Sunday 2 August 2015

பெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு - பழசு ஜனவரி 2013

ரொம்ப வருடங்களாக அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சென்னையில் பிரியாணி என்றால் என் முதல் சாய்ஸ் பெரியமேடு பிரியாணி தான். அதன் சுவையை அடிச்சிக்கவே முடியாது. இன்றும் கூட வெறும் 90 ரூபாய்க்கு நான்கு பெரிய பீஸ் மட்டனுடன் பிரியாணி கொடுக்கிறார்கள்.


எப்பொழுது சென்ட்ரல் பக்கம் வந்தாலும் வேலை முடிந்ததும் நடந்து வந்தாவது பெரியமேட்டில் பிரியாணி தின்று விட்டு பிறகு நடந்தே சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்து ரயிலில் செல்வது வழக்கமாக வைத்திருந்தேன்.

நண்பர்கள் ஒன்று கூடி கெட்டூகெதர் பார்ட்டி குடும்பத்துடன் கொண்டாடினால் கூட விருந்துக்கு கிலோக்கணக்கில் இங்கிருந்து பிரியாணி வாங்கி கொண்டு போய் விழாவை சிறப்பிப்பது வழக்கம்.

நமது பதிவுலக நண்பர்கள் பலபேர் கூட பெரியமேடு பிரியாணி கடையின் வழக்கமான கஸ்டமர்களே. எந்தவித சர்ச்சையும் இன்றி இத்தனை நாட்கள் சென்று கொண்டிருந்த இந்த விஷயம் இரண்டு நாட்களாக போட்டு மனதை வருத்தப்பட வைத்துக் கொண்டு இருக்கிறது.


என்னுடைய நண்பனின் மாமா ஒருவர் விஜயவாடாவில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகின்றார். திங்களன்று நண்பன் வீட்டில் அவரை பார்த்து அளவளாவிக் கொண்டு இருந்தேன். பேச்சு பல இடங்களில் சுற்றித் திரிந்து பிரியாணிக்கு வந்தது.

நான் பெரியமேடு பிரியாணியைப் பற்றி அவரிடம் பெருமையாக கூற அவரோ 90 ரூபாய்க்கு நான்கு துண்டு மட்டனுடன் பிரியாணி வாய்ப்பே இல்லையென்றும் நான் வேண்டுமானால் சாப்பிட்டுப் பார்த்து சொல்வதாக கூறினார்.

அவரை அழைத்துக் கொண்டு நான் வழக்கமாக பிரியாணி சாப்பிடும் கடைக்கு அழைத்துச் சென்றேன். அந்தக் கடை பெரியமேடு மசூதியின் எதிர்ப்புறம் உள்ள சந்தில் முதல்மாடியில் உள்ளது. தரைத்தளத்தில் லாட்ஜ் மற்றும் பார்சல் கட்டித்தருவது உண்டு.

எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் அந்த இடத்திற்கு நாங்கள் சென்று சாப்பிட அமர்ந்தோம். பிரியாணி இலையில் பறிமாறப்பட்டது. மட்டன் துண்டுகளை கையால் சோதித்தும் சாப்பிட்டும் பார்த்தவர் இது மட்டனே கிடையாது வீல் என்று கூறினார்.

வீல் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. பிறகு விளக்கம் வெளியில் வந்து கேட்ட பிறகு தான் சொன்னார். மாட்டுக் கன்றுக்குட்டி கறி தான் ஆங்கிலத்தில் வீல் என்று கூறினார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது வழக்கமாக விஜயவாடாவில் நடைபெறும் ஒன்று தான் என்று சொன்னார். எலும்புத்துண்டுகள் மட்டும் மட்டனுடையது என்றும் கறித்துண்டுகள் எல்லாம் வீல் என்றும் அவை தெரியா வண்ணம் கலக்கப்படும் என்றும் சொன்னார்.

சரி இன்றும் மற்றொரு கடையில் சோதித்து பார்த்து விடலாம் என்று அதே சந்தில் முன்சொன்ன கடைக்கு முன்பு உள்ள மற்றொரு கடையில் இன்று சாப்பிட்டோம். அதையும் சாப்பிட்டுப் பார்த்து வீல் கறி என்றே சொன்னார்.

சொன்னவர் தனது வேலையை முடித்து விட்டு சத்தமில்லாமல் விஜயவாடாவுக்கு ரயிலேறி போய் விட்டார். கேள்விப்பட்ட நாங்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு உள்ளோம். காலம்காலமாக சாப்பிட்டு வந்த கடையில் இந்தளவுக்கு டகால்டி நடக்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு வேளை அவர் சொன்னது பொய்யாகக் கூட இருக்கலாம் ஆனால் உண்மையாக இருந்தால் இது ஏமாற்று வேலையல்லவா. நண்பர்களே தங்களுக்கு இந்த அனுபவம் இருந்தால் பகிருங்கள். நான் சொன்னதில் தவறு இருப்பினும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

எது உண்மை என்று புரியாமல் மண்டை குழம்பி கிடக்கும்


ஆரூர் மூனா

No comments:

Post a Comment