Sunday 2 August 2015

பஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013

ரயில்வே பட்ஜெட்டில் நிறை குறைகள் பல இருந்தாலும் எனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு விமர்சிக்கிறேன். புதியதாக பாலக்காடு உட்பட 10 இடங்களில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை துவங்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். இருக்கிற இடங்களை பராமரித்து வந்தாலே புதிய பெட்டிகள் தயார் செய்யலாம். தொழிற்சாலை துவங்கும் செலவாவது மிச்சமாகும்.

அடுத்த பிரச்சனை ஆள் பற்றாக்குறை. தெற்கு ரயில்வேக்களில் உள்ள தொழிற்சாலைகளில் கலாசி என்று அழைக்கப்படும் உதவியாளர்களே இல்லை. ஏற்கனவே இருந்தவர்கள் பதவி உயர்வு கிடைத்து டெக்னிசியனாக போய் விட்டார்கள். இந்த மாதத்துடன் ஒய்வு பெறுபவர்கள் கேரேஜில் மட்டும் 40 பேர். வரும் ஜூன் மாதம் ஒய்வு பெற இருப்பவர்கள் 250 பேர். கேரேஜின் 150 வருட வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஒய்வு பெற்றதே கிடையாது.

ஆள்பற்றாக்குறையினால் மொத்த தொழிற்சாலையிலும் உலோகக் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. அப்புறப்படுத்த ஆட்கள் இல்லை. இவற்றினை சரி செய்து இயந்திரங்களை வாங்கிப் போட்டாலே வருடம் 1000க்கும் மேற்பட்ட ரயில்பெட்டிகளை தயார் செய்யலாம்.

ரயில் டிக்கெட்டுகளை விலை ஏற்றுவதை விட இந்தியாவில் உள்ள மாநகரங்களில் பயன்பாட்டில் இல்லாத ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டாலே பற்றாக்குறையினை சமாளிக்கலாம்.

ஒரு காலத்தில் 3000 வீடுகள் இருந்த அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் இன்று 300 வீடுகளே உள்ளன. மற்றவை எல்லாம் இடிந்து விட்டன. இருக்கும் 300 வீடுகளுக்கு சென்னையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் போட்டி போடுகின்றனர். ஒருவர் ஒய்வு பெற்று வீட்டை காலி செய்தால் அந்த ஒரு வீட்டிற்கு 50 பேர் மோதுகின்றனர்.

சீனியாரிட்டி தாண்டி ஏகப்பட்ட சிபாரிசு மூலம் தான் வீடுகள் வழங்கப்படுகின்றன. என்னால் இத்தனை பெரிய ஆட்களுடன் மோத முடியாது என்று போட்டியில் இருந்து வெளியே வந்து விட்டேன். பட்ஜெட்டில் குடியிருப்புகள் கட்டுவதைப் பற்றி எந்த பேச்சும் இல்லை. இடிந்தவற்றை அப்புறப்படுத்தி அங்கேயே கட்டி தரலாம். புதியதாக இடத்தை கையகப்படுத்த வேண்டாம்.

ஆக மொத்தத்தில் பொதுமக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் ஏமாற்றமே.

------------------------------------------

நாய் நக்ஸ் சிவில் இஞ்சினியரா இருந்திருப்பாரோ


----------------------------------------------

கொஞ்ச நாளாக என்னுள் தூங்கிக் கொண்டு இருந்த எழுத்து என்னும் சிங்கம் முழித்துக் கொண்டு பாடாய் படுத்துகிறது. எதை கண்டாலும் கருத்து சொல்ல வேண்டும் என கைகள் பரபரக்கினறன. தினமும் ஒரு பதிவு போட்டாகணும் என்ற வெறி என்னை சொறிகிறது.

தூக்கத்தில் சுஜாதா விருது வாங்குவது போல் கனவு எல்லாம் வருகிறது. தூக்கத்திலும் கைகளை தட்டச்சு செய்வது போல் அசைத்துக் கொண்டே இருக்கிறேனாம். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது பார்க்கும் காட்சிகள் எல்லாம் கவிதை எழுதவும் கட்டுரை எழுதவும் தூண்டுகின்றன.

சிறுகதை எழுது என்று மனது கட்டளையிடுகிறது. கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து இரண்டு வரியில் கதையை துவக்கினால் மைன்ட் ப்ளாங்க் ஆகி ஸ்கிரீன் எல்லாம் கருப்பாக தெரிகிறது. இதனை மட்டும் சரி செய்து விட்டால் சிறுகதை சிங்கம் புதுமைப் பித்தனை நெருங்கி விடுவேன் என்று நினைக்கிறேன்.

இதை கண்டு பயந்து போன நம்ம லக்கி "வேண்டாம் நான் படித்து படித்து டயர்டாகி விட்டேன். ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு பதிவெழுதவும்" என்றெல்லாம் ஆலோசனை சொல்லிப் பார்த்தார். எனக்கு கூட அப்படியே செய்யலாம் என்று தோன்றியது.

ஆனால் பாருங்கள் குடிகாரர்களுக்கு எல்லாம் சாயந்திரம் ஆனதும் ஒயின்ஷாப்புக்கு செல்வதற்காக கை நடுங்குமே அது போல் எனக்கும் இப்போது நடுங்கியதால் தான் இந்த பதிவே எழுதுகிறேன். சாரி லக்கி. நீங்க படிச்சி தான் ஆகணும் வேற வழியில்லை.

அது மட்டுமில்லாமல் நான் ஒரு வாரம் ஒய்வு எடுக்கப் போகிறேன் என்று பதிலளித்ததும் வாசக நண்பர்கள் (இது வேறயா) நாங்கள் படித்து ரசிக்கிறோம், நிறுத்த வேண்டாம் என்று போனில் ஆதரவு தெரிவித்தார்கள் (வெளங்கிடும்).

நான் எழுத்தை ஒரு தொழிலாக கொண்டவனுமில்லை. நன்றாக எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளவனும் இல்லை. நான் எழுதியதை சிலர் படிக்கிறார்கள் என்ற மமதையில் தான் தொடரவே ஆரம்பித்தேன். இன்று கூட படித்து விட்டு நாலு பேர் நல்லாயிருக்கு என்று சொல்லும வார்த்தைக்காகவே எழுதுகிறேன். இது கூட ஒரு வித போதை தான், இருந்தாலும் குடியை விட இது மேல் அல்லவா.

----------------------------------------

பட்டிக்காட்டான் ஜெய்யின் கைவண்ணம்

------------------------------------------------

ஈழப் பிரச்சனையில் 2009ல் நடந்து கொண்ட விதத்தால் திமுகவின் மேல் ஆயிரம் வெறுப்புகள் இருந்தாலும் இன்று நடந்த விவாதத்தில் திருச்சி சிவாவின் பேச்சு என்னை கவரவே செய்தது. மிக சரியான அளவில் இந்தியா முழுவதும் நம்முடைய வேதனைகளும் சிங்களவனின் கொடுமைகளும் சென்றடையும்.

திருச்சி சிவா ராஜ்யசபாவில் பேசிக்கொண்டு இருக்கின்றார். இலங்கை தமிழர்களுக்காக உரத்த குரல் எழுப்பிக்கொண்டு இருக்கின்றார். பத்து நிமிடத்துக்கு பின்னர் மணி அடிக்கப்படுகின்றது. தற்காலிக சபாநாயகர் உட்கார சொல்கிறார்.

அதற்கு திருச்சி சிவா "எங்கள் உணர்வை கொட்ட விடுங்கள். அடக்கி வைத்தால் வெடித்து விடும் அபாயமும் விபரீதம் உள்ளது. எனவே இந்த உணர்வை இந்த நாடாளுமன்றத்தில் பதியுங்கள். போரில் புறமுதுகு காட்டி ஓடும் கோழை அல்ல வீரத் தமிழன். பாலச் சந்திரனை துளைத்த குண்டுகள் அவன் முதுகில் பாயவில்லை. மாறாக விழுப்புண்களை, வீரத் தழும்புகளை, துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் சுமந்தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன். இது தமிழர்களுக்கே பெருமை . புறநானூறு கூறும் வீரானாகவே சிறுவன் மடிந்தான். பாலச்சந்திரன் வீரத் தமிழர்களின் அடையாளம் .

(மீண்டும் மணி)... "தயவு செய்து..ப்ளீஸ்சர் ப்ளீஸ்சார் " என கெஞ்சிக்கேட்டுக்கொண்டு பேசிக்கொண்டே உணர்வுகளை கொட்டிக்கொண்டே இருக்கின்றார். இதுவரை 5 முறை மணி அடிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மான அவமானங்களை பார்க்கவில்லை. "எங்கள் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை" என கதறிக்கொண்டு இருக்கின்றார். பார்க்கும் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணர்ச்சி வயமான நிலையில் இருக்கின்றனர். மீண்டும் மணி 6 வது முறையாக அடிக்கப்படுகின்றது.

ஆனால் "ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்..." என சொல்லி சொல்ல வந்த விஷயங்களை பதிவு செய்து கொண்டே இருக்க மீண்டும் மீண்டும் மணி அடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதோடு அவைத்தலைவர் மைக் மூலமாக உட்காரச்சொல்லி மிக உரத்த குரலில் சொல்கின்றார். ஏனனில் திருச்சி சிவா அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட இரு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டு சபைக்குறிப்பில் தான் சொல்ல வேண்டியது அத்தனையையும் ஏற்றி விடுகின்றார்.

இன்று மாலையே பாராளுமன்ற செயலர் அலுவலகத்தில் போய் அவர் பேசிய பேச்சின் அத்தனை விபரங்களையும் "அரசாங்க முத்திரை கொண்ட" அரசு காகிதத்தில் வாங்கிக்கொள்ள இயலும்

திருச்சி சிவா அவர்கள் இன்று பதிவு செய்த உணர்சிகரமான விஷயங்களால் கிடைக்கப்போகும் பயன்கள் என்று நினைப்பது

1. அங்கே அமர்ந்திருந்த அகில இந்திய அளவினால பல கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் இந்தியா நிலைப்பாடு எடுக்க வற்புறுத்த செய்ய இயலும்.

1. காங்கிரசை சேர்ந்த சில பல உறுப்பினர்கள் கூட திருச்சி சிவா பேச்சால் தங்கள் கட்சி தலைமைக்கு ஜெனீவாவில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என சொல்ல வைக்கும் அளவிலான பேச்சு!

3. ஒரு இந்திய பாராளுமன்ற நடவடிக்கையை உலகம் எப்போதும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் இலங்கை பிரச்சனையில் ராஜபக்சே அரசு போர்க்குற்றம் செய்தமை இந்த பேச்சுகளால் இந்திய பாராளுமன்றத்தில் பதிவாகும் போது சென்ற முறை இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த கியூபா உள்ளிட்ட சில கம்யூனிச நாடுகள் இந்த பேச்சினால் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க கூடும்.

இப்படி பல பயன்கள் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் கிடைக்கும்.

"பொதுவாழ்க்கைக்கு வந்து விட்டால் மான அவமானங்களை பற்றி நினைத்துக்கொண்டு வருத்தப்பட்டால் சேவை செய்ய இயலாமல் போய்விடும்" என போதித்த பெரியாரின் கொள்கைப்படி அத்தனை இந்திய ஜாம்பவான்கள் இருக்கும் இடத்தில் தன் ஈகோவை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு கெஞ்சி கூத்தாடி தன் ஆதங்கத்தை பதிவு செய்து, தன் கோரிக்கையை அழுத்தமாக சொல்லிவிட்டு அமர்ந்த திருச்சி சிவா அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர் தான்.

ஆரூர் மூனா செந்தில்

கடைசி பகுதியில் பல விஷயங்கள் அண்ணன் அபி அப்பாவின் முகநூல் நிலைத்தகவலில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறேன்.

நன்றி : அபி அப்பா.

No comments:

Post a Comment