Sunday 2 August 2015

முதிர்கண்ணன்கள் - பழசு 2013

சென்னையின் பேச்சிலர் தங்கும் இடங்களில் நாம் விதவிதமான மனிதர்களை சந்திக்க நேரிடும். புதிதாக சென்னைக்கு வந்து வேலை தேடும் பட்டதாரிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டு இருக்கும் விருச்சிககாந்த்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக தன்கையே தனக்குதவி என 40 வயதிலும் திருமணமாகாமல் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் முதிர்கண்ணன்கள் என வெரைட்டி, வெரைட்டி கதாபாத்திரங்கள் நிறைந்த வாழ்க்கை அது.


இன்றைய கட்டுரையில் நாம் பார்க்கப் போவது இந்த முதிர்கண்ணன்கள் பற்றி தான். எந்த ஹீரோயிசமும் பண்ணாத வாழ்வின் நிஜ ஹீரோக்கள் அவர்கள் தான். சிறுவயதிலேயே அப்பன் காசில் பைக் வாங்கி ரவுசு விட்டு ஹீரோயிசம் காட்டும் அரைவேக்காடுகள் வாழும் இந்த சென்னையில் கண்ணுக்கு தெரியாத தியாக உருவங்கள் முதிர்கண்ணன்கள் தான்.

முதலில் ஆளாக நாம் பார்க்கப் போவது சுந்தரேசனைப் பற்றி. அவரது ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல். என்னுடன் 2001 காலகட்டத்தில் ரூம்மேட்டாக தங்கியிருந்தவர். அப்பொழுது அவருக்கு 35 வயதிருக்கும். குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

ஐடிஐ முடித்தவர் என்பதால் சம்பளம் குறைவு தான். ஆனாலும் கிடைத்த சம்பளத்தை பெருமளவு ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு சொற்ப காசில் தான் சென்னையில் காலம் தள்ளுவார். காலை 10 மணி வேலைக்கு 7 மணிக்கே கிளம்ப வேண்டும். இரவு 10 மணிக்கு தான் திரும்ப வருவார். நாங்கள் எல்லாம் துணி துவைக்க ஆள் வைத்திருந்த போதும் அந்த காசையும் மிச்சப்படுத்த வேண்டி சொந்தமாகவே துவைத்துக் கொள்வார்.

ஊரில் நிறைய பேர் 100பவுன் நகையுடன் பொண்ணு தர காத்திருந்தும் வீட்டோடு மாப்பிள்ளையாக விருப்பமில்லாமல் குடும்பத்தின் நலன் வேண்டி எல்லாத்தையும் புறக்கணித்தவர். சனி இரவு நடக்கும் பார்ட்டியில் குடித்து விட்டு புலம்பும் போது தான் ஒரு வயது வந்த ஆண், பெண் துணையின்றி வாழ்வது சிரமம் என்பது புரியும்.

பிறகு நான் அந்த அறையிலிருந்து வெளியே வந்து விட்டேன். பத்து வருடம் கழித்து சென்ட்ரலில் அவரை சந்தித்தேன். ஆளே மாறியிருந்தார். முன்வழுக்கை விழுந்து கொஞ்சம் தொப்பை வேறு போட்டிருந்தார். பக்கத்தில் இருந்த பாரில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

துபாயில் வேலை செய்வதாகவும் இரண்டு தங்கைகளுக்கு திருமணமாகி விட்டது எனவும் கடைசி தங்கையின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வேண்டி சென்னை வந்ததாகவும் கூறினார். அடுத்த வருடத்தில் கண்டிப்பாக தனக்கு திருமணம் என்றும் கூறினார்.

எனக்கு பெருமையாக இருந்தது. எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் சற்றுகூட சலனப்படாமல் தங்கைகளுக்கு திருமணம் செய்து கொண்ட பின்பே தனக்கு திருமணம் என உறுதியாக இருந்த அவர் எனக்கு ஹீரோவாகவே தெரிந்தார்.

அடுத்தவர் நான் பணிபுரிந்த கம்பெனியில் சமையற்காரராக கேரளாவில் என்னுடன் பணிபுரிந்த தமிழர். மதுரைக்காரர். மலேசியாவில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து குடும்பத்தை கறையேற்றியவர். ஆனால் தனது இளமையை தொலைத்தவர். ஊரில் சொந்த வீடு கூட இருந்தது.

தம்பியை படிக்க வைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்து வீடு கட்டி முடித்ததும் வயது தாண்டியிருந்தது. இனிமேல் எங்க திருமணம் செய்வது என யோசித்து அந்த எண்ணத்தையே கைவிட்டவர். இரவானால் எங்களோடு தான் குடிப்பார். குழந்தை மனசுக்காரரான அவர் குடித்ததும் செய்யும் காரியங்கள் சிரிப்பை வரவழைக்கும். தனக்கு திருமணமாகவில்லையே என்ற வருத்தம் சிறிதும் இல்லாத நல்ல மனசுக்காரர்.

உண்மையில் நாம் நினைத்துக்கொண்டிருப்பது பெண்கள் தான் உணர்ச்சி மயமானவர்கள், குடும்ப பொறுப்பு உள்ளவர்கள், ஆண்கள் எல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். பொறுப்பற்றவர்கள். ஆனால் எத்தனை ஆண்கள் சென்னையில் கிடைக்கும் சிறு சம்பளத்திற்காகவும் வாய்ப்புக்காகவும் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களது ஆசாபாசங்களை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.

அவர்கள் போற்றப்பட தக்கவர்கள். ஆனால் அவர்கள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றசாட்டு அவர்கள் குடிகாரர்கள். சிகரெட் பிடிப்பவர்கள். இவை இரண்டும் தான் ஒருவரின் ஒழுக்கத்தின் அளவீடா. குடித்து விட்டு வம்பு வளர்க்கிற ஆளை விட்டு விடுங்கள். இவ்வளவு ஏக்கத்தையும் வருத்தத்தையும் மனதில் வைத்துக் கொண்டு சற்று நேர ரிலாக்சுக்காக குடித்து விட்டு வருபவர்களை எவனும் மனிதனாகவே மதிப்பதில்லை.

ஆனால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் எல்லா துர்குணங்களும் உள்ள ஒருவனை கொண்டாடும் சமூகம் இது. உதாரணம் வேண்டுமா? காஞ்சியில் விக்ரகத்தின் முன் பெண்களை புணர்ந்த அர்ச்சகர் குடிக்கும் பழக்கம் சிகரட் பழக்கம் இல்லாதவர். நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனால் அந்த புண்ணியவான்கள் செய்த காரியம் என்ன .

இது போல் குடும்பத்திற்காக இளமையை அழித்துக் கொண்டு கடமையில் கண்ணாக இருக்கும் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. கும்பிடப் படவேண்டியவர்கள்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment