Sunday 9 August 2015

ஒரு ரகசிய காதல் திருமணம் - பழசு மார்ச் 2013

மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு வியாழன் இரவு என் நெருங்கிய நண்பன் ஒருவன் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து போனில் அழைத்தான்.

"உன்னை பெரிய மனுசனாக்கப் போறேன். உனக்கு விருப்பமா "

"ஏண்டா நான் நல்லாத்தானே இருக்கேன். புதுசா என்ன பெரிய மனுசனாகனும்"

"ஒரு கல்யாணத்தை ரகசியமாக செய்து வைக்கணும்"

"ஏண்டா பிரச்சனையாகுமா யாரு  பையன், யாரு பொண்ணு"

"அதை அப்புறம் சொல்கிறேன் உன்னால் செய்து வைக்க முடியுமா"

"சரி செய்து வைக்கிறேன் யாரென்று விவரம் சொல்"

"என் தம்பியும் அவன் காதலியும் ஊரிலிருந்து ரயிலில் கிளம்பி விட்டார்கள், நாளை காலை சென்னையில் வந்து இறங்குவார்கள் எப்படியாவது அவர்களுக்கு கோயிலில் திருமணமும் அதனை பதிவு செய்தும் தர வேண்டும்"

"சரி, செய்து வைக்கிறேன்" என்று ஒப்புக்கொண்டேன்.


நமக்கு இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் முன்அனுபவம் உண்டு. எனது இரண்டு நண்பர்களுக்கு இது போல் செய்து வைத்திருக்கிறேன். அதனால் தான் தைரியமாக ஒப்புக் கொண்டேன்.

இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. ஏனென்றால் பொண்ணும் பையனும் ஒரே சாதியில் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள். அதுவும் வம்பு சண்டைக்கு பெயர்பெற்ற சமூகம். ஏதாவது வில்லங்கமென்றால் நம்மை நையப்புடைத்து விடுவார்கள் எனவே ஜாக்கிரதையாக செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.

உடனடியாக என் நண்பன் ஒருவனுக்கு போன் செய்தேன், அவன் மூலக்கடையில் இருந்தான். அவன் மனைவியும் என் வகுப்புத் தோழி தான். என் வீட்டில் தங்க வைத்தால் எப்படியும் ஆள் பிடித்து வந்து விடுவார்கள். எனவே அவர்கள் வீட்டில் தங்க வைக்க திட்டமிட்டு கேட்டேன். அவர்களும் ஒத்துக் கொண்டார்கள்.

பொழுது விடிந்தது. மறுநாள் வீட்டுக்கு வந்தவர்களை அப்படியே ஆட்டோவில் அழைத்துக் கொண்டு மூலக்கடையில் நண்பன் வீட்டில் தங்க வைத்து விட்டு நான் வேலைக்கு சென்று விட்டேன். காலையில் போன் செய்து அம்பத்தூரில் உள்ள நண்பனிடம் பதிவு திருமணத்திற்கு விவரங்கள் சேகரிக்க சொன்னேன்.

ஏரியாவில் உள்ள கோயிலில் நான் திருமணம் செய்து வைக்க நடைமுறைகளை விசாரித்தேன். பல கோயில்களில் பயந்து பின்வாங்கினார்கள். அவர்களின் பிரச்சனை வேறு. உயரதிகாரிகள் கட்டுப்பாட்டால் திருமணத்தினை நடத்தி வைக்க பயந்தார்கள்.

ஆனால் என் சக ஊழியர் ஒருவர் உதவிக்கு வந்தார். அவருக்கு தெரிந்த கோயிலில் செய்து வைக்க அனுமதி வாங்கித் தந்தார். இவர்கள் இருவரும் வரும்போதே மிகவும் திட்டமிட்டு அனைத்து சர்டிபிகேட்கள், ரேசன் கார்டு நகல்கள் அனைத்தையும் எடுத்து வந்திருந்தனர்.

ஞாயிறன்று திருமணம் கோயிலில் செய்து வைக்கவும், திங்களன்று பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவும் முடிவானது. அம்பத்தூரில் ஒரு வழக்கறிஞரை பிடித்து அவரிடம் டாக்குமெண்ட்கள் கொடுத்து திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்தோம்.

மாலை நான்கு மணிக்கு கோயிலில் திருமணம் என முடிவாகி சனியன்று அனைவரும் பர்சேசிங் சென்று தங்கத்தில் தாலி, புதுத்துணிகள், மற்ற பொருட்கள் வாங்கி வந்து வைத்து விட்டோம்.

எல்லாம் சரியாத்தான் சென்று கொண்டிருந்தது ஞாயிறு விடியும் வரை. திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர் ஒரு தண்ணி வண்டி. அவரை சரக்கில் முழுக வைத்து கொண்டே இருந்தால் தான் வேலை நடக்கும். எனவே வீட்டம்மாவிடம் அன்று மட்டும் தண்ணியடிக்க சிறப்பு அனுமதி வாங்கினேன் (எல்லாம் காலக் கொடுமை).

ஞாயிறு விடிந்ததும் அவருடன் சென்று நானும் மிலிட்டரி சரக்கு வாங்கி வந்து குடிக்க ஆரம்பித்தோம். அது மதியம் வரை சென்று ஏழரையை கூட்டி விட்டது. எல்லோரும் கோயிலில் காத்திருக்க அழைத்து சென்றவரோ ஒயின்ஷாப்பில் மட்டையாகி கிடந்தார்.மணி அப்போது மூன்று.

நாங்கள் இவரை எழுப்பி நாலு மணிக்குள் கோயிலுக்குள் அழைத்து சென்றால் தான் நேரத்திற்கு திருமணத்தை நடத்த முடியும். ஒரு ஆட்டோவை பிடித்து நண்பனின் ரூமுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டி மோர் கொடுத்து காத்திருந்தால் மனிதருக்கு தெளியவே இல்லை.

நேரம் சென்று கொண்டிருந்தது. இனி காத்திருக்க முடியாமல் அவரது கையை வாய்க்குள் விட்டு வாந்தியெடுக்க வைத்து முடிந்த வரை கன்னத்தில் அடித்து எழுப்பினால் லைட்டாக கண்ணை திறந்தார். மணி நான்கு. நாலரைக்கு ராகுகாலம் வந்து விடும் என அடித்து பிடித்து அவருக்கு வேறு சட்டை மாட்டி அழைத்து சென்றால் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.

அதன் பிறகு வண்டியை பிருந்தா தியேட்டரின் அருகில் நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து கோயிலுக்குள் நுழைந்தால் மணி 4.20 மந்திரங்கள் சொல்லி தாலி கட்டும் போது மணி 4.27. எனக்கு மட்டும் ஏண்டா இப்படியாகுது என்று கடுப்பாகி விட்டது.

மறுநாள் காலையே விடுமுறை எடுத்துக் கொண்டு அம்பத்தூர் சென்று பதிவு திருமணத்திற்குரிய சான்றிதழ்களை கொடுத்து காத்திருந்தோம். எப்படியும் பதிவு செய்வதற்கு முன்பு நாடோடிகள் படத்தில் வருவது போல் யாராவது வருவார்கள்.

நாம் தான் திருமணத்தை முடித்து வைத்து ஓடிச் சென்று( நான் ஓடிச் சென்றா வெளங்கிடும்) இவர்களை ரகசிய இடத்திற்கு வழியனுப்பி வைக்க வேண்டும், உடலில் எங்கயாவது அருவா வெட்டு விழும் என்று காத்திருந்தால் அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை.

திருமணத்தை பதிவு செய்து புதுமண ஜோடிகளை ஊருக்கு அனுப்பி வைத்தேன். அங்கு கூட எதிர்ப்புகள் தணிந்து போய் இவர்களை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். சினிமாவில் நடப்பது போல் நிஜவாழ்வில் நடக்காது போல. என் எதிர்பார்ப்பு தான் புஸ்ஸாகி விட்டது.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment