Sunday 1 February 2015

தீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தில் தனியார் பேருந்துகள் - பழசு

தீபாவளிக்கு ஊருக்கு போவதற்காக டிக்கெட் பதிவு செய்ய வேண்டியிருந்தது. செல்லும்நாள் தெரியாததால் முன்பே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. வரும் வெள்ளிக்கிழமை அன்று செல்வதாக திட்டமிட்டு பேருந்தில் முன்பதிவு செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் அரசுப்பேருந்தில் டிக்கெட் கிடைக்கவில்லை.

தனியார் பேருந்து என்றால் பணம் அதிகமாக கேட்பாங்களே என்று யோசித்து வேறு வழியில்லாமல் தனியார் பேருந்து நிலையம் சென்று திருவாரூர் செல்லும் தனியார் பேருந்தில் வெள்ளியன்று ஊர் செல் டிக்கெட் கேட்டேன். டிக்கெட் 600 ரூபாய் என்றான். எனக்கு பகீர் என்றது. டிக்கெட் விலை அதிகம் சொல்லுவான் என்று எதிர்பார்த்து சென்றிருந்தாலும் 600 ரூபாய் மிக அதிகம். இது வெறும் டீலக்ஸ் பஸ்ஸூக்குத் தான். அதுவே ஏசி பஸ் என்றால் 1000 ரூபாயாம். சாதாரண நாட்களில் அரசு டீலக்ஸ் பேருந்தில் 160 மட்டுமே கட்டணம். தனியார் பேருந்தில் 300 மட்டும். அதுவும் நான் முன்பதிவு துவங்கிய நாளிலிலேயே முன்பதிவு செய்ததால் டிக்கெட் விலை 600.இவர்கள் கடைசி நேரத்தில் விற்பதற்காக பாதி டிக்கெட்களை பதுக்கி வைத்திருப்பார்கள். கண்டிப்பாக அதன் விலை அன்று 1000க்கு குறையாமல் இருக்கும்.

இங்கிருந்து 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவாரூருக்கு செல்வதற்கே இந்த நிலையென்றால் மதுரை, திருநெல்வேலி தாண்டி செல்பவர்களின் நிலையோ பரிதாபம் தான். ஒரளவுக்கு வசதியுள்ளவர்கள் எவ்வளவு விலையேற்றினாலும் தேவை கருதி கொடுத்து செல்வார்கள். குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சென்னையில் இருக்கும் பேச்சிலர்கள் என்றால் அரசுப்பேருந்தில் அடித்துப்பிடித்துக் கொண்டு நின்று கொண்டாவது செல்ல முயற்சிப்பார்கள்.

ஆனால் இந்த திருமணமாகி கைக்குழந்தையுடன் இருக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்து ஆண்களின் நிலை தான் இது போன்ற சமயங்களில் பரிதாபமாக இருக்கும். கையில் குழந்தை, குறைந்தது இரண்டு பேக்குகள் உடன் மனைவியுடன் பேருந்துக்காக அல்லாடும் போது மனதை என்னவோ செய்யும். அவர்களுக்கு முன்செல்வதற்கான திட்டமிடுதலும் இருக்காது. அதிக விலை கொடுத்து செல்லவும் முடியாது. பேருந்து நிலையத்தின் உள்நுழையும் முன்பே பேச்சிலர்கள் என்றால் முண்டியடித்து உள்ளே சென்று விடுவார்கள். குடும்பஸ்தர்களுக்கோ அதுவும் முடியாது. பிறகு விடியற்காலை எப்படியாவது ஒரு பேருந்தில் அடித்துப்பிடித்து நின்று செல்ல இடம் வாங்கி வீட்டிற்கு செல்லும் ஆயிரம் ஆண்களை நான் அறிவேன். அவர்கள் வீட்டிற்கு செல்லவும் மதியமாகி விடும். அதற்குள் பண்டிகையும் முடிந்திருக்கும். இந்தியனாக பிறந்ததற்கு அதுவும் தமிழனாக பிறந்ததற்கு அவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும்.

இதற்கு தீர்வு காண்பது யார்?

இது போன்ற பணடிகையன்று அதிக விலை நிர்ணயித்து கிடைத்த வரை அள்ளிவிட நினைக்கும் தனியார் பேருந்து முதலாளிகளை யார் கேட்பது.

தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் மாநில அரசு ஊழியர்களை யார் தான் கேட்பது.

மொத்தமாக ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பண்டிகைக்கு முன்தினம் அதிக விலைக்கு விற்கும் தரகர்களை யார் தான் கேட்பது.

ரயில் டிக்கெட் தரகர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களை யார் தான் கேட்பது.

இதற்கு கோபப்பட முடியாமல் குடும்பஸ்தனாகி அதிக விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்கி ஊருக்கு சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை தமிழன் ஆரூர் முனா

No comments:

Post a Comment