Tuesday 2 June 2015

கண்ணா லட்டு தின்ன ஆசையா - பழசு 2013

ம்





முன்பதிவு செய்யாமல் பயணித்து பலத்த சிரமங்களுக்கிடையே நள்ளிரவு 2 மணிக்கு ஊருக்கு வந்து சேர்ந்தேன். அந்த நேரத்திலும் கடமை தவறாமல் நண்பர்களுக்கு போன் போட்டு காலையில் சினிமாவுக்கு வாங்கடா என்று கூப்பிட்டால் அவனவன் கெட்ட வார்த்தையாலேயே திட்டுகிறான். எல்லாத்தையும் உதிர்த்து விட்டு கிடைத்து நண்பனை பிடித்துக் கொண்டு திருவாரூர் தைலம்மை திரையரங்கிற்கு சென்றேன்.
எங்கள் ஊரில் எல்லாம் முன்னணி ஹரோக்கள் படமே காத்து வாங்கும் காலம் இது. இதில் எங்க கூட்டம் இருக்கப் போகிறது என்று யோசித்து சென்றால் கூட்டம் அலைமோதியது. படம் தொடங்கிய பிறகு தான் தெரிகிறது. எல்லாம் பவர் ஸ்டார் ரசிகர்கள் என.
படத்தில் பெயர் போடும் போதே அறிவித்து விட்டார்கள், இது இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக் என. ஆனால் இத்தனை நாட்களாக என்ன வெங்காயத்துக்கு இதனை மறைத்து வந்தார்கள் என்று தான் புரியவில்லை. பாடல் வெளியீட்டு விழாவில் சந்தானத்தின் பேச்சைக் கேட்டால் கதையே இல்லாமல் காமெடி மட்டுமே உள்ள படம் என்றார். என்ன எழவோ போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.
சேது, சந்தானம், பவர் ஸ்டார் மூவரும் நண்பர்கள். புதிதாக குடிவரும் விசாகாவை மூவரும் காதலிக்கின்றனர். இவர்களில் விசாகா யாரை காதலித்து கரம் பிடிக்கிறார் என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கின்றனர்.
எனக்கு கொஞ்சம் கடும் வேலை மற்றும் பணநெருக்கடி. இதன் காரணமாக நான் பயங்கர அப்செட்டில் இருந்தேன். கூடுதலாக நேற்று ஆரம்பிக்க இருந்த ஒரு பிஸினஸ் சற்றே டொய்ங் என நொண்டி போட்டு போனது. கூடுதலாக அலெக்ஸ் பாண்டியன் பார்த்த கடுப்பு. அதனால் இரண்டு நாட்களாக கொஞ்சம் உம் என்றே இருந்தேன்.
ஆனால் படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் எல்லாம் பறந்து போய் வாய் விட்டு கண்ணில் நீர் வர சிரித்தேன். படம் முடியும் வரை டென்சனெல்லாம் மறந்து போய் விட்டது. கண்டிப்பாக தெரியும் படம் பார்த்து சிரித்து முடித்த பின் ஏண்டா சிரித்தோம் என்று நினைக்கத் தோன்றும் என்று. ஆனால் படம் முடியும் வரை நமது மூளையை கழட்டி வைத்து விட்டு சிரிக்கிறோம் பாருங்கள் அங்கு நிற்கிறது படத்தின் வெற்றி.
படத்தின் பெயர் போடும் போதே சந்தானத்தை விட பவருக்குத்தான் கூடுதல் கைதட்டல் கிடைத்தது. அதனை கடைசி வரை மெயிண்டெயின் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் சிரிக்க முடியாமல் வயிற்றை வலிக்க ஆரம்பித்தது. ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டூ பவர் ஸ்டார்.
சந்தானத்தின் கவுண்ட்டர் காமெடிகள் வழக்கம் போல் சிரிக்க வைக்கின்றன. விடிவி கணேஷை சுடுகாட்டில் வைத்து அடிக்கும் காட்சியில் பழைய சந்தானத்தை பார்த்தேன். அலெக்ஸ் பாண்டியனால் ஏற்பட்ட வருத்தம் குறைந்து மீண்டும் சந்தானத்தை பிடிக்க ஆரம்பித்தது.
டல் திவ்யா விசாகா பிடிச்சிருக்கு படத்தில் நடித்த போது நல்ல ஹோம்லி நடிகை என்று பெயரெடுத்தார், அதன் பிறகு வாய்ப்பில்லாததற்கும் அது தான் காரணம் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் அதையெல்லாம் பொய்யாக்கும் வண்ணம் பாடலில் உரித்த கோழியாக வந்து செல்கிறார். நல்ல வடிவமைப்பு.
கரகர கணேஷ் பாட முடியாமல் தவித்து பிறகு வாய்ஸ் போனதற்கான காரணம் சொல்லும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. அதே போல் டிபிக்கல் கொங்கு பாஷையில் சரளா வழக்கம் போல் அசத்தி செல்கிறார். 
பட்டிமன்றம் ராஜா, வனிதா, சிவசங்கர் ஆகியோர் மிகக் குறைந்த அளவுள்ள கதாபாத்திரத்தில் வந்து செல்கின்றனர். தேவதர்ஷினி ஒட்டாத அய்யர் ஆத்து பாஷையில் பேசி செல்கிறார்.
எல்லாவற்றையும் மீறி எல்லைகளை மீறி இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கும் ரீபீட்டட் ஆடியன்ஸ்க்கும் காரணம் என்னவாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள். சந்தேமில்லாமல் நம்ம பவர் ஸ்டார் தான்.
படம் முழுக்க அவருக்கு பேக்டிராப்பில் ப்ரியா என்ற பெண் அவருக்கு போனில் செய்து காதலை சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் கடைசியில் ஹீரோயின் அவருக்கு இல்லை என்று தெரிந்ததும் ப்ரியாவுக்கு காதலை சொல்ல கடைசியில் அந்த ப்ரியா இவருக்கு செய்தது ராங் கால் என தெரிய வர சிரித்து வலி தாங்காமல் வயித்தை பிடித்துக் கொண்டேன்.
சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நட்புக்காக வந்து செல்கின்றனர். சுமாரான இந்த படத்தை பிரம்மாண்டமான வெற்றிக்கு கொண்டு செல்லப்போவது சந்தேகமில்லாமல் அலெக்ஸ் பாண்டியனின் தோல்வி தான் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.
மீண்டும் இந்த படத்தை பார்த்து சிரிப்பேன் என்பதை சந்தேகமில்லாமல் சொல்லும்
ஆரூர் மூனா

No comments:

Post a Comment