Friday 11 December 2015

ஈட்டி - சினிமா விமர்சனம்

சில ஆக்சன் படங்களின் ட்ரெய்லரை பார்த்தவுடன் படத்தை முதல் காட்சி பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். அது மாதிரி கொம்பன் படத்தின் ட்ரெய்லருக்கு பிறகு இந்த படத்தின் ட்ரெய்லர் தான் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை விமர்சனத்தின் இறுதியில் பார்க்கலாம்.


தஞ்சாவூரில் ரத்தம் உறையாமை குறைபாடு இருக்கும் அத்லெட் அதர்வா நேஷனல் லெவல் போட்டியில் பங்குபெற சென்னை செல்கிறார், அவருக்கு சென்னைப் பெண் ஸ்ரீதிவ்யாவுடன் காதல் இருக்கிறது. சென்னையில் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலுடன் ஸ்ரீதிவ்யா குடும்பத்தால் உரசல் ஏற்பட்டு பிரச்சனையாகிறது.

பிரச்சனைகள் முற்ற தன் உயிரை காப்பாற்றிக் கொண்டு போட்டியில் வென்றும் ஆக வேண்டிய கட்டாயம். ஸ்ரீதிவ்யா அண்ணன் கொல்லப்படுகிறார். அதர்வாவுக்கும் சுத்துப் போடுகிறார்கள்.

வில்லன்களை வீழ்த்தினாரா, போட்டியில் வென்றாரா என்பது தான் ஈட்டி படத்தின் கதை.


கேட்கும் போது நன்றாக இருக்கும் கதையை ப்ரெசண்ட் பண்ணிய விதம் கொஞ்சம் சுமார் தான். மெயின் கதைக்கு முந்தைய பார்ட்டான தஞ்சாவூர் காலேஜ் பசங்க செய்யும் காமடி செம மொக்கை. படத்தின் ஆர்வத்தையே அந்த பகுதி செமயா குறைத்து விடுகிறது. ஆடுகளம் முருகதாஸ், அஸ்வின் ராஜா எல்லாம் செட் பிராப்பர்ட்டி தான். சில இடங்களில் மொக்கை காமெடி செய்து கடுப்பேற்றுகிறார் முருகதாஸ். 

குறிப்பிட்ட தஞ்சாவூர் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தா, படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நாம் கதையுடன் ஒன்றி இருப்போம். ஆனால் அந்த இடம் சொதப்பி விட்டதால் கொஞ்சம் இழுவையாகிப் போகிறது முதல் பாதி.


நாயகன் அதர்வா படத்திற்காக நிறைய உழைத்து இருக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது. சிக்ஸ்பேக், ஹர்டில் ரன்னிங் போன்றவற்றில் சிறப்பாகவே செய்து இருக்கிறார். தன் உடம்பில் கீறல் விழக் கூடாது என்று மிக கவனமாக இருப்பது, ஸ்ரீதிவ்யாவை டீஸ் செய்து படிப்படியாக காதலில் விழுவது, க்ளைமாக்ஸ் சண்டை போன்றவற்றை திறம்பட செய்து இருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா நாயகியாக வந்து அதர்வாவை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களையெல்லாம் ஜொள்ளு விட வைக்கிறார். என்னா அழகு, என்னா அழகு. சொக்கா எனக்கில்லை எனக்கில்லை. தாவணியில் செம அழகு என்றால் சுடிதாரில் பேரழகு.


வில்லனாக இயக்குனர் ஆர் என் ஆர் மனோகர். அந்த முட்டை கண்ணில் ரௌடி என்பதை நிஜமாக நம்ப வைக்கிறார். உடல் மொழி கூட கச்சிதம். செல்வா அசிஸ்டெண்ட் கமிஷனர் போஸ்ட்டில் வந்து கொடுத்ததை செய்து போகிறார்.

ட்ரெய்னராக வரும் நரேன் பிரமாதமான நடிப்பு. முகபாவங்களிலேயே அந்த தாக்கத்தை கொண்டு வந்து விடுகிறார். மகன் மீது பாசம் கொண்ட இயல்பான தந்தையாக ஜெயப்பிரகாஷ் ஆசம்.

இரண்டாவது வில்லனாக வரும் நடிகர் கொஞ்சம் வெயிட் குறைச்சலாக தெரிகிறார். இந்த மாதிரி படங்களில் எல்லாம் வில்லன் மிரட்டனும். இவனை எப்படி நாயகன் சமாளிப்பான் என்று நாம் கவலைப்படனும். ஆனால் அந்த வில்லன் தேமே என்று இருக்கிறார். முரட்டுத்தனமும் இல்லை. நடிப்பும் இல்லை.

அந்த ப்ளட் ப்ளீடிங் நல்ல மேட்டர், எந்த நிமிடமும் அதர்வாவுக்கு என்ன ஆகுமோ, சின்ன கீறலாவது விழுந்து விடுமோ என்று நாமும் பயப்படுகிறோம் அவருடன் சேர்த்து. அதற்கேற்றாற் போல் படம் நெடுக கன்டினியுட்டியாக அவர் உடலை கொஞ்சமாவது கிழிக்க வாய்ப்பு இருக்கும் இடங்களில் கவனமாக இருப்பது போன்று காட்சியமைத்து இருப்பது சிறப்பு.

படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் இருப்பது ஒகே, ஆனால் ஆர்டர் மாற்றி வைத்திருப்பது பார்வையாளர்களை தக்க வைக்கவில்லை. வில்லன் இறந்தவுடன் படம் முடிந்து விட்டது. அதுக்கு அப்புறம் ரன்னிங் ரேஸ் வைத்திருப்பது எடுபடவில்லை. 

ரன்னிங் ரேஸ், அப்புறம் வில்லனுடன் சண்டை கடைசியாக சுபம் என்று இருந்தால் தான் சரியாக இருந்திருக்கும். வில்லன்கள் செத்தவுடன் பாதி தியேட்டர் காலியாகி விட்டது. 

இருந்தாலும் முன்பாதி காமெடி மொக்கைகளை சகித்துக் கொண்டால் பார்க்கும்படியான ஒரு பொழுதுபோக்கு ஆக்சன் படம் தான் இந்த ஈட்டி.

ஆரூர் மூனா

2 comments: