Saturday 21 March 2015

வேட்டை - பழசு 2012

அய்யா எல்லாருக்கும் வணக்கம்,

சத்தியமா சொல்றேன், நான் வேணும்னு நண்பன் விமர்சனம் போடல. எங்க ஏரியாவுல ரிலீசாகல, அத யாராவது கேட்டீங்களா, நான் பாக்காம போட்டேன்னு இவ்வளவு பேர் சொல்றீங்களே, நான் மட்டும் சொல்லாட்டி யாராலயாவது கண்டுபிடிக்கமுடிஞ்சதா, மனசாட்சிக்கு உண்மையா இருக்கனும்னு தான் உண்மைய சொன்னேன். அத வுடுங்க, இன்னக்கி போடுறது உண்மையான வேட்டை பட விமர்சனம் தான்.

----------------------------------------------------

அதுக்கு முன்னாடி ஒரு பர்சனல், நான் சும்மா எழுதுறேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். நேற்று இரவு ஒரு போன் வந்தது. சார் நான் காளையார் கோவிலில் இருந்து பேசறேன். நான் உங்க பிளாக்கின் ரசிகன், நான் மட்டுமல்ல என் கூட நான்கு பேர் உள்ளனர். அவர்களும் உங்கள் எழுத்தின் ரசிகர்கள், நாங்க உங்களை நேரில் பார்க்க வருகிறோம் என்று போன் வந்தது. நான் சத்தியமா நினைச்சேன். யாரோ நம்மளை நல்லா கலாய்க்கிறாங்கன்னு. ஆனால் இன்று காலையில் ஒரு போன் வந்தது. சார் நாங்கள் உங்களை பார்கக திருவாரூர் வந்துள்ளோம் என்று. எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் வந்தது. வீட்டிற்கு வந்தார்கள். என் பிளாக்கைப் பற்றி ஒரு மணிநேரம் ரசித்து பேசினார்கள். எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம், என்னையும் என் பிளாக்கையும் மதித்து சிலர் நேரில் வந்து பேசுகிறார்களே என்று. ஆனால் நான் அவர்களை நன்றாக உபசரித்து அனுப்பினேன். என்ன கொடுமைடா சாமி.

------------------------------------------------------

படத்திற்கு வருவோம், சில பிளாக் ரசிகர்கள் வந்ததால் சினிமாவுக்கு செல்ல 10 நிமிட்ம் லேட்டாகி விட்டது. முதல் பாட்டு ஓடும் போது தான் தியேட்டருக்குள் சென்றேன். ஒன்னும் பிரச்சனையில்லை, அப்போதிலிருந்து பார்த்தாலும் படம் புரிந்தது.

படத்தின் கதைக்கு வருவோம். மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பி. அவர்களது அப்பாவாக சிரஞ்சீவியின் அண்ணன் ராம்பாபு. மாதவன் பயந்த சுபாவம் உள்ளவர். அவருக்கு ஏதாவது பிரச்சனை எனறால் தம்பி ஆர்யா அடிதடியில் இறங்கி காப்பாற்றுகிறார். ராம்பாபு போலீசாக இருந்து இறந்து விடுகிறார். அவர் இறந்ததால் அவரது போலீஸ் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. போஸ்டிங் தூத்துக்குடியில் கிடைக்கிறது.

அங்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரவுடிகள் இருப்பதனால் அவர்களை வேட்டையாடும் வேலை மாதவனிடம் உயரதிகாரியால் தள்ளிவிடப்படுகிறது. அவருக்கு துணையாக ஆர்யா நின்று வில்லன்களை பந்தாடி மாதவன் பெரிய முரட்டு போலீஸ் என்று அனைவரையும் நம்ப வைக்கிறார். அந்த சமயத்தில் அண்ணன் ச்சே. அக்காவான (முகத்தைப் பார்த்தால் அண்ணன் போல தான் தெரிகிறது) சமீரா ரெட்டியை மாதவன் மணமுடிக்கிறார். தங்கச்சி அமலா பாலை ஆர்யா காதலிக்கிறார். மாதவன் பயந்தாங்கொள்ளி என்று வில்லன் குரூப்களுக்கு தெரிய வருகிறது. அவரை தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து அடித்து விடுகறார்கள். ஆர்யா மாதவனுக்குள் உள்ள ஆண்மைத்தனத்தை வெளிக்கொண்டு வந்து அவருடன் சேர்ந்து வில்லன்களை கொன்று தூத்துக்குடியை காப்பாற்றுகிறார். இது தான் படத்தின் கதை.

இரண்டு நாட்களுக்கு முன்பு சிபி அண்ணன் படத்தின் நாட்டை சொல்லியிருந்தார். என்னே சிபி அண்ணனின் புத்திசாலித்தனம்.

ஆர்யா தான் படத்தின் நாயகன். தற்போதைய மார்க்கெட்டின் அடிப்படையில் அவருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நன்றாக செய்கிறார். நன்றாக அடிக்கிறார். அடுத்தது மாதவன், முதல் பாதியில் பயந்த சுபாவம் உள்ளவராகவும் அதன் பின் வீரத்தில் வில்லன்களை அடித்து துவைப்பதுமாக நன்றாக நடித்துள்ளார்.

சமீரா ரெட்டி என்ற ரெண்டும் கெட்டான். அதனை பெண்ணாகவும் ரசிக்க முடியவில்லை ஆணாகவும் நினைக்க முடியவில்லை. அமலா பால் நச்சுன்னு உள்ளார். லிப் கிஸ்ஸில் அசத்துகிறார்.

வழக்கம் போல் வில்லன்கள் தூத்துக்குடியை ஆளுகிறார்கள். கதாநாயகனிடம் தோற்கிறார்கள். ஏண்டா நான் நேரில் பார்த்த தூத்துக்குடி நன்றாக உள்ளது. சினிமாவில் மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக காண்பிக்கிறீர்கள்.

பப்பரப்பா பாடலை நான் நன்றாக எதி்ர்பார்த்தேன். ஆனால் பார்க்க சுமாராக உள்ளது, நால்வரும் சேர்ந்து பாடுவது போல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம்ச்சே அதுவு்ம் போச்சு.

லிங்குசாமி ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுக்கிறார். இது தொடர்ந்தால் சில நாட்களில் ஓரம் கட்டப்படுவார். டெம்ப்ளேட்டில் இருந்து விலகி எடுத்த பீமாவும் சரி ஜியும் சரி ஓடவில்லையென்றால் அவர் என்ன செய்வார் பாவம்.

படம் நன்றாக உள்ளது. ஆனால் திரும்ப பார்த்த லிங்குசாமி படம் போலவே உள்ளது.

நன்றி வணக்கம்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment