Tuesday 26 May 2015

நா ப்ரியமைன ஆந்திர பிரதேசம் - பழசு 2012

எனக்கும் ஆந்திராவுக்குமான தொடர்பு திருப்பதியின் மூலமாக தொடங்கினாலும் தெலுங்குக்கும் எனக்குமான தொடர்பு ரொம்ப கால தாமதமாகவே ஆரம்பித்தது. சிறுவயதில் எங்கள் குடும்பம் திருப்பதிக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

திருவாரூரிலிருந்து ஒரு ஆன்மீக சுற்றுலா பேருந்து கிளம்பும் அதில் என் குடும்பத்தினர் மற்றும் என் அப்பாவின் நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் திருவாரூரில் உள்ள குடும்பத்தினர் பலர் இணைந்து திருப்பதி சுற்றுலாவுக்கு கிளம்புவோம். சாத்தனூர் அணையில் துவங்கி திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் வழியாக திருப்பதி. அங்கு தரிசனம் முடிந்ததும் அலர்மேலுமங்காபுரம், காளஹஸ்தியுடன் சுற்றுலாவை முடித்து திருவாரூர் திரும்புவோம்.

என்னுடைய 5 வயதிலிருந்து 15 வயது வரை தொடர்ந்தது. பிறகு ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகள் கேட்க ஆரம்பித்து பகுத்தறிவு பக்கம் சாய்ந்து திருப்பதி செல்வதை தவிர்த்து விட்டேன். என் அப்பா மட்டும் பலமுறை கேட்டுப் பார்த்து நான் மறுக்கவே திட்டி விட்டு என்னை மட்டும் வீட்டில் விட்டு விட்டு குடும்பத்தினர் சென்று வந்தனர்.

அத்தனை முறை திருப்பதி சென்று வந்திருந்தாலும் ஜருகண்டி என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு தெலுகு வார்த்தைகள் ரொம்ப நாட்களாக தெரியாமலே இருந்தது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்களோ தெலுகு தெரிந்தவர்களோ எங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்ததே அதற்கு காரணம்.

என்னுடைய பதினாலாவது வயதில் எங்கள் வீட்டிற்கு அருகில் நாயுடு குடும்பம் ஒன்று குடிவந்தது. அவர்கள் தெலுகுகாரர்கள் என்று தெரிந்ததும் உடனே நோட்டு புக்கு வாங்கிக் கொண்டு தெலுகு கற்றுக் கொள்ள எண்ணி ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் தமிழ் அர்த்தம் எழுதிக் கொண்டேன். மனப்பாடம் செய்து கொண்டால் தெலுகு வந்து விடும் என்று வேறு எண்ணிக் கொண்டேன். பலநாட்கள் ரொம்ப ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தேன்.

எவ்வளவு நாட்கள் தான் படித்தாலும் செப்பு என்றால் செருப்பு என்றும் சொல்லு என்று இரு அர்த்தங்கள் மட்டுமே நினைவில் இருந்தது. நாளாக நாளாக போரடித்து ஒரு நாள் நோட்டை தூக்கி கடாசி விட்டேன். நான் பத்தாவது படிக்கும் போது அதே வயதுடைய ஒரு பெண் அந்த நாயுடு வீட்டுக்கு விஜயவாடாவிலிருந்து விருந்தினராக வந்திருந்தார். நல்ல கலராக வேறு இருந்ததால் எப்படியும் பேசி விடலாம் என்று முடிவு செய்து நெருங்கினால் அந்தப் பெண்ணுக்கு ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாதாம்.

பிறகு மரோசரித்ரா ரேஞ்சுக்கு முயற்சித்து நெருங்கியதும் அந்த பெண் தன்னுடைய மாமன் பையனை விரும்புவது தெரிய வர தாடி வளராத காலத்திலும் காதல் தோல்வியில் திரிந்தேன். பிறகு ரொம்ப நாட்களுக்கு ஆந்திராவோ தெலுகோ என்னை விட்டு விலகியே இருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தொழிற்கல்வி பட்டயப்படிப்பு படிக்க சென்னை வந்ததும் தான் சென்னையில் கலவையாக தமிழ் மற்றும் தெலுகு பேசும் மக்கள் இருப்பது தெரியவந்தது. என்னுடன் படித்த சக நண்பர்களுக்கு பல வார்த்தைகள் பேசத் தெரிந்திருந்தன.

என்னுடன் படித்த சுஜாதா என்ற பெண் ஐசிஎப் பள்ளியில் தெலுகு மீடியத்தில் படித்தது தெரிந்ததும் எனக்கு வியப்பாக இருந்தது. ஐசிஎப்பில் தனது டூல்ஸ்களை வைத்துக் கொள்ள கப்போர்டு கொடுப்பார்கள். அதில் எனக்கும் அந்த பெண்ணுக்கும் சேர்த்து ஒரு கப்போர்ட் கொடுத்தார்கள். அவருடன் நெருங்க ஆரம்பித்தேன்.

பிறகு அந்த பெண்ணையும் தெலுகு தெரியும் என்ற காரணத்துக்காகவே சைட் அடிக்க முயற்சிக்க அந்தப் பெண்ணோ டிபிக்கல் சென்னைப் பெண்ணாக என்னை ஜஸ்ட் லைக் தட் என்று டீல் பண்ண அதிர்ந்து பின் வாங்கினேன். இன்று திருமணமாகி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டு 100கிலோவுக்கு நெருங்கி விட்டார். ரயில்வேயில் கர்னூல் என்ற ஆந்திர ஊரில் கேட் கீப்பராக இருக்கிறார்.

படிப்பை முடித்ததும் திருவாரூருக்கு திரும்பி எந்த வேலையிலும் சேராமல் வெளங்காமல் போய்க் கொண்டிருந்த நேரம். எங்கள் வீடு இருந்த நகருக்கு ஒரு தெலுகு குடும்பம் குடி வந்தது. எங்கள் அப்பாவுக்கு அந்த குடும்பத் தலைவர் நண்பரானார். அவர் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் திட்ட மேலாளர். அவர் மூலமாக அந்த ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

இன்று எனக்கான பொது அறிவு, கம்ப்யூட்டர் அறிவு, வேலை பார்க்கும் திறன், மேலாண்மை அறிவு என என்னை முழுவதுமாக செதுக்கிக் கொடுத்தது அந்த கம்பெனி தான். வேலையின் காரணமாக அடிக்கடி ஐதராபாத் செல்ல வேண்டி நிர்ப்பந்தமானது. பிறகு ஐதராபாத் பிரியாணி பற்றி தெரிய வந்து பிரியாணி என் குலதெய்வமானது. இன்றும் யாராவது ஐதராபாத்திலிருந்து யாராவது வந்தால் எனக்கு பிரியாணி வந்து விடும்.

வேலையின் காரணமாக தெலுகு கற்றுக் கொள்ள நேர்ந்து இன்று சரளமாக தெலுகு பேசுகிறேன். இன்றும் தமிழகத்தை தாண்டி ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தால் புது அனுபவமாகத்தான் இருக்கும். அவர்களின் கண்மூடித்தனமான ஆன்மீகம், காரமான சாப்பாடு, ஜிகினா டான்ஸ் சினிமா, முக்கியமாக ஐதராபாத் பிரியாணி என ஒவ்வொன்றும் எனக்குள் ஐக்கியமாகி விட்டது.

இவ்வளவு ஏன் என்னுடன் பணிபுரிந்த தெலுகை தாய்மொழியாகவும் ஆந்திராவை பூர்வீகமாகவும் கொண்ட சக ஊழியர் பெண் ஒருவரை பிஸ்ஸா பங்கிடுவதில் சண்டையிட தொடங்கி, சமாதானமாகி பிறகு ஏழு வருடம் காதலில் இருந்து ஏகப்பட்ட எதிரப்புகளை சமாளித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொண்டுள்ளேன். இனி நான் தெலுகை மறக்க நினைத்தாலும் வீட்டம்மா என்னை வசைபாடும் போதெல்லாம் வரும் தெலுகு வார்த்தைகள் என்னை மறக்க விடுமா.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment