Sunday 2 August 2015

ஐ சப்போர்ட் கமலஹாசன் - பழசு ஜனவரி 2013

சின்ன வயதிலிருந்தே எனக்கு கமல்ஹாசனை பிடிக்காது. எந்த ஒரு குழுவிலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் என இரு பிரிவு இருக்கும். நான் ரஜினி ரசிகர் குழுவில் இருந்தேன். அந்த வயதில் எந்த காரணமும் இல்லாமல் ரஜினியை பிடித்ததனால் கமலை பிடிக்காது.


தளபதியும் குணாவும் ஒரே நாளில் வெளியான போது குணாவை மொக்கை என்று கிண்டல் செய்து எங்கள் தெருவில் போஸ்டர் எல்லாம் ஒட்டினோம். போஸ்டர் என்றால் காசு கொடுத்தா அடிக்க முடியும். நோட்டு புத்தகத்தில் இருந்து பேப்பரை கிழித்து அதில் எழுதி சோற்றுப்பருக்கைகளை கொண்டு ஒட்டுவோம்.

அதே போல் பாண்டியனும் தேவர் மகனும் ஒரே நாளில் வெளியான போது கமல் ரசிகர்களிடம் இருந்து அதே போன்றதொரு அவமானத்தை நாங்கள் திரும்ப வாங்கிக் கொண்டோம். எனக்கு கூட தேவர்மகன் அளவுக்கு பாண்டியன் சூப்பர் ஹிட்டாக அமையவில்லையே என்று அழுகையாக வந்தது.

பிறகு வயது ஏற ஏற மெச்சூரிட்டி வந்து எந்த படத்தை நாங்கள் மொக்கை என்று காலி செய்து கழுவி ஊத்தினோமோ அதே குணா எனது சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. படத்தில் கமலின் உழைப்பு அசர வைத்தது.

அன்றும் இன்றும் என்றும் எனது பேவரைட் படம் அன்பே சிவம் தான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த படம் தான். ஆனால் அந்த படம் கூட சரியாக ஒடவில்லை. இன்று நமக்கு சரியான மொக்கை என்று நாம் நினைக்கும் கமல் படம் சில வருடம் கழித்து மறக்க முடியாத படமாக அமைகிறது.

இப்பொழுது விஸ்வரூபம் படத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு இந்த படத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லை. எப்பொழுதும் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்க்கும் நான் இந்த படத்திற்கு முன்பதிவே செய்யவில்லை. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் கமலை ஆதரிக்காவிட்டால் மனிதநேயமிக்கவனாக இருக்கமாட்டேன் என்று தோன்றியது.

அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன். ஒரு படம் எடுத்து வெளியில் வந்து நல்லாயில்லா விட்டால் அதுவே ஆட்டோமெட்டிக்காக பெட்டிக்குள் போகப் போகிறது. அதுவும் கமலின் படங்களுக்கு இரண்டே நிலை தான். சூப்பர் ஹிட்டு அல்லது சூரமொக்கை. சீண்டாமல் விட்டிருந்தாலே அது பாட்டுக்கு வந்து போய் இருக்கப் போகிறது.

படத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவனை வில்லன் போல் காண்பித்தால் அந்த சமூகத்தை அவமானப்படுத்துவதாகும் என்று நீங்கள் நினைப்பது நகைப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. இதே கமல் தான் ஹேராம் படத்தில் ஒரு இஸ்லாமியனான ஷாருக்கானை நல்லவனாகவும் தீவிர இந்துத்வாவான கமலை கெட்டவனாகவும் சித்திரித்திருந்தார். அதற்காக இங்குள்ள இந்துக்கள் எல்லாம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனாரா என்ன.

இத்தனைக்கும் படம் அட்டர் பிளாப். படம் பார்க்க போனவன் எல்லாம் இன்டர்வெல்லுடன் வெளியில் தெறிச்சி ஓடி வந்தான். சீண்டப்படாமல் போனதாலேயே அது புறக்கணிப்பட்டது. அது போல் இந்த படத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அதுவும் மொக்கையாக இருந்திருந்தால் படம் தோல்வியடைந்திருக்கும்.

இப்பொழுது வீணான பிரச்சனையை கிளப்பி படத்திற்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டியை கிளப்பி விட்டீர்கள். இது தேவையற்ற பிரச்சனை என்று நான் நினைப்பதால் கமல்ஹாசன் பக்கம் நான் நிற்கிறேன்.

இது நியாயமற்றது. ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு தங்களது சமூகத்தை அவமானப்படுத்துகிறது என்று நினைத்தால் அது எப்படி சரியான கருத்தாக இருக்க முடியும். மற்றவர்களும் பார்த்து சொல்வது தானே நியாயமாக இருக்கும். ஒரு படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து படத்தினை வெளியிட விடாமல் தடுக்க முடியுமென்றால் எதற்கு அரசாங்கம். நிர்வகிக்க மக்கள் பிரதிநிதிகள் எதற்கு.

இடையில் ஒருவர் ப்ளஸ் விட்டு பொங்குகிறார். கமல்ஹாசன் முத்தக்காட்சியை வைத்து சமூகத்தை அவமானப்படுத்துகிறார் என்று. ஏனப்பா இவ்வளவு கட்டுப்பாடும் சம்பிரதாயங்களும் கொண்ட உன் சமூகத்தில் இருந்தே ஆர்யா படங்களில் முத்தக்காட்சியை வைக்கிறார். நீங்களும் தான் ரசிக்கிறீர்கள். சுத்தப்படுத்துவதை தங்களது இடத்தில் இருந்தே துவங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் ஆர்யாவை மன்னிப்பு கேட்க வைத்து பிறகு கமல்ஹாசனிடம் பொங்கலை வைத்துக் கொள்ளவும்.

ஒரு மதத்தினை பின்பற்றும் நீங்கள் உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு வந்து இது உங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்று சொன்னால் அதை கேட்டு இணையத்தில் கண்டனம் தெரிவித்து இஷ்டத்திற்கு எழுதித் தள்ளுவது நியாயம் என்றால் ஒரு பகுத்தறிவுவாதியான நான் மற்றொரு பகுத்தறிவுவாதியான கமல்ஹாசன் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது மாதிரியான காட்சிகளை வைக்கமாட்டார் என்று நான் நம்பி அவரை ஆதரித்து பதிவு எழுதுவதும் நியாயம் தான்.

தமிழ்நாட்டுல மட்டும் தானே நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். நான் ஆந்திராவுக்கு சென்று படம் பார்த்து விட்டு வந்தால் என்ன செய்ய முடியும். என்னைப் போல் பலர் காலைக் காட்சி பார்க்க ஆந்திரா கிளம்புகின்றனர். நகரியிலோ அல்லது புத்தூரிலோ பார்த்து விட்டு ஒரு மணிநேரத்தில் சென்னைக்கு திரும்பி விட முடியும். அநியாயமா ரஜினி ரசிகனான என்னை கமலுக்கு ஆதரவாக பதிவு போட வச்சிட்டீங்களே.

28ம்தேதி தடையை நீக்கினால் மறுபடியும் இரண்டாம் முறை பார்க்கப்போகிறேன். அவ்வளவு தான்.

படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் சினிமா ரசிகர்களில் ஒருவனான


ஆரூர் மூனா

No comments:

Post a Comment