Sunday 24 May 2015

டில்லி பொண்ணு சைந்தவியிடம் வாங்கிய பல்பு - பழசு 2012

பள்ளி இறுதிஆண்டு படிக்கும் காலத்தில் ஒரு நாள் காலை என் வகுப்புத்தோழன் தொப்பையப்பன் ரமேஷ் (பெயர் காரணம் : அவன் பரிட்சையில் எப்போதும் தொப்பையப்பர் துணை என்று எழுதி விட்டு தான் பரிட்சை எழுத துவங்குவான்) வந்து திடீர்னு "உனக்கு சிட்னி ஷெல்டன் தெரியுமா?ன்னு கேட்க நான் அதுக்கு "அது என்னடா ஆஸ்திரேலியாவுல இருக்கும் நகரின் பெயரா" என்று விவஸ்தையில்லாமல் கேட்டு தொலைக்க ஏளனமாக சிரிக்க ஆரம்பிச்சான்.

தொப்பை திடீர்ன்னு இப்படி பீட்டர் விட்டா டில்லியில் இருந்து அவன் மாமா குடும்பம் ரயிலை புடிச்சு என் வயித்தெரிச்சலை கொட்டிக்க வந்து இறங்கியிருக்குன்னு அர்த்தம். அதுக்கு பின்னே அவன் "டேய் திவாகரன் மாமா குடும்பத்துடன் ஊரிலிருந்து வந்திருக்கார் . அவர் பொண்ணு நம்ம பேட்ச் தான். ஆனா நம்மை விட உசரம். நம்ம ஊர் மாதிரி இல்லை. நம்மள மாதிரி இட்லியில சாம்பாரை ஊற்றி குழப்பி அடிக்காமல் நல்ல கோதுமை சாப்பிட்டு அதே கலர்ல நல்ல குதிரை மாதிரி இருக்கா.

அவ தான் வாசலில் உள்ள தாத்தா சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுகிட்டு சிட்னி ஷெல்டன் பெயர் போட்ட புத்தகம் படிச்சிக்கிட்டு இருந்தா. நமக்கு தான் is was been, go went fone, read red red தாண்டி இங்கிலீஷ் தெரியாதே, சும்மா சமாளிச்சிட்டு என் நண்பன் வீட்டில் இன்னும் நிறைய புத்தகங்கள் இருக்குன்னு சொல்லியிருக்கேன். அவ வர்றன்னு சொன்னாடா, உனக்கு அந்த பெயர் எல்லாம் தெரியுமான்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன், ஆங்கிலப்புத்தகங்களை நான் எஸ்தர் அக்கா வீட்டிலிருந்து கொண்டு வந்து உன்கிட்ட தர்றேன் என்றான். அது மட்டுமில்லாமல் அவன் "அந்த சிட்னி ஷெல்டன் புக் வெரி நைஸ், ஒன்லி டூ பேஜஸ் தான் ரீட் பண்ணினேன். இட் ஒன்டர்புல்" என அவனுக்கு தெரிந்த அத்தனை ஆங்கில வார்த்தையையும் அந்த வாக்கியத்தில் நுழைத்தான்.

அவன் அதுக்கு மேல் விட்ட புரூடா எல்லாம் மனசில் ஏறலை. நான் எஸ்தர் அக்காவின் புத்தகங்களை படித்து அவளிடம் பீட்டர் விடுவது போலவும் அவ என் தலைமுடியில் கையை நுழைத்து "ஸோ நைஸ் ஆஃப் யூ" என சொல்வது போலவும் தொப்பையப்பன் காதில் புகை வருவது போலவும் மனதில் கற்பனை குதிரை தட்டிவிட்டு எழுந்து என் புத்தக அலமாரி பக்கம் வந்தேன். தி. ஜானகிராமன், கல்கியின் புத்தகங்களை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏத்திவிட்டேன். ஒன்லி எஸ்தர் அக்கா வீட்டு இங்கிலீஷ் புக் தான் என முடிவு செய்தேன். எஸ்தர் அக்கா வீட்டுக்கு சென்று அவரின் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவர்கள் அலமாரியிலிருந்து நானாக இருபது புத்தகங்கள் எடுத்து வந்து என் அலமாரியின் முன்பக்கமாக அடுக்கி வைத்தேன். நான் ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்து படிக்க முயற்சி செய்தேன். ஆனால் படிக்க படிக்க ஒரு எழவும் புரியலை. தொப்பை அவன் மாமா பொண்ணை அழைத்து வந்து காட்டும் போது எல்லா புத்தகமும் என் பெயரில் இருக்க வேண்டுமென எல்லாப்புத்தகத்தின் முதல் பக்கத்திலும் என் பெயரை பென்சிலில் எழுதி வைத்தேன். பின்னே பேனாவில் எழுதினால் எஸ்தர் அக்காவிடம் திருப்பிக் கொடுக்கும் போது அடி வாங்க முடியாதில்லையா?

மாண்ரெக் காமிக்ஸ் இருக்கா என கேட்டு வந்த தொப்பையிடம் "what???" என 220 வாட் கரண்ட் பாய கத்தினேன். ஸ்பீக்கிங் ஒன்லி இன் இங்கிலீஷ் என அவனிடம் பொளந்து கட்டினேன். ஆனால் நான் பேசியதில் பாதி தி ஹைனா என்ற சம்மரியில் வந்தது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். மறுநாள் தொப்பை மாமா பையனோடு வீட்டுக்கு வந்தான். வரும் போதே அவனிடம் தொப்பை "டேய் பாலா இங்கு இருப்பதெல்லாம் நான் படித்த புத்தகங்கள், இவன் படிப்பதற்காக என்னிடம் இருந்து வாங்கிச் சென்றது" என சொல்லி என் புத்தக அலமாரியை காட்டினான். கோபத்தை அடக்கி கொண்டேன். போனா போகுது பாலா ஆம்பளை பையன் தானே என்று.

மூன்று நாள் கழித்து தொப்பை என்னிடம் "டேய் மாமா பொண்ணு சைந்தவியை மாலை பெரிய கோயிலுக்கு நாங்க சாயரட்சைக்கு போயிட்டு வரும் போது வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்"ன்னு சொன்ன உடனே அந்த புத்தக அலமாரி எல்லாம் துடைச்சு வச்சு எங்கம்மா புடவையை பாதியாக கிழித்து ஸ்கிரீன் போல் செய்து அலமாரியில் மாட்டி விட்டேன், அங்கு வந்த அம்மா அதைப் பார்த்து விட்டு விளக்கமாத்தை எடுத்து வந்து மாத்து மாத்தென்று மாத்தியது. வீரனுக்கு இதெல்லாம் சகஜம் என்று துடைத்து விட்டுக் கொண்டேன்.

சாயரட்சை முடிந்த பிறகு தொப்பை சைந்தவியுடன் ஆஜரானான். அவளிடம் என் புத்தக ஆர்வத்தையெல்லாம் பெரிதாக சொல்லி விட்டு என் ஆங்கில ஆர்வத்தை புட்டு புட்டு வைத்து விட்டு என் புத்தக அலமாரியை காட்டிய போது அவள் எல்லா புத்தகங்களையும் பார்த்து விட்டு குசும்பாக சிரித்தாள். ஒரு பொண்ணை ப்ரெண்ட் புடிக்க இப்படியா சொதப்பலாக செய்வார்கள், என்ன ரமேஷ் உன் ப்ரெண்டு ஜொள்ளு பார்ட்டியா என கேட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டாள். கடைசி வரை எனக்கு மட்டும் புரியவேயில்லை, கடவுளே நமக்கு மட்டும் ஏண்டா தொடங்கும் போதே ஊத்திக்கிது என நொந்துகிட்டு அவர்கள் திருவாரூரிலிருந்து திரும்ப செல்லும் வரை தொப்பை பார்க்கவுமில்லை, அவர்கள் வீட்டுக்கு போகவுமில்லை.

அவர்கள் ஊருக்கு சென்ற விவரத்தை சுண்டி தியாகு மூலம் தெரிந்து கொண்டு மறுநாள் தொப்பையை பார்த்து ஏண்டா அன்று என்னைப் பார்த்து அப்படி சிரித்தாள், என்னடா பிரச்சனை என்று கேட்டேன். அவன் நக்கலாக சிரித்து விட்டு சொன்னான் எஸ்தர் அக்கா வீட்டிலிருந்து நான் எடுத்து வந்ததெல்லாம் அக்காவின் காலேஜில் கொடுத்த B.Sc (Zoology) புத்தகங்களாம். ஆண்டவா என்னைப் போன்ற அரைவேக்காட்டு பயலுவகிட்ட இருந்து இந்த ஊரு பொண்ணுங்கள எல்லாம் காப்பாத்து.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment