Friday 20 March 2015

மகாத்மா காந்தியின் கடைசி நாள்... - பழசு 2011

கடைசியாக உண்ணாவிரதம் இருந்தபின், அவர் உடல் மிகவும் சோர்வடைந்திருந்தது என்றாலும் மாலையில் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லத் தவறுவதில்லை. 1948 ஜனவரி 30ந்தேதி வெள்ளிக்கிழமை, வழக்கம்போல அதிகாலை 3.30 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்தார், காந்தியடிகள். சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். எலுமிச்சை ரசமும், தேனும் கலந்த வெந்நீர் பருகினார்.
பின்னர் தன் அறைக்குள்ளேயே சிறிது நேரம் உலாவினார். 8 மணிக்கு தன் உதவியாளர் பியாரிலாலை அழைத்து, காங்கிரஸ் கட்சியின் விதிகளில், தான் செய்ய உத்தேசித்திருந்த மாறுதல் களைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச்சொன்னார். பிறகு பத்திரிகைகள் படித்தார். இந்தக் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் (பழைய சென்னை மாகாணம்) கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது.
அதுபற்றி பியாரிலாலிடம் பேசினார். "தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றையும், பலவிதமான கிழங்குகளையும் தமிழ்நாட்டுக்கு இயற்கை வழங்கியிருக்கிறது. அப்படியிருக்க அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் பட்டினி கிடக்கவேண்டிய அவசியம் இருக்காது" என்றார்.
உணவுப்பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி குறிப்பு தயாரிக்கும்படி தன் செயலாளரிடம் கூறி விட்டுக் குளிக்கச் சென்றார். குளித்துவிட்டு வந்தபின், 9.30 மணிக்கு வங்காளி மொழிப் பாடங்களை கற்கலானார். உணவு பின்னர் காலை உணவாக 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், பச்சை முள்ளங்கி, தக்காளிப் பழப் பச்சடி, ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள், இஞ்சிச் சாறு ஆகியவற்றை அருந்தினார்.
பியாரிலால், காங்கிரஸ் விதிகளில் மாற்றம் செய்வது பற்றி தன் கருத்துக்களை எழுதிக் கொடுத்தார். அதைக் காந்திஜி ஆழ்ந்து பரிசீலனை செய்தார். பிறகு படுத்துத் தூங்கினார். பகல் 12 மணிக்கு எழுந்து, தேன் கலந்த வெந்நீர் குடித்தார். டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு பேட்டி அளித்தார்.
தனக்கு வந்திருந்த கடிதங்களைப்படித்துப் பதில் எழுதினார். பிற்பகல் 2.15 மணிக்கு காந்தி வழக்கம்போல பேட்டிகள் அளிக்கத் தொடங்கினார். இலங்கை பிப்ரவரி 14_ந்தேதி சுதந்திரம் பெறுவதால், சுதந்திர தினச்செய்தி வாங்கிச் செல்வதற்காக இலங்கையிலிருந்து டாக்டர் டி.சில்வா வந்திருந்தார். உடன் வந்திருந்த அவருடைய மகள், காந்தியிடம் கையெழுத்து வாங்கினாள். மகாத்மா போட்ட கடைசிக் கையெழுத்து இதுதான்.
மாலை 4 மணிக்கு சர்தார் பட்டேல் வந்தார். அவரும், காந்தியும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பட்டேலுடன் அவர் மகள் மணிபென் பட்டேலும் இருந்தார். 4.30 மணிக்கு பேத்தி ஆபா காந்தி, மாலை உணவைக் கொண்டு போய்க்கொடுத்தார்.
12 அவுன்ஸ் ஆட்டுப்பால், 12 அவுன்ஸ் காய்கறி சூப், ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை காந்திஜி அருந்தினார். மாலை 5 மணி, வழக்கமாக பிரார்த்தனைக் கூட்டத்தில் இருக்க வேண்டிய நேரம். பட்டேல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கும், நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்து வந்தது.
காந்திஜி அவ்வப்போது தலையிட்டுச் சமாதானப்படுத்தி வந்தார். பட்டேல் ராஜினாமாச் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். அவரைக் காந்தி சமாதானப்படுத்தினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகிய இருவருடைய தோள்களில் சாய்ந்தபடி நடந்து சென்றார்.
ஆபா காந்தியுடன் அவர் நகைச்சுவையாக பேசியபடி சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். 10 நிமிடம் தாமதமாகி விட்டதால் காந்தி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்களில் பலர் எழுந்து நின்று, வழி விட்டபடி வணங்கினர். காந்தியும் பதிலுக்குக் கை கூப்பி வணங்கினார்.
திடீரென்று ஒரு இளைஞன், இடது பக்கத்திலிருந்து கூட்டத்தை விலக்கியபடி வந்தான். அவன் காந்தியின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்கு வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலில் விழுவதை காந்தி விரும்புவதில்லை. எனவே மனு காந்தி, "வேண்டாம். பாபு விரும்பமாட்டார்" என்று தடுத்தார்.
அந்த இளைஞன், மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளி விட்டான். மனுவின் கையிலிருந்த காந்தியடிகளின் நோட்டுப் புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக, மனு காந்தி கீழே குனிந்தார். கண் மூடிக்கண் திறப்பதற்குள் அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, காந்திஜிக்கு எதிரே இரண்டு அடி தூரத்திலிருந்து மூன்று முறை சுட்டான்.
மூன்று குண்டுகளும் காந்தியின் மார்பில் பாய்ந்தன. அவற்றில் இரண்டு குண்டுகள் உடலை ஊடுருவிச்சென்று விட்டன. ஒரு குண்டு, இதயத்துக்கு உள்ளேயே இருந்து விட்டது. முதல் குண்டு பாய்ந்ததும், காந்திஜியின் கால் தடுமாறியது. வணங்கியபடியிருந்த கைகள், கீழே சரிந்தன. இரண்டாவது குண்டு பாய்ந்ததும், அவருடைய உடையில் ரத்தக்கறை படிந்தது.
அவர் "ஹே... ராம்" என்று இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும், தரையில் ஈர மண்ணிலும், புல் தரையிலும் விழுந்தார். அப்போது மணி 5.17. காந்தியின் உடலை, பிர்லா மாளிகைக்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து வல்லபாய் பட்டேல் விரைந்து வந்தார். காந்தியின் நாடியைத் தொட்டுப் பார்த்தார்.
இலேசாக நாடி துடிப்பது போலத்தோன்றியது. இதற்குள் டாக்டர் டி.பி.பார்க்கவா வந்து சேர்ந்தார். அவர் பரிசோதித்து விட்டு "காந்திஜி உயிர் பிரிந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன" என்று தெரிவித்தார். இதற்கிடையே, காந்தியடிகளை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்தனர். அவன் தப்பி ஓட எவ்வித முயற்சியும் செய்யவில்லை.
துப்பாக்கியுடன் நின்ற அவனை, கூட்டத்தினர் ஆவேசத்துடன் தாக்கினர். அந்த தாக்குதல் நீடித்திருந்தால், கொலையாளி கொல்லப்பட்டிருக்கலாம். போலீசார் தலையிட்டு அவனை மீட்டு, துப்பாக்கியை கைப்பற்றினர். கொலையாளி பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் நாதுராம் விநாயக் கோட்சே என்றும், 37 வயதான அவன் புனா நகரை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது

காந்தி சுடப்பட்டார் என்ற தகவல், பிரதமர் நேருவுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் அலுவலகத்தில் இருந்து பிர்லா மாளிகைக்கு விரைந்தார். காந்தியின் உடல் அருகே ண்டியிட்டு அமர்ந்து, காந்திஜியின் ரத்தக்கறை படிந்த உடையில் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டு, குழந்தை போல அழுதார்.

சற்று நேரத்திற்குப்பின் காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியும், மந்திரி அபுல்கலாம் ஆசாத்தும் வந்து சேர்ந்தனர். இதற்குள் வெளியே பெருந்திரளான கூட்டம் கூடிவிட்டது. காந்தி இறந்துவிட்டார் என்பதை அறிந்து அவர்கள் கதறி அழுதார்கள். காந்திஜி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

காந்தி உடலைச்சுற்றி பலர் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள். பகவத் கீதை வாசிக்கப்பட்டது. காந்தியின் உடலை தைலமிட்டு (லெனின் உடல் போல்) நிரந்தரமாக வைத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்த யோசனையை, அவர் மகன் தேவதாஸ் நிராகரித்தார். மறுநாளே தகனம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

மறுநாள் அதிகாலையிலிருந்து வெளிநாட்டுத் தூதர்களும், தலைவர்களும், பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்தியவண்ணம் இருந்தனர். காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸ், நாகபுரியிலிருந்து 11 மணிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அதன்பின் 11.15 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பீரங்கி வண்டியில் காந்தியின் உடல் வைக்கப்பட்டு, உடல் மூவர்ணக்கொடியால் பார்த்தப்பட்டது.

அந்த வண்டியில் நேரு, பட்டேல் உள்பட சில தலைவர்கள் இருந்தார்கள். முப்படைகளைச் சேர்ந்த 200 வீரர்கள், ராணுவ வண்டியை இழுத்துச் சென்றார்கள். 2 மைல் நீள ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் நடந்து சென்றனர். "மகாத்மா அமரர் ஆனார்" என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். இடையிடையே பலர் காந்தியடிகளுக்குப் பிடித்தமான "ரகுபதி ராகவ ராஜாராம்" கீதத்தைப் பாடியபடி சென்றனர்.

ஊர்வலத்துக்கு மேலாக மூன்று விமானங்கள் பறந்து ரோஜா இதழ்களைத் தூவின. பீரங்கி வண்டியின் முன்னும், பின்னும் 4,000 ராணுவ வீரர்களும், 1,000 விமானப் படையினரும், 1,000 போலீசாரும், 100 கடற்படையினரும் நடந்து சென்றனர். ஊர்வலம், 5 மைல் தூரம் சென்று, மாலை 4.20 மணிக்கு யமுனை நதிக்கரை அருகில் உள்ள ராஜ கட்டத்தை அடைந்தது.

சந்தனக் கட்டைகளால் ஆன சிதையில் காந்திஜியின் உடல் வைக்கப்பட்டது.4.15 மணிக்கு மகன் ராமதாஸ், கற்பூரத்தைக் கொளுத்தி, "சிதை"க்குத் தீ மூட்டினார். கூட்டத்தினர் கதறி அழுதனர். "சிதை" 14 மணி நேரம் எரிந்தது. அதுவரை தொடர்ந்து பிரார்த்தனைகள் நடந்தன. பகவத் கீதை முழுவதும் வாசிக்கப்பட்டது.

27 மணி நேரத்துக்குப்பின், தீ முழுவதும் ஆறிய பின், அஸ்தி (சாம்பல்) சேகரிக்கப்பட்டது. அஸ்தியுடன் ஒரு துப்பாக்கி குண்டும் கிடந்தது. அஸ்திக் கலசம், பிர்லா மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பெரும் பகுதி, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நேரு, பட்டேல், ஆசாத், சரோஜினி நாயுடு ஆகியோர் முன்னிலையில் கரைக்கப்பட்டது.

அஸ்தியின் ஒரு பகுதி, சிறு சிறு கலசங்களில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புனித நதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட்டது. பர்மா, இலங்கை, மலாயா, திபெத் ஆகிய நாடுகளுக்கும் சிறிது அஸ்தி அனுப்பப்பட்டது. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று, நேரு ரேடியோவில் பேசினார்.

அமைதி காக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். குரல் தழுதழுக்க அவர் கூறினார்: "நமது வாழ்வின் ஒளி விளக்கு அணைந்து விட்டது. தேசத்தந்தை மறைந்துவிட்டார். ஆறுதல் பெறுவதற்கோ, ஆலோசனைகள் பெறுவதற்கோ இனி அவரிடம் போக முடியாது. எனக்கு மட்டுமின்றி, இந்த நாட்டின் கோடானுகோடி மக்களுக்கு இது ஒரு பேரிடி.

"மகாத்மா காந்தி தமது பணிகளை ஏற்கனவே முடித்துக்கொண்டு விட்டார் என்று நினைத்தால் அது தவறு. குறிப்பாக, பல சோதனைகள் சூழ்ந்துள்ள நிலையில் அவர் நம்மிடையே இல்லாதது பயங்கர பேரிடி. "ஒளி விளக்கு அணைந்துவிட்டது என்று நான் கூறினேன். ஒரு விதத்தில் அது சரியல்ல. கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டில் ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த ஒளி விளக்கு, மேலும் பல ஆண்டுகள் ஒளி பரப்பிக்கொண்டிருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஒளி விளக்கை நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும் காணலாம்" இவ்வாறு நேரு கூறினார். உலகத் தலைவர்கள் அஞ்சலி "புத்தருக்குப்பின் இந்தியாவில் தோன்றிய மாமனிதர் மறைந்துவிட்டார்" என்று உலகத் தலைவர்கள் கண்ணீர் சிந்தினர்.

"அளவுக்கு மீறி நல்லவராக இருப்பதுகூட கொடியதுபோலும்" என்றார், ஜார்ஜ் பெர்னாட் ஷா இந்தியாவின் பெயரையே "காந்தி நாடு" என்று மாற்றலாம் என்று கூறினார், காந்தியின் மரணச்செய்தியை அறிந்ததுமே, அப்போது நடந்து கொண்டிருந்த ஐ.நா. சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்திலும், அந்நாட்டுக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்தன.

தீர்க்கதரிசி தனது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், அது இயற்கையானது அல்ல என்பதையும் முன்பே உணர்ந்த தீர்க்கதரிசி காந்தியடிகள். "நோய்வாய்ப்பட்டோ, விபத்தினாலோ நான் மரணம் அடையமாட்டேன்.ஒரு கொலையாளியின் கையினால், கொள்கைக்காக உயிர் துறக்கும் தியாகியாக உயிர் துறப்பேன்" என்று சில நாட்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினார். அதன்படியே, ஒரு இந்து தீவிரவாதியின் குண்டுக்கு இரையானார்.

காந்தியின் மறைவினால், இந்திய வரலாற்றில் ஒரு யுகம், ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

ஆரூர் முனா

No comments:

Post a Comment