Friday 27 March 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 5

ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வேயில் உள்ள புறசலுகைகள் என்பது ரயில்வே பாஸ், ரயில்வே மருத்துவமனை, அப்புறம் ரயில்வே குவார்ட்டர்ஸ். இதில் வெளியில் இருப்பவர்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஏகப்பட்ட மித் வைத்துள்ளார்கள். அதில் ரயில்வே பாஸ் பற்றிய விளக்கங்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.


அடுத்தது மெடிக்கல் கார்டு. ரயில்வேயில் வேலை பார்ப்பவர்களை எந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டுகளும் நெருங்கவே முடியாது. அந்த கவரேஜ், இந்த கவரேஜ் என்று சொல்லி உங்களிடம் மெடிக்கல் இன்சூரன்ஸ் போட வைக்கவே முடியாது.

எல்லா விதமான பிணிகளுக்கும் ரயில்வே மருத்துவமனையில் இலவச வைத்தியம் தான். வேலையில் சேர்ந்ததும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஐடி கார்டு வழங்கிவிடுவார்கள். அதில் உங்கள் குடும்ப புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கும். 


நமது இருப்பிடத்திற்கு அருகே உள்ள ரயில்வே மருத்துவமனையின் பெயர் அதில் குறிப்பிடப் பட்டு இருக்கும். உதாரணத்திற்கு எனது வீட்டிற்கு அருகே அயனாவரம் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை உள்ளதால் அந்த மருத்துவமனையின் கோட் எண் என் மெடிக்கல் பாஸ்ஸில் குறிப்பிடப்பட்டு இருக்கும். நான் அங்கு தான் ஒபி சீட்டு (OP) போட முடியும். ஒரு முறை போட்டு விட்டால் அது ஒரு வருடம் வரை செல்லும். மறுவருடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

காலை எட்டு மணிக்கு ஓபி துவங்கும். ஓபி பல பிரிவுகளாக உள்ளது. மேல் ஓபி (Male), பீமேல் ஓபி (Female), ஆர்த்தோ ஓபி, சர்ஜிக்கல் ஓபி என பல உள்ளது. அந்தந்த அறைகளின் வாசலில் நமது ஓபி சீட்டை வைத்து விட்டு காத்திருந்தால் வரிசைப்படி நமது பெயரை சொல்லி அழைப்பார்கள். 

சாதாரண பிணியாக இருந்தால் அங்கேயே பரிசோதிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்படும். தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் வல்லுனர்களின் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். அங்கேயே சில குறிப்பிட்ட நேரங்களில் வல்லுனர்கள் வருகை இருக்கும். சாதாரண காய்ச்சல் முதல் முற்றிய வியாதிகள் வரை அனைத்துக்கும் மருத்துவம் இலவசம். தரமானதானவே சிகிச்சைகள் இருக்கும்.


வெளியே லட்சங்களில் பிரசவத்திற்கு கட்டணமாக வாங்கி ஆபரேசன் செய்து குழந்தையை எடுப்பார்கள். இங்கு 90 சதவீதம் சுகப்பிரசவமாகத்தான் அமையும். தவிர்க்கவே முடியாத காலக்கட்டங்களில் தான் ஆபரேசனுக்கு பரிந்துரைப்பார்கள். 

இங்கு பார்க்க முடியாத சிகிச்சைகளுக்கு மட்டும் வெளி மருத்துவமனைக்கு பரிந்துரைப்பார்கள். அந்த சிகிச்சைக்கு கூட அவர்களே பில் செட்டில் செய்து விடுவார்கள்.

யார் யாரை மெடிக்கல் பாஸ்ஸில் சேர்க்கலாம்.

மனைவி குழந்தைகள் சேர்க்கலாம். தந்தை காலமாகியிருந்தால் தாய்க்கு அனுமதி உண்டு. அது போல் தான் தங்கைக்கும்.

அடுத்தாக குவார்ட்டர்ஸ், சென்னையின் பிரதான ரயில்வே குடியிருப்பு அயனாவரத்தில் உள்ளது. ஒரு காலத்தில் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த காலனி இது. பெரும்பாலானவை சிதிலமடைந்து இப்போ 3000க்கும் குறைவான வீடுகளே பயன்பாட்டில் உள்ளது.

இது போக சென்னையில் ரயில்வே ஸ்டேசன்களில் சில குவார்ட்டர்ஸ்கள் இருக்கும். அது ஸ்டேசன் ஊழியர்களுக்கானது. 

சென்னையில் உள்ள பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், சென்ட்ரல், தலைமை அலுவலகம் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அயனாவரம் குடியிருப்பில் தான் உள்ளனர். 

பெரம்பூர், அயனாவரம், வில்லிவாக்கம் பகுதிகளில் 10,000த்துக்கும் மேல் வாடகை உள்ள வீடுகளை விட குவார்ட்டர்ஸ் பெரிது. ஆனால் குறைவான வீடுகளே இப்போது இருப்பதால் குவார்ட்டர்ஸில் வீடு அலாட்மெண்ட் வாங்க பெரும் போட்டியே நிலவுகிறது. நானே ரெண்டு வருசமா முயற்சிக்கிறேன், ஒன்னும் முடியலை. பார்ப்போம் இந்த வருசமாவது குவார்ட்டர்ஸ் வாங்க முடிகிறதா என்று.

குவார்ட்டர்ஸ் வந்தால் HRA 2300 ரூபாய் கட்டாகும். அவ்வளவு தான் அதற்கான வாடகை. இன்றைய நிலையில் இந்த பகுதிகளில் ஒற்றை அறை கூட இந்த வாடகைக்கு கிடைக்காது.

முக்கிய தகவல் : IRS எனப்படும்  ரயில்வே சர்வீஸ் தேர்வுக்காக விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. ரயில்வேயின் உயரதிகாரி வேலை இது. BE (Mech, Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வாகி விட்டால் உங்கள் வாழ்க்கை முறையே மாறி விடும். மெக்கானிக்கல், சிவில் படித்த பொறியாளர்களே உங்களின் மாற்றத்திற்கு தயாராகுங்கள். ஐடி துறையை விட அதிக சம்பளம், அதிக சலுகை, அதிக செல்வாக்கு உள்ள பதவி இது. மாற்றம் உங்கள் கையில். மேலும் தகவலுக்கு UPSC வலைத்தளத்தை பார்க்கவும்.

இந்த ஐஆர்எஸ் படிப்பும் அதன் பலன்களையும் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக சொல்கிறேன்.

ஆரூர் மூனா

2 comments:

  1. வாடகை வீட்டில் இருப்பதற்கு.... 2300 ரூபாய் தானே...? முயற்சி திருவினையாகட்டும்...

    ReplyDelete