Sunday 2 August 2015

வாஞ்சூர் - பழசு பிப்ரவரி 2013

காரைக்கால் நகர்ப்புற எல்லையோரம் உள்ள கிராமம் வாஞ்சூர். திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளில் இருந்து குடிகார நண்பர்கள் பாண்டிச்சேரி மாநிலத்தில் சரக்கு விலை குறைவு என்பதனால் வாஞ்சூருக்கு தான் வருவர். அந்த ஊரில் உள்ள மக்கள்தொகைக்கு இரண்டு ஒயின்ஷாப்பே அதிகம். ஆனால் அங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ஒயின்ஷாப்புகள் உண்டு என்றால் அந்த ஊர் எதற்கு பெயர் பெற்றது என்று நினைத்துப் பாருங்கள்.


கீழத்தஞ்சை பகுதியில் நண்பர்கள் ஒன்று கூடினால் பேசும் முதல் வார்த்தையே வாஞ்சூருக்கு போகலாமா என்று தான் இருக்கும். அந்தளவுக்கு விலை குறைவு. 10 பேர் போனால் 600 ரூபாய்க்கு நிறைபோதையுடன் வருவோம்.

எங்கள் பகுதியில் திருமணம் என்றால் முதல்நாளே கும்பலில் வெட்டியாக இருக்கும் இருவரை அழைத்து பணம் கொடுத்து விட்டால் 25 முதல் 30 புல் பாட்டில்கள் வரை வாஞ்சூரில் இருந்து வாங்கி வந்து விடுவர். பிறகென்ன கல்யாணம் முதல்நாள் இரவு மண்டபமே களைகட்டியிருக்கும். மறுநாள் காலை நண்பர்கள் விழித்தெழும் போது பெரும்பாலும் திருமணம் முடிந்திருக்கும்.

இப்படிப்பட்ட பெருமைக்குரிய வாஞ்சூரில் எங்கள் நண்பர்கள் குழாம் வழக்கமாக செல்லும் பார் ஒன்று உள்ளது. அதில் ஒரு சப்ளையர் பையன் வேலை பார்த்து வந்தான். நாங்கள் வாரம் இருமுறை வாஞ்சூர் செல்வதுண்டு. அவன் நன்றாக சப்ளை செய்வதால் எப்பொழுதுமே அதிகம் டிப்ஸ் கொடுப்பதுண்டு.

அவன் அந்த ஊரை சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர் வாஞ்சூர். நாங்கள் எப்பொழுது பாருக்கு வந்தாலும் எனது பேவரைட் சைட்டிஷ்ஷான முட்டை முந்திரி போட்டி மற்றும் கலக்கியை எனக்கு பக்காவாக செய்து கொண்டு வந்து வைப்பான்.

அதனாலேயே எனக்கு ரொம்ப நெருக்கமானான். அவன் என்னிடம் இருந்து பெரும் டிப்ஸே மாதம் 2000த்தை தாண்டும். பிறகு நான் சென்னைக்கு வந்த பிறகும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் வாஞ்சூருக்கு செல்வதால் பழக்கம் நீடித்து இருந்தது. என்னிடம் செல்நம்பர் வாங்கிக் கொண்டு அடிக்கடி போன் செய்து பேசுவான்.

ஒரு நாள் அசந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது விடியற்காலை நாலு மணிக்கு போன் வந்தது. எடுத்து பேசினால் வாஞ்சூர் அண்ணே என்றான். என்னடா இந்த காலையில் என்று கடிந்து கொண்டதும் அவன் அழ ஆரம்பித்தான். என்னவோ ஏதோ என்று பயந்து அவனிடம் சமாதானமாக பேசின பிறகு தான் பேசினான். ஊரில் அப்பாவுடன் பிரச்சனை ஏற்பட்டு தனியாக கிளம்பி வந்து இருக்கிறான்.

பிறகென்ன நான் தங்கியிருக்கும் அறைக்கு அவனை வரவழைத்து ஒரு வீட்டில் டிரைவர் வேலைக்கு சேர்த்து விட்டேன். சில வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து சம்பாதித்து வந்தான். இடையில் அவன் வேலை பார்த்த வீட்டு பெண்ணையே காதலித்து இருக்கிறான்.

விஷயம் பெண்ணின் அப்பாவிற்கு தெரிய வந்ததும் முதலில் எதிர்த்து வந்தவர் இவர்களின் காதலின் தீவிரம் தெரிய வந்ததும் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார். அத்துடன் எனக்கும் அவனுக்குமான தொடர்பு நின்று விட்டு இருந்தது.

சென்ற வருடம் நான் மீண்டும் வாஞ்சூர் நண்பர்களுடன் சரக்கடிக்க பாருக்கு சென்றால் அங்கே இவன் சப்ளையராக வந்து ஆர்டர் கேட்டான். பிறகு என்னைப் பார்த்தவன் சத்தமின்றி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். விரட்டிச் சென்று பிடித்து "என்னடா எப்படி இருக்க வேண்டியவன் நீ ஏன் இங்கு சப்ளையாராக வந்தாய் என்ன ஆனது" என்று கேட்டால் அழ ஆரம்பித்து விட்டான்.

பிறகு சமாதானப்படுத்தி இரண்டு ரவுண்டு அவனை சாப்பிட வைத்ததும் தான் உண்மை வெளிவந்தது. இந்த பையன் அந்த வீட்டில் ஒழுங்காக வேலை பார்த்து வந்தவன் சபலம் காரணமாக அந்த வீட்டு பெண்ணின் அம்மா குளிக்கும் போது எட்டிப் பார்த்து இருக்கிறான்.

இதை கண்டுபிடித்த அந்த அம்மா தன் வீட்டுக்காரனிடம் சொல்லி விட வாஞ்சூரானை வீட்டை விட்டு அவர் அடித்து விரட்டி விட்டாராம். ஒரு வீட்டில் மாப்பிள்ளையாக போக வேண்டியவன் சபலத்தினால் வாழ்க்கையை இழந்து மீண்டும் சப்ளையராக புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தால் அவனை வெளங்காதவன் என்று சொல்லாமல் என்ன சொல்வது.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment