Saturday 21 March 2015

மூதறிஞர் ராஜாஜியின் கடைசி நாள் - பழசு 2012

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் ராஜாஜி. "இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்" என்ற பெருமைக்கு உரியவர். "என் மனச்சாட்சியின் காவலர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர். உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். ரத்தத்துடன் சிறுநீர் கலந்துவிடும் "யூரிமியா" என்ற நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, 17.12.1972 அன்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் ராஜாஜி சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், பிறகு பின்னடைவு ஏற்பட்டது. மூன்று நாட்கள் மரணத்துடன் போராடினார். டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், குணம் ஏற்படவில்லை. டிசம்பர் 25ந்தேதி மாலை 5.44 மணிக்கு ராஜாஜி மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது சி.ஆர்.நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, பேரப்பிள்ளைகள், முதல் அமைச்சர் கருணாநிதி ஆகியோர் அருகில் இருந்தனர்.

ராஜாஜி மரணம் அடைந்த செய்தியை, டாக்டர் சத்தியநாராயணா அறிவித்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் கூடி இருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ராஜாஜியை பார்க்க, நிருபர்கள் அனுமதிக்கப்பட்டனர். இறந்த பின்னும் தூங்குவது போலவே ராஜாஜியின் முகம் அமைதியாக காட்சி அளித்தது. அருகே, ராஜாஜியின் மகன் நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, குடும்ப நண்பர் "கல்கி" சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கதறி அழுதபடி இருந்தனர். ராஜாஜியின் உடலைப் பார்த்து முதல் அமைச்சர் கருணாநிதி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆகியோரும், அமைச்சர்களும், சுதந்திரா கட்சி பிரமுகர்களும் கண் கலங்கிய படி நின்றனர். ராஜாஜியின் உடல் மீது, டாக்டர்கள் சார்பில் மலர் மாலை ஒன்று வைக்கப்பட்டது.

சில மதச் சடங்குகளுக்குப்பின், மாலை 6.50 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து ராஜாஜி மண்டபத்துக்கு ராஜாஜியின் உடல் கொண்டு போகப்பட்டது. ராஜாஜியின் உடலை ராணுவ அதிகாரிகள் ஒரு "ஆம்புலன்ஸ்" வண்டியில் ஏற்றினார்கள். இந்த ஆம்புலன்சுக்கு முன்னால் 4 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றார்கள். அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் 2 "ஜீப்" களில் சென்றார்கள். இதன்பின் "ஆம்புலன்ஸ்" வண்டி சென்றது. "ஆம்புலன்ஸ்" வண்டியில் ராஜாஜியின் மகன் நரசிம்மன், பேரன் ராஜ்மோகன் காந்தி, சுதந்திரா கட்சித் தலைவர் ஹண்டே ஆகியோர் இருந்தார்கள். ராஜாஜி உடல் வந்து சேருவதற்கு முன்பாகவே முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும், தலைவர்களும் ராஜாஜி மண்டபத்திற்கு வந்து இருந்தார்கள். ராஜாஜியின் உடல் கொண்டு வந்து வைக்கப்பட்டதும் அதன் மீது கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மற்றவர்களும் மலர் வளையம் வைத்தனர். 6 அடி உயர மேடை மீது ராஜாஜி உடல் வைக்கப்பட்டது. உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. மேடையின் 4 பக்கங்களிலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியை தலைகீழாக பிடித்தபடி நின்றார்கள். ராஜாஜி மரணச்செய்தி சென்னை நகரில் காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராஜாஜியின் உடல் மேடை மீது வைக்கப்பட்டதும், ஆண்களும், பெண்களும் சாரி சாரியாகச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள். ராஜாஜியின் உடல் அருகே மகன் நரசிம்மன், மகள்கள், பேரன் பேத்திகள் சோகமே உருவா அமர்ந்திருந்தனர். ராஜாஜி மறைவுக்கு தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று, முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். "இந்த 7 நாட்களும், அரசு விழாக்கள் ரத்து செய்யப்படும். எல்லா கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்" என்று அவர் அறிவித்தார். மத்திய அரசும், 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது.

ரேடியோவில், வழக்கமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, சோக இசை இசைக்கப்பட்டது. ராஜாஜி மறைவையொட்டி, மறுநாள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. ராஜாஜியின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், ஜனாதிபதி வி.வி.கிரி வந்து, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கறுப்பு உடை அணிந்திருந்தார். சிறிது நேரம் வரை ராஜாஜியின் உடலைப் பார்த்தபடி கைகூப்பி நின்றார். அப்போது அவர் கண்கள் கலங்கின. பிறகு கவர்னர் கே.கே.ஷா ராஜாஜியின் உடல் மீது மலர் வளையம் வைத்து வணங்கினார். கைகூப்பியபடி மூன்று முறை மேடையை சுற்றி வந்தார்.

பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், டெல்லி மந்திரிகள் சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள், எம்.ஜி.ஆர். ஆகியோரும் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். ராஜாஜிக்கு அனைத்து கட்சிகள் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆரூர் முனா

No comments:

Post a Comment