Friday 20 March 2015

மரண பாதையாகும் சென்னை - தஞ்சை மாவட்டம் சாலை - 2011 - பழசு

காவிரி டெல்டா பகுதியிலிருந்து சென்னை செல்வதற்கு முன்பு இரண்டு வழியிருந்தது.

முதல் வழி மற்ற பகுதிகளிலிருந்து கும்பகோணம் வந்து அங்கிருந்து அணைக்கரை பாலம் வழியாக சேத்தியாத்தோப்பு நெய்வேலி, பண்ருட்டி, விக்கிரவாண்டி, திண்டிவனம், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை வந்து சேர்வது.

இரண்டாம் வழி மற்ற பகுதிகளிலிருந்து மயிலாடுதுறை வந்து அங்கிருந்து சீர்காழி, சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி, கல்பாக்கம், மகாபலிபுரம், திருவான்மியூர் வழியாக சென்னை வந்து சேர்வது. இது ECR சாலை ஆகும்.

தற்போது அணைக்கரை பாலம் பழுதடைந்துள்ளதால் அனைத்து வழி பேருந்துகளும் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வழியாக சிதம்பரம் வந்து அங்கிருந்து இரண்டு வழிகளில் சென்னை வந்தடைகின்றன.

ஒன்று வழக்கமான ECR சாலை.

மற்றொன்று சிதம்பரத்திலிருந்து துவங்கி புவனகிரியில் பிரிந்து சேத்தியாத்தோப்பு வழியாக நெய்வேலி, பண்ருட்டி, விக்கிரவாண்டி, திண்டிவனம், செங்கல்பட்டு தாம்பரம் வழியாக சென்னை வருவது. தற்பொழுது பிரச்சனையே இந்த வழி தான். இந்த பதிவும் மேற்கூறிய சாலையைப் பற்றித் தான்.

சென்னையிலிருந்து கிளம்பினால் நாம் தாம்பரம் தாணடியதும் தூங்கிவிடுவோம். திண்டிவனம் வரை ஒன்றும் தெரியாது. திண்டிவனம் தாண்டி விக்கிரவாண்டிக்குள் ஏதாவது ஒரு மோட்டலில் நிறுத்தியதும் நல்லத்தூக்கத்திலிருந்து எழுவோம். இயற்கை உபாதையை முடித்து விட்டு மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் நமது இனிய பயணம் துவங்கி விடும். அதுவும் பின் சீட்டில் இருந்தோமானால் முடிந்தது கதை. விக்கிரவாண்டி தாண்டியதும் சாலை மிகவும் மோசமாக இருக்கும். பண்ருட்டி தாண்டி நெய்வேலி வரை ரோட்டின் நிலைமை அப்படித்தான். இரண்டு நாள் சென்றால் கண்டிப்பாக முதுகு வலி வந்து விடும். பேருந்து ஒட்டுனருக்கும் ஒட்டுவதற்குள் தாவு தீர்ந்து விடும். அவர்களிடம் ஒரு முறை கேட்டால் இந்த சாலையில் ஒட்டுவதில் உள்ள சிரமத்தை பற்றி கதை கதையாக கூறுவார்கள். இந்தப் பாதை திண்டிவனத்திலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்ததும் நமக்கு இந்த பிரச்சனை ஆரம்பமாகி விடும். இன்று நேற்றல்ல பல வருடங்களாக இந்த ரோடு இப்படித்தான் இருக்கிறது.

ஆனால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ECR சாலை வழியாக செல்கின்றன. இந்த வழியாக சென்றால் மிக விரைவாகவும் ஒழுங்கான சாலை வழியாகவும் தஞ்சை பகுதிகளுக்கு செல்லமுடியும். ஆனால் அனைத்து அரசுப் பேருந்துகளும் விக்கிரவாண்டி வழி சாலையைத் தான் பயன்படுத்துகின்றன.

ஏன் இந்த பாரபட்சம். அணைக்கரை பாலத்தை சீர்படு்த்தி இந்த சாலையை மேம்படுத்தினால் ஒட்டு மொத்த காவிரி டெல்டா (பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்) செல்ல அருமையான சாலை கிடைக்கும். ஒன்று அதை செய்யுங்கள் அல்லது தஞ்சை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளையும் ECR வழியாக இயக்குங்கள்.

மாதம் ஒரு முறையோ அல்லது திட்டமிட்டு செல்லும் பயணங்களில் மட்டுமே தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்வதன் மூலம் டிக்கெட் பெற முடியும். என்னைப் போல் வாரம் இருமுறை அல்லது திடீர் பயணங்களில் நாம் முன்பதிவு செய்து கொண்டிருக்க முடியாது. நேராக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று அங்கு இருக்கும் ஏதாவது பேருந்தில் ஏறி செல்ல வேண்டியது தான்.

ரயிலிலோ இன்னும் மோசம். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் அகல ரயில்பாதை பணிகள் நடந்து கொண்டு வருவதால் ஒரு ரயில் மட்டுமே திருவாரூருக்கு விடப்படுகிறது. அதுவும் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருவாரூர் வருகிறது. முன்பதிவுக்கும் வாய்ப்பில்லை என்பதால் பேருந்து வசதியையே நாட வேண்டியிருக்கிறது. இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அவர்கள் வசதிப்படி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.

இது ஒன்றும் சாதாரணமாக ஏதோ ஒரு கிராமத்திற்கு செல்லும் பாதையல்ல. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு செல்லும் பாதை, அரசு விரைந்து முடிவெடுத்தால் நடக்கும். எடுக்குமா?


ஆரூர் முனா

No comments:

Post a Comment