Saturday 21 March 2015

புத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ஜெனரேட்டரும் - பழசு 2012

நேற்று மாலை 4 மணிக்கு புத்தக கண்காட்சிக்கு சென்று முதல் சுற்று முடித்து விடுவோம். அப்பொழுது தான் ஞாயிறன்று குடும்பத்தாருடன் செல்லும் போது வசதியாக இருக்கும் என்று நினைத்து சென்றேன். வழக்கம் போல் பார்க்கிங்கில் வண்டியைப் போட்டு விட்டு நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டு உள் நுழைந்தேன். சில ஸ்டால்களில் புத்தங்கள் வந்து அடுக்கிக் கொண்டு இருந்தனர். கூட்டமும் குறைவாக இருந்தது. பதிவர்கள் யாராவது தட்டுபடுவார்களா என்று பார்த்தேன். யாரும் சிக்கவில்லை. உள்ளே நுழைந்ததும் கேஆர்பி அண்ணனுக்கு போன் செய்து பணம் புத்தகம் கிடைக்கும் இடத்தை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன்.

கண்காட்சியில் நேற்று எழுத்தாளர் ஞானி மற்றும் திலகவதி ஐ.பிஎஸ் ஆகியோரை பார்த்தேன். என் மனைவி மற்றும் என் அக்கா, அத்தானுடன் வந்தால் நிறைய புத்தகங்களை வாங்க முடியாது என்பதால் முதல் சுற்றிலேயே சில புத்தகங்கள் வாங்கினேன். மெட்ராஸ் பவன் சிவக்குமாரிடம் போன் செய்து விசாரித்த போது தான் இன்று (சனிக்கிழமை) வருவதாக கூறினார். அவருடன் இரண்டாவது ரவுண்டு செல்ல வேண்டும்.

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம், தி.ஜா வின் மரப்பசு, எல்.கே.எம் பப்ளிகேசனின் வெளியீடான பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் தாயுமானவன், சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், தோழமை வெளியீடான பிரபாகரன் - இவன் ஒரு வரலாறு, பெரியாரைப் பற்றி கிழவனல்ல கிழக்கு திசை, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர், சுஜாதாவின் சில வித்தியாசங்கள், சுஜாதாவின் ஜே.கே., சுஜாதாவின் வண்ணத்துப் பூச்சி வேட்டை, சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி, சுஜாதாவின் தோரணத்து மாவிலைகள் மற்றும் கேஆர்பி அண்ணனின் பணம் ஆகிய புத்தகங்களை வாங்கினேன். வாங்க நினைத்து வாங்க முடியாமல் வந்தது கேபிளின் சினிமா வியாபாரம், நீங்களும் இயக்குனராகலாம் ஆகியவை. எங்குமே கிடைக்கவில்லை டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் கூட.

அந்த சமயத்தில் எனக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போன் வந்தது. யாரென்று பார்த்தால் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியாக வலம் வரும் நம்ம நாய் நக்ஸ். காலையில் தான் அவருக்கு உங்கள் பதிவில்லாமல் பதிவுலகில் பலர் பித்து பிடித்து திரிகிறார்கள். பதிவிடுங்கள் அய்யா என்று பின்னூட்டமிட்டிருந்தேன். அதற்காக போன் செய்தாராம். போனை ஆன் செய்ததுமே யோவ் சிதம்பரத்திற்கு உடனடியாக ஓரு ஜெனரேட்டர் பார்சல் அனுப்பு என்றார். ஏன் என்றால் இன்னும் அங்கெல்லாம் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லையாம். யோவ் உனக்கு ஜெனரேட்டர் அனுப்பும் செலவை கணக்கிட்டால் நீயே பஸ் பிடித்து சென்னை வந்து பதிவிட்டு செல் என்றேன். அவர் பதிவெல்லாம் எவ்வாறு எழுதலாம் என்று கணக்கிட்டு விட்டாராம். கரண்ட் வந்ததும் உடனடியாக பதிவிட்டு பதிவர்கள் அனைவரையும் கொல்லப் போவதாக சொல்லி போனை கட் செய்தார். ஆஹா இதற்கு தானே புயல் என்னையும் கொண்டு சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்னும் சில புத்தகங்கள் வாங்கியிருப்பேன், அதற்குள் என் அக்கா எனக்கு போன் செய்து தனக்கு ஆன்லைன் தேர்வு இருப்பதாகவும் உதவும்படியும் கேட்டுக் கொண்டதால் 5 மணிக்கே கண்காட்சியை விட்டு வெளியேறி விட்டேன். எனக்கு 'சோ'வின் சில புத்தகங்கள், வண்ணநிலவனின் நாவல்கள், வல்லிக்கண்ணனின் நாவல்கள் வாங்க வேண்டுமென்று ஆசை. ஆனால் நேற்று தேடிய ஸ்டால்கள் வரை கிடைக்கவில்லை. ஞாயிறன்று காலையிலேயே வந்து தேடிப்பார்த்து வேண்டிய புத்தகங்களை வாங்கி செல்ல வேண்டும்.

ஆரூர் முனா

No comments:

Post a Comment