Friday 20 March 2015

ராஜபாட்டை - பழசு 2011

என்னடா மயக்கம் என்ன படத்துக்கே அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் காலை 07.30 மணி சிறப்பு காட்சி போட்டாய்ங்களே, இது விக்ரம் படமாச்சே சிறப்பு காட்சி பேச்சே இல்லை என்னும் போதே கொஞ்சம் யோசித்திருக்கலாம். பரவாயில்லை வந்தது வந்து விட்டோம் காலையில் தான் டிக்கெட் எடுத்தேன். அப்பொழுதே C வரிசையில் டிக்கெட் கிடைத்தது. அப்பொழுதாவது யோசித்திருக்கலாம். 11 மணிக்கு காட்சி என்றவர்கள் 12 மணிவரை யாரையும் உள்ளேயே விடவில்லை, அப்போதாவது யோசித்திருக்கலாம். எல்லாம் முடிந்து இப்பொழுது வந்து வீட்டில் யோசித்து கொண்டிருக்கிறேன். எதுக்கு படத்துக்கு போனோம் என்று. எல்லாத்துக்கும் காரணம் இந்த சிபி அண்ணன் தான். இவருக்காக போட்டிக்கு விமர்சனம் போட ஆரம்பித்ததால் முதல் காட்சிக்கு போய் ஏகப்பட்ட பல்பு வாங்கி வந்திருக்கிறேன். உதாரணத்தி்ற்கு வெடி, 1911 மற்றும் பல. அவற்றில் இதுவும் ஒன்று.

ஏற்கனவே தெய்வத்திருமகள் படத்தில் அடக்கி வாசித்ததால் டபுள் ஆக்ஷன் வேண்டுமென்று படம் துவங்கியதிலிருந்து அப்படியே படம் மேலே போய், போய் அப்படியே தியேட்டர் கூரையை பிச்சிக்கிட்டு வெளியே போய் விட்டது. விக்ரமுக்கு இந்த படத்தின் தோல்வி அவரது கேரியரை பாதிக்காது என்பதால் அவரது ஹீரோயிச ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாவம் சுசீந்தரன். என்னடா ஒவர் பில்டப்பா இருக்கு கதைக்கு வருவோம் என்கிறீர்களா. ஒகே.

தமிழகமெங்கும் நில அபகரிப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் பின்புலமுள்ள கும்பல் விஸ்வநாத் அவர்களிடமிருந்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கிறது. விஸ்வநாத் விக்ரமிடம் தஞ்சமடைகிறார். பாதுகாப்பு கொடுக்கும் விக்ரமிடமிருந்து அசந்த நேரத்தில் கோயிலில் வைத்து நிலம் விஸ்வநாத்திற்கே தெரியாமல் கைமாறுகிறது. அதன் பிறகு விக்ரம் ஆக்சன் அவதாரமெடுத்து வில்லன்களிடமிருந்து நிலங்களை மீட்கிறார்.

அவ்வளவு தான் படத்தின் கதையை பற்றி சொல்ல முடியும். இந்த கதை 80களில் 100 படமாக வந்திருக்கும். 90களில் 50 படங்களும் அதன் பிறகு சில வருடங்களுக்கு ஒரு படமும் வந்து கொண்டிருந்தது. கடைசியாக ஜீவா நடித்த பொறி என்று நினைக்கிறேன். அதன் பிறகு அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து ராஜபாட்டையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

விக்ரம் அவரது நடிப்பை பற்றி நாம் சொல்வது ஓவர். அவருக்கு அபிஷேக்பச்சனை விட நன்றாக நடிக்கத் தெரியும் என்பது ராவணன் படத்தை தமிழ், இந்தி இரண்டு வெர்ஷனும் பார்த்தவர்களுக்கு தெரியும். அதனால் அது வேண்டாம். அவரது விதவிதமாக கெட்டப் ஆசைகளை தீர்த்து விட்டிருக்கிறார். படத்தில் ஒவ்வொரு காட்சி எடுக்கும் போதும் ஒரு ஜிம்முடன் பயணித்திருப்பார்கள் போல .ஒவ்வொரு காட்சியிலும் அப்பொழுது தான் பெஞ்ச் பிரஸ் எடுத்து நிமிர்ந்தவர் போல விடைப்பாக தெரிகிறார்.

ஹீரோயின் தீக்ஷா சேத். வேஸ்ட் இரண்டு பாட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். ஆளும் ம்ஹூம், நாக்கு நச்சலேது. ஏதோ ஒக்கடி தக்குவா உந்தி. விஸ்வநாத் நடிகனாக தமிழில் சொல்லும்படியாக நிறைய காட்சிகளில் வருகிறார். காமெடி செய்கிறார். நல்ல பெர்பார்மன்ஸ்.

தம்பி ராமையாவுக்கு காமெடி ரோல் கொடுத்து விட்டிருக்கிறார்கள். முயற்சிக்கிறார். சிரிப்பு தான் வரவில்லை. அந்த அக்கா அதன் பதின்வயதில் எப்படியிருக்கும் நினைக்கும்போதே டென்சனாகிறது (உணர்ச்சியை அடக்குடா செந்திலு.. இப்ப அது ஆன்ட்டி) இப்பொழுதும் பாதி டென்சன் வரவைக்கிறார்.

இந்தபடத்துல வில்லாதி வில்லன் அப்படின்னு ஒரு பாட்டு வருது. அதுல ஒரு பொண்ணு டான்ஸ் ஆடுச்சு. இதை எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கேன்னு ரொம்ப நேரம் யோசிச்சேன், அதுலேயே பாதி பாட்டு போயிருச்சி. அப்பத்தான் என் மூளையில் ஒரு மின்னல் (செம மூளைப்பா எனக்கு...!) அந்த பொண்டு தெலுங்குல மரியாதராமண்ணா அப்படிங்கிற சூப்பர்ஹிட் படத்துல ஹீரோயின். அந்த படத்துல ஹீரோ சுனில், இயக்குனர் இதுவரை தோல்வியே பார்க்காத S.S. ராஜமெளலி. அப்படிப்பட்ட அந்த படத்துல மிக மரியாதையான கேரக்டருல நடிச்ச அந்த பொண்ணு இந்த படத்துடல அயிட்டம் சாங் ஆடுது. அதுக்கு என்ன பணத்தேவையோ, அந்த ஹோம்லியான லுக்ல பார்த்து ரசிச்ச எனக்குதான் மனசு கஷ்டமாயிருச்சி. நல்ல பொண்ணுங்களையெல்லாம் உரிச்ச கோழியாக்கிறானுங்கப்பா.

சுசீந்திரன் அது என்னவோ தெரியவில்லை. அவரது நாலு படத்தையும் முதல் நாள் முதல்காட்சி பார்த்து விடுகிறேன். ஆனால் மூன்று படங்களில் படம் முடிந்து வரும் போது நல்ல படத்தை பார்த்தோம் என்ற பெருமிதம் இருக்கும், ஆனால் இந்த படத்தில் அது இல்லை.

மற்றபடி படம் பார்க்க கூடாது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஹீரோவின் முந்தைய படங்களையும் இயக்குனரின் முந்தைய படங்களையும் ஒப்பிட்டு இந்த படத்திற்கு செல்ல கூடாது, அவ்வளவு தான். நீங்கள் இப்பொழுது தான் சுறா படம் பார்த்து விட்டு வந்ததாக நினைத்துக் கொண்டு இந்தப் படத்தை பாருங்கள் பிடிக்கும், விமர்சனம் ஓவர், இதுக்கு மேலே இன்னும் எழுதலாம் தான். ஆனால் படம் பார்த்து விட்டு வந்திலிருந்து தலை வலிக்கிறது. நான் டேக் ரெஸ்டுக்குறேன். நன்றி வணக்கம்.

ஆரூர் முனா செந்திலு.


டிஸ்கி : அய்யய்யோ ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். இந்தப்படத்தில் அக்காவாக வருவரின் பினாமியாக இருக்கிறார் ஒரு வாப்பா என்னும் முஸ்லீம். அவருக்காக நிலங்களை வாங்கி பதுக்கி வைக்கிறார். அவர் காவல்துறையினிடம் மாட்டிக் கொள்கிறார். அவர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்ய ஆள்பவர்களால் தூண்டப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவத்தை நீங்கள் திமுக குடும்பத்துடனும் சாதிக் பாட்சாவுடனும் ஒப்பிட்டு கொண்டால் நான் பொறுப்பல்ல. ஆனா அப்படித்தான்.

No comments:

Post a Comment