Friday 20 March 2015

பெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள். . . - 2011 பழசு

இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்பதை நம்பாத ஒரு தலைமுறையும் இங்கு வந்து விட்டது. இந்நிலையில் ஒரு அரசியல்வாதியின் இலக்கணமாக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கடைசி நாள் சம்பவங்களின் தொகுப்பு -

1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காலை 06,30 மணிக்கு காமராஜர் எழுந்தார். காலைப்பத்திரிக்கைகள் அனைத்தும் அவரிடம் கொடுக்கப்பட்டன. எல்லாப் பத்திரிக்கைகளையும் படித்தார். பின்னர் குளித்து விட்டு வந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.

10 மணிக்கு காமராஜரை தினந்தோறும கவனிக்கும் டாக்டர் வந்து உடல் நிலையைப் பார்த்து இன்சுலின் ஊசி போட்டு விட்டு சென்றார். 11 மணியளவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் காமராஜர் வீட்டிற்கு வந்தனர், அவரைப் பார்க்க விரும்புவதாக கூறினார்கள். உடல்நலமின்றி இருந்த காமராஜரின் அறைக்குள் அவர்கள் அனைவரும் நுழைந்தனர். இந்த சிறிய அறைக்குள் இத்தனைப்பேருக்கும் இடமில்லையே என்று காமராஜர் கூறியபடியே அறைக்குள் நுழைந்தார். அவரை கைத்தாங்கலாக வெங்கட்ராமன் அழைத்து வந்தார். அவரைப் பார்த்ததும் மாணவர்கள் காந்தி வாழ்க, காமராஜர் வாழ்க என்று கோஷமிட்டனர். மூன்று நிமிடம் அவர்களுடன் உரையாடிய காமராஜர் நிற்க முடியாமல் அவர்களிடம் விடைப்பெற்று சென்றார்.காங்கிரஸ் செயலாளர்களுக்கு 12 மணிக்கு செய்து அவர்களை வந்து சந்திக்கும்படி அழைத்தார். பின்னர் சிதம்பரம் நகர காங்கிரஸ் இணைச்செயலாளரும், பத்திரிக்கை நிருபருமான தணிக்கை தம்பி காமராஜரை சந்தித்து உரையாடினார். வழக்கமாக 1 மணிக்கு உணவருந்தும் காமராஜர் அன்று 01.30 மணிக்கு சாப்பிட்டார்.பாவக்காய் கறி, முளைக்கீரை மசியல், பருப்பு துவையல், மோர் சாதம் ஆகியவற்றை காமராஜரின் உதவியாளர் வைரவன் பறிமாறினார். உணவு அருந்தும் போது மின்விசிறி ஒடியபோதும் வியர்ப்பதாக கூறினார். வைரவன் அதெல்லாம் ஒன்றுமில்லை, பிரமை என்று கூறி காமராஜருடைய உடம்பை துடைத்து விட்டார்.

சாப்பிட்ட பிறகு பாத்ரூம் சென்று விட்டு தன்னுடைய படுக்கை அறைக்கு சென்றார். அவர் மணியடித்தால் தான் உதவியாளர் உள்ளே நுழைவது வழக்கம். இரண்டு மணிக்கு காமராஜர் மணியடித்தார். வைரவன் உள்ளே சென்று பார்த்தால் காமராஜருக்கு உடம்பெல்லாம் வியர்வையாக இருந்தது. ஆனால் அந்த ரூம் A/C செய்யப்பட்டிருந்த ரூம். பயந்து போன வைரவன் காமராஜரின் தலையை தொட்டுப் பார்த்தார். ஜில்லென்று இருந்தது. உடனே அவர் டாக்டரை கூப்பிடட்டுமா என்று காமராஜரிடம் கேட்டார். டாக்டர் செளரிராஜனுக்கு போன் செய்து தரும்படி காமராஜர் கேட்டார்

உடனே பல இடங்களில் தேடிப்பார்த்து அவர் எங்கிருக்கறார் என்று தெரியாததால் மற்றொரு டாக்டரான ஜெயராமனை போனில் பிடித்த வைரவன் காமராஜரை டாக்டரிடம் பேச வைத்தார். காமராஜர் டாக்டரிடம் A/C ஒடிக்கொண்டிருக்கிறது, ஆனால் வேர்க்கிறதே என்று கேட்டார். டாக்டர் மூச்சு திணறுகிறதா, மார்பில் வலியிருக்கிறதா என்று காமராஜரிடம் கேட்டு விட்டு உடனே புறப்பட்டு வருவதாக கூறினார். டாக்டரிடம் பேசி முடித்த பிறகு வைரவனை அழைத்த காமராஜர் வரும்போது ரத்த அழுத்தம் பார்க்கிற கருவியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லு, டாக்டர் வந்தவுடன் எழுப்பு, விளக்கை அணைத்து விட்டு போ என்று கூறினார். உதவியாளரும் விளக்கை அணைத்து விட்டு சென்றார். மூன்று மணியளவில் முதலில் காமராஜர் அவர்கள் தேடிய டாக்டர் செளரிராஜன் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்குள் ஓடிவந்து அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே போனார்.

கட்டிலின் இடதுபுறம் திரும்பிக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு கால்களை மடக்கியவாறு காமராஜர் அவர்கள் படுத்திருந்தார். ஆனால் காமராஜரிடம் இருந்து வழக்கமாக வரும் குறட்டை ஒலி வராததை கண்ட டாக்டர் பயந்து போய் காமராஜரை தோளைத் தொட்டு எழுப்பினார். பதில் எதுவும் இல்லை. நாடித்துடிப்பை பார்க்கலாம் என்று கையைத்தொட்டார். ஜில்லென்று இருந்தது. கையில் இருந்த ரத்த அழுத்தக் கருவியையும், ஸ்டெதஸ்கோப்பையும் தரையில் அடித்து, அழுது புரண்டார். அதற்குள் வந்த டாக்டர் ஜெயராமன் நிலைமையைப் பார்த்து நேரிடையாக இதயத்திற்குள் ஊசி மருந்தை செலுத்த முயன்றார். பயனில்லை. அடுத்ததாக டாக்டர் அண்ணாமலையும் அங்கு வந்தார். அவரும் முயற்சித்துப் பார்த்து விட்டு வெளியில் வந்து அதிகாரப்பூர்வமாக காமராஜர் இறந்து விட்டதை அறிவித்தார். அப்போது மணி 03.20.

காந்தியத்தின் கடைசி தூண் சாய்ந்தது.

காந்தியடிகள் பிறந்த நாள் - அக்டோபர் 2. அதுவே காமராஜ் பிரிந்த நாளாகவுமாகியது. காந்தி மறைந்த செய்தி கேட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி, அன்றும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டது. புனிதன் போனால் பூவுண்டு நீருண்டு என்பது பெரியவர்கள் வாக்கு. அது காமராஜர் மறைவிலும் பொய்க்கவில்லை. அன்று விடாத மழையிலும் கூடப் காமராஜர் மறைவுச் செய்தி காட்டுத்தீயாக நாடு முழுக்கப் புயல் வேகத்தில் பரவியது.


உதடுகளிலே ஒரு மவுனப் புன்னகை, எளியத் தோற்றத்தில் பெருந்தலைவன் புகழோடு ஐக்கியமாகி விட்டான். தமிழகம் எங்கு நோக்கினும் கதறியழும் மனிதர்கள். ராஜாஜி மண்டபத்துக்கு அவர் உடலைக் கொன்டு செல்ல முடிவானது. அன்று மாலை 05.30 மணிக்கு விசேஷ மோட்டார் வண்டியில் காமராஜ் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.


மறைவு பற்றிய செய்தி அறிந்ததும் நாடெங்கும் எல்லாக் ட்சிக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. காமராஜ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காந்தி ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்றும், தமிழ்நாடு அரசு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. கிராமங்கள், நகரங்களில் எல்லாம் தெருக்களிலும் வீடுகளிலும் தலைவர் படத்துக்கு மலையிட்டு தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ராஜாஜி மண்டபம் மக்கள் கடலால் முற்றுகையிடப்பட்ட சிறு தீவு போல் விளங்கியது. மக்கள் வெள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். மூவர்ணக் கொடியால் காமராஜரின் உடல் போர்த்தப்பட்டு, ராஜாஜி மண்டபத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டது.


அப்போதைய தமிழக கவர்னர் ஷா, முதல் மந்திரி கருணாநிதி, புதுவை கவர்னர் சேத்திலால், தமிழக மந்திரிகள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தமிழக தலைவர்கள், சிவாஜி கணேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர். காமராஜரின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிலர் மயங்கி விழுந்தனர். மாரடைப்பு ஏற்பட்டு இரண்டு பேர் மரணம் அடைந்தனர்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. 20க்கும் அதிகமானோர் வரும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மாண்டனர். காமராஜரின் உடலைக் கண்டு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. 2மைல் தூரம் வரை இரண்டு மூன்று வரிசைகளில் தலைவர்கள் முகத்தை கடைசியாக கண்டுவிட மக்கள் திரண்டு நின்றனர்.

இரவு கொட்டும் மழையிலும், தலைவருக்கு நினைவாலயம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க முதல் மந்திரி கருணாநிதியும், காங்கிரஸ் செயலாளர் திண்டிவனம் ராமமூர்த்தியும், ராஜ்பவன் தோட்டத்திற்கு சென்றனர். மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தின் அருகே, இரண்டு ஏக்கர் நிலத்தில் நினைவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.
இரவில் வெளியூர் மக்கள் குவியத் தொடங்கினர்.

ஆரூர் முனா

No comments:

Post a Comment