Sunday 2 August 2015

கையேந்திபவன்கள் - பழசு பிப்ரவரி 2013

சென்னைக்கு வந்த புதிதில் என் பட்ஜெட்டுக்கு பசியாற்றியது கையேந்திபவன்கள் தான். 1997ல் அப்ரென்டிஸ் படித்த காலக்கட்டத்தில் எனக்கு மாத ஊக்கத்தொகை ரூ.580/- தான். ஹாஸ்டல் இலவசம். மேற்கொண்டு வீட்டிலிருந்து அப்பா பணம் கொடுத்து அனுப்புவார்.


ஆனால் அந்த சமயம் எனக்கு சென்னையில் சினிமா பார்ப்பது பெரிய வேலையாக இருந்ததால் 10 நாட்களிலேயே கையிருப்புகள் கரைந்து விடும். பிறகு கையேந்தி பவன்களிலும் ஐசிஎப் திருமண மண்டபங்களிலும் தான் மாதம் ஓடும்.

அதிலும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சுவை நம்மை கட்டிப் போடும், அவற்றில் எனக்கு கிடைத்த அனுபவங்களை இனி பார்க்கலாம். இன்று கூட சாப்பாட்டு நேரம் வெளியில் இருந்தால் முக்கால்வாசி கையேந்தி பவன்களில் தான் சாப்பிடுவேன். சில நேரம் மட்டுமே ஹோட்டல்கள்.

அப்ரெண்டிஸ் காலகட்டத்தில் காலையில் 7மணிக்குள் இன்டைம் கார்டு அடிக்க வேண்டும். அதற்காக காலையில் சாப்பிடாமல் அரக்க பரக்க கிளம்பி வந்து கார்டு அடித்து விட்டு ப்ரேயர் முடிந்ததும் பக்கத்தில் இருக்கும் கையேந்தி பவனுக்கு தோசை சாப்பிட வருவோம். தோசை 3 ரூபாய் தான். திருப்தியாக சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்வோம்.

மாசக்கடைசியில் தான் பில் செட்டில் செய்வோம். இன்று அந்த இடத்தில் இருந்த கடைகளெல்லாம் அகற்றப் பட்டு விட்டன. இன்று அந்த வழியில் செல்லும் போது நினைவுகள் எல்லாம் எனக்கு பின்னோக்கி செல்லும்.

வேலைக்கு செல்வதற்காக நான் 2001ல் சென்னைக்கு மீண்டும் வந்து இறங்கிய போது எனக்கு சம்பளம் 1800 ரூபாய். தங்குமிடம் கம்பெனி கொடுத்து விட்டது. ஆனால் அந்த சமயத்தில் தண்ணியடிக்கும் பழக்கம் வேறு தொற்றிக் கொண்டது. இந்த சம்பளத்தில் இவ்வளவையும் சமாளிக்க வேண்டும்.

பிறகென்ன மூன்று வேளையும் கையேந்திபவன் தான். அப்பொழுது காசி தியேட்டருக்கு எதிர் ரோட்டில் உள்ள கையேந்திபவன் தான் இரவு உணவுக்கு நான் செல்லும் இடம். இட்லியும் கருவாட்டு குழம்பும் சரியான காம்பினேஷன். பத்து இட்லிக்கு மேல் உள்ளே இறங்கும், ஆனால் பத்து ரூபாய் தான் செலவாகியிருக்கும்.

அதே போல் மதிய உணவுக்கு அசோக் பில்லர் பக்கத்தில் இருந்த கையேந்திபவன்கள் தான் இலக்கு. அன்லிமிட்டெட் சாப்பாடு 15 ரூபாய் தான். மே மாச மொட்டை வெயிலில் நின்று சுடச்சுட சாப்பாட்டில் மீன் குழம்பு ஊற்றி சாப்பிடுவது இருக்கே, உலகில் இதற்கு ஈடுஇணையாக எந்த டிவைன் சாப்பாடும் இருக்க முடியாது.

பிறகு சில வருடங்களில் மாநகராட்சி அந்த கையேந்திபவன்களை காலி செய்து விட்டது. மறுபடியும் சாப்பிட இடம் கிடைக்காமல் சில நாட்கள் அலைந்து கேகேநகர் செல்லும் சாலையில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டுக்கு எதிரில் இருந்த கையேந்திபவன்களுக்கு வாடிக்கையாளரானேன்.

அங்கு தோசையும் ஆப்பாயிலும் தான் ஸ்பெசல். சுடச்சுட தோசை மீது கறிக்குழம்பு ஊற்றி அதன் மேல் ஆப்பாயிலை வைத்து இரண்டையும் சமமாக பிய்த்து சாப்பிட்டால் ஆஹா. இதற்கு ஈடுஇணை எதுவும் இருக்க முடியாது.

2004ல் டில்லிக்கு சென்ற போதும் காலை சாப்பாடு கையேந்திபவனில் கச்சோரி தான். தொன்னையில் இரண்டு கச்சோரி வைத்து நடுவில் ஒட்டையைப் போட்டு அதனுள் இனிப்பு கார சட்னிகளை விட்டு ஊற வைத்து அடித்தால் தொன்னையில் தெரியும் பாருங்க அதுதான் கடவுள்.

அதுபோல 2005ல் திருவனந்தபுரத்திற்கு மாற்றலானேன். அங்கும் ஒரு கடையை காலை சாப்பாட்டிற்கு பிடித்தேன். அங்கு ஸ்பெசல் புட்டும் இதர சைட்டிஷ்களும் தான். பெரிய தட்டில் புட்டு வைத்து அதன் மேல் கடலைக்கறி ஊற்றி அதனுடன் தேங்காய் எண்ணெய்யில் பொறித்த டிபிக்கல் கேரளா அப்பளம் வைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய்யில் போட்ட ஆம்லெட் வைத்து மறுபுறம் கட்டன் சாயாவை வைத்து அடித்தால் சாயந்திரம் வரை பசிக்காது.

திருமணம் ஆகும் வரை எனக்கு வழக்கமான சாப்பாடுகள் கையேந்தி பவனில் மட்டுமே அமைந்தது. எவ்வளவு சம்பளம் உயர்ந்த போதிலும் நான் இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

இப்பொழுது கூட வீட்டம்மா ஊருக்கு சென்றால் சந்தேகமின்றி என் சாய்ஸ் கையேந்திபவன் தான்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment