Sunday 2 August 2015

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் - பழசு ஜனவரி 2013

பொதுவாக இந்திய சினிமாவில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பழிவாங்கும் கதையாகவே அமைந்து விடுவதன் மர்மம் தான் எனக்கு புரியவில்லை. மற்றமொழிகளில் இரண்டு நாயகர்கள் நடிக்கும் பழிவாங்கும் கதைகளில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்துபவர்கள் நமது தமிழ் நாயகர்கள் தான்.


நாயகர்களின் அப்பா துணிச்சலான கோழையாக இருப்பார். வில்லன் செய்யும் கொலையை பார்த்து விடுவார். நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் ஹீரோக்களின் அப்பாவை சொல்லாதே என்று நீதிபதியின் முன்னாலேயே எச்சரிப்பார். அதனை பொருட்படுத்தாத அப்பா சாட்சி சொல்லி தண்டனை வாங்கி கொடுப்பார்.

தண்டனை பெற்ற வில்லன் ஜெயிலில் இருந்து தப்பித்து ஹீரோக்களின் அம்மா கண் முன்னாலேயே அப்பாவை கொன்று விடுவார். அந்த இடத்தில் வில்லன் சென்றதும் மகன்களை வைத்து சபதம் எடுக்கும் அம்மா ஒரு மகனை பொது இடத்தில் தொலைத்து விடுவார்.

இரண்டு மகன்களும் வளர்ந்து ஃபிகர்களை டாவடித்து பிறகு பாட்டுப்பாடி காதலித்து ஒரு சந்தர்ப்பத்தில் குடும்பப் பாட்டு பாடி ஒன்று சேர்வர். இருவரும் ஒன்று சேர்ந்து க்ளைமாக்ஸில் வில்லனை கதற கதற கொன்று வில்லனின் உடலை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்பர்.

இந்திய சினிமாவில் வந்துள்ள 95 சதவீத படங்களில் இது தான் கதையாக இருக்கும். கொஞ்சம் அக்கா, தங்கச்சி கேரக்டர்கள் கூட சேர்ந்து சிறுசிறு மாற்றங்கள் அமைத்து ஒரு கற்பழிப்பு காட்சியை சேர்த்து வரும் படங்கள் கூட வெற்றி பெற்றதுண்டு.

இந்த இலக்கணத்தை உடைத்த படங்கள் வெகு சொற்பமே. இந்தியில் மாற்றி அமைத்த படம் கபி குஷி கபி கம். மூன்று பெரிய நாயகர்கள் நடித்தும் ஒரு ஆக்சன் காட்சி கூட அமைக்காமல் சென்டிமெண்ட் காட்சிகளாக  அமைத்து சூப்பர் ஹிட்டான படம் அது தான்.

அந்த படம் வந்த காலத்தில் எனக்கு ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாது. என்னுடன் படம் பார்த்த சென்னை நண்பன் சந்தோஷ் வாரம் இரண்டு ஹிந்தி படங்களை பார்க்கும் வழக்கமுள்ளவன்.

ஒவ்வொரு படத்தையும் பார்த்து விட்டு வந்து ஆக்சன் சீன்வன்சுடன் படத்தின் கதையை விவரித்து சொல்லுவான். சந்தோஷ் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் பல மொழிகள் தெரிந்திருக்கிறது, நாம் கூட இங்கேயே வளர்ந்திருக்கலாம் என்று பொறாமைப்பட்ட காலங்கள் உண்டு.

கபி குஷி கபி கம் படம் பார்க்கும் போது அவனிடம் வரிக்கு வரி அர்த்தம் கேட்க சில நிமிடங்கள் சொல்லி வந்தவன் பிறகு கடுப்பாகி படத்தை பாரு என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டான். நான் பாஷை தெரியாமலேயே பார்த்து ரசித்தேன்.

நான் பல மாநிலங்களில் சுற்றித் திரிந்து ஹிந்தியை கற்றுக் கொண்டு பல வருடங்களுக்கு பிறகு சென்னை வந்து செட்டிலானேன். ரங்க் தே பசந்தி படம் வெளியான சமயம் அவனை கூட்டிக் கொண்டு சத்யம் திரையரங்கிற்கு சினிமாவுக்கு போனேன்.

படம் ஆரம்பித்து நான் வசனங்கள் புரிந்து படி இடங்களில் சிரிக்கவே அவன் என்னிடம் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டான். பிறகு தான் தெரிந்தது. அந்த நாதாரிக்கு ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாது என்று. மற்றவர்கள் முன் பந்தா காட்ட வேண்டுமென்பதற்காகவே அந்த மாதிரி நடித்தான் என்று தெரிய வந்தது.

மறுநாள் இரவு நண்பர்கள் பலருக்கு போன் போட்டு பார்ட்டிக்கு கூப்பிட்டு சந்தோஷ் ஹிந்தி மேட்டரில் இத்தனை வருடங்களாக ஏமாற்றியதை போட்டுக் கொடுக்க அவனவன் சந்தோஷை போட்டு சாத்தினார்கள்.

அது போல தெலுகுக்கு வந்துள்ள டபுள் ஹீரோ டிரெண்ட் செட்டர் படம் சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு. தெலுகின் முன்னணி நாயகர்கள் வெங்கடேஷ் மற்றும் மகேஷ் பாபு நடித்து வந்துள்ள இந்த படத்தில் மருந்துக்கு கூட ஹீரோயிசம் இல்லை. சட்டை பட்டனை கழற்றி விட்டு திரியும் வெட்டி பந்தா இல்லை. கலர் பொடி வெடிக்கும் குத்து பாடல்கள் இல்லை.

படம் வரலாறு காணாத அல்லோலகல்லோல ஹிட். தெலுகு சினிமா கூட திருந்தத் தொடங்கியிருக்கிறது. ஆனால் அவர்களை விட சற்று உயர்ந்த ரசனையில் இருக்கும் தமிழ் சினிமா என்று பீற்றிக் கொண்டு இருக்கும் நாம் தான் அலெக்ஸ் பாண்டியனை இன்னும் திரையரங்குளில் ஒட விட்டுக் கொண்டு இருக்கிறோம்.




ஆரூர் மூனா

No comments:

Post a Comment