரியவில்லை.

அடுத்தது என் நண்பன் குடவாசலை சேர்ந்த கணேசன். மேடையைக் கண்டால் எனக்கு சிறுவயதில் இருந்தே உதறும். பேச்சுப் போட்டியில் மேடைக்கு போய் படித்ததை மறந்து ஓ என்று அழுதது கூட உண்டு. அவனோ மேடையை பார்த்ததும் காஜலை கண்ட பிலாசபி பிரபாகரனைப் போல் குஷியாகி விடுவான்.

பாரபட்சமில்லாமல் எல்லாக் கட்சி மேடையிலும் குக்கிராமங்களில் பேசுவது அவன் வழக்கம். கட்சித் தலைவர்கள் வரும் வரை மேடையை கட்டிப் போடும் பேச்சு அவனது. என்ன ஒரு கட்சிக்கும் விசுவாசமில்லாமல் போனதால் கடைசி வரை அங்கீகாரம் கிடைக்காமல் போய் குடும்ப சூழ்நிலைக்காக திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

கடைசியாக என் மச்சான் சதீஸ் குமார். ஹோட்டல் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு அரசியல் ஆசை வந்து போன முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மேலவாசல் கிராமத்தில் நடந்த கவுன்சிலர் தேர்தலில் அதுவும் குடியிருக்கும் தெருவில் தோற்றுப் போய் கொஞ்ச நாள் அரசியல் துறவறம் பூண்டிருந்தான்.

பிறகு இந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் முன்னரே உள்ளூரில் ஆட்களை திரட்டி தன்வசப்படுத்தி ஒரு வழியாக ஜெயித்து விட்டான். பிறகு மற்றொரு அரசியலை நடத்தி மேலவாசல் கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். அது மட்டுமில்லாமல் அதிமுகவில் ஏதோ ஒரு பதவியில் இருக்கிறான்.

எப்படியும் வளர்ந்து இன்னும் பத்து வருடத்தில் அதிமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு சமஉ ஆகும் ரகசிய ஆசையில் இருக்கும் என் மச்சான் ஜெயிப்பானா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சதீஸூக்கு மட்டும் : டேய் மச்சான் இதைப் படித்து என்னை வெளுக்கும் எண்ணம் வந்தால் நான் ஊருக்கு வரும் வரை காத்திருக்கவும். சபையில் காறித்துப்பி மானத்தை வாங்க வேண்டாம். மீ பாவம் மச்சான்.

ஆரூர் மூனா

தொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் - பழசு ஏப்ரல் 2013

கடந்த வியாழன் அன்று வேலைக்கு செல்லும் நேரத்திற்கு வழக்கம் போல் கிளம்பிச் சென்றேன். நான் வேலைக்குச் சேர்ந்து முதல் தொழிற்சங்க தேர்தல் அல்லவா. அதனால் விவரம் சற்று குறைவாகவே தெரிந்திருந்தது.


லோகோ ஸ்டேசன் தாண்டியதும் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் வாசலில் ஒரு யூனியன் ஆளை மற்றொரு யூனியனை சேர்ந்தவர்கள் வெளுத்துக் கொண்டு இருந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவர் எழுந்து ஓடினார். காவலுக்கு வந்தவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். லேசாக கலக்க ஆரம்பித்தது.

வழியெங்கும் காவல்துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் நிறைந்திருந்தனர். தொழிற்சாலை உள்ளே நுழையும் முன்னே ஒரு யூனியனைச் சேர்ந்தவர்கள் என்ன ஏது என்று கேட்காமல் அவர்கள் சின்னமிட்ட பூத் சிலிப் கொடுத்து விட்டு என் சட்டையில் அவர்கள் பேட்ஜை குத்தி விட்டு சென்றனர்.

தனியா இருந்தா வம்பு தான் வரும், நமக்கு பலமே நமது செக்சன் ஆட்கள் உடன் இருப்பது தான் என்று முடிவு செய்து எங்கும் நின்று வாக்களிக்கும் பகுதிகளை கவனிக்காமல் வண்டியை நேரே என் செக்சனுக்கு விட்டேன். உள்ளே ஒரு யூனியனின் சார்பாக பட்டுவாடா நடந்து கொண்டு இருந்தது.

என் அருகிலும் வந்தார்கள், உன்னைப் போன்ற அப்ரெண்டிஸ்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எங்கள் யூனியன் தான் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று காதில் கிசுகிசுத்து விட்டு கவரை கையில் திணித்து சென்றார்கள். அன்றைய உ.பா செலவுக்கு பணம் கிடைத்ததால் என் செக்சன் மக்கள் குதூகூலத்துடன் இருந்தார்கள்.

உள்ளே நுழைந்து பார்த்தால் உள்ளே உ.பா ஆறாய் ஓடிக் கொண்டு இருந்தது. பிறகென்ன கும்பலுடன் கோயிந்தா தான். அந்த நாள் வரை வேலைக்கு செல்லும் ஒர்க்சீட்டை எழுதிக் கொடுக்கும் டேபிள் கச்சேரி மேளாவாகி இருந்தது.

வாக்குப்பதிவு நடக்கும் இடம் கூட்டத்தால் அல்லோகலப்பட்டுக் கொண்டு இருந்தது. கூட்டம் குறையும் வரை அங்கு செல்ல வேண்டாம் என்றும் நாங்கள் ஆதரிக்கும் யூனியனைத் தவிர மற்றவர்கள் பட்டுவாடா செய்வதால் போய்க்கேட்டால் சண்டை தான் வரும் என்றும் தாமதமாக செல்வது என்று முடிவு செய்து அதுவரை தாக சாந்தியில் இறங்கினோம்.

ஒரு யூனியன் பட்டுவாடா செய்தது அறிந்ததும் மற்றொரு யூனியனும் பட்டுவாடா செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் ரகசிய கோரிக்கை என்னவென்றால் நாங்கள் தான் மெஜாரிட்டியினர், எங்களை ஆதரித்தால் சில கோரிக்கைகளை குறிப்பிட்டு செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து சென்றனர்.

பட்டுவாடாவை மொத்தமாக சேகரித்து மீண்டும் உ.பா வாங்க நானும் கங்காவும் சென்றோம். அதற்குள் செக்சனுக்கு பிரியாணி, அசைவ சாப்பாடு வகையறாக்கள் வந்து சேர்ந்தது.

கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது. அதற்குள் ஜாதி வகுப்பை பிரதானப்படுத்தி இயங்கும் யூனியன் ஆட்கள் பட்டுவாடா விவரம் அறிந்ததும் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களிடம் நாம் இந்த வகுப்பை சேர்ந்தவர்கள் நமது ஓட்டு நம்ம யூனியனுக்கு தான் வர வேண்டும்.

காசு வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டார்கள். ஏற்கனவே இவர்கள் மற்றொரு யூனியனிடம் 10 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டை பிரிப்பதாக வந்த செய்தியால் கடுப்பில் இருந்தார்கள் தொழிலாளிகள். முதல் அடி சாம்பார் பொட்டலத்தில் ஆரம்பித்தது. யூனியன் தலைவனுக்கு பின்னால் இருந்து என் செக்சன் ஆள் சாம்பார் பொட்டலத்தை வீசி எறிந்தான். பிறகென்ன அவர்கள் ஆள் அம்பு படையுடன் வந்து சேர மினிவார் ஆரம்பித்தது.

ஆர்பிஎப்கள் வந்து கூட்டத்தை விலக்கி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அன்று வரை பெரிய மனிதன் தோரணையில் வெள்ளை சட்டை அணிந்து பந்தாவாக வந்த தலைவன் சாம்பார் அபிஷேகம் பெற்று அசிங்கப் பட்டு போனார்.

இன்னும் எக்கச்சக்கமாக ஏத்திக் கொண்டு ஆட்டம், பாட்டம் கச்சேரி என நேரம் சென்று கொண்டிருந்தது. மற்ற செக்சன் ஆட்களை ஓட்டுப் போடும் படி பணித்துக் கொண்டு இருந்த யூனியன் ஆட்கள் எங்கள் செக்சன் பக்கமே வர பயந்து கொண்டு இருந்தனர்.

மதியம் பிரியாணி தின்று விட்டு ஆட்கள் அப்படியே நித்திரையில் சாய ஆரம்பித்தார்கள். நாலு மணிக்கு போதை தணிந்ததும் மொத்த கும்பலும் ஓட்டுப் போட சென்றோம். எல்லா யூனியன் ஆட்களும் முறைத்துக் கொண்டு இருந்தார்கள். செய்த கலாட்டா அப்படியாச்சே.

ஓட்டுப் போட்டு முடிந்ததும் பதவிசாக வெளியே வந்து கலைந்தோம். வெளியே வந்த பிறகு எங்களுக்கு வேண்டிய ஆட்களிடம் இருந்து தகவல் வந்தது. நாங்கள் செய்த கலாட்டாவினால் அந்த குறிப்பிட்ட யூனியன் ஆட்கள் எங்களை வம்பில் மாட்டி விட காத்திருக்கிறார்கள் என்று.

வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நடக்கிறது. அன்று தான் கச்சேரி இருக்கிறது. எங்கள் செக்சனின் பெரும்பாலான ஆட்கள் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கும் யூனியன் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை அந்த யூனியன் தோற்றால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.

நாங்கள் ஆதரித்த யூனியன் எது, வாக்குப்பதிவு விவரங்கள் போன்றவற்றை 2ம் தேதி தெரிவிக்கிறேன்.

ஆரூர் மூனா

யாருடா மகேஷ் - பழசு ஏப்ரல் 2013

இன்றும் தொழிற்சங்க தேர்தல் இருந்தும் தொழிற்சாலையின் உள்ளேயே சரக்கும் பிரியாணியும் கிடைத்தும் கூட அனைத்தையும் தவிர்த்து விட்டு காரணமே இல்லாமல் இன்று சினிமாவுக்கு போக வைத்தது இந்த படத்தின் டீசர் தான்.


ஆனால் போன பிறகு தான் தெரிந்தது இதற்கு பதில் தொழிற்சாலை உள்ளேயே குவார்ட்டர் விட்டுகினு பிரியாணி துன்ட்டு யாராவது ரெண்டு யூனியன் தலைவனுங்களை நேற்று மாதிரி இன்றும் சாத்தியிருக்கலாம் என்று. ஆனாலும் விதி வலியது.

படத்தின் டிரெய்லரில் இருந்து துணுக்கு நகைச்சுவை படம் முழுவதும் விரவி கிடக்கும் என எண்ண வைத்து மக்களை திரையரங்கிற்கு வர வைத்ததில் இந்த பட இயக்குனரின் திறமை முக்கிய பங்கு வகிக்கிறது.

படத்தின் கதை என்ன? கல்லூரியில் கடைசி மதிப்பெண் பெறும் நாயகனும் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் நாயகியும் ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் போது சந்திக்கிறார்கள். நாயகனுக்கு நாயகி மேல் காதல் வருகிறது. அரைமணிநேரத்தில் நாயகிக்கும் காதல் வந்து விடுகிறது.

மேலும் ஒரு கால் மணிநேரத்தில் நாயகியின் வீட்டில் யாரும் இல்லாத நாளில் காண்டம் வாங்கி வந்து பாதுகாப்பாக பஜனை நடக்கிறது.  நாயகனை சென்னையில் தவிக்க விட்டு அம்பேரிக்காவுக்கு படிக்கச் செல்கிறாள். ஆனால் பாருங்கள். மேனிபேக்சரிங் டிபெக்ட் காரணமாக குழந்தை உண்டாகி விடுகிறது.

சென்னைக்கு திரும்பி வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறந்து பல ஆண்டுகள் ஆகிய பிறகும் நாயகனுக்கு பொறுப்பு வராமல் வீட்டிலேயே குழந்தையுடன் விளையாண்டு காலத்தை கழிக்கிறார்.

ஒரு உச்ச ராகுகால நேரத்தில் இந்த குழந்தை நாயகிக்கும் மகேஷ் என்ற ஒருவனுக்கும் பிறந்தது என்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. மகேஷை தேடிப் புறப்படுகிறான். மகேஷ் கிடைத்தானா, குழந்தை யாருக்கு பிறந்தது என்பது தான் படத்தின் கதை.

சொல்லும் போது சுவாரஸ்யமான கதையாக தெரிந்தாலும் எடுத்த விதத்தில் மெச்சூரிட்டி இல்லாத காரணத்தால் படம் பப்படமாகி விட்டது. பாவம் தயாரிப்பாளர் அன்பழகன். ஏற்கனவே ஆதிபகவனில் பெரிய சைஸ் அல்வா வாங்கி வீட்டில் வைத்தவர், இந்த படத்தினால் சிறிய சைஸ் அல்வா உபரியாக கிடைத்திருக்கிறது.

நாயகன் சந்தீப் பார்க்க நன்றாக இருக்கிறார். நல்ல களையான முகம். சிறிது முயற்சித்தால் நடிப்பு கூடி வரும். இந்த படத்தை வைத்து இன்னும் சில படங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் ரியாக்சன் கம்மியாக இருக்கிறது.


நாயகி டிம்பிள் டிரைலரிலும் முதல் காட்சியிலும் பார்க்க ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கச் செய்தவர், போகப் போக அட்டுப் பீஸூ போல் தோற்றமளிக்கிறார். இந்தப் படம் கிடைத்ததே பெரிய விஷயம். மேக்கப் மட்டும் இல்லையென்றால் ப்ப்பா பேய் மாதிரி தான் இருப்பார்.

கொஞ்சமாவது படத்தில் உட்கார வைப்பது நண்டு ஜெகனின் காமெடி தான். அதுவும் அளவுக்கு அதிகமாக போய் ஆபாசத்தில் நெளிய வைக்கிறது. சரளமாக வகைதொகையில்லாமல் ஏ ஜோக் படம் முழுவதும் விரவி கிடக்கிறது. படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்ததற்கு காரணம் இந்த ஜோக்குகள் தான்.

படத்தில் ஜெகனுக்கு இரண்டு முறை லுல்லாவில் அடிபடுகிறது. முதல் முறை பவுடர் தெறித்து நரம்பு கட்டாகிறது. இரண்டாவது முறை வாய் வழியாக ..ட்டை வெளி வந்து பறவையாய் பறக்கிறது. இவ்வளவு தடைகளையும் தாண்டி குழந்தை பிறப்பது வாவ் மெடிக்கல் மிராக்கிள்.

படம் முழுவதுமே ஒரு நாடகத்தனத்துடன் எடுக்கப்பட்டு இருக்கிறது. ரோபோ சங்கர் வடிவேல் பாலாஜி காட்சிகள் அப்பட்டமான ஆபாசம். அப்பாவும் மகனும் இப்படியா பிட்டு படம் பார்க்க சண்டை போட்டுக் கொள்வார்கள்.

படத்தில் உள்ள ஒரு குத்தாட்டத்தில் ஆடும் நடிகை பயங்கர ப்ரச்சோதகமாக இருக்கிறார்.  சரின்னா இதைப் பண்ணனும் இல்லைனா பண்ணினவன் .... தொட்டுக் கும்பிடனும்.  நானே டென்சனாகிட்டேன்.

படத்தின் ஒரே மிகப்பெரிய ப்ளஸ் படத்தின் டிரெய்லர் தான். அதனை பார்த்து விட்டு படம் பார்க்க வருபவர்கள் தான் இவர்களின் டார்கெட். மற்றப்படி போகனும்னு நினைச்சீங்கன்னா அது உங்க தலையெழுத்து.

ஆரூர் மூனா

கதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் - பழசு ஏப்ரல் 2013

கடந்த சனியன்று திருமதி தமிழ் படத்திற்கு போவதற்காக முன்பே சிவா என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் கேட்ட சமயத்தில் வேலை இல்லாததால் ஒத்துக் கொண்டேன். மறுநாள் என் தம்பி ஒரு வேலை காரணமாக சனியன்று திருவாரூரிலிருந்து வருவதாக தகவல் வந்தது.


இருந்தாலும் சிவாவுக்காக காலையில் அந்த வேலையை வைத்துக் கொண்டு மதியம் சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு செய்தேன். வெள்ளியன்று மேலும் ஒருவர் திருவாரூரிலிருந்து வருவதாக தெரிய வரவே சிவாவுக்கு போன் போட்டு இன்னும் ஒரு டிக்கெட் கூடுதலாக எடுக்க வேண்டும் என்றேன்.

சிவாவோ சீனு முன்பே டிக்கெட் எடுத்து விட்டான். வேணுமென்றால் நாம் கவுண்ட்டரில் நேரடியாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதன் படி முடிவு செய்து சனியன்று நானும் இன்னும் இரு தம்பிகளும் திருநின்றவூர் சென்று அந்த வேலையை முடிக்கவே 12.30 ஆகி விட்டது.

ஊரிலிருந்து வந்தவர்களோ திருவாரூரில் குடிக்க குடும்பத்தினர் தடா போட்டிருப்பதால் கண்டிப்பாக இங்கு குடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வேறு வழியில்லாமல் நானும் இணைந்து திருநின்றவூரிலேயே ஒரு அளவுக்கு சுருதி ஏற்றிக் கொண்டோம். அங்கிருந்து ரயிலில் ஏறி சென்ட்ரலில் இறங்கும் போது 2.30 ஆகியிருந்தது.

எங்களுடன் நண்பன் அசோக் இணைந்து கொண்டான். சுருதி இறங்கிப் போனதால் மீண்டும் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கத் தொடங்கினர். சென்ட்ரலில் இருந்து கால் டாக்ஸி பிடித்து ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் இறங்கிக் கொண்டு மறுபடியும் கச்சேரி ஆரம்பித்தது. செல்வின் போன் செய்து இருப்பிடம் அறிந்து எங்களுடன் இணைந்து கொண்டார்.

எல்லாத்தையும் முடித்து விட்டு திரையரங்கு செல்வதற்குள் படத்தை போட்டிருந்ததால் பதிவர் குழுவினர் படம் பார்க்க உள்ளே சென்றிருந்தனர். ஏகப்பட்ட போதையுடன் ஐவர் குழு (நான், செல்வின், என் தம்பி பிரபு, ஒன்று விட்ட தம்பி மணி, நண்பன் அசோக்) உள்ளே நுழைந்தோம்.

இரண்டு டிக்கெட் கூடுதலாக எடுத்தோம். படம் போட்டு 15 நிமிடம் கழித்து நுழைந்த எங்களுக்கு B வரிசை. இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்த குழுவுக்கு D வரிசை. என்ன வாழ்க்கைடா இது.

நுழைந்ததும் நான் பார்த்த காட்சி பாதி போதையை சர்ரென இறக்கி விட்டது. பின்னே உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு ராஜகுமாரன் பஞ்ச் டயலாக் பேசியதை பார்த்ததும் இறங்கவில்லையென்றால் போதைக்கு என்ன மரியாதை.

முன் வரிசையில் பதிவர் குழு அமர்ந்திருக்க பின் வரிசையில் ஐவர் குழு அமர்ந்திருந்தது. போதை இறங்கியதும் அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்தது. கூட இருந்தவர்கள் தாறுமாறாக கத்தத் தொடங்கினார்கள்.

படம் போட்டு 15 நிமிடம் கழித்து தான் உற்று நோக்கினேன். தியேட்டரில் அமர்ந்திருந்தவர்களில் பாதிப் பேர் மட்டையாகி இருந்தார்கள். மீதி பேர் தனிமை தேடி வந்த காதல் ஜோடிகள்.

அரைமணி நேரத்தில் என்னுடன் வந்திருந்தவர்கள் படம் பார்த்த கடுப்புடன் பசியும் சேர்ந்து கொள்ள சத்தம் போட ஆரம்பித்தார்கள். என்னை நாலு நாள் பட்டினி கூட போடு ஆனால் படத்தை விட்டு வெளியேறலாம் என்று கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

ஐவர் குழுவில் மூவரை மட்டும் வெளியேச் சொல்லி விட்டு நானும் செல்வினும் மட்டும் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தோம். அவர்கள் விட்டால் போதுமென்று காலில் விழுந்து வெளியேறி வெறியை தீர்க்க ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள பாருக்குள் தஞ்சமடைந்தார்கள்.

அதன் பிறகு தான் எனக்கு சோதனையே ஆரம்பித்தது. பின்னே படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும். ராஜகுமாரன் பீடி அடித்து கறுத்துப் போன அந்த உதட்டில் என் தலைவன் ராமராஜனை விட இரண்டு மடங்கு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வந்தால் என்ன நடக்கும், எனக்கு ஏழரை தான் தொடங்கும்.

கத்தினேன், கதறினேன் அரங்கில் கேட்பாரில்லை. பின்னே நான் மட்டும் வெளியே சென்று விட்டால் அவர்களின் கொடுமையை பங்கு போடுவது யார். என்னுடன் வந்தவர்கள் சந்தோஷமாக ஸ்பென்சரில் அனுபவித்துக் கொண்டிருக்க நான் மட்டும் விழி பிதுங்கி இருந்த கொடுமையை யாரிடம் சொல்லி கதற.

இன்டர்வெல் விட்டதும் ஒரே தாவில் வெளியில் வந்தோம். எங்களைத் தவிர வேறு யாரும் அரங்கை விட்டு வெளியே வரவில்லை. படம் பார்த்த பாதிப்பு தான். நாங்கள் மட்டும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தோம். நானும் செல்வினும் தான் சற்று டரியலாக இருந்தோம்.

போட்டோ செஷன் முடிந்ததும் நானும் செல்வினும் வெளியேறுவதாக சொல்ல எங்களுடன் வெளியில் வருவதாக கணேஷூம், அரசனும் சொன்னார்கள். ஆனால் எங்களை கட்டுப்படுத்த முடியாத சிவா அவர்கள் இருவரையும் கதறக் கதற உள்ளே இழுத்துச் சென்றார்.

அந்தகூபம், கும்பிபாகம் போன்ற தண்டனைகளை அனாயசமாக தாண்டிய  நான் இந்த கொடுமையை தாங்க முடியாமல் நெருப்பில் விழுந்த புழுவைப் போல் துடித்ததை ரசித்த சிவா எங்கிருந்தாலும் வாழ்க.

ஆரூர் மூனா

என்.டி.ஆரின் பாட்ஷா - பழசு ஏப்ரல் 2013

சேட்டை ரிலீசன்று தான் என்டிஆரின் பாட்ஷாவும் ரிலீசானது. நானும் என் வீட்டம்மாவும் சேர்ந்து செல்ல திட்டமிட்டிருந்தோம். கடைசியில் வீட்டம்மா வராததால் நான் சேட்டை சென்றேன். இது போல் தவற விடும் படங்கள் ஹிட்டாவது வழக்கம். அது போலவே இந்த படமும் ஹிட்டோ ஹிட்.


இன்று மதியம் செல்லலாம் என்று முடிவெடுத்து சென்றோம். நாங்கள் மட்டுமே டிக்கெட் வாங்கியிருந்தோம். படம் போடுவார்களா என்று சந்தேகமாக இருந்தது. நேற்று கூட படம் பார்க்க யாருமில்லாததால் கெளரவம் படத்தையும் பாட்ஷா படத்தையும் கேன்சல் செய்திருந்தார்களாம்.

உள்ளே சென்று அமர்ந்தால் எங்களுடன் சேர்ந்து திரையரங்கில் அமர்ந்திருந்தவர்கள் 6 பேர் மட்டுமே. ஏஜிஎஸ் வில்லிவாக்கம் போன்ற திரையரங்குகளிலேயே இந்த நிலைமை என்றால் சென்னையில் உள்ள சாதாரண திரையரங்குகள் மூடப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

என் மனைவி என்டிஆரின் தீவிர ரசிகை என்பதால் வேறு வழியில்லாமல் நானும் என்டிஆரின் ரசிகன். சென்னைக்கு மீண்டும் வந்த பிறகு வந்த என்டிஆரின் படங்கள் ஊசரவெல்லி, தம்மு படங்களை முதல் நாள் முதல் காட்சியே பார்த்தவன். இந்த படத்தை தான் முதல் நாள் தவற விட்டு விட்டேன்.

படத்தின் கதைக்கு அவர்கள் ரொம்ப மெனக்கெடவில்லை. இயக்குனரின் முந்தைய படமான தூக்குடுவின் காட்சிகளை புரட்டிப் போட்டு என்டிஆருக்காக கூடுதலாக சற்று மசாலாவை கூட்டி பாட்ஷாவை படைத்திருக்கிறார்கள்.

படத்தில் பாட்ஷாவாக வரும் என்டிஆர் ஒரு வளர்ந்து வரும் சர்வதேச டான். அவர் ஏற்கனவே பெரிய டானாக இருக்கும் கெல்லி டோர்ஜியுடன் மோதுகிறார். இத்தாலிக்கு வந்து காஜலை ஏகப்பட்ட நாடகங்கள் நடத்தி காதலிக்கிறார். அங்கிருந்து ஐதராபாத் வந்து சில பல கொலைகள் செய்து கெல்லி டோர்ஜியை வரவழைத்து கொன்று போடுகிறார். படம் சுபம்.

முதலில் இந்த படத்தின் முதல் பிளஸ்ஸாக நான் நினைப்பது மகேஷ் பாபு தான். அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்கிறீர்களா. படத்தின் துவக்கத்திலும் இடையிலும் பின்னணி குரலில் கதை சொல்வது அவர் தான்.

தமிழ்நாட்டில் இது போல் நடக்கவே நடக்காது. ஓரு முன்னணி ஹீரோவின் படத்தில் மற்றுமொரு சூப்பர் ஸ்டார் நடிகர் புகழ்ந்து பேச மாட்டார். இது மிகப்பெரிய மாற்றம்.

முற்றிலும் புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றத்தில் என்டிஆர். படத்தில் ப்ரேமுக்கு ப்ரேம் அவர் தான் படத்தை ஆக்ரமித்து அசத்தியிருக்கிறார். நடனத்தில் வழக்கம் போலவே கலக்கியிருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சூப்பர். முதல் பைட்டில் அடி விழும் போதே என் அருகில் அமர்ந்திருந்த தெலுகு பெண் விசிலடித்து தான் ஒரு என்டிஆர் ரசிகை என்பதை நிரூபித்தார்.

காஜல் அகர்வால் அழகு பொம்மையாக வந்து பாடல்களுக்கு நடனமாடி செல்கிறார். எங்கு லூசுப் பொண்ணாக வந்து இம்சிப்பாரோ என்று பயந்தேன். நல்ல வேளை அப்படியில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் பிரம்மானந்தம் மற்றும் எம்எஸ் நாராயணனின் காமெடி தான். சீனு வைட்லாவுக்கு எப்படி இவர்களை வைத்து படத்தை போரடிக்காமல் நகர்த்த வேண்டும் என்பது சரியாக தெரிந்திருக்கிறது.

பிரம்மானந்தம் தோன்றும் காட்சியில் தப்புத் தப்பாக பதில் சொல்லி நாசரிடம் திட்டு வாங்கும் காட்சியில் தெலுகு பெண் சத்தம் போட்டு சிரித்து சிலாகித்து மகிழ்ந்தார். பிரம்மானந்தம் வந்து போகும் அனைத்து காட்சியிலும் கைதட்டி சிரித்து மகிழ்ந்தார் தெலுகு பெண்.

கல்யாண காட்சியில் பெண்கள் எல்லாம் தவறுதலாக தண்ணியடித்து விட்டு சீனியர் என்டிஆரின் பாடல்களுக்கு ஜூனியருடன் சேர்ந்து போடும் குத்தாட்டம் பார்த்ததும் தெலுகு பெண் உற்சாகமாக ஆடவே ஆரம்பித்து விட்டார். சமாளித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது.

என்னைப் பொறுத்தவரை தூக்குடுவுடன் ஒப்பிடும் போது இது சற்று குறைச்சல் தான். ஆனால் என்டிஆருக்கு சந்தேகமில்லாமல் கேரியர் ஹிட்டாக இந்த படம் அமையும். என்டிஆருக்கு இந்த ஆண்டின் பம்பர் ஹிட் படம் அமைந்திருப்பது சந்தோஷமே.

நான் குண்டாக இருப்பதால் முன்பெல்லாம் என்டிஆருடன் தான் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வேன். சாம்பா, நா அல்லுடு, ராக்கி போன்ற படங்களில் அவர் அந்த ஆட்டம் போடும் போது சற்று முயற்சித்தால் நான் கூட ஆட முடியும் என்று நினைத்து மனதை தேற்றிக் கொள்வேன்.

ஆனால் எமதொங்கா படத்தில் உடம்பை குறைத்து வந்ததும் நான் சற்று வருத்தப்பட்டேன். அப்படியே படிப்படியாக முன்னேறி இந்தப் படத்தில் பர்பெக்ட் பிட்னெஸ்சுக்கு வந்து என்னை ஏக்கப் பெருமூச்சு விட வைத்து விட்டார்.

லாஜிக் மட்டும் பார்க்காமல் இருந்தால் ஆக்சன், காமெடி என பர்பெக்ட் எண்டர்டெயினரை கண்டு ரசிக்கலாம். தமிழில் கூட ரீமேக் படமாக வரும் வாய்ப்பு உள்ளது.

ஒரு தெலுகு பெண் படத்தை விசிலடித்து கை தட்டி ரசித்து மகிழ்ந்தார் என்று சொன்னேன் அல்லவா. அது என் வீட்டம்மா தான் என்ற உண்மையை சொல்ல நினைக்கிறேன். ஆனால் உண்மையை சொன்னால் படித்து விட்டு வந்து எங்கே டோஸ் விடுவாரோ என்று பயமாகவும் இருக்கிறது.

ஆரூர் மூனா

உதயம் - பழசு ஏப்ரல் 2013

இன்று இரண்டு படங்கள் ரீலீசாகும் போது பிரபலமானவர்கள் நடிக்கும் படத்துக்கே முதலில் கவனம் செல்லும். அதுபோல் ராதாமோகன் இயக்கத்தில் இன்று வெளியாகும் கெளரவம் படத்திற்கு தான் முதல் கவனம் சென்றது. ஆனால் அதை மீறி இந்தப் படத்திற்கு தான் முதலில் செல்லனும் என்று தோன்ற வைத்தது வெற்றி மாறனின் பங்களிப்பு தான்.


வெற்றி மாறனின் பெயருக்காகவே அரங்கு முக்கால்வாசி நிறைந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் வந்திருக்கிறது உதயம் NH4.

கல்லூரியில் படிக்கும் நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். பெரிய அரசியல்வாதியான நாயகியின் அப்பா காதலை பிரிக்க நினைக்கிறார். நாயகியும் நாயகனும் ஒரு நாள் பெங்களூரை விட்டு கிளம்பி நண்பர்களின் உதவியுடன் சென்னைக்கு ஒடி வருகிறார்கள்.

அவர்களை நாயகியின் அப்பாவின் சார்பாக ஒரு உதவி கமிஷனர் துரத்துகிறார். அந்த நாளில் காலையிலிருந்து இரவு 12 மணி வரை நடக்கும் சம்பவமே கதை.

படம் துவங்கியதும் தெரியவில்லை. இடைவேளை வந்ததும் தெரியவில்லை. மறுபடியும் துவங்கியதும் தெரியவில்லை, படம் முடிந்ததும் தெரியவில்லை. பரபரவென திரைக்கதையமைத்து நம்மை அதற்குள் கட்டிப் போட்டு படத்தை முடித்து நம்மை அனுப்பி விடுகிறார்கள்.

சித்தார்த் இந்த வயதிலும் சரியாக கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கு பாந்தமாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். சூப்பர் ஹீரோயிசம் காட்டி எதிரியை வீழ்த்தாமல் இயல்பாக மனிதனுக்கே உரிய பலவீனங்களுடன் சண்டையிடுகிறார். பல கல்லூரிப் பெண்கள் இவர் திரையில் தோன்றும் காட்சியில் விசிலடித்து தங்களின் ஆதர்ச நாயகனை கொண்டாடியது வியப்பாக இருந்தது.

ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி அழகாக மட்டும் இல்லாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். இன்னும் இரண்டு படங்கள் சரியாக அமைந்தால் இவர்தான் அடுத்த ஆண்டு கோலிவுட்டின் கனவுக்கன்னி. நானே திரையில் ஹீரோயினைப் பார்த்து கொஞ்சம் ஜொள்ளு விட்டேன்.

கே கே மேனன் தமிழுக்கு புதுசு. ஆனால் நான் இவரை இதற்கு முன்பு RGVயின் சர்க்கார் படத்தில் பார்த்திருக்கிறேன். இயல்பான வில்லத்தனத்தில் அசத்தியிருப்பார். அமிதாப்பின் மூத்தமகனாக வந்து அவரை கொல்லப்பார்க்கும் கதாபாத்திரம் அது.

இந்த படத்தின் பெரும்பலம் அவர் தான். பரபரப்புக்கிடையில் மனைவியிடமும் மகனிடமும் இயல்பாக பேசி சமாதானம் செய்யுமிடம் சூப்பர். அதுபோல் நூல் இடைவெளியில் கிடைத்த துப்புகளை வைத்து நாயகனை நெருங்குமிடத்திலும் அசத்தியிருப்பார்.

நண்பர்களாக வருபவர்களில் கார்த்திக் சபேஷ் சூப்பராக செய்திருக்கிறார்.

படம் துவங்கும் போது பல இடங்களில் டயலாக் நான் ஸிங்க்காக இருந்ததும் பயந்து விட்டேன். அடடா டப்பிங் படத்துக்கு வந்து விட்டோமோ என்று. பிறகு நேரம் செல்லச் செல்ல டயலாக்குள் சிங்க்கிற்குள் வந்து விட்டது.

ஏன் வெற்றி மாறன் ஸ்பெஷல் என்பதற்கு பல இடங்களில் சான்று இருக்கிறது. ஒரு இடத்தில் கூட தேவையில்லாத டயலாக் கிடையாது. தேமே என்று நின்று கொண்டிருக்கும் கேரக்டர் கிடையாது.

ஐஎம்இஐ நம்பரையும் சிம்கார்டையும் வைத்துக் கொண்டு போலீஸ் ஒருவனது இடத்தை தெரிந்து கொள்ள வைக்கும் இடத்தில் அட போட வைக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் இன்ட்ரஸ்ட் இன்வெஸ்டிகேசன் இருக்கிறது. அவற்றையெல்லாம் படத்தில் பாருங்கள்.

படத்தின் முக்கிய பலமே இயல்பான வசனம் தான். பெங்களூர்க்காரன் எப்படி கடித்து கடித்து தமிழ் பேசுவான் என எனக்கு தெரியும். அதை அப்படியே பிடித்து படத்தில் வசனங்களை அமைத்திருக்கிறார் வெற்றி மாறன். என் வீட்டம்மா கூட ஒரு காலத்தில் அப்படிதான் பேசிக் கொண்டு இருந்தார். இப்பொழுது தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு மாறிவிட்டார் என்பது வேறு விஷயம்.

பாடல்களில் ஏற்கனவே இரண்டு டிரெய்லர்களில் கேட்டு பழக்கப்பட்டவையாதலால் பார்க்கவும் இயல்பாக பிடிக்கிறது. இயல்பாக ஒன்றிரண்டு வசனங்களில் தட்டிப் போகும் நகைச்சுவையும் நன்றாக இருக்கிறது.

கிராமத்திலிருந்து வந்த பையன்கள் சென்னையில் வாழ சிரமப்படலாம் என்றால் கூட பரவாயில்லை. சென்னையிலிருந்து வந்த பையன்கள் பெங்களூரின் லைப் ஸ்டைலுக்கு மாற சிரமப்படுகிறார்கள், சுமாராய் உடை அணிகிறார்கள் என்பது தான் நம்ப சிரமமாய் இருக்கிறது.

நானெல்லாம் சென்னையின் காஸ்ட்லியான பாருக்கு சென்றிருந்தாலும் சில சமயம் பப்புக்கு சென்றிருந்தாலும் இது போன்ற பப்பை எங்குமே பார்த்ததில்லை. ஹீரோ முதல் ஹீரோயின் வரை சமரசமே இல்லாமல் தண்ணியடிக்கிறார்கள்.

மங்களூரில் முத்தலிக் பப்பில் அடாவடி செய்ததை புத்திசாலித்தனமாக படத்தில் பொருத்தமான இடத்தில் நுழைத்திருக்கிறார்கள். பெண்கள் ஸ்மோக்கிங் ஏரியாவில் சகஜமாக தம்மடிக்கிறார்கள். பெங்களூரு மேற்கத்திய நாடுகளில் இருக்கிறதோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.

படத்தில் சொல்லிக் கொள்வது போல் இருக்கும் ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் இடைவேளைக்கு பிறகு வரும் காதல் காட்சி ப்ளாஷ்பேக்கில் சற்று தொய்வு விழுகிறது. இருந்தாலும் சட்டென்று முடிந்து விடுவதால் பெரிய குறையாக தெரியவில்லை.

மொத்தத்தில் எப்பொழுது துவங்கியது முடிந்தது என்றே தெரியாத சூப்பர் ஜர்னி இந்த உதயம்.

ஆரூர் மூனா

தொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் - பழசு 2013

இன்றைய பதிவில் போட்டோக்கள் தான் அதிகமாக இருக்கும். நண்பர்கள் பொறுத்துக் கொள்ளவும்.


ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் அடுத்த வாரம் நடைபெறுகிறது. பிரச்சார களம் அனல் பறக்கிறது. எங்களது தொழிற்சாலையை பொறுத்த வரை இரண்டு தொழிற்சங்கங்களுக்கு தான் அங்கீகாரம் கிடைக்கும். அதற்கான தேர்தலில் SRMU, SRES, DREU, AIOBC, RLLF, SRAU போன்ற தொழிற்சங்கங்கள் மோதுகின்றன.


கடும்போட்டி இருப்பது SRMU, SRES, DREU வுக்கு இடையே தான். சென்ற முறை நடந்த தேர்தலில் நூற்றாண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸின் SRES-ஐ வீழ்த்திவிட்டு கம்யூனிஸ்ட்களின் DREU வெற்றி பெற்றது. SRMU தனிப்பெரும் தொழிற்சங்கமாக வெற்றி பெற்றது.


இடையில் ஏற்பட்ட அதிருப்திகளின் காரணமாக தொழிலாளிகளிடையே DREUவுக்கு ஆதரவு குறைந்திருப்பது தெரிகிறது. எனவே இம்முறை போட்டி கடுமையாக இருக்கிறது. மற்ற யூனியன்கள் அதைத் தர்றேன், இதைத் தர்றேன் என்று போட்டி போட்டுக் கொண்டு இருக்க இன்று கூட DREU வாசலில் உண்டியல் குலுக்கி அதில் வசூலான தொகையை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.


கடந்த 10 நாட்களாக தினமும் பிரியாணியாக தின்று பிரியாணியைக் கண்டாலே வெறுப்பாக இருக்கிறது. இன்னும் எட்டு நாட்களை பிரியாணியுடன் தான் ஓட்ட வேண்டும். நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நாம் யூனியனைத் தேடிப் போன காலம் போய் இன்று எனக்கு ஒரு தேவையென்றால் யூனியனின் முக்கிய பிரதிநிதிகளே தேடி வந்து தீர்த்து செல்கின்றனர்.


இந்த கூத்து எல்லாம் இன்னும் எட்டு நாட்களுக்கு மட்டும் தான். அதன் பிறகு நம்மை சீண்டுவதற்கு கூட ஆள் கிடையாது என்று நன்றாகவே தெரியும். இன்று கூட ஒரு தொழிற்சங்கம் மதியம் வேலை நேரம் முடிந்ததும் ஒரு பிரச்சாரக் கூட்டமும் கூட்டம் முடிந்ததும் பிரியாணியும் உண்டு என்று அறிவித்தது.


கூட வேலை பார்ப்பவர்கள் கூட தேர்தலுக்காக லீவு போட்டு விட்டு வேலை செய்கிறார்கள். என் கூட வேலை பார்க்கும் சோமுவுக்கு வேலையே போஸ்டர் ஒட்டுவது தான். காலை முதல் அவரை பசையும் கையுமாக தான் பார்க்க முடியும்.

இதை விட கொடுமை சொந்த செலவில் குட்டித் தலைவர்கள் வைத்துக் கொள்ளும் பேனர்களை கண்ணால் பார்ப்பது தான். ஒருவர் இருக்கிறார். அவரது பேனரைப் பார்த்தால் தலை கிர்ரென்று சுத்தும். இருக்கும் பத்து விரல்களுக்குள் அவர் போட்டிருக்கும் மோதிரம் மட்டும் முப்பதை தாண்டும்.


என் சக நண்பர் இம்மானுவேல் இன்னும் அதிகமாக டீ ஸ்டாண்டுகளில் மொத்தமாக டீயை விலைக்கு வாங்கி அனைவருக்கும் இலவசமாக டீ கொடுக்கும்படி செய்வார். ஆனால் டீ வாங்குபவர்கள் எங்கள் ஓட்டு ....... யூனியனுக்கே என்று சொல்லிச் செல்ல வேண்டும். அவனவன் ஐந்து முறை கூவி விட்டு கணக்கு வழக்கில்லாமல் டீயடிப்பார்கள்.

இன்று எங்கள் செக்சன் முழுவதும் கடும் கூட்டம். பேச வந்த தலைவர்களை யாரும் சட்டைப் பண்ணவில்லை. வந்தவர்கள் எல்லோர் கண்ணும் பிரியாணியில் தான் இருந்தது. நட்சத்திர பேச்சாளர் கடைசியில் பேசும் போது பிரியாணியை வழங்க ஆரம்பித்து விட்டனர்.


அதுவரை கட்டுக் கோப்பாக இருந்த கூட்டம் அப்படியே பிரியாணியுடன் தெறித்து கிளம்பியது. பிரியாணி வினியோகம் நிமிடத்தில் முடிந்து போனது. பேச்சாளர் முன்பே பசியில் இருந்த ஊழியர்கள் பிரியாணியை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். பேச்சாளருக்கு கடுப்பு. 
ஆனால் இந்த சமயத்தில் காண்பித்தால் ஓட்டு விழாது என்பதால் சிவாஜி ரேஞ்சுக்கு நடித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார். கூட்டமும் பிரியாணியை தின்று கொண்டே பேச்சைக் கேட்டது தான் சுவாரஸ்யம்.

ஆரூர் மூனா

கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது - பழசு ஏப்ரல் 2013

2000த்தில் அப்ரெண்டிஸ் முடித்ததும் திருவாரூர் திரும்பி வந்தேன். அப்பொழுது ரயில்வே மிகுந்த நட்டத்தில் இருந்ததால் அப்ரெண்டிஸ் முடித்தவர்களை பணிக்கு எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்.


அடுத்தப்படியாக வேலைக்கு சேர்வதற்கு டிகிரி படிக்க முடியாது வயது அப்பொழுதே 21 ஆகி விட்டிருந்தது. ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தால் முடியும் என்று ஆனது. அதுவரை கிட்டத்தில் மட்டுமல்ல தொலை தூரத்தில் இருந்தும் கம்ப்யூட்டரை பார்த்தறியாதவன் நான்.

நான் திருவாரூர் திரும்பிய போது டிகிரி முடித்த நண்பர்களும் திருவாரூர் திரும்பினார்கள். ஒரு வெட்டி ஆபீசர்கள் குழு உருவானது. சென்னையில் சுற்றியிருந்ததால் இன்னும் கொஞ்சம் கிரிமினல் அறிவு கூடுதலாக இருந்தது.

ஒரு நாள் அப்பா ரசாபாசமாக திட்டிவிட ரோசம் அதிகமாகி ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஜாவா கோர்ஸ் சேர்ந்தேன். கொஞ்சம் கூட கம்ப்யூட்டர் அறிவு இல்லாத என்னிடம் சென்னை நண்பன் ஒருவன் ஜாவா படித்தால் 7000 சம்பளத்தில் சென்னையில் வேலை கிடைக்கும் என்று சொல்லியிருந்ததால் நான் அந்த கோர்ஸில் சேர்ந்தேன்.


அது மிகவும் தரம் குறைவான இன்ஸ்டிடியூட். வாத்தியார்களே கம்ப்யூட்டர் அறிவில் மிகவும் குறைந்தவர்களாக இருந்தார்கள். நான் மட்டுமே வயதில் பெரியவனாக இருந்தேன். என்னுடன் ஜாவா கோர்ஸில் சேர்ந்தவர்கள் எல்லாம் கல்லூரியில் B.scயும், BEயும் படித்துக் கொண்டிருந்த பெண்களும் பையன்களும்.

அது மின்னலே படம் வெளியாகி இருந்த சமயம், அதுவரை போஸ்டரில் திரைப்படங்களின் ஸ்டில்களை பார்த்துக் கொண்டிருந்த நான், மின்னலே படத்தின் ஸ்டில்களை பிரமித்து போய் இருந்தேன். பேஸிக் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் கூட இல்லாமல் நேரடியாக 'C' கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்த அறிவாளி நான்.

வகுப்பறையில் நான் கடைசியாக உட்கார்ந்து பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருப்பேன். மற்ற மாணவர்கள் எல்லாம் ஓவராக சந்தேகம் கேட்டும் பில்ட்அப் கொடுத்தும் அசத்திக் கொண்டு இருப்பார்கள்.


'C' கோர்ஸ் முடிந்ததும் ஒரு மாதிரி தேர்வு நடந்தது. வகுப்பிலேயே நான் தான் கடைசி மதிப்பெண். எதாவது புரிந்தால் தானே நல்ல மதிப்பெண் பெறுவதற்கு, எல்லா பெண்களும் முட்டாளான என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.

அடுத்தது 'C++' கோர்ஸிலும் இதே நிலைமை தான். என்னடா செய்வது நம்ம மரமண்டைக்கு ஒன்னும் புரியமாட்டேங்குதேன்னு புலம்பி புலம்பி தினமும் சரக்கடிச்சது தான் மிச்சம். என்னுடன் கூட சரக்கடிப்பவனுக்கு கம்ப்யூட்டரில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. நான் புலம்புவதை பார்த்து ஙே வென விழிப்பார்கள்.

என்னுடன் படித்த பெண்களில் சிலர் பயங்கர பீட்டராக இருந்தனர். உள்ளே வரும்போதே ஹாய்டா என்று மற்றவர்களை அழைத்துக் கொண்டு தான் உள்ளே வருவார்கள். வகுப்பறையில் வந்ததும் முடித்தவரை கற்றுக் கொடுப்பவரிடம் சந்தேகமாக கேட்டுத் தள்ளுவார்கள். ப்ராக்டிலில் கூட நல்ல கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு நமக்கு டொக்கு கம்ப்யூட்டரை தள்ளி விடுவார்கள்.


எனக்கோ பயங்கர கடுப்பு. எப்படியாவது இவளுங்களை மூக்குடைத்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டினேன். அதற்கேற்றாற் போல் அந்த நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது.

ஜாவா கோர்ஸ் தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாள் முதல் எனக்கு மட்டுமே நல்ல கம்ப்யூட்டர் கிடைத்தது. தேர்வும் தொடங்கியது. தேர்வு முடிந்து எப்படியும் சென்னையில் வேலை கிடைத்து விடும் என்று நம்பினேன்.

ஆனால் நான் ஜாவா முடிப்பதற்குள் அது அவுட்டாகி அடுத்ததாக C Sharp என்று ஒன்று வரப் போவதாகவும் அதனை ஈடுகட்ட Advance Java படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். என்னடா இது வம்பாகிப் போச்சே என்று அதற்கும் பீஸ் கட்டினேன்.

ஜாவா முடிந்து ரிசல்ட் வந்தது. என்னுடன் படித்த எல்லாப் பெண்களும் பையன்களும் முதல்இடத்தையும் டிஸ்டிங்சனையும் எதிர்பார்த்து பரபரப்புடன் காத்திருக்க நான் மட்டும் சந்தோசமாக கலாட்டா செய்து கொண்டிருந்தேன்.

ரிசல்ட் வந்தது. எல்லாரும் சுவற்றில் முட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பெண் தேம்பித் தேம்பி எல்லாம் அழுது கொண்டிருந்தார். இருவர் கோவத்துடன் வகுப்பை விட்டே வெளியேறினார்கள்.

ஜாவா முடித்தவர்களில் ஒருவர் கூட Advance Java படிக்க சேரவில்லை. ஏனென்றால் நான் தான் வகுப்பில் முதல் மாணவனாக தேறியிருந்தேன். எல்லோரும் மெடிக்கல் மிராக்கிள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆனால் எனக்கு மட்டும் தான் நடந்தது தெரியும். கட்டுரையில் முன்பாக நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது என்று எழுதியிருந்தேன் அல்லவா. அது என்னவென்றால் இதற்கு முன் இருந்த Faculty வேலையை விட்டு வெளியேறினார். அதற்கு பதிலாக சேர்ந்தவர் அது என்ன ர்ர்ருரு, சேர்ந்தவன் என் நெருங்கிய நண்பன் தினேஷ்.

அவன் B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்தான். அவன் வேலைக்கு சேர்வது எனக்கு முன்பே தெரிந்ததால் இந்த பெண்களை கலாட்டா செய்ய வேண்டி நாம் இருவரும் நண்பர்கள் என இன்ஸ்டிடியுட்டுக்கு தெரிய வேண்டாம் என்று அவனிடம் சொல்லி விட்டேன்.

அது போலவே முதல் மதிப்பெண் வேண்டுமென்று பரிட்சைக்கு முதல் நாள் ஒரு புல் பாட்டிலை வாங்கிக் கொண்டு அவனுக்கு தியானபுரம் கேட்டைத் தாண்டி ஒரு பம்புசெட்டில் பார்ட்டி வைத்தேன் என்பதை இங்கு குறிப்பிட வேண்டுமோ.

ஆனால் கடைசிவரை நான் படித்த அந்த படிப்பை வைத்து பத்து பைசா கூட சம்பாதிக்கவில்லை என்பது வேறு விஷயம். 

ஆரூர் மூனா

ஜிஐ ஜோ (GI JOE) 2 - பழசு ஏப்ரல் 2013

சென்ற வாரம் யுகாதி அன்று விடுமுறை என்பதால் புல் ரெஸ்ட் என்று முடிவு செய்து காலை 9 மணிக்கும் தூங்கிக் கொண்டு இருந்தேன். தூக்கத்தை கலைத்து அலைபேசி ஒலித்தது. திட்டிக் கொண்டே போனை எடுத்தேன். நண்பன் ஆனந்த் போனில் அழைத்தான்.


ஆனந்த் ஐசிஎப்பில் வேலை பார்க்கிறான். என்னுடன் அப்ரெண்டிஸ் படித்தவன். என்னடா என்று கேட்டேன். விடுமுறை என்பதால் பயங்கரமாக போரடிப்பதாகவும் எங்காவது வெளியில் போகலாம் கிளம்பு என்றான். ஆஹா ஒரு நாளை காலி பண்ண முடிவெடுத்து விட்டான் என்று திட்டிக் கொண்டே கிளம்பினேன்.

கிளம்பும் வரை எந்த படம் என்று முடிவெடுக்கவில்லை. மவுண்ட் ரோடு போவோம், எந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அந்த படத்தை பார்க்கலாம் என்று முடிவானது. தேவிக்கு சென்றோம். இந்த நேரத்திற்கு ஜிஐ ஜோ மட்டுமே அந்த நேரத்திற்கு பொருத்தமாக இருந்தது.

தேவி தியேட்டரை பற்றி சில விஷயம் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் சென்னையில் முதல் தர திரையரங்கம் என்றால் அது தேவி தான். குப்பை படத்தை போட்டால் கூட அது வாரநாட்களாக இருந்தாலும் கூட ஹவுஸ்புல் ஆகிவிடும்.

நான் சென்னைக்கு வந்து முதன் முதலில் பார்த்த படம் தேவிபாரடைஸில் இந்தி பர்தேசி, ஷாருக்கான் நடித்தது. அதுவரை டப்பா தியேட்டரில் மட்டுமே படம் பார்த்து வந்த நான் முதன் முதலாக டிடீஎஸ் தொழில்நுட்பத்தில் இந்த படத்தை பார்த்து பிரமித்துப் போனேன். அப்படிப்பட்ட தேவி திரையரங்கம் தற்போது காத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது. இருப்பதிலேயே மிகச்சிறிய திரையரங்கான தேவிகலாவில் பாதி அளவு கூட அரங்கு நிரம்பவில்லை.

ஜிஐ ஜோ ரைஸ் ஆப் தி கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் நான் பார்க்கவில்லை. இரண்டாம் பாகம் வியக்கவைத்தலுடன் கூடிய சுமார் ரகம். ஜிஐ ஜோ ஒரு அமெரிக்காவின் ரகசிய அதிரடிப் படை. இவை பயன்படுத்தும் கருவிகள் எல்லாம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. சில கருவிகள் உண்மையிலேயே பயன்பாட்டில் இருந்தாலும் மற்றவை சிறப்பான அறிவியல் கற்பனைகள்.

படம் பாகிஸ்தான் பிரதமர் கொலையில் ஆரம்பிகிறது. பாகிஸ்தானில் அரசியல் சூழல் அபாயகரமாக இருப்பதால் அந்த நாட்டின் இரண்டு அணு ஏவுகணைகளை மீட்டுவர ஜிஐ ஜோக்கள்  உத்தரவிடப் படுகிறார்கள். அணுகுண்டுகளை ஒரு அதிரடிக்கு பிறகு கைப்பற்றும் ஜோக்கள் பாலைவனத்தில் அணுகுண்டுகளை ஒப்படைக்க காத்திருக்கிறார்கள்.

இரவில் நடக்கும் எதிர்பாரா தாக்குதலில் ஜோக்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். எப்படியோ தப்பும் ராக், லேடி ஜோ , பிளின்ட்  ஆகிய மூன்று ஜோக்களும் பழிவாங்கி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை.

மனித உடல் சக்தியை பலமடங்கு கூட்டும் ஒரு கவச உடை, விமானத்தை கூட வீழ்த்தும் அல்ட்ரா சோனிக் துப்பாக்கிகள், காமிரா மூலம் படமெடுத்து பிரீஸ் செய்து படத்தில் குறிவைத்து சுட்டால் குறியை தப்பாமல் தாகும் துப்பாக்கி என பட்டையை கிளப்பும் ஆயுதங்கள் ரசிகர்களை ஈர்க்கின்றன.

பாகிஸ்தானில் எதிரிகள் இவர்களது இடத்தை அழிக்க முற்படும் போது மூவரும் ஒரு கிணற்றில் பாயும் காட்சியை நன்றாக படமாக்கி இருக்கிறார்கள். பயர்பிளையாக வரும் ரே ஸ்டீவென்சன் பயன்படுத்தும் நானோ  ஈக்கள் எதிரிகளின் இடத்தில் ஊடுருவி வெடித்து பெரும் நாசத்தை உண்டு பண்ணுவது நன்றாக இருக்கிறது.

அப்புறம் இவர் தனது பைக்கை உயர எழுப்பி பல பாகங்களாக பிரித்து சிறையை வெடிக்க செய்வது எல்லாம் அதி பயங்கர கற்பனை. ஸ்ட்ராம் ஷாடொ நின்ஜா பாணி சண்டை படத்திற்கு வலுவை சேர்க்கிறது. இவரின் உடலை ஒரு பாடி பாக்கில் வைத்து மலை உச்சியில் இருந்து கயிற்றில் அனுப்பி ஸ்நேக் ஐசும் ஜின்க்சும் செய்யும் மலைச்சிகர சண்டை காட்சி அருமை.

கிளைமாக்ஸில் புதிய ஆயுதம் ஒன்றை விண்வெளியில் இருந்து அனுப்பி லண்டனை அழிக்கிறார்கள். கோப்ரா தப்பிசெல்ல உலகை காக்கிறார்கள் ஜோக்கள். அப்படின்னா அடுத்த பார்ட் தயாராகிறது என்று அர்த்தம்.

படத்தின் பலமே ராக் தான். தேவிகலாவில் மட்டுமே சாதாரணமாக இருக்கையில் உட்கார்ந்தால் கூட பின்னால் இருப்பவருக்கு திரையை மறைக்கும் அளவுக்கு சீட்டிங் இருக்கிறது. மற்ற திரையரங்குகளில் 3டி கண்ணாடியை இலவசமாக கொடுக்கும் போது இவர்கள் மட்டும் 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். என்ன கணக்கோ தெரியவில்லை.

வெளியில் வந்ததும் நல்ல பசி வேறு. அப்படியே கோபாலபுரம் சார்மினார் பிரியாணி கடைக்கு வண்டியை விட்டு திருப்தியான பிரியாணியை ஒரு கட்டு கட்டி விட்டு தான் கிளம்பினோம். படத்தை விட நன்றாக இருந்தது. சார்மினார் பிரியாணி தான்.

ஆரூர் மூனா