Showing posts with label பாபநாசம் விமர்சனம். Show all posts
Showing posts with label பாபநாசம் விமர்சனம். Show all posts

Friday, 3 July 2015

பாபநாசம் - சினிமா விமர்சனம்

இன்னிக்கி மாநிலத்தின் சி சென்டர் நகரத்திற்கு விஜயமானதால் அதிகாலை காட்சிக்கெல்லாம் முயற்சிக்கவே இல்லை. முயன்றாலும் காட்சி கிடையாது என்பது வேறு விஷயம். ஏற்கனவே திருஷ்யம் படத்தை மலையாளத்தில் 10 முறைக்கும் மேலாக, தெலுகில் கூட நாலைந்து முறை, கன்னடத்தில் ஒரு முறை என கண்டமேனிக்கு பார்த்து தொலைத்ததால் படத்திற்கு போகும் எண்ணமெல்லாம் இல்லை.


சிவாவின் ரன்னிங் கமெண்ட்ரிக்கு பிறகு மதியம் ஒரு வாறாக மனதை தேற்றி படத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்தவுடன் ஒரு நடராஜ் அழிரப்பரை எடுத்து திருஷ்யம் நினைவுகளை பரபரவென அழித்தேன். எம்ப்டி ஸ்லேட்டாக அரங்கிற்கு சென்றால் வேதனை, அவமானம், வெக்கம். கமலஹாசன் படத்திற்கு முதல் நாள் இரண்டாம் காட்சிக்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கை 30 மட்டுமே. 

கொஞ்ச நாளைக்கு முன்பு நம்ம சைன்ட்டிஸ்ட் முரளிக்கண்ணன் அவர்கள் இது பற்றி ஸ்டேட்டஸ் போட்ட போது ஏகப்பட்ட பேர் அந்த பதிவுக்கு போய் எதிர்வினையாற்றினார்கள். ஆனால் சைன்ட்டிஸ்ட்  சொன்னது என்பது தான் உண்மை. அதிபுத்தசாலித்தனத்தை காட்டும் விதமாக எந்த த்ரிஷ்யம் படத்தையும் ஒப்பிடாமல் படத்தை புதியதாக பார்த்தது போலவே பார்த்து எழுதிய ஒரு சி சென்ட்டர் ரசிகனின் விமர்சனம்.


தன் குடும்பமே தன் உலகம் என வாழும் நாயகன். அவரது குடும்பத்தை ஒரு மரணம் சிக்கலில் விடுகிறது. அதிலிருந்து எப்படி லாவகமாக வெளியில் வந்தான் என்பதே பாபநாசம் படத்தின் கதை. மிகச்சிறந்த த்ரில்லர் படமாதலால் பார்ப்பவர்கள் திரையில் கண்டு ரசித்தால் இந்த படம் ஒரு மிகச்சிறந்த அனுபவமாக அமையும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மிகச்சில சினிமா ஆர்வலர்கள் வேண்டுமானால் மலையாளத்தில் படத்தை பார்த்து விட்டு காட்சிக்கு காட்சி ஒப்பிட்டு குறைகளை சொல்லலாம். ஆனால் சிறுநகரங்களில் படத்தின் திருப்பங்களை முன்னரே அறியாதததால் படத்தை ரசித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்த படம் தான் சீட் நுனிக்கு வர வைக்கும் ஆகச் சிறந்த பொழுது போக்கு சித்திரம்.


கமல் தளர்ந்து இருப்பதை பார்க்கும் போது பகீர் என்று இருக்கிறது. இந்த படத்திற்காக இப்படி ஆனாரா அல்லது முதுமையா என்பது அவருக்கு தான் தெரியும். க்ளைமாக்ஸில் ஆஷா சரத் மற்றும் ஆனந்த் மகாதேவன் இருவரிடமும் தன் குடும்பத்தையும் அதற்காக தான் செய்ததையும் குற்ற உணர்வுடன் சொல்லி கண்கலங்கும் இடத்தில் தெரிகிறது கமல் ஏன் சிறந்த நடிகர் என. வருடத்திற்கு ஒரு படம் உங்கள் ரசனைக்கும், எங்கள் ரசனைக்கு பாபநாசம் போன்ற படங்களிலும் நடியுங்கள். என்றுமே நீங்கள் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இருப்பீர்கள். 

கௌதமி வயதானதாலும், நோய்க்கு எடுத்த மருந்துகளின் விளைவாலும் பொலிவிழந்து இருக்கிறார். முகத்தில் சதை தொங்குகிறது. அது தான் அவரை ஆண்ட்டி என்ற இடத்தில் வைத்து ரசிக்க வைக்க விடாமல் தடுக்கிறது. நல்ல கட்டுக்கோப்பான (!)  நடிகையை நடிக்க வைத்திருந்தாலும் பட்டையை கிளப்பியிருக்கும்.


கமலின் பெண்களாக வரும் இருவருமே சிறந்த நடிப்பை பதட்டப்படும் போது வெளிப்படுத்தியுள்ளனர். நிவேதா தாமஸ் பள்ளியில் போலீஸிடம் பதட்டத்தை கட்டுப்படுத்தி இயல்பாக பதில் சொல்லும் போது கவர்கிறார். சின்னப் பெண்ணும் க்ளைமாக்ஸில் புதைக்கப்பட்ட இடத்தை காட்டி விட்டு வந்து கமலிடம் வந்து பதில் சொல்லும் போது கவனிக்க வைக்கிறார்.

கலாபவன் மணி எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன் என்பது போல் இருக்கிறார். அவருக்கு கிட்னி பிரச்சனை அல்லது லிவர் பிரச்சனை இருக்கும் என்று நினைக்கிறேன். முகத்தில் நோயின் தீவிரம் தெரிகிறது. அதை தாண்டி காட்டும் எக்ஸ்பிரசன்கள் எடுபடவில்லை.

ஆஷா சரத் நடிப்பில் மிரட்டியே பிரமாதப்படுத்தி விடுகிறார். நியாயமாக பார்த்தால் ப்ரச்சோதகம் கேட்டகிரியில் வர வேண்டியவர் பயானகம் கேட்டகிரிக்கு வலு சேர்க்கிறார்.

எந்த காட்சியையும் விளக்கி விவரப்படுத்தி உங்கள் சுவாரஸ்யத்தை குறைக்கும் எண்ணமில்லை.  முடிந்த வரை படத்தை திரையில் பார்க்க தவறாதீர்கள். 

மிகச் சிறந்த ஆகச் சிறந்த (இலக்கியவாதி ஆகிக்கிட்டு இருக்கோம்ல) த்ரில்லர் மூவி. பார்த்து மகிழுங்கள். 

ஆரூர் மூனா