Monday 1 June 2015

பஞ்சேந்திரியா - பழசு 2013

மறுபடி மறுபடி தெலுகில் ஹீரோக்களின் சலம்பலை பார்ப்பது எனக்கு விதிக்கப்பட்ட சாபமோ தெரியவில்லை. நேற்று முன்தினம் கூட அப்படி ஒரு கொடுமை என் முன்னாடி ஜிங்கு ஜிக்குனு ஆடுச்சி.

அந்த படத்தின் பெயர் யுத்தபூமி, கதாநாயகன் சிரஞ்சீவி, கதாநாயகி விஜயசாந்தி, வில்லன் மோகன்பாபு. கிளைமாக்ஸ் மட்டும் தான் பார்த்தேன். கடுமையான சண்டையின் கடைசியில் எல்லா வில்லன்களையும் ஹீரோ வீழ்த்திய பிறகு மெயின் வில்லனான மோகன்பாபுவை கொல்லத்துரத்த அவரோ ஹெலிகாப்டரில் ஏறி தப்பிக்கிறார்.

இதனை கண்டு பொறுக்காத ஹீரோ அப்படியே ஓடிச்சென்று யாரோ ஒரு அப்பாவி விவசாயி உழுதுக் கொண்டு இருக்க அவரிடம் இருந்து ஏர்கலப்பையை புடுங்கி சென்று ரெண்டு சுத்து சுத்தி மேலே வீச அது பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ரெக்கையின் நடுவில் விழ ஹெலிகாப்டர் வெடித்து சிதறுகிறது.

அதப்பார்த்துக் கொண்டிருந்த நான் அப்படியே ஷாக்காயிட்டேன். நல்ல வேளை இந்த படம்லாம் அந்த காலத்துல தமிழ்ல வரல. நாம அப்பவே பார்த்திருந்தம்னாக்கா தறிகெட்டு திரிஞ்சிருப்போம். நல்லவேளை நம்ம ரசனை உயர்ந்து இருப்பதனால் தப்பித்தோம். இன்னொரு முறை அது போன்ற படம் என் கண்ணுல மாட்டிச்சி கிறுக்கு புடிச்சி திரிய வேண்டியது தான்.

--------------------------------------------------------
மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், மாயமோகினி, இந்தியில் ஜோக்கர், அய்யா படங்களை சமீபத்தில் பார்த்தேன். ஒவ்வொரு படங்களையும் சிலாகித்து ஒவ்வொரு பதிவெழுதலாம், அவ்வளவு அருமை.

உஸ்தாத் ஹோட்டல் கோழிக்கோடு முஸ்லீம்களின் வாழ்க்கை முறையை பேக்டிராப்பாக வைத்து நடக்கிறது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பே படத்தின் மிளகுரசம் ச்சே.. சாராம்சம்.

வாரிசுநடிகர்கள் என்றால் முதல் படத்திலேயே நூறு பேரை அடித்து வீழ்த்தி அறிமுகம் கொடுக்கும் இந்த காலத்தில் எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் அசத்தியிருக்கிறார் துல்ஹர் சல்மான். எனக்கு முதலில் அவரின் நடிப்பில் பெரிய ஈர்ப்பில்லாமல் இருந்து நேரம் செல்லச் செல்ல எனக்குள் அட்டகாசமாக சாய்வு நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறார். இனி எனக்கு மலையாளத்தில் அபிமான நடிகர் துல்ஹர் தான்.

தமிழகத்தில் இருக்கும் நமக்கு தெரியாத நாரயணன் கிருஷ்ணன் கேரக்டரை ஜெயப்பிரகாஷ் கண்முன்னே நிறுத்துகிறார். அவருக்கு இந்த ரோட்டோரம் இருக்கும் வயதானவர்களுக்கு உணவு கொடுக்க துவங்கிய காரணத்தை சொன்ன போது நான் நெகிழ்ந்து விட்டேன்.

நீங்களும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

--------------------------------------------------------
மாயமோகினி படம் ஆரம்பித்ததிலிருந்து பாபுராஜூம் பிஜுமேனனும் மட்டுமே வந்து கொண்டிருக்க திலீப் கெஸ்ட் ரோல் மட்டும் தானோ என்று பயந்து விட்டேன், ஆனால் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பார்க்காத கதாபாத்திரமாக அறிமுகமாகும் போது வெடித்து சிரித்தேன்.

ஒரு பெண்ணை வைத்து எந்தெந்த போஸ்களை எடுக்கக்கூடாதோ அத்தனை போஸ்களையும் திலீப்பை வைத்து எடுத்து விட்டனர். ஆனால் ஒன்னு குடும்பம் சகிதம் படம் பார்க்க சிரமம் தான், பல இடங்களில் நெளிய வேண்டியதாகி விட்டது.

அதை தாண்டி சுவாரஸ்மான படம் தான் மாயமோகினி. ஒரு காட்சியில் பாபுராஜுக்கு முத்தம் கொடுப்பார் பாருங்கள். அதிர்ந்து விட்டேன். டேய் இது U சர்டிபிகேட் படம் என்று கூவ வேண்டியதாகி விட்டது.

பிகினி உடையில் ஒரு ஆட்டம், அழகிய லைலா பாடலில் ரம்பா பாவாடை பறக்க ஆட்டம் போடுவாரே அப்படி ஒரு ஆட்டம், புடவை கட்டியிருக்கும் போது அவசரமாக ஒன்னுக்கு வந்து விட மரத்தடி பின்பு ஓதுங்கும் காட்சி என அனைத்துமே காமெடியின் உச்சம். வழக்கம் போல சினிமா கிளைமாக்ஸ் தான். ஆனால் இரண்டு மணிநேரம் பார்த்து ரசிக்க சூப்பர் டைம்பாஸ் படம். மொழி புரியாவிட்டாலும் பார்த்து ரசியுங்கள்.

-------------------------------------------------------
ஜோக்கர் படம் துவங்கி அரைமணிநேரத்திலேயே படம் மொக்கை என்று தெரிந்து விட்டது. சிடி வாங்கி விட்டோமே என்ற காரணத்தினால் பார்க்க வேண்டியதாகி விட்டது. மூன்று மாநில எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தை அனைத்து மாநிலங்களும் புறக்கணிக்க அந்த கிராமத்தில் இருந்து படித்து அமெரிக்காவுக்கு வேலைக்கு போன அக்சய் குமார் தனது கிராமத்திற்கு விடிவுகாலம் வர விண்கலங்கள் கிராமத்தில் இறங்குவதாக கதையடித்து ஊரை நம்ப வைக்கிறார்.

அதன் பரபரப்பு காரணமாக உலக மீடியாக்களின் கவனம் அந்த கிராமத்தினுள் விழ மூன்று மாநில அரசுத்துறைகளும் விழுந்தடித்து ஊரை கவனிக்கிறது. அதில் ஒரு இடைஞ்சல் வர அதனை சமாளித்து எப்படி வெற்றி காண்கிறார் என்பதே படத்தின் கதை.

சுமாரான படம் தான்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment