Wednesday 17 October 2018

வடசென்னை - சினிமா விமர்சனம்

சுவாரஸ்யமான கதையின் இலக்கணம் ஒன்று இருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு சுவாரஸ்யமான முடிச்சை முன்பாதியில் போடுகிறோமோ அதை விட சுவாரஸ்யமாய் பின்பாதியில் முடிச்சை அவிழ்க்க வேண்டும். நூத்துக்கு 95 பேர் சுவாரஸ்யமாய் முடிச்சை போடுவார்கள். ஆனால் அவிழ்ப்பதில் சொல்லி வைத்த மாதிரி கோட்டை விட்டுவிடுவார்கள்.


உதாரணம் வேண்டுமென்றால் ராசுக்குட்டி படத்தை சொல்லலாம். சித்தப்பா நளினிகாந்தும் அவன் மகன் சூர்யகாந்தும் பாக்யராஜுக்கு எதிராக அப்பா கல்யாண்குமாரிடம் போட்டுக் கொடுத்து முடிச்சைப் போட்டு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பொய் சத்தியம் செய்து வைத்திருக்க ஒரே காட்சியில் அப்பாவிடம் பொய் சொல்லி பைக்கை வாங்கி நளினிகாந்த் வீட்டின் வாசலில் ஒரு ஜபரு காட்டி குழப்பி விட்டு தீர்வை சொல்லியிருப்பார். தெளிவான முடிச்சவிக்கி னா அவர் தான்.

அதே மாதிரி கார்த்தி நடிச்ச சகுனி னு ஒரு படம் ஒன்னுமில்லாத ராதிகாவை மேயராகவும் கோட்டா சீனிவாசராவையும் முதல்வராக்குவார். அதில் முடிச்சை அவிழ்ப்பது கூட சுவாரஸ்யம் தான்னு டயலாக் வேற இருக்கும். ஆனால் படம் பார்க்குறவன் கொட்டாவி விட்டு வழிவான். ஒரு கட்டத்தில் கார்த்தியின் திட்டங்களுக்கான விளக்கமான டயலாக் கூட எழுத முடியாமல் பேக் ட்ராப்பில் பிஜிஎம்மை வைத்து சமாளித்து இருப்பார்கள். இது தான் பார்க்கக் கூடிய படத்திற்கும் பார்க்க முடியாத படத்திற்குமான வித்தியாசம்.


வெற்றி மாறனின் ஆகச் சிறந்த பலமே இந்த முடிச்சை கச்சிதமா போடுவதும் சுவாரஸ்யமா அவிழ்ப்பதும் தான். எங்கு முடிச்சு அவிழ்ந்து சுவாரஸ்யமா மக்களை உக்கார வைக்க வேண்டும் என்பதை சரியாக அறிந்த சினிமா க்ராப்ட்ஸ்மேன் வெற்றிமாறன். 

வெற்றி மாறனுக்கு சிறந்த கதை கூட தேவையில்லை. பாட்டி வடை சுட்ட கதையை மறுபடியும் சுவாரஸ்ய கண்டென்ட் சேர்த்து ரசிக்கும் படி கொடுக்கும் வித்தை அறிந்த மனுசன். அவருக்கு ஒரு நல்ல கதைக்களம் அமையும் போது வடசென்னை மாதிரியான படங்கள் வந்து மக்களின் ரசனைக்கு தீனி போடுகின்றன.

இந்த முதல் பாகத்தின் கதை கேரம் போர்டில் பெரிய அளவில் வெற்றியை ஈட்டி அதன் மூலம் அரசு வேலை பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் தனுஷை காலமும் சூழ்நிலையும் எப்படி உருமாற்றி மண்ணை காவல் காக்கும் அய்யனாராக மாற்றுகிறது என்பதே.


படத்தின் குறை என்பது இந்த படத்தில் இரண்டு படங்களுக்கான கன்டென்ட்டுகள் இருக்கிறது என்பதே. நிறைய காட்சிகள், சம்பவங்கள், மெனக்கெடல்கள் அதிகமாக இருப்பதால் ஆழ்ந்து கவனிப்பதற்குள் ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுகிறது. 

அமீர் எபிசோடு தனியாகவும் அதிலிருந்து தனுஷின் விஸ்வரூபம் வரை தனி எபிசோடாகவும் எடுத்து இரண்டு படங்களாக மக்களுக்கு கொடுத்திருந்தால் இன்னும் ரகளையாக இருந்திருக்கும். ஒரே சமயம் இரண்டு படங்களை தொடச்சியாக பார்க்கிறோமோ என்ற அயர்ச்சியை கொடுத்து விட்டது படம்.

இதை தாண்டி வேறெந்த குறைகளும் படத்தில் கிடையாது. 


தனுஷ் பற்றி என்னத்த சொல்ல வருட ஓட்டங்களின் வரிசைக்கிருமத்தின் படி நடிப்பிலும் தோற்றத்திலும் பின்னி இருக்கிறார் மனுசன்.அப்பாவியாய் கேரம் போர்டு ஆட்டத்தில் தொடங்கி சூழ்நிலையை புரிந்து தீனாவுடன் மோதும் போது ஒரு வளர்ச்சியும், சிறை பகுதியில் புத்தி சாதுர்யத்துடன் சேம் சைடு கோல் போட்டு ஒரு மெச்சூரிட்டியும் நிலத்தின் பால் நடக்கும் அரசியலை புரிந்து எதிர்த்து தலைவனாக உருவெடுக்கும் கள எதார்த்தத்தையும் அளவெடுத்து செய்து சிறப்பித்து இருக்கிறார். 

படத்தின் முதல் டயலாக்கே ஐஸ்வர்யாவுக்கு கூ... என்று சொல்வதில் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் காட்டும் ஜபுரும் முத்தம் கொடுத்து மாட்டிக் கொண்டு சந்திக்கும் கிண்டல்களையும் சீண்டல்களையும் எதிர்கொள்ளும் விதமும் ரசிக்க வைக்கிறது.

ஆண்ட்ரியாவின் அறிமுகமும், படிப்படியாக கவனம்பெறும் அவருக்கான முக்கியத்துவமும் நன்றாகவே இருக்கிறது. துணிச்சலுடன் போட்ல அமீருடன் இருக்கும் காட்சியில் கூடுதலாக கைத்தட்டல் பெறுகிறார். அவருக்கான பின்புலம் எதாவது இருந்திருந்தால் இந்த ஸ்கின்டோன் பெண் ராயபுரத்துல இருப்பதற்கு காரணம் ஒத்துக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். 

சிறைக் காட்சிகளும் நடைமுறைகளும் நிஜத்தை பிரதிபலிக்கிறது. அது நிஜமான நிஜம்னு எனக்கு நல்லாவே தெரியும், அதனால் இந்த காட்சிகளுக்கான மெனக்கெடல்களில் வியந்து போகிறேன்.

ஹோட்டலில் அமீருடன் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், தீனா, பவன் அளவளாவும் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும் ஏ ஒன். அதே போல் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர், பவன் போன்றோர் நடிப்பு சிறப்பு.

இன்னும் காதுகளில் படத்தின் பிஜிஎம் ஒலித்துக் கொண்டே இருப்பது சந்தோஷ் நாராயணனின் திறமைக்கு சான்று. 

ராஜீவ் காந்தி கொலையான போது கடைகள் வடசென்னையில் சூறையாடப்பட்டது கூட உண்மையான சம்பவம். ப்ளாக்கர் நண்பன் செல்வின் அவர்களின் தகப்பனார் அவர்களின் ஐஸ் பாக்டரி இதே சம்பவத்தில் திருவொற்றியூரில் அடித்து நொறுக்கப்பட்டது என்பதை முன்பே நான் அறிவேன்.

நிறைய க்ரவுண்ட் ஒர்க், அதை விட நிறைய பேப்பர் ஒர்க், பொருத்தமான காஸ்ட்டிங், குழப்பமில்லாத திரைக்கதை, தனுஷின் திறமையான நடிப்பு, சிறந்த பிஜிஎம் என எல்லா ப்ளஸ்களும் சேர்ந்து ஒரு ப்ளஸ்ஸான படத்தை கொடுத்து இருக்கிறது. 

கண்டிப்பாக தனித்தனியாக நாம் தியேட்டரில் போய் ரசித்து பார்க்க வேண்டிய படம் இது. 

ஆரூர் மூனா

1 comment:

  1. நம்ம நண்பரின் நிஜ நிகழ்வையும் குறிப்பிட்டதால் கண்டிப்பாக பார்க்க வேண்டும்... நன்றி தல...

    ReplyDelete