Wednesday 18 March 2015

நான் ஒரு டியுப்லைட்டு

சில நாட்களுக்கு முன்பு என் சிறுவயது தோழியை புரசைவாக்கத்தில் எதார்த்தமாக சந்தித்தேன். பால்ய வயதில் என் வீட்டுக்கு எதிர்வீட்டு பெண் அவள். இப்போ திருமணமாகி பெங்களூருவில் வசிக்கிறாள். ஒரு சம்பவத்தை என்னிடம் இலைமறை காயாக சொல்லி "நீ இப்ப மாறிட்டியா இல்லை, இன்னும் டியுப்லைட்டாகத்தான் இருக்கியா" என்று கேட்டாள். 


"என்ன சொல்ற எனக்கு புரியலை" என்றேன்.

"நீ இன்னும் டியுப்லைட் தான்" என்று சொல்லி விட்டு குடும்பத்தினரை நலம் விசாரித்து விட்டு புறப்பட்டு விட்டாள்.

நானும் நாள் முழுவதும் யோசித்துப் பார்த்து நினைவுக்கு வராமல் விட்டு விட்டேன். நேற்று பள்ளிக்கால நண்பனிடம் போன் செய்து பேசும் போது நடந்த விவரத்தை சொல்லி "என்னை இப்பவும் டியுப்லைட்டுன்னு சொல்லிட்டு போயிட்டாடா" என்றேன்.


அவன் நடந்த சம்பவங்களை கோர்வையாக விசாரித்து விட்டு சொன்னான் "நீ டியுப்லைட்டு தான்டா" என்று, அவன் விளக்கிய பிறகு தான் புரிந்தது. அப்போ நடந்த சம்பவத்தை விவரிக்கிறேன். 

நான் 12வது அவள் 10வது படித்துக் கொண்டிருந்த நேரம். அந்த பெண்ணுக்கு என் மீது ஒரு சாப்ட் கார்னர் இருந்திருக்கிறது. அவ்வப்போது அதை ஜாடைகளின் மூலம் வெளிப்படுத்தவும் செய்தாள். வெட்கப்பட்டு கடந்து சென்று விடுவேன். பயம் வேறு இருந்தது. 

எப்பவும் கோயிலுக்கு சாயரட்சை பூஜைக்கு நான் செல்லும் வரை தன் தோழிகளுடன் காத்திருந்து நான் வரும் சமயம் எனக்கு பத்தடி முன்பாக நடந்து செல்வாள். அவ்வப்போது திரும்பிப் பார்த்து புன்னகையும் செய்வாள். எனக்கும் புரிந்தது. ஆனால் சைட் என்பதை தாண்டி காதல் என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி வரவில்லை.

அந்த நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்த (இது என் பள்ளிக்கால தோழனுக்கு தெரிந்திருக்கிறது, படுபாவி என்னிடம் சொல்லாமல் விட்டு இருக்கிறான்) அவள் அவங்க அம்மா அப்பா எல்லாரும் உறவினர் வீட்டுக்கு சென்றபோது என் அம்மாவிடம் வந்து "அத்தை, ஊரில் ஒரு சாவு விழுந்து விட்டதாம். அம்மா அப்பா எல்லாம் அங்கு தான் இருக்கின்றனர். என்னை வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு வரச் சொன்னார்கள். நான் தனியாக சென்றதில்லை, செந்திலை பாதுகாப்புக்கு அனுப்பி வையுங்கள்" என்று கேட்க அம்மா என்னை அழைத்து அவளுடன் போகச் சொன்னார். 

நானும் அவளும் அருகருகே அமர்ந்து இரண்டு மணிநேரம் பேருந்தில் செல்லும் போது அவள் விருப்பத்தை சொல்லி என்னையும் சம்மதிக்க வைக்க நினைத்தாளாம். இதை நேற்று தான் நண்பன் சொன்னான்.

நானோ அன்று நடைபெற இருந்த கிரிக்கெட்டு மேட்ச்க்கு கிளம்பிக் கொண்டு இருந்தேன். என் கவனமெல்லாம் பவித்திரமாணிக்கம் கிரிக்கெட் அணியை அன்று தோற்கடிப்பதில் தான் இருந்தது. அதனால் "போம்மா என்னால் போக முடியாது, எனக்கு வேலை இருக்கு" என்றேன். 

அவள் தனியாக வந்து என்னிடம் "ப்ளீஸ்டா, எனக்காக வாடா" என்று கேட்டாள். எனக்கு கிரிக்கெட்டு தான் முக்கியமாக பட்டது. "நீ கௌம்பு" என்று அவளை அனுப்பி வைத்தேன். அவள் கண்களில் இருந்த அந்த மெல்லிய காதலை கவனிக்கவே இல்லை.

அதன் பிறகு என்னை எப்பப் பார்த்தாலும் திட்டிக் கொண்டும், நான் வழியில் வந்தால் விலகிச் சென்றும் இருந்தாள். நான் அவள் மெச்சூரிட்டி ஆகி விட்டதால் தான் அப்படி நடந்து கொள்கிறாள் என்று நினைத்தேன். 

இப்ப எல்லா விஷயத்தையும் பள்ளிக்கால நண்பன் சொன்ன பிறகு கோர்வையாக்கி யோசித்துப் பார்த்தால் தான் தெரிகிறது சத்தியமா நான் டியுப்லைட்டுங்கோவ்.

ஆரூர் மூனா

7 comments:

  1. பவித்திரமணி பக்கத்தில் இருக்கும் போது, விளையாட்டு முக்கியமா...? ஆனாலும் தப்பித்தீ(தா)ர்கள்...! ஹா.... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அந்த வயசுல கிரிக்கெட்டு தானே முக்கியமா தெரிஞ்சது

      Delete
  2. சில விஷயங்கள்ல ட்யூப் லைட்டா இருக்கறதில தப்பு இல்லை.

    ReplyDelete
  3. நீ Fuse போன Tubelight-nu நீயே சொல்றியே..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு !! Contact Siddha Vaithya salai.

    ReplyDelete
    Replies
    1. ண்ணா, கட்டுரைய இன்னொருக்கா படிங்கண்ணா, நான் பியூஸ் போனதா சொல்லவேயில்லைண்ணா.

      Delete
  4. இனிமே அந்த பொண்ண பாத்தா என்ன சொல்ல போறீங்ணா......

    ReplyDelete