Sunday 1 February 2015

உளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்சனம் - பழசு

ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் படம் தமிழில் பார்க்கலாம் என்று இன்று மதிய காட்சி மினிமோட்சம் தியேட்டருக்கு சென்றிருந்தோம், ஒருவன் வருவதற்கு லேட் ஆகியதால் படம் போட்டு பதினைந்து நிமிடத்துக்கு பிறகு தான் உள் நுழைந்தோம். ஒரு டிக்கெட் ஐம்பது ரூபாய், சென்னையில் இவ்வளவு கம்மி விலையில் சினிமாவா என்று ஆச்சரியப்பட்டு உள்ளே சென்றால் தான் தெரிந்தது ஏன் ஐம்பது ரூபாய் என்று. படத்தில் க்ளாரிட்டியே இல்லை, ப்ரோஜக்டர் படு மோசம். ஒரு இருபது வருடத்துக்கு முன்பு டூரிங் டாக்கீஸில் படம் இப்படி தான் தெரியும். கஷ்ட காலம்டா சாமி.

சரி படத்தின் கதைக்கு வருவோம், ஜானி (ரோவன் ஆட்கின்சன்) ஒரு ரகசிய ஏஜெண்ட். அவரின் உதவியாளர் ஒருவர் பெயர் தெரியவில்லை. இருவரும் ஓரு மிஷன் காரணமாக ஹாங்காங் சென்று டெரரிஸ்ட் ஒருவரை சந்திக்கின்றனர், அவரிடம் ஒரு நாட்டின் அதிபரை கொலை செய்யும் திட்டம் பற்றி அறிகின்றனர், கொலை செய்வதற்குரிய ஆயுதத்தின் செயல்படுத்தும் சாவி மொத்தம் மூன்று பேரிடம் உள்ளது எனவும் அதில் ஒருவர் அந்த டெரரிஸ்ட் தான் எனவும் அறிகின்றனர். பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு வில்லிக்கிழவியால் சுடப்பட்டு அந்த டெரரிஸ்ட் இறக்கின்றார். அந்த சாவி வில்லன் கையில் சிக்குகிறது. அவரது அரசாங்கத்திடம் திட்டு கிடைக்கிறது. மீண்டும் மற்ற இரண்டு சாவிகளை கைப்பற்றும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்படுகிறது, இரண்டாவது ஆள் ஒரு ரஷ்யன் என்று விவரம் தெரிந்து ரஷ்யனிடம் இருந்து இரண்டாவது சாவியை கைப்பற்ற இருவரும் கால்ப் விளையாடுவது போல் சென்று அவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்த ரஷ்யனும் வில்லிக்கிழவியால் சுடப்படுகிறார். அவரைக் காப்பாற்ற ஜானியும் அவரது உதவியாளரும் ஹெலிகாப்டர் எடுத்துக் கொண்டு செல்கின்றனர். வழியில் மூன்றாவது ள் ரகசிய ஏஜெண்ட்களில் ஒருவர் என்று விவரம் சொல்லி ரஷ்யன் செத்துப் போகிறார். அவரிடம் இருந்த சாவி ஜானியிடம் கிடைக்கிறது. அவர் நாட்டின் பிரதமருடன் நடக்கும் ரகசிய ஏஜெண்ட் குழு மீட்டிங்கில் மூன்றாவது ஆளை நாளைக்குள் கண்டு பிடிப்பதாக கூறுகிறார். ஜானியின் உதவியாளர் மூலம் அந்த வில்லன் யாரென்று தெரிகின்றது, ஆனால் அந்த வில்லன் முந்திக் கொண்டு ஜானி தான் அந்த ரகசிய ஏஜெண்ட் என்று அரசாங்கத்திடம் சொல்லி நம்ப வைக்கின்றார். நாட்டின் உளவுத்துறை அவரை துரத்துகிறது, அவர் அவர்களிடமிருந்து தப்பித்து தன் தோழியும் ரகசிய ஏஜெண்டுமான கதாநாயகியின் வீடடில் தஞ்சமடைகிறார். அவரிடம் உள்ள டாக்குமெண்டடுகளின் மூலம் வில்லன்களின் ஆயுதம் ஒரு மருந்து என்றும் அதை யார் உடம்பில் செலுத்துகிறோமோ அவர் வர்கள் சொல்படி நடப்பர் என்றும் அதன் மூலம் கொலை செய்யப்படுகிறது என்பதையும் அறிகின்றார். அவர்கள் அந்த நாட்டின் பெரிய பெண் அதிகாரி மூலம் அந்த நாட்டிற்கு வரும் வேறு நாட்டு அதிபைர கொலை செய்ய திட்டமிடுகின்றனர் என்பதையும் அறிகின்றார். அதை தடுக்க அவர் முயற்சிக்கும் போது அவரே தவறுதலாக அந்த மருந்தை குடித்து விடுகிறார். அதன் மூலம் ஜானியையே கொலை செய்ய அனுப்புகின்றனர். அவர் கொலை செய்தாரா இல்லை திட்டத்தை முறியடித்து வில்லன்களை பிடித்தாரா என்பதே படம். அப்பாடா.

மற்றவர்களெல்லாம் எப்படி விமர்சனம் எழுதுகிறார்களோ, படம் பார்த்து விட்டு வந்ததும் படத்தில் உள்ள கேரக்டர்களின் பெயர்களெல்லாம் மறந்து விடுகிறது, கஷ்டம்டா சாமி.

படத்தின் மூலமே ரோவன் ஆட்கின்சன் தான். காமெடி சான்சே இல்லை. நீண்ட நாட்களுக்கு தியேட்டரில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் விழுந்து விழுந்து சிரித்த படம் இது தான்.

ரஷ்ய வில்லனை காப்பாற்ற ஹெலிகாப்டர் எடுத்து ஆஸ்பத்திரி செல்லும் போது வழி தெரியாததால் சாலைகளின் ஊடாக ஹெலிகாப்டரை ஓட்டி செல்லும் போது சிரிப்பில் தியேட்டர் அதிர்கிறது. அதே போல் வில்லிக்கிழவி என்று நினைத்து ஒவ்வொரு முறையும் வேறு ஒரு கிழவியை பிடித்து அடிக்கும் போது சிரித்து வயிறு வலிக்கிறது. இன்னும் நிறைய காட்சிகள் படம் முழுவதும் உள்ளது, சொன்னால் பார்க்கும் போது உங்களுக்கு சுவாரஸ்யம் போய் விடும், எனவே அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்து விட்டு நன்றாக சிரித்து மகிழுங்கள்,

ஆரூர் முனா

No comments:

Post a Comment