Sunday 9 August 2015

கேடியும் கில்லாடியும் - பழசு ஏப்ரல் 2013

.


இந்த படத்தை கடந்த வெள்ளியன்றே பார்த்து விட்டேன். ஆனால் அன்றிலிருந்து உடல்நலக்குறைவின் தீவிரம் அதிகமானதால் பதிவெழுத முடியவில்லை. பரவாயில்லை, இன்று எழுதித் தள்ளிவிடுவோம் என்று அமர்ந்து விட்டேன்.

படத்தை பற்றி சொல்வதற்கு முன்பு படத்தில் வந்த ஒரு காட்சியை யாரும் இதனுடன் ஒப்பிட்டு பார்த்திருக்க மாட்டார்கள். எனவே முதல் முதலாக நான் தான் அந்த மேட்டரை கவனித்து பகிர்கிறேன் என்று நினைக்கிறேன்.

படத்தில் அரசியல் தலைவர் நமோ நாராயணன் இருவரின் சேவையை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளிப்பதாக ஒரு காட்சி இருக்கும். அதன் தொடர்ச்சியாக மற்ற தொண்டர்கள் நமோநாராணனை சூழ்ந்துக் கொண்டு "எனக்கு ஏன் அது போல் அன்பளிப்பு தரவில்லை" என்று கேட்கும் போது அதற்கு அவர் "நீயும் அவர்களைப் போல் சங்கிலியை முன்பே கொடுத்து மேடையில் போடச் சொல் போடுகிறேன்" என்பார்.

இது அப்படியே அப்பட்டமாக வனவாசத்திலிருந்து சுடப்பட்ட காட்சியாகும். கண்ணதாசன் எப்படி விவரித்து இருப்பார் என்றால் 1957ல் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதற்கான பாராட்டு விழாவில் அண்ணா அவர்கள் வெற்றிக்கு காரணமான கலைஞருக்கு மோதிரம் அணிவித்து இருப்பார்.

இதனை கண்டு திடுக்கிட்ட கண்ணதாசன் அவர்கள் கூட்டம் முடிந்ததும் அண்ணாவிடம் போய் நானும் தான் இந்த தேர்தலில் கடுமையாக உழைத்தேன் எனக்கு ஏன் மோதிரம் அணிவிக்கவில்லை என்று கேட்கும் போது நீயும் கலைஞரைப் போல் மோதிரத்தை முன்பே கொண்டு வந்து கொடுத்திருந்தால் உனக்கும் அதே போல் மேடையில் அணிவித்து இருப்பேன் என்று சொன்னாராம்.

இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மைக்குள் நாம் போக வேண்டாம். காட்சி எங்கிருந்து சுடப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் போதும்.

படத்தின் கதையைப் பற்றி படம் எடுத்தவர்களும் கவலைப்பட வில்லை. பார்த்தவர்களும் கவலைப்படவில்லை. ஒரு மாதிரியான நகைச்சுவை தோரணங்களுடன் கூடிய படம். பார்க்கும் போது சிரித்து விட்டு வெளியில் வந்து சிரித்தோம் என்று யோசிக்க வைக்கக்கூடிய வகை படம் தான். இதுவும்.

படத்தினை விமர்சனம் செய்கிறேன் என்று உங்களைப் போட்டு அறுக்க விரும்பவில்லை. படத்தின் உங்கள் பார்வைக்கும் என் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை மட்டும் விளக்க விரும்புகிறேன்.

படத்தில் குறிப்பிட்டு உள்ளது போல் ரயில்வே காலனியில் குடியிருக்கும் பசங்க இன்று வரை ரயிலடியில் உக்கார்ந்து பொழுது போக்குவது சாதாரண விஷயம். எங்கள் ஊரில் கூட தியாகேசன், மதி, பாலா, வெங்கிட்டு மற்றும் பல நண்பர்கள் இன்றும் இதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவர்களது வீடு ரயில்வே ஸ்டேசனுக்கு அருகிலேயே இருக்கும். ஸ்டேசனில் பணிபுரிபவர்கள் கூட சொந்தக்காரர்களாகவே இருப்பார்கள். அதனால் அவர்கள் நேரம் காலம் தெரியாமல் பொழுது போக்கும் இடம் ரயில்வே ஸ்டேசன் தான்.

அதுபோல் திருச்சி பொன்மலை ரயில்வே ஸ்டேசனை காட்டியிருக்கிறார்கள். ரவுடியிசம் அதிகமாக வளர்வது ரயில்வே குடியிருப்புகளில் தான். திருச்சி ரயில்வே காலனியில் தான் சென்ற ஆட்சியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட முட்டை ரவி உள்ளிட்ட பல ரவுடிகள் இருந்தனர்.

சென்னையில் அயனாவரம் ரயில்வே குவார்ட்டர்ஸ் மோசமான ஏரியா. இன்றும் இரவு நேரங்களில் நடமாடுவது பாதுகாப்பில்லாத ஒன்று. ஆள்கடத்தல் எல்லாம் மாதம் ஒரு முறை நடக்கக்கூடியது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைவான ஏரியா.

அதனை அப்படியே கொஞ்சம் நகைச்சுவை கலந்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி நகைச்சுவை தோரணங்களால் நம்மை சில இடங்களில் சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

பிந்து மாதவியிடம் அடிபட்ட சோகத்தை விமல் கூறும் போது நடக்கும் பார்ட்டியில் ஒருத்தன் மட்டும் குடிப்பதை மட்டும் செய்து கொண்டு இருக்கும் காட்சியிலும், ஓட்டுப் பெட்டியில் 30க்கு பதில் 38 ஓட்டு விழுந்ததை பெருமையாக சொல்லும் காட்சியிலும் மட்டும் கண்ணில் நீர் வர சிரித்தேன்.

சில  இடங்களில் புன்சிரிப்பு மட்டுமே.

நடிகைகள், நடிப்பு, பாடல், ஒளிப்பதிவு, இசை என எல்லாத்தையும் மற்றவர்கள் பிரித்து மேய்ந்து விட்டதால் நான் அதனுள் செல்லவில்லை.

மொத்தத்தில் படம் செகண்ட் குவாலிட்டி ஓகேஓகே.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment