Sunday 9 August 2015

பஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளமும் - பழசு 2013

பதிவர்களுக்கு பதிவெழுதாமல் இருப்பது தான் பேஷன் என்று ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சுறுசுறுவென பதிவுகள் எழுதுவது, பிறகு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு பேஸ்புக்கிலும் கூகிள்பிளஸ்ஸிலும் கூடி கும்மியடிப்பது என வழக்கப்படுத்திக் கொண்டனர்.

படிப்பதை ஆதர்சமாக கொண்ட எனக்கு படிப்பதற்கு பதிவுகள் இல்லாமல் கடுப்படிக்கிறது, அதனால் தான் வேறுவழியில்லாமல் நானே பதிவு எழுதி உங்களை படிக்க வைத்து கொலையாய் கொன்று வருகிறேன். எனவே எழுதுவதை விட்ட நண்பர்கள் மீண்டும் ஒழுங்காக வந்து பதிவெழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் இன்னும் பல மொக்கைப் பதிவுகள் உங்களை வந்து அடையும் என்று எச்சரிக்கிறேன்.

கடந்த ஒரு மாதமாக பதிவெழுதுவதை குறைத்துக் கொண்ட மெட்ராஸ் பவன் சிவக்குமார், நல்லவரா கெட்டவரா என்று இன்று வரை எங்களால் யூகிக்க முடியாத கேஆர்பி செந்தில் அண்ணன், ஒரு வருடமாகவே குறைவான அளவில் எழுதும் வீடு சுரேஷ்,

மொக்கையாக எழுதி உயிரை வாங்கினாலும் அதைக்கூட எழுதாத நாய் நக்ஸ் நக்கீரன் மற்றும் பட்டிக்காட்டான் ஜெய், அரசியல் வரலாற்று பதிவுகளை எழுதும் திறமை கொண்ட செல்வின், படிக்கும் போதே குலுங்கி சிரிக்க வைக்கும் பன்னிக்குட்டி ராமசாமி,

நிரூபன், அவ்வப்போது வந்து காணாமல் போகும் மாத்தியோசி மணி, வேடந்தாங்கல் கருண், சிறுகதை சிற்பி மதுரை மணிவண்ணன், திருப்பூர் இரவுவானம் சுரேஷ், தமிழ்வாசி பிரகாஷ், புதுச்சேரி கோகுல் இன்னும் பலர் சட்டென நினைவில் வரவில்லை. ஒழுங்காக வந்து வாரம் இரண்டு பதிவுகளையாவது எழுதி இந்த ரசிகரை உய்விக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

யோவ் சீக்கிரம் எழுத வாங்கய்யா.

----------------------------------------------------


எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமா சொல்லிப்புட்டானுங்க

-----------------------------------------------

இன்று ஒரு வேலையாக வீட்டம்மாவுடன் வெளியில் சென்று விட்டு சாப்பிடுவதற்காக அண்ணா நகரில் இருக்கும் எண்டே கேரளம் என்ற உணவகத்திற்கு சென்றோம். நீண்ட நாட்களுக்கு பிறகு கேரள உணவை ருசி பார்க்கப் போகிறோம் என்று நாக்கு சப்புக் கொண்டி உள்ளே சென்றேன்.

ஒரு அசைவ சாப்பாடும் நெய்மீன் பொலிச்சதுவும் எனக்கு ஆர்டர் செய்தேன். வீட்டம்மா கோதுமை பரோட்டாவும் பீஸ் மசாலாவும் ஆர்டர் செய்தார். முதலில் வந்த நன்னாரி சர்பத் ருசி கூட்டியது கூடவே பசியையும்.

அசைவ சாப்பாட்டில் திருவனந்தபுரம் ஸ்டைல் ப்ரைடு சிக்கன், முட்டை ரோஸ்ட், தலச்சேரி மீன் கறி, அவியல், தோரன், கூட்டுக்கறி, சாம்பார், ரசம், தயிர், பப்படம், பரோட்டா, இடியாப்பம், சிவப்பரிசி, சோறு, பால்பாயசம், பயறுபாயாசம் ஆகியவை அடங்கியிருந்தன.

தட்டில் அனைத்தும் ஒரு சேர பார்த்ததும் கண்முழி டொய்ங் என்று வெளியில் வந்து விழுந்தது. பரோட்டாவில் ஆரம்பித்து ஒவ்வொன்றையும் ருசி பார்த்து முடிப்பதற்குள் வயிறு நிரம்பியிருந்தது. அதற்கு அப்புறம் தான் நெய்மீன் பொலிச்சது வந்து சேர்ந்தது.

கேரளாவில் நெய்மீன் சாப்பிடுவற்கு என்றே தினமும் 15 கிலோமீட்டர் பயணம் செய்து திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டர் பின்புறமுள்ள ஒரு சிறு கடைக்கு செல்வேன். அந்தளவுக்கு நெய்மீன் அங்கு சுவையாக இருக்கும்.

ஆனால் இங்கு நெய் மீன் என்ற பெயரில் வஞ்சிரம் மீனை வைத்து பொலிச்சதுவை தீய்த்து விட்டு இருந்தனர். மீன் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கி ப்ரீஸ் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நல்லாவேயில்லை. கேரள பப்படத்தின் சுவையே தேங்காய் எண்ணெயில் பொரித்தால் தான் வரும். இங்கு ரீபைண்ட் ஆயிலில் பொரித்து இருக்கின்றனர்.

இந்த குறையை தவிர சாப்பாடு சூப்பர் சுவை. ஒரு முறை டிபிக்கல் கேரள சாப்பாட்டை ருசித்துப் பார்க்க செல்லலாம் தப்பேயில்லை. விலை தான் சற்று கூடுதல் ஒரு அசைவச் சாப்பாடு 395 ரூபாய். ஒரு மீன் பொலிச்சது 390 ரூபாய், கோதுமை பரோட்டா ஒன்று 45 ரூபாய்.

ஒரு வழியாக எல்லாத்தையும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து ஆட்டை முழுங்கிய மலைப்பாம்பு போல் புரண்டு கொண்டு இருக்கிறேன்.

-----------------------------------------------------

இன்னைக்கு நைட்டு உனக்கு இருக்குடி கச்சேரி


-------------------------------------------------------

பொதுவாக எந்த ஒரு முக்கியப் படத்தையும் முதல் நாள் பார்ப்பதே வழக்கமாக வைத்திருப்பேன். ஆனால் இந்தப் படத்தை எப்படித் தவற விட்டேன் என்று தான் தெரியவில்லை. திரையரங்கிலும் பார்க்கவில்லை, டிவியில் போட்டும் பார்க்கவில்லை.

நேற்று முன்தினம் லோக்கல் சானலில் இரவு பத்துமணிக்கு போட்டிருந்தார்கள். அதிலும் அந்த அஜித் வரும் காட்சியில் இருந்து தான் பார்க்க ஆரம்பித்தேன். படம் முடிந்து அரைமணிநேரம் என்னை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது இங்கிலீஷ் விங்கிலீஷ்.

என்னா பெர்பார்மன்ஸ் ஸ்ரீதேவியிடம் அப்பப்பப்பா, வீ மிஸ் யூ ஸ்ரீதேவி. ஒவ்வொரு காட்சியிலும், ப்ரேமிலும் என்னை கவர்ந்து விட்டார். இன்றைய ப்ராம்ப்ட் நடிகைகள் இயல்பான நடிப்புக்கு பாடம் கற்றுக் கொள்ளலாம் இவரிடம்.

தயக்கத்துடன் ஆங்கில வகுப்புக்கு போன் செய்யும் போதும், தயக்கத்துடன் அந்த ஆங்கில கல்வி நிறுவனத்துடன் நுழைந்து தயங்கித் தயங்கி ஷஷி என்று சொல்லும் போதும், ஏன் இந்தியாவை த இந்தியா என்று சொல்லக்கூடாது ஏன் யுஎஸ்ஏவை த யுஎஸ்ஏ என்று சொல்கிறோம் என்று கேட்கும் போதும், தலைவலி என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு வகுப்புக்கு சென்று வந்து இழுத்துப் போர்த்தி நடிக்கும் போதும், கணவரிடம் கால் வலிக்கிறது என்று பொய் சொல்லி வகுப்புக்கு செல்லும் போதும், இறுதியில் திருமணத்தைப் பற்றி பட்லர் இங்கிலீஷில் பேசும் போதும், கணவனுக்கு மட்டும் இரண்டு லட்டு வைத்து ப்ரியத்தை வெளிப்படுத்தும் போதும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி தான்.

படம் முழுவதுமே என்னை ஆக்ரமித்து இருக்கிறது. எந்த காட்சியை விடுத்து எந்த காட்சியை சொல்ல மக்களே தவற விடாதீர்கள். சூப்பரான பீல்குட் மூவி. எந்த மொழியில் டிவிடி கிடைத்தாலும் வாங்கிப் பார்த்து விடுங்கள்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment