Tuesday 1 November 2022

ஆந்திர ருசி - அமர்க்களம்

 உணவு வகைகளில் ஆந்திராவுல விஜயவாடா, குண்டூர், தெனாலி ஏரியாவுக்கு என தனி சுவையும் தனித்துவ செய்முறையும் உண்டு. எனக்கு எப்பவும் சிறுநகரங்களில் உணவருந்த பிடிக்கும். நகரங்களின் ஆடம்பர உணவகங்கள் மீது ஒவ்வாமை உண்டு.

நம்ம ஊர்ப்பக்கம்னா வலங்கைமான், குடவாசல் பக்கம் இருக்கும் பாரம்பரிய கடைகளில் அற்புத சுவையும் அனுபவமும் கிடைக்கும். அதுவும் அதிகாலை கிளம்பி க்ளப்பு கடைகளில் போய் உக்கார்ந்தா, நெற்றி முழுக்க பட்டைய போட்டுக்கிட்டு சப்ளையர் வந்து என்ன வேணும்னு கேக்கும் சமயம் சுப்ரபாதமோ கந்த ஷஷ்டி கவசமோ பாடாவதி ஸ்பீக்கர்ல கத்தனும்.
இட்லி ஆவியும், சாம்பிராணி புகையும் கலந்து ஒரு மணம் நாசியை துளைக்கனும். சுடச்சுட வாழையிலையில் இட்லியை வைத்து கெட்னி சட்னியும், பக்கவாட்டுல பாசிப்பருப்பு சாம்பாரும் வைத்து இரண்டுக்கும் நடுவால பிய்த்த இட்லியை ரெண்டு பொரட்டு பொரட்டி வாய்ல வைக்கும் போது அதிக சூடு தீய்த்தாலும் அதைக் கடந்து ஒரு சுவை நாவுல படரும் பாருங்க.
தக்காளி, அன்னைக்கு பத்தாயிரம் ஓவா சம்பாதிச்சா கூட இந்த திருப்தி கிடைக்காது. முக்கியமா முதல்நாள் மகாதியானத்துல ஈடுபட்டிருக்க கூடாது. ஏன்னா சரக்கு நாவின் சுவை மொட்டுகளை மழுங்க வைக்கும். ரெண்டு நாள் சரக்கடிக்காம அதுக்கப்புறம் இந்த மாதிரி சாப்பிட்டா கூடுதலா சுவைக்கும்.
அதே மாதிரி கேரளாவுல மண் சுவர் எழுப்பிய குடிசையில் நடக்கும் சிறு உணவகத்தில் காலைல சாப்பிட உக்கார்ந்தா அவிச்ச புட்டின் மணமும், அதிகாலை குளிரும், சுத்தமான காற்றின் ஜீவனும் பேக்கிரவுண்ட்டில் யேசுதாஸ் குரலில் ஐயப்பன் பாட்டும் மனசை அப்படியே பறக்க வைக்கும்.
அப்ப தைத்த உலர் தாமரை இலைல சுடச்சுட நிறைய தேங்காய் போட்டு அவித்த புட்டை வைத்து கூடவே சரியான சிவப்பு நிறத்தில் செய்யப்பட்ட கடலைக்கறி வைத்துக் கொண்டு சுடச்சுட கட்டன் சாயாவையும் கூட சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கும் திருப்தி அந்த நாளெல்லாம் சிறப்பாக்கும்.
அதே மாதிரி ஆந்திராவுல குண்டூர் பக்கம் இருக்கும் சிறு உணவகத்திற்கு போய் காலைல உக்கார்ந்து சுடச்சுட பெசரட்டு வாங்கி கூடவே ஒரு வடைய வச்சிக்கிட்டு காரமான மிளகாய் போட்டரைத்த துவையல், வேர்க்கடலை போட்டு அரைத்த கெட்டி தேங்காய்ச் சட்னி, தூக்கலான காரம் சேர்த்த கத்திரிக்காய் சாம்பார் வைத்து பின்புலத்தில் ஏடுகொண்டலவாடா னு பாட்டு ஒலிக்கும் போது பெசரட்டை பிய்த்து சட்னிலயும் துவையல்லயும் தோய்த்து ஒரு வாய் சாப்பிட்டு பாருங்க.
உணவின் ருசியை அழகூட்டுவது மசாலாப் பொருட்கள் மட்டுமல்ல, காலமும் சூழலும் கூட தான். அதே மாதிரி கத்திரிக்காய் பஜ்ஜி குண்டூர்ல ஒரு கடையில் கிடைக்கும் முதலில் கத்திரிக்காயை லைட்டா நெருப்புல வாட்டி நடுவால நான்கா கீறி அதன் நடுவில் எள்ளு, வேர்க்கடலை, துருவிய தேங்காய், மிளகாய் சேர்து வதக்கி கொரகொர ன்னு அரைத்த மசாலாவை நிரப்பி அந்த கத்திரிக்காயை பஜ்ஜி மாவுல முக்கி எடுத்து பஜ்ஜி போட்டு தருவானுங்க. வெஞ்சனமா சிகப்பு மிளகாய்ப்பழம் போட்டரைத்த தேங்காய் துவையல்.
சுடச்சுட கத்திரிக்காய் பஜ்ஜியை பிய்த்து சட்னியில் பெரட்டி சுவைச்சா, த்தா பிரியாணிலாம் பத்தடி தள்ளி தான் நிக்கனும். என்னா சுவை என்னா சுவை.
விஜயவாடாவுல ஒரு கடைல நண்டு பிரியாணி செமயா இருக்கும். தனியா பிரியாணி அரிசியை மசாலாப் பொருட்கள், புதினா, மல்லி உடன் சேர்த்து அரைவேக்காட்டில் வேக வைத்துக் கொள்ளனும். மசாலா தடவிய நண்டை எண்ணெயில் பொரித்து எடுத்து ஒரு குட்டிப் பானையில் கீழ மசாலாவும் நண்டும் வைத்து மேலே வேகவைத்த சாதத்தை நிரப்பி மூடி தம்முல வைத்து எடுத்தா ஒவ்வொரு சோற்றிலேயும் நண்டு மசாலாவின் மணம் பரவி அற்புதமா இருக்கும்.
இதையும் தமிழ்நாட்டு பக்கம் உணவகங்களில் ருசித்ததில்லை.
குண்டூர் பக்கம் நெடுங்காலமாக நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய உணவகங்களில் மதியம் புல் மீல்ஸ் க்கு போய் உக்கார்ந்தா பெரிய வாழையிலை போட்டு சுடச்சுட பொன்னி சோற்றைப் போட்டு கொஞ்சமா பருப்புப் பொடியும் நெய்யும் விடுவான். நல்லா பிசைஞ்சி மறுகையில் பொரித்த அப்பளத்தை வைத்துக் கொண்டு ஒரு வாய், பருப்பு பொடி சோறு ஒரு வாய் பொரித்த அப்பளம்னு சாப்பிட்டு பார்த்தா ருசிக்கு அடிமையாகி எல்லா சோத்துக்கும் பருப்பு பொடியையே கேட்டுட கூடாது.
அடுத்தது பொப்பட்டு வைப்பானுங்க, அது போளி, அளவான இனிப்புடன் நெய்ல பொரிச்சது, அதீத சுவை காரணமா இன்னும் ரெண்டு கேக்கலாம் போல இருக்கும், ஆனா அவசரப்படக் கூடாது. அப்புறமா சோத்தைப் போட்டு கோங்குரா சட்னி போடுவானுங்க, நல்லெண்ணெய் விட்டு பிசைஞ்சி அடிச்சா செம செம. கூட வெஞ்சனமா முன்னகாயா மசாலா கூறா எடுத்துக்கிட்டா செம காம்பினேசன்.
அப்புறம் சோத்தைப் போட்டு பப்பும் நெய்யும் போட்டுக்கனும். வெஞ்சனமா காக்கரகாய வேப்புடு, கூடவே தொண்டக்காயா வேப்புடு. இதுவே போதும்னு தோணும், ஆனாலும் அத்துடன் முடிக்க வேண்டிய விஷயமா அது.
மறுக்கா சோறு போட்டு சாம்பாரை ஊத்தி அடிக்கனும். கூட பங்காளா தும்பா வேப்புடு அது வேறொன்னுமில்லை உருளைக்கிழங்கு வறுவல். அதன் காரமே சிறப்பு. சாம்பாருக்கும் வறுவலுக்கும் பாந்தமா இருக்கும். அப்புறம் ரசம் முடிச்சி கெட்டித் தயிருக்கு வந்தோம்னா வயித்துல இடம் இருக்காது.
கண்டிப்பா பெல்ட்டை லூஸ் பண்ணிட்டு ஆவக்காய் ஊறுகாயை துணைக்கு வச்சிக்கிட்டு விரல்களை சப்பி சாப்பாட்டை முடிச்சோம்னு வைங்க, அளவில்லா ருசிக்கும் அதிகமான சோத்துக்கும் ரெண்டு நாளைக்கு பசிக்காது.
க்ளாஸா ஒரு விஷயம் இருக்கும், பச்சை மிளகாயின் நடுவால கீறி அதில் கல்லு உப்பு வைத்து எண்ணெயில் பொரித்து டப்பாவில் சேகரம் பண்ணி வச்சிக்கனும். இந்த மீல்ஸ்ல பப்பு சாப்பிடும் போது எடுத்து ஒரு கடி கடிச்சா கூடுதலா நாலு கவளம் உள்ள இறங்கும்.
எழுதும் போதே எச்சி ஊறுது. அங்கேலாம் போய் சாப்பிட்டு ரொம்ப வருசமாச்சி. இன்னொரு முறை இதுக்காவே போய் சாப்பிட்டு மகிழனும்.
இந்த பொறப்பு தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது

Tuesday 14 April 2020

உறவுகள் - என் பார்வையில்

திருமணத்திற்கு முந்தைய ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுகளில் அண்ணன் தங்கை, அக்கா தம்பி பாசம், முறைப் பொண்ணு முறைப் பையன் காதல் மாதிரியே நெகிழ்ச்சியான உறவு ஒன்னு இருக்கு. இதுக்கு உருவமோ வரையறையோ தர முடியாது.
றெக்க படத்துல சின்ன வயசு விஜய் சேதுபதிக்கும் மாலாக்காவுக்கும் ஒரு நட்பு பூக்கும்ல, மத்த பசங்க ஏத்தி விட்டதும் விஜய் சேதுபதியா நடிக்கும் பையன் “மாலாக்கா ஐ லவ் யூ” ன்னு சொல்வான்.
மாலா அக்கா வெக்கப்பட்டு “வாடா அடிக்கிறேன்”னு பாய்வா, அந்த நட்பு தான் நான் சொல்ல வர்றதும்.
அக்கா அக்கா னு நாம அவ கூட தான் சுத்துவோம், அவ நமக்கு கத்தும் கொடுப்பா, அடியும் கொடுப்பா, நம்ம கூட தான் கோயில் குளம் பம்புசெட்டு னு அலைவா, யாரையும் மறைமுகமா லவ் பண்ணும் போது கடிதங்கள் கொடுக்கவும் வாங்கவும் நம்மளைதான் அனுப்புவா.
கொஞ்ச காலம் கழிச்சி அவளுக்கு சம்பந்தமேயில்லாத வேற ஊர்ல இருக்கும் ஒரு கோவக்கார அம்மாஞ்சிக்கு கல்யாணம் பண்ணிக் அனுப்பி வச்சிருவானுங்க. கொஞ்ச நாள் என்ன செய்றதுனு தெரியாம அக்காவின் இழப்பை நினைச்சி வருந்திக்கிட்டு இருப்போம்.
சில நாட்களிலேயே மாலா போனா நீலா ன்னு இன்னொரு அக்கா பின்னாடி சுத்துவோம், அந்தக்காவும் கோயில் குளம் பம்புசெட்டு னு நம்ம கூட தான் சுத்தும். அதையும் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு நம்மை தாடி முளைக்காத தேவதாஸா மாத்தி வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை.
இந்த அனுபவத்தை கடந்து வராதவர்கள் வாழ்க்கையில் வெகு சொற்பமே, குறைந்தபட்சம் ஒரு மாலாக்காவையாவது நாம கடந்து வந்திருப்போம். அந்த மாதிரி ஒரு செட்டு அக்காகள் பற்றிய நினைவுத் தொகுப்பு தான் இது.
இந்த கட்டுரையின் முக்கிய சிக்கலே ஊர்ப் பெயரையும் உண்மையில் குறிப்பிட முடியாது. நாம ஊர்ப்பெயர் சொன்னா நிறைய பேருக்கு விவரம் தெரிய வரும். அதனால் பூடகமாவே பேசிக்குவோம்.
என் உறவுக்கார கிராமம் அது. மாமா வீட்டுக்கு பக்கத்துல இரண்டு அக்காகள் இருந்தாங்க. எப்பவும் ஒன்னு மன்னா தான் திரியுங்க. குளிக்க போகும் போதும் சரி, வயலுக்கு போகும் போதும் சரி, கடலை ஆயும் போதும் சரி, தேங்கா உரிக்கப் போகும் போதும் சரி. ஒன்னாத்தான் போவாங்க, வருவாங்க.
நான் முழு ஆண்டு விடுமுறையில் அந்த கிராமத்தில் பத்து நாட்கள் தங்குவதுண்டு. எனக்கு ஏழு எட்டு வயசு இருக்கும் போது நடந்தது இது. எப்ப ஊருக்கு போனாலும் என்னையும் அவங்க கூட சேர்த்துக்குவாங்க. பம்புசெட்டுல குளிக்கப் போகும் போது என்னை பெரிய கிணத்துல தள்ளி விட்டு திணறும் போது பாவாடை கட்டியபடி கிணற்றில் குதித்து அசால்டா தலைமயிரை புடிச்சி நாலு லாட்டு லாட்டி நீச்சலடிக்க கத்துக் கொடுத்தா ஒரு அக்கா.
தலைக்கு எண்ணெய் தேய்ச்சிக்கிட்டு பம்புசெட்டுல வந்து கையாந்திரை இலைய பறிச்சி அதை அங்கே கல்லைக் கொண்டு அரைச்சி தலைக்கு பூசி குளிப்பாங்க. எனக்கும் தேய்ச்சி விடுவாங்க. அப்படி குளிச்சிட்டு வரும் போது முடியெல்லாம் பட்டு மாதிரி பளபளக்கும், ஷாம்புலாம் பத்தடி தள்ளி தான் நிக்கனும்.
செடியில் இருந்து கடலைய பிரிக்கும் வேலைய செய்யும் போது என்னைய கூட்டிக்கிட்டு போவாங்க. நான் அவங்க கடலைய உருவி எடுக்க நான் பேசிக்கிட்டே கடலைய உடைச்சி சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன்.
அந்த கூட்டத்துல ஒரு அண்ணன் என்னை கூப்பிட்டு பால்பன்னு வாங்கிக் கொடுத்து “அக்காகளுடன் சேர்ந்து சாப்பிடுடா” னு அனுப்புவார். அந்த ஊர்ல ஒரு பால்பன் சும்மா அரைக்கிலோவுக்கு மேல இருக்கும்,
விகல்பமே இல்லாம போய் அக்கா சாப்பிடுவோமா, “அந்த அண்ணன் வாங்கிக் கொடுத்துச்சி” என்பேன். மடேர்னு மண்டைல கொட்டிட்டு “யார் கொடுத்தாலும் வாங்கிடுவியா” னு திட்டும், அப்புறம் ரகசியமா அந்த அண்ணன் பாக்காத மாதிரி திங்கும்.
வேலைய முடிச்சிட்டு குளிச்சிட்டு வந்தவுடன் அவங்க வீட்டு வாசல்ல உக்காந்து பல்லாங்குழி, ராஜா ராணி, நொண்டி, பரமபதம்லாம் ஆடுவோம். செம ஜாலியா இருக்கும். சாப்பிடுற நேரத்துக்கு ஆத்தா வந்து கத்திட்டு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்.
நடந்தே ஆறு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் அய்யனார் கோயிலுக்கு போய் விளக்கு போட்டு வருவோம். வரும் போது காலெல்லாம் வலிக்கும். வலிக்குதுக்கா ன்னு சொன்னா, என்னை வழியில் வரும் மாட்டுவண்டியில் உக்கார வச்சி ரெண்டு பேரும் நடந்துகிட்டே வருவாங்க. வழியில் இருக்கும் கரும்பு கொல்லையில் இருந்து கரும்பை உடைச்சிட்டு வந்து தின்னுக்கிட்டே ஊருக்கு வந்து சேருவோம்.
அந்த இருவரின் புரிதல் எனக்கு ஆச்சரியமாவே இருக்கும். இவ என்ன நினைக்கிறா ன்னு அவ சொல்லுவா, அவ கோச்சுக்குவாளே ன்னு இவ சில காரியத்தை செய்ய மாட்டா, அவளுக்காக பக்குவமா சமைச்சி இவ எடுத்துட்டு வருவா, விளையாடும் போது இவளுக்காக அவ விட்டுத்தருவா.
அந்த அக்காக்களில் ஒருவருக்கு திருமணம் நிச்சயமாச்சி, கல்யாண தினத்தப்போ நானெல்லாம் கறிசோறு ஆர்வத்திலேயே சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருந்தேன். அந்த ஊர்ல பெரும்பாலான கல்யாணங்கள் வீட்ல தான் நடக்கும்.
கல்யாணம்லாம் முடிஞ்சி பொண்ணு மாப்பிள்ளை கூட மாட்டு வண்டில போகுது. வீட்ல இருந்த இன்னொரு அக்காவுக்கு திடீர்னு ஒரு வீரம் வந்து என்னையும் அழைச்சிட்டு ஓடுறா, வயல் பாக்கல, வாய்க்கால் பாக்கல விழுந்து எந்திரிச்சி ஓடுனோம். அரைமணி நேரத்துல அவங்க போறது தெரிஞ்சது.
அந்தக்கா பேரைச் சொல்லி இங்கிருந்து கத்த வண்டி நின்னுடுச்சி, அங்கிருந்து அவள் ஓடி வர இவள் ஓடிப் போக கட்டிபுடிச்சி அழுது தீர்த்தாங்க. அந்த வயசுல எனக்கு விவரம் புரியல. தேமே ன்னு நின்னுக்கிட்டு இருந்தேன்.
இன்னைக்கு நினைச்சிப் பார்த்தா அந்த அக்காகள் இருவரிடமும் இருந்த பாசம் என்ன, நட்பு என்ன ஒரே நாள்ல வெட்டி விட்டு பிரியிறது என்பது உயிரையே பிச்சித் தர்ற மாதிரில னு புரிஞ்சது.
சமாதானப்படுத்தி இருவரையும் பிரிச்சி விட்டு மாட்டு வண்டி போகப் போக நின்னுக்கிட்டே இருந்தோம். வண்டி கண் மறைஞ்சதும் நாங்க திரும்பி நடந்து வந்தோம். அப்போ அந்த அக்கா சொன்னுச்சி, “பொண்ணுங்க வாழ்க்கையே அவ்வளவு தாண்டா, இனிமே அவள் வட்டமே வேற, அவளை என்னால் பார்க்கவே முடியாது” என.
நான் கூட விளையாட்டுத்தனமா தான் சொல்றாளோ ன்னு நினைச்சேன், ஆனால் அவள் சொன்னது தான் நடந்தது. கல்யாணமாகிப் போன பெண், மாசமாகி வளைகாப்பு முடிஞ்ச பிறகு பிரசவத்துக்கு தான் தாய் வீட்டுக்கு வந்தா.
அதுக்கு சில மாதம் முன்பு இந்த அக்கா கல்யாணமாகி சென்னைக்கு போயிட்டா, எனக்கு விவரம் தெரிஞ்சி பதினைந்து வருடங்கள் வரை அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திச்சிக்கவே இல்லை. அதுக்கப்புறம் நான் அந்த ஊருக்கு போகவே இல்லை,
இருவரின் கல்யாணத்துக்கு பிறகு இவ தாய் வீட்டுக்கு போனா அவ வீட்டுக்கு போய் விவரம் விசாரிச்சிட்டு வருவா, அதே மாதிரி அவ வந்தா இவ வீட்ல போய் விவரம் விசாரிச்சிட்டு வருவா.
அந்த வயசுல எனக்கு, எங்களுக்கிடையே இருந்த நட்பின் ஆழம் புரியல, விவரம் புரிந்த வயசுல நட்பை பேணிக்காக்கவும் முடியல. கல்லூரி காலங்களில் தூக்கம் வராத இரவுகளில் நிறையவே வருந்தியிருக்கிறேன், இந்த அழகான நாட்கள் நம்ம வாழ்க்கையில் திரும்ப வராதா ன்னு.
எத்தனை எத்தனை கிராமத்து பெண்களின் நட்புகள் இப்படி கதறக் கதற மறுக்கப்பட்டு இருக்கும்னு யோசிச்சி பார்த்தா துக்கம் தொண்டய அடைக்குது.

#tccontest2020

Thursday 18 October 2018

சண்டைக்கோழி 2 - சினிமா விமர்சனம்

ட்ரெண்ட் எனப்படுவது பத்து வருசத்துக்கு ஒரு முறை மாறிக்கிட்டே இருப்பது. ட்ரெண்டுக்கு ஏத்த மசாலாப் படங்களின் லாவகம் 80களில் எஸ்.பி. முத்துராமனுக்கு வசப்பட்டது, 90களில் கே.எஸ். ரவிக்குமாருக்கு வசப்பட்டது. 2000த்தில் லிங்குசாமிக்கு கைவந்த கலையானது.


80களில் சாதித்த எஸ்.பி. முத்துராமன் 90களில் தடுமாறினார். கே.எஸ். ரவிக்குமாரும் அவர் சாதிச்ச காலம் முடியும் நேரத்தில் தடுமாறினார். இப்போ லிங்குசாமிக்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தடுமாற்றம்னா ட்ரெண்ட் மாறிடுச்சினு அர்த்தம். அப்டேட் பண்ணாலும் பழைய வேகம் இருக்காது. 

இப்போ சண்டைக்கோழி 2க்கும் அது தான் நடந்துள்ளது. கரெக்ட்டான மசாலா பேக்கேஜ். ஆனால் 2000த்தின் ட்ரெண்ட். இப்போ பார்க்கும் போது எதுவும் குறையா தெரியல. ஆனால் சிலாகிக்க ஒன்னுமில்லை. அதுவும் வடசென்னை பார்த்து அவனவன் அடுத்த கட்டத்துல டியுன் ஆகி நிக்கும் போது போது இரண்டு படி கீழே நிற்கிறது சண்டைக்கோழி 2.


படத்தின் கதைனா மதுரைக்கு மேற்கே இருக்கும் பகுதிகளின் பெரும்பான்மை சாதியின் அதிகாரமிக்க தலைவரான ராஜ்கிரண் வரலட்சுமி குடும்பத்திடம் இருந்து ஹரிகிருஷ்ணனை காப்பாற்றுவதாக வாக்கு கொடுக்கிறார். அவரால் செயல்பட முடியாத சூழ்நிலையில் அவரது மகன் விஷால் அந்த வாக்கை காப்பாற்றினாரா என்பது தான். 

சண்டைக்கோழி 1 படத்தின் பலமே அந்த பேருந்தின் சண்டைக்காட்சியும் விஷாலின் பின்புலம் லாலுக்கு தெரிய வருவதும் தான். அதுவரை விஷால் ஆக்சன் நாயகன் என்பதை அறியாத நாம் இந்த மேஜிக்கை ஏற்றுக் கொண்டதுடன் பெரும் வெற்றியையும் கொடுத்தோம். ரன் படத்துல ஷட்டர் இறக்கி அடிக்கும் காட்சியும் இதே மாதிரி யான விளைவை ஏற்படுத்தியது. 


ஆனால் இது சண்டைக்கோழியின் 2ம் பாகம் என்பதால் விஷாலின் பின்புலம் படம் தொடங்கும் முன்பே தெரிந்து போவதும் அதன் பிறகான காட்சிகள் நாமே அரங்கில் அமர்ந்து யூகிக்கும் அளவு இருப்பதும் தான் நமக்கு அயர்ச்சியை கொடுக்கிறது. 

விஷால் நாற்பத்தி ஐந்து வயசுலயும் பிட்டா நரம்பு புடைக்க வலுவை காட்டும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார். சண்டைக்காட்சிகளில் கடும் உழைப்பை கொடுத்துள்ளார். இதுக்கு மேல எதுனா சொல்லலாமான்னு யோசிச்சிப் பாக்குறேன் ஒன்னும் நினைவுக்கு வர மாட்டேங்குது. ஏற்கனவே துப்பறிவாளன், இரும்புத்திரை னு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்ததால் இந்த படம் எந்த விளைவையும் அவர் மார்க்கெட் நிலவரத்தில் ஏற்படுத்தாது.

ஜெனிலியா டைப் லூசுப் பெண் கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு. தொடரி படத்துலயும் இதே மாதிரி தான். ஆனால் இதில் புல் மேக்கப்புடன் லூசா குறும்பா நடிக்க முயற்சித்து இருக்கிறார். அவ்வப்போது இவர் குறும்பாய் புன்னகைக்கும் போது வாய்  ஒரு விளைவை காட்டி டரியலாக்குகிறது.

ராஜ்கிரண் அதே டெய்லர், அதே வாடகை. ஒரு மாற்றமும் இல்லை. ராமதாஸ் சில சமயம் வியக்க வைக்கிறார். பல சமயம் சுளிக்க வைக்கிறார். ஹரீஷ் பெராடி போன்ற பெர்பார்மர்களை வீணடித்து இருக்கிறார்கள்.

பிரமாதமா சொல்லும் அளவுக்கு ஒன்னுமில்லை. அதுபோல் பயங்கர கடியுமில்லை. வடசென்னை படத்துக்கு குடும்பத்தோடு போக முடியாத சூழ்நிலையில் இந்த படத்துக்கு நம்பி போகலாம். பக்கா பேமிலி எண்டர்டெயினர்.

வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரம் வித்தியாசமாக எதாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் காஞ்சனா லாரன்ஸ் மாதிரி எப்பவும் சிகப்பு புடவையில் ஆய் ஊய்னு கத்திப் போகிறார். க்ளைமாக்ஸ்ல விஷாலுடன் மல்லுக்கு நிற்கிறார். அவ்வளவு தான், 

நல்லா மொழு மொழுன்னு செம ஆண்ட்டிடா என்னும் கமெண்ட்டு தான் சரியா இருக்கும். டேய் அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைடான்னு கால்ல விழுந்தாலும் ஒரு பய நம்பப் போறதில்லை. என்னா உடம்புடா இது. 

படம் பத்து வருசத்துக்கு முன்பு வந்திருந்தா ஒரு வேளை ப்ளாக்பஸ்டர் ஆகியிருக்கலாம். இப்போதைய ட்ரெண்ட்டுக்கு ரொம்பவே பழசா தெரியுது. கதை சொல்லும் முறை மாறி விட்டது என்பதை இப்போதாவது லிங்குசாமி புரிந்து கொண்டால் சரி.

கடும் வீழ்ச்சிக்கு பின் எழுந்து தடுமாறும் இந்த சமயத்தில் லிங்குசாமிக்கு தேவை ஒரு சூப்பர் ஹிட் படம். ஆனால் இது ஆவரேஜ் என்பது தான் சோகம். ட்ரெண்ட்டு மாறிடுச்சி, நீங்களும் மாறுங்க இயக்குனரே.

ஆரூர் மூனா

Wednesday 17 October 2018

வடசென்னை - சினிமா விமர்சனம்

சுவாரஸ்யமான கதையின் இலக்கணம் ஒன்று இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரஸ்யமான முடிச்சை முன்பாதியில் போடுகிறோமோ அதை விட சுவாரஸ்யமாய் பின்பாதியில் முடிச்சை அவிழ்க்க வேண்டும். நூத்துக்கு 95 பேர் சுவாரஸ்யமாய் முடிச்சை போடுவார்கள். ஆனால் அவிழ்ப்பதில் சொல்லி வைத்த மாதிரி கோட்டை விட்டுவிடுவார்கள்.


உதாரணம் வேண்டுமென்றால் ராசுக்குட்டி படத்தை சொல்லலாம். சித்தப்பா நளினிகாந்தும் அவன் மகன் சூர்யகாந்தும் பாக்யராஜுக்கு எதிராக அப்பா கல்யாண்குமாரிடம் போட்டுக் கொடுத்து முடிச்சைப் போட்டு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பொய் சத்தியம் செய்து வைத்திருக்க ஒரே காட்சியில் அப்பாவிடம் பொய் சொல்லி பைக்கை வாங்கி நளினிகாந்த் வீட்டின் வாசலில் ஒரு ஜபரு காட்டி குழப்பி விட்டு தீர்வை சொல்லியிருப்பார். தெளிவான முடிச்சவிக்கி னா அவர் தான்.

அதே மாதிரி கார்த்தி நடிச்ச சகுனி னு ஒரு படம் ஒன்னுமில்லாத ராதிகாவை மேயராகவும் கோட்டா சீனிவாசராவையும் முதல்வராக்குவார். அதில் முடிச்சை அவிழ்ப்பது கூட சுவாரஸ்யம் தான்னு டயலாக் வேற இருக்கும். ஆனால் படம் பார்க்குறவன் கொட்டாவி விட்டு வழிவான். ஒரு கட்டத்தில் கார்த்தியின் திட்டங்களுக்கான விளக்கமான டயலாக் கூட எழுத முடியாமல் பேக் ட்ராப்பில் பிஜிஎம்மை வைத்து சமாளித்து இருப்பார்கள். இது தான் பார்க்கக் கூடிய படத்திற்கும் பார்க்க முடியாத படத்திற்குமான வித்தியாசம்.


வெற்றி மாறனின் ஆகச் சிறந்த பலமே இந்த முடிச்சை கச்சிதமா போடுவதும் சுவாரஸ்யமா அவிழ்ப்பதும் தான். எங்கு முடிச்சு அவிழ்ந்து சுவாரஸ்யமா மக்களை உக்கார வைக்க வேண்டும் என்பதை சரியாக அறிந்த சினிமா க்ராப்ட்ஸ்மேன் வெற்றிமாறன். 

வெற்றி மாறனுக்கு சிறந்த கதை கூட தேவையில்லை. பாட்டி வடை சுட்ட கதையை மறுபடியும் சுவாரஸ்ய கண்டென்ட் சேர்த்து ரசிக்கும் படி கொடுக்கும் வித்தை அறிந்த மனுசன். அவருக்கு ஒரு நல்ல கதைக்களம் அமையும் போது வடசென்னை மாதிரியான படங்கள் வந்து மக்களின் ரசனைக்கு தீனி போடுகின்றன.

இந்த முதல் பாகத்தின் கதை கேரம் போர்டில் பெரிய அளவில் வெற்றியை ஈட்டி அதன் மூலம் அரசு வேலை பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் தனுஷை காலமும் சூழ்நிலையும் எப்படி உருமாற்றி மண்ணை காவல் காக்கும் அய்யனாராக மாற்றுகிறது என்பதே.


படத்தின் குறை என்பது இந்த படத்தில் இரண்டு படங்களுக்கான கன்டென்ட்டுகள் இருக்கிறது என்பதே. நிறைய காட்சிகள், சம்பவங்கள், மெனக்கெடல்கள் அதிகமாக இருப்பதால் ஆழ்ந்து கவனிப்பதற்குள் ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுகிறது. 

அமீர் எபிசோடு தனியாகவும் அதிலிருந்து தனுஷின் விஸ்வரூபம் வரை தனி எபிசோடாகவும் எடுத்து இரண்டு படங்களாக மக்களுக்கு கொடுத்திருந்தால் இன்னும் ரகளையாக இருந்திருக்கும். ஒரே சமயம் இரண்டு படங்களை தொடச்சியாக பார்க்கிறோமோ என்ற அயர்ச்சியை கொடுத்து விட்டது படம்.

இதை தாண்டி வேறெந்த குறைகளும் படத்தில் கிடையாது. 


தனுஷ் பற்றி என்னத்த சொல்ல வருட ஓட்டங்களின் வரிசைக்கிருமத்தின் படி நடிப்பிலும் தோற்றத்திலும் பின்னி இருக்கிறார் மனுசன்.அப்பாவியாய் கேரம் போர்டு ஆட்டத்தில் தொடங்கி சூழ்நிலையை புரிந்து தீனாவுடன் மோதும் போது ஒரு வளர்ச்சியும், சிறை பகுதியில் புத்தி சாதுர்யத்துடன் சேம் சைடு கோல் போட்டு ஒரு மெச்சூரிட்டியும் நிலத்தின் பால் நடக்கும் அரசியலை புரிந்து எதிர்த்து தலைவனாக உருவெடுக்கும் கள எதார்த்தத்தையும் அளவெடுத்து செய்து சிறப்பித்து இருக்கிறார். 

படத்தின் முதல் டயலாக்கே ஐஸ்வர்யாவுக்கு கூ... என்று சொல்வதில் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் காட்டும் ஜபுரும் முத்தம் கொடுத்து மாட்டிக் கொண்டு சந்திக்கும் கிண்டல்களையும் சீண்டல்களையும் எதிர்கொள்ளும் விதமும் ரசிக்க வைக்கிறது.

ஆண்ட்ரியாவின் அறிமுகமும், படிப்படியாக கவனம்பெறும் அவருக்கான முக்கியத்துவமும் நன்றாகவே இருக்கிறது. துணிச்சலுடன் போட்ல அமீருடன் இருக்கும் காட்சியில் கூடுதலாக கைத்தட்டல் பெறுகிறார். அவருக்கான பின்புலம் எதாவது இருந்திருந்தால் இந்த ஸ்கின்டோன் பெண் ராயபுரத்துல இருப்பதற்கு காரணம் ஒத்துக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். 

சிறைக் காட்சிகளும் நடைமுறைகளும் நிஜத்தை பிரதிபலிக்கிறது. அது நிஜமான நிஜம்னு எனக்கு நல்லாவே தெரியும், அதனால் இந்த காட்சிகளுக்கான மெனக்கெடல்களில் வியந்து போகிறேன்.

ஹோட்டலில் அமீருடன் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், தீனா, பவன் அளவளாவும் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும் ஏ ஒன். அதே போல் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், பவன் போன்றோர் நடிப்பு சிறப்பு.

இன்னும் காதுகளில் படத்தின் பிஜிஎம் ஒலித்துக் கொண்டே இருப்பது சந்தோஷ் நாராயணனின் திறமைக்கு சான்று. 

ராஜீவ் காந்தி கொலையான போது கடைகள் வடசென்னையில் சூறையாடப்பட்டது கூட உண்மையான சம்பவம். ப்ளாக்கர் நண்பன் செல்வின் அவர்களின் தகப்பனார் அவர்களின் ஐஸ் பாக்டரி இதே சம்பவத்தில் திருவொற்றியூரில் அடித்து நொறுக்கப்பட்டது என்பதை முன்பே நான் அறிவேன்.

நிறைய க்ரவுண்ட் ஒர்க், அதை விட நிறைய பேப்பர் ஒர்க், பொருத்தமான காஸ்ட்டிங், குழப்பமில்லாத திரைக்கதை, தனுஷின் திறமையான நடிப்பு, சிறந்த பிஜிஎம் என எல்லா ப்ளஸ்களும் சேர்ந்து ஒரு ப்ளஸ்ஸான படத்தை கொடுத்து இருக்கிறது. 

கண்டிப்பாக தனித்தனியாக நாம் தியேட்டரில் போய் ரசித்து பார்க்க வேண்டிய படம் இது. 

ஆரூர் மூனா

Thursday 13 September 2018

சீமராஜா - சினிமா விமர்சனம்

படத்தோட துவக்கத்தில் வில்லனின் மாப்ளை "நான் யாரு தெரியுமா" ன்னு எஸ்கேயிடம் சவால் விட "நீ யாரா வேணும்னாலும் இரு, எவனா வேணும்னாலும் இரு, ஆனா என்கிட்டயிருந்து தள்ளியே இரு" என்று பஞ்ச் பேசுகிறார். இது தனுஷுக்கான குறியீடு. 


க்ளைமாக்ஸ்ல வில்லன்கிட்ட ஒருவனுக்கு எப்படி நண்பன் தேவையோ அது மாதிரி வில்லனும் தேவை. நீ ஆளக் கூடாதுன்னு நினைச்சோம், ஆனா வாழக் கூடாதுன்னு நினைக்கலையே என்பது மாதிரியான ஒரு பஞ்ச் பேசுகிறார். இது அவரது எதிரிகளுக்கு விடுக்கும் எச்சரிக்கை குறியீடு. இது மாதிரியான குறியீடுகளால் நிறைந்துள்ளது சீமராஜா படம். 

படத்தின் கதை என்னன்னா நாட்டுடமையாக்கப்பட்ட ஜமீன் ஒன்றிற்கு இளவரசனாக இருக்கிறார். மக்கள் பழைய மரியாதை வைத்திருந்தாலும் புது பணக்காரனான லாலுக்கு இந்த மரியாதை உறுத்துகிறது. 

ராஜாவான தந்தை நெப்போலியன் இறந்து போக ராஜாவாகிறார் எஸ்கே. புதுப் பணக்காரனிடம் இருந்து தம் மக்களின் நிலங்களை காப்பாற்றினாரா நாயகியை கைப்பிடித்தாரா என்பதை புத்தம் புதிய காட்சி அமைப்புகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.


சிவகார்த்திகேயன் என்னும் எஸ்கே பெயரை குறியீட்டுடன் தான் போடுகிறார்கள். தன்னைத் தானே பெரிய ஸ்டார் என்று எஸ்கே நம்ப ஆரம்பித்து இருக்கிறார். இது அவருக்கான எச்சரிக்கை. சிவகார்த்திகேயனை குடும்பம், பெண்கள், நண்டு, சிண்டு, குழந்தை குட்டிகள் முதல் ரிட்டையர்டு பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்குதுனா அது பக்கத்து வீட்டு பையன் மாதிரியான தோற்றம் தான். 

அண்ணன் ஸ்டார் அந்தஸ்துடன் நாலு படி மேல ஏறி உக்கார்ந்துட்டார்னா மக்கள்கிட்டயிருந்து விலகுகிறார்னு அர்த்தம். இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்ங்க எஸ்கே சாரி சிவகார்த்திகேயன். உங்க படத்தின் வியாபாரம் மட்டும் உச்சத்துல போகட்டும். உங்க பாத்திர வடிவமைப்பு அவசியப்படாம உச்சத்துக்கு போனா இழப்பு உங்களுக்கு தான், பாத்துக்கங்க.


மத்தபடி படம் முழுக்க நம்மளை என்டர்டெயின் பண்ணிக்கிட்டே இருக்கார். நல்ல டான்ஸ், பஞ்ச் வசனங்கள். சண்டை காட்சிகள், ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் னு எல்லாத்திலேயும் நல்ல முன்னேற்றம். 

சமந்தா படத்தின் பெரும்பலம், அந்த அழகும், பெர்பார்மன்ஸும், சிலம்பம் சுற்றும் காட்சிகளும், காஸ்ட்யூமும் அசத்துகிறது. உங்களுக்கு கல்யாணம் ஆனா என்ன, ஆகாட்டி என்ன, இப்போதைய உங்கள் பெர்பார்மன்ஸை இதே நிலையில் வைத்திருந்தால் நீங்க இன்னும் இன்னும் மேல போய்க்கிட்டே இருப்பீங்க.

படத்தின் பெரிய மைனஸ் சூரி தான். சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் சுத்தமா சிரிப்பே வரலை. மற்ற படங்களில் சொதப்பினாலும் பொன்ராம் படங்களில் சூரியின் காமெடி மிக நன்றாகவே இருக்கும். ரசித்து ரசித்து மகிழ்வோம். ஆனால்  நேருக்கு மாறாக இந்த படத்தில் பயங்கர கடியா இருக்கு. 


இமான் இசை கூட ரீபிட் மோட் தான். சிம்ரன் அன்றும் ஒல்லி தான், இன்றும் ஒல்லி தான். ஆனால் அன்று அழகாக இருந்தார், இன்று சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி வறண்டு இருக்கிறார். பேசாம நீங்க ரிட்டையர்டு ஆகிடுங்க மேடம். எங்களது பழைய படங்களின் கனவுக்கன்னி என்ற பெயராவது மிஞ்சட்டும்.

படத்துலயெ உருப்படியான காமெடினா அது நாய்க்கு உடல் முழுக்க கருப்பு பொட்டு வச்சி சிறுத்தைனு ஊருக்குள்ள கிளப்பி விட்டு அதகளம் பண்ணும் காட்சி தான். அது நம்பவே முடியாத அபத்தம்னாலும் என்னால் சிரிக்க முடிந்தது.

ஜனங்க ரசனைய புரிஞ்சிக்கவே முடியாது. படத்தை ஒரளவுக்கு சிரிச்சி ரசிச்சி தான் பார்த்தாங்க. ஆனா இது முழுக்க முழுக்க ப்ளூக் தான். ஆனால் படம் ஓடிடுச்சேன்னு அடுத்த படத்தையும் இதே மாதிரி எடுத்தா உங்க நிலைமை கஷ்டம் ஜி.

மூணு படத்துலயும் நாயகனின் கேரக்டரைசேஷன் ஒரே மாதிரி தான் தான் இருக்கு. அதாவது அப்பாவுக்கு அடங்காத பொறுப்பில்லாமல் ஊரை வெட்டியா சுற்றிக் கொண்டு இருக்கும் நாயகன் பின்னர் சூழ்நிலைக்காக பொறுப்புணர்ந்து செயல்படுவது, அடுத்த படத்துலயாவது மாத்துங்க இயக்குனரே.

படம் தப்பிச்சிக்கிச்சி. அதாவது படம் ஓடிடும். ஆனால் உங்களுக்கு இது எச்சரிச்கை மணி பொன்ராம். ஒரே மாதிரியான காட்சியமைப்பை இரண்டு படங்களில் லாபமாக பார்த்தீர்கள். ஆனால் இப்போது உறுத்துகிறது. சுதாரிக்கா விட்டால் அடுத்த படம் உங்களின் காலை வாரி விட்டுடும். 

ஒரே நாயகனிடம் பணிபுரிவதால் கூட இந்த தேக்கம் வந்திருக்கலாம். ஒரு கேப் தேவை. சிவகார்த்திகேயனை விட்டு வெளியில் வாருங்கள். மற்றவர்களிடம் சில படங்களை பண்ணுங்கள். வ,வா,ச பண்ணும் போது நாயகன் மீது எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை. ரஜினி முருகன் பண்ணும் போது சற்று காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியிருந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் நிறையவே காம்ப்ரமைஸ் செய்துள்ளீர்கள் என்று அனுமானிக்கிறேன். 

ஒரே மாதிரியான காட்சிகள், சுமாரான இன்டர்வெல் பிளாக் சண்டை, சூரியின் எடுபடாத நகைச்சுவை, அவசியமேயில்லாத ப்ளாஷ்பேக் ராஜா கதை என நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம் தான். 

ஆரூர் மூனா

Thursday 5 July 2018

மகாதியான சித்தப்பா

என் சித்தப்பா ஒருத்தர் இருக்காரு, வித்தியாசமான கேரக்டரு, ஒவ்வொரு குழுமத்துக்கும் இவர் மாதிரியான ஒரு ஆள் கண்டிப்பாக இருப்பார்கள்.
மகாதியானம்னா தெறிச்சி ஓடுவாரு, எப்படியாவது ஆசை காட்டி ஒரு கால் கல்லு வாங்கி வச்சி அவருக்கு ஒரு கட்டிங் கொடுத்துட்டா போதும். அன்றைய பொழுது முழுவதும் நமக்கு செலவு பண்ணி சரக்கு வாங்கிக் கொடுத்துக்கிட்டே இருப்பார்.


மறுநாள் தான் அவருக்கு நடந்ததெல்லாம் புரிந்திருக்கும். கையில இருக்குற காசு முழுவதையும் செலவழிக்க வச்சிட்டானேன்னு திட்டிக்கிட்டே நம்ம இருக்குற பக்கமே வர மாட்டார். மறுபடியும் ஒரு நாள் தொக்கா மாட்டிக்குவார். வச்சி செஞ்சிடுவோம் அவரை.
படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போவதற்குள் வெட்டியா சுத்துவோமே, அந்த காலகட்டத்தில் அவர் தான் எங்களுக்கு படியளக்கும் கடவுள்.
நானாவது பரவாயில்லை, பாவம் பார்த்து கொஞ்சமா செலவு பண்ண வைப்பேன். என் மச்சான் ஒருத்தன் இருக்கான் வெள்ளையும் சொள்ளையுமா மேலவாசல்ல. இப்ப சம்பாதிச்சி சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் அந்த சமயம் அவனும் வெட்டிப் பய தானே. கடைசி துட்டு வரைக்கும் அவரை செலவு பண்ண வச்சிடுவான்.
நானும் அவனும் வீட்டு வாசல்ல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். எங்களை கடக்கும் போது பார்க்காத மாதிரியே கடந்து போவார். "யோவ் சித்தப்பா" னு கூப்பிட்டா சிரிச்சிக்கிட்டே "அவசர வேலையே போய்க்கிட்டு இருக்கேன். இப்ப வந்துடுறேன்" னு நழுவிடுவார்.
கண்டிப்பா வேற வழில தான் போவார்னு தெரியும், அங்க ஒரு பட்றய போட்டுருப்போம். கையில இருக்குற ஐம்பது அறுவதுக்கு ஒரு கால் கல்லு மட்டும் தான் வாங்க முடியும். வாங்கி தயாரா உக்கார்ந்து இருப்போம்.
வர்றவர்கிட்ட நைஸா பேசி பம்புசெட்டுக்கு அழைச்சிக்கிட்டு போயிடுவோம். போகும் போதே சொல்லிக்கிட்டு வருவார், "டேய் என்கிட்ட காசே இல்லடா, நாளைக்கு சாப்பிடலாம்"னு நழுவுவார். "அட வாங்க சித்தப்பா, இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்"னு சொல்லி ஒரு கட்டிங் தான் கொடுப்போம்.
பத்து நிமிசம் கழிச்சி தலைய சிலுப்புவார். "மவனே, இந்தாடா காசு, ஒரு அரைக்கல்லு, ஒரு கால்கல்லு, ஒரு சோடா பாட்டிலு, சிக்கன் லாம் வாங்கியாடா" ன்னுவார். சாயந்திரம் ஆரம்பிச்ச மகாதியானம் நடுராத்திரி வரைக்கும் நிக்காம ஒடும்.
மறுநாள் மதிய சோறு நேரம் வரைக்கும் வெளிய தென்படவே மாட்டார். வீட்டுக்குள்ள பார்த்தா கொல்லப் பக்கமா தலைல துண்டு போட்டு உக்கார்ந்து விக்ஸ் தேச்சிக்கிட்டு இருப்பார்.
அடுப்பாங்கரையிலிருந்து சித்தி குரல் கேக்கும். கன்னாபின்னான்னு எங்களை தான் திட்டிக்கிட்டு இருக்கும். எங்களை பார்த்ததும் "வாங்கடா கண்ணுகளா, லட்டு சாப்பிடுங்கடா" னு சாப்பிட கொடுக்கும். எங்களுக்கு தெரியாம நைஸா மாமாகிட்ட "வெளியில இவனுங்களோட போன தொலைச்சிப்புடுவேன்"னு மிரட்டி வைக்கும்.
2000 சமயத்துல சில மாதங்கள் எங்களுக்கு இப்படி தான் போய்க்கிட்டு இருந்தது.
ஒரு முறை இப்படி தான் ஓவரா குடிச்சிப்புட்டு சித்தப்பா சைக்கிளை மறந்து வச்சிட்டு நடந்தே வீட்டுக்கு போயிட்டார். நானும் மச்சானும் கொடுக்கலாம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்கு போய் பார்த்தா சித்தி அவரை அடி வெளுத்துக்கிட்டு இருக்கு. நின்ன மேனிக்கு காலை தூக்கி அவர் தாவாடைலயே ஒரு கிக்கு விட்டது பாருங்க.
சித்தி ஒரு பொடவ கட்டுன பொன்னம்பலம் னு அன்னைக்கு தான் தெரிஞ்சது. மறுநாள் கேக்கும் போது தான் சித்தப்பா சொன்னார். அன்னைக்கு விக்ஸ் தடவிக்கிட்டு இருந்தது ஹேங் ஓவர்னால இல்ல, சித்தி விட்ட அறைல காது கொய்ய்னு ஆகி வலி தாங்க முடியாம தான் ன்னு.

ஆரூர் மூனா

Friday 29 June 2018

அசுரவதம் - சினிமா விமர்சனம்

சசிகுமார் படத்துக்கும் எனக்கும் ஒரு சோக நிகழ்வு இருக்கு. சுப்ரமணியபுரம் படமும் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படமும் ஒரே நாளில் வெளியானது. சாந்தியில் சுப்ரமணியபுரமும் தேவிபாலாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படமும் வெளியாகி இருந்தது.


நானும் என் நண்பனும் சாந்தி தியேட்டர் வாசலில் நின்று பேசிக்கிட்டு இருந்தோம். நான் சுப்ரணியபுரம் படத்துக்கு போகலாம்னு சொல்ல அவனோ புது இயக்குனர் படம் எப்படியிருக்கும்னு தெரியாது, ரிஸ்க் எடுக்க வேண்டாம் எம்டன் மகன் இயக்குனரின் அடுத்த படம் முனியாண்டி, வா இதற்கே போகலாம்னான்.

போய் தலைவலி வாங்கி வந்தது தான் மிச்சம். ரெண்டு நாள்ல மக்களிடையே மவுத் டாக் பரவி சுப்ரமணியபுரம் பிச்சிக்கிட்டு ஓடுது. எந்த தியேட்டர்லயும் டிக்கெட் கிடைக்காம அல்லாடுறோம். 15 நாளுக்கு பிறகு பாடாவதி தியேட்டரான மடிப்பாக்கம் குமரனில் பார்த்தோம். நல்ல படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தவற விட்ட வருத்தம் இப்பவும் உண்டு.


தாரை தப்பட்டை, பலே வெள்ளைய தேவா படங்களை தவிர வேற படங்கள் என்னை ஏமாற்றியதில்லை. நவீன உலகின் ராமராஜன் சசிகுமார் தான். இவர் படங்களுக்கு மக்கள் குடும்பமாக வருவதே இந்த நூற்றாண்டின் அதிசயம்.

இந்த படத்துக்கு வருவோம். ட்ரெய்லரே பெரும் கவனம் ஈர்த்தது. நம்பி அயனாவரம் கோபிகிருஷ்ணா தியேட்டருக்கு போனால் படம் பார்த்தவங்க மொத்தமே பத்து பேரு தான்.

ஸ்பாய்லர்ஸ் இருக்கும், மத்தவங்க ஒதுங்கிக்கங்க.


ஒரு சாதாரண மளிகை கடை நடத்தி வரும் வசுமித்ர வுக்கு போன் வருகிறது. ஒரு வாரத்தில் கொல்லப் போவதாகவும் அதுவரை சித்ரவதைகளை அனுபவிக்கனும்னு சசிகுமார் சொல்ல வசுமித்ர பாதுகாப்புக்கு ரவுடிகளை அமர்த்திக் கொள்கிறார். 

சொன்னபடி சசிகுமார் கொன்னாரா இல்லையா, என்ன காரணம் அவ்வளவு தான் படத்தின் கதை. 

படத்தில் சிறந்த கதைலாம் கிடையாது. கதையா பார்த்தா தமிழ் சினிமா அடிச்சி துவைச்சி எடுத்த பழிவாங்கல் கதை தான். படம் ஒரு விஷுவல் ட்ரீட். இந்த வகை மேக்கிங் நம்மூருக்கு புதுசு. 

கேமரா ஆங்கிள் முதற்கொண்டு சண்டை காட்சிகள் வரை எல்லாமே புதுசு. டெக்னீசியன்களின் களமான இதில் ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் ஆகியோர் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.

படத்தின் கதை சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவுமில்லாமல் வெறும் மிரட்டலை மையமாக வைத்தே பரபரவென்று இடைவேளை வரை வந்து விடுகிறார்கள். நமக்கே புதுசா இருக்கு. 

இரவில் சசிகுமாரை வசுமித்ர தேடிக் கொண்டிருக்க இருட்டில் ஒரு சிகரெட் கங்கு தெரிய கூடவே புகை படர மின்னல் வெளிச்சத்தில் சசிகுமார் நிற்கும் காட்சி செம அப்ளாஸ் வாங்குகிறது.

வசுமித்ர இந்த பாத்திரத்திற்கு பொருத்தமான காஸ்டிங் கிடையாது. சுமை தாங்க முடியாமல் திணறுகிறார். உடல்மொழி னு ஒன்னு இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை போல. நடக்கும் போதும் ஒடும் போதும் கோவப்படும் போதும் அந்த தாக்கம் நம்மை பற்றிக் கொள்ளவே இல்லை. அந்நியமாக இருக்கிறது. 

பாம்பு எதற்கு வருகிறது அதனால் சொல்ல விழைவது என்னன்னு புரியல. துப்பாக்கி சசிகுமாருக்கு எப்படி கிடைக்கிறது, கிராமத்தில் பட்டுபட்டுனு சாதாரணமா சுடுவதும் பொருந்தவில்லை. 

ப்ளாஷ்பேக் பழிவாங்கும் படத்திற்கு பொருத்தமான குரூரத்தை கொண்டிருக்கிறது. ஆனாலும் சாகும் போது வசுமித்ர பலாத்காரத்திற்கு உட்படுத்திய பெண்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே இருப்பது உறுத்துகிறது. அப்படி சொல்வது பொருந்தனும்னா சாதாரண மளிகை கடைக்காரர் என்ற பேக்ட்ராப் இருந்திருக்க கூடாது. இன்னும் குரூரமான பேக்ட்ராப் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

விஷூவலா புது முயற்சியை கொண்டிருக்கும் அசுரவதத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆரூர் மூனா