Friday 20 March 2015

சென்னைக்கு வருவதற்கு மக்கள் படும் பாடு - பழசு

வர வர தீபாவளி போன்ற பண்டிகைகள் யான்டா வருது என்று கடுப்பாகிறது. வேலைப் பார்க்கும் ஊரிலிருந்து சொந்த ஊருக்கு வந்து திரும்பி செல்வதற்குள் அவன் அவன் பாடு டர் தான். நான், எப்பொழுது திருவாரூரிலிருந்து திரும்பி சென்னை வருவேன் என்பது தெரியாததால் முன்பே டிக்கெட் ரிசர்வேசன் செய்யவில்லை. நேற்று முன்தினம் இரவு தான் நேற்று காலை கிளம்பியாகனும் என்று முடிவு செய்து காலை 7.30 மணிக்கு திருவாரூர் பேருந்து நிலையம் வந்தால் 3 சென்னை செல்லும் பேருந்து நின்றது. கூடவே மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. 10 பேருந்தில் செல்வதற்கான கூட்டம் நிற்கிறது. அடுத்தடுத்து பேருந்து வர வர கூட்டம் தாங்க முடியவில்லை. மழையும் விட்டபாடில்லை. ஒரு வழியாக 8.30 மணிக்கு ஒரு பேருந்தை பிடித்து கிளம்பினால், மழையும் நசநசவென்று பேருந்தின் உள்ளேயே பெய்கிறது. அரசுப் பேருந்தின் லட்சணம் அப்படி. ஒரு வழியாக பேருந்து கிளம்பி கூட்ட நெரிசலிலும் மழையுடனும் சென்னை வந்து சேர இரவு 7.00 மணியாகிவிட்டது. பிறகு ஆப் (Half)உடன் ஆப்பாயில் அடித்த பிறகு தான் டென்சன் குறைந்தது.

நானாவது ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டேன். நேற்று இரவு ஊரிலிருந்து கிளம்பும் மக்களின் நிலையை நினைத்தால் வருத்தம் தான் வருகிறது. சென்னை செல்பவர்கள் என்றால் கூட பரவாயில்லை. கூடுதல் பேருந்து விட்டிருப்பார்கள். மாறி மாறி கூட வந்து விடலாம். ஆனால் திருப்பூர், பெங்களூரு, கேரளா போன்ற ஊரில் வேலை செய்யும் மக்களின் நிலை, நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

யார் தான் இந்த அவல நிலையை தீர்ப்பார்கள். வருடா வருடம் பேருந்துகளும் அதிகமாகிறது. வெளியூர் செல்லும் மக்களும் அதிகமாகிறார்கள்.

நான் 1997ம் வருடத்திலிருந்து தீபாவளிக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் கொடுமையை அனுபவித்து வருகிறேன். இன்றோ பல மடங்கு கூடியிருக்கிறதே தவிர கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. அப்பொழுது பேருந்து நிலையம் பாரீஸில் இருந்தது. சிறிய பேருந்து நிலையம் கூட்டம் அளவிட முடியாதது. இதில் ஒரு முறை இரவெல்லாம் பேருந்து கிடைக்காமல் ஒரு இரவு முழுவதும் பேருந்து நிலையத்திலேயே தங்கி விடியற்காலை பேருந்து பிடித்து வந்திருக்கிறேன். அதையெல்லாம் இன்று நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அந்த சமயத்தில் நானெல்லாம் பரவாயில்லை, குடும்பஸ்தர்கள் நிலை தான் பரிதாபமாக இருக்கும். ஒரு பேருந்து, நிலையத்தின் உள் வந்தால் இடம் பிடிக்க அடித்து பிடித்து நாங்களெல்லாம் சென்று விடுவோம், ஆனால் குடும்பஸ்தர்கள், மனைவி மற்றும் குழந்தையுடன் பேருந்தில் இடம் பிடிக்க அலைவதை பார்க்கும் போதெல்லாம் மிகக் கொடுமையாக இருக்கும்.

எந்த அரசு வந்தாலும் இந்தக் கொடுமை தீரப்போவதில்லை. எவனாவது இந்தப் பிரச்சனையை தீர்க்க வருவான் என்ற நம்பிக்கையில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டுப் போட்டு காத்திருக்கும் மக்களின் நிலை தான் பாவம்.

என்றாவது இந்த கொடுமை தீரும் என்ற நிலையில் இருக்கும்

ஆருர் முனா

No comments:

Post a Comment