Sunday 24 May 2015

நடை பயிலுங்கள் - இல்லைன்னா உங்களுக்கும் டாஷ் டர்ர்ராகிடும் - பழசு 2012

சாப்பிடும் அளவுக்கு உடல் உழைப்பு இருக்க வேண்டும். இது கொஞ்சம் தவறினால் உடம்பு பெருக்க ஆரம்பித்து விடும். இது எனக்கு புரிவதற்குள் எடை சதத்தை தாண்டி விட்டது. பட்டயப்படிப்பு முடியும் காலம் வரை சைக்கிள் வைத்திருந்ததால் எவ்வளவு சாப்பிட்டு இருந்தாலும் அதுக்கு சமமான அளவுக்கு தினமும் சைக்கிள் ஒட்டுவது இருந்ததால் ஸ்டாமினா குறையாமல் இருந்தது. உடல் எடையும் கட்டுக்குள் இருந்தது.

படிப்பு முடிந்ததும் வேலைக்கு சேர்ந்து பைக்கிற்கு மாறியதால் சகீலா மாதிரி இடுப்பில் மடிப்பு விழ ஆரம்பித்தது. வருடம் செல்லச் செல்ல பேமிலி பேக் வயிற்றில் நிரந்தரமானது. ஸ்டாமினாவும் சுத்தமாக குறைந்து போனது. எப்போதாவது சைக்கிளில் ஏறி 2 கிமீ மிதிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்தது.

திருமணத்திற்கு முன்பு வரை என் பாஸ்ஸூம் திருமணத்திற்கு பின்பு இல்லாளும் உடற்பயிற்சி செய்ய வற்புறுத்தியும் சோம்பேறித்தனம் காரணமாக எதுவும் செய்யாமல் தவிர்த்தே வந்தேன். தினமும் ஆப் வேறு அடித்து வந்ததால் எடையும் நிற்காமல் கூடிக் கொண்டே சென்றது. நிற்க. அதுக்காக நிக்கக் கூடாது, உக்கார்ந்தே படிங்க. எல்லா சோம்பேறித்தனத்திற்கும் ஆப்பு வைப்பது போல் ரயில்வே வேலை வந்து சேர்ந்தது.

ரயில்வே பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி ஆணை பெற தாமதமாகி வந்து சில வாரங்களுக்கு முன் தான் வேலையில் சேர நேர்ந்தது. இப்போது ஏண்டா சீக்கிரம் சேர்ந்தோம் என்று வெந்து நொந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தொழிற்சாலை பெரிதாக இருக்கலாம் அதற்காக இவ்வளவு பெரிதாகவா அமைப்பான் வெள்ளைக்காரன். ஆம் நான் பணிபுரியும் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தான் இந்தியாவில் முதல் முதலாக ரயில்களை தயாரித்தது. இது தொடங்கப்பட்ட ஆண்டு 1856. நூற்றைம்பது ஆண்டுக்கும் மேலான வரலாறு கொண்டது.

இதில் எனக்கு பிரச்சனை என்பது பணிபுரிவதில் இல்லை. நடப்பதில் தான் உள்ளது. ஒவ்வொரு தேவைக்கும் கிமீ கணக்காக நடக்க வேண்டியுள்ளது. நுழைவாயிலில் இருந்து அட்டன்டென்ஸ் கார்டு அடிக்கும் இடத்திற்கு 2கிமீ தூரம் அங்கிருந்து சாப்பிடும் கேண்டீனுக்கு 1 கிமீ தூரம்.

காலை உணவு சாப்பிட்ட பிறகு எனது கப்போர்டிற்கு வர 1 கிமீ தொழிற்சாலை உடை மாற்றியதும் என் செக்சனுக்கு செல்ல 1 கிமீ, பிறகு எனக்கும் என்னுடன் பணிபுரியும் இருவருக்கும் சேர்த்து பணி ஒதுக்கப்படும். வேலை செய்யும் இடத்திற்கு செல்ல 2 கிமீ.

பணிமுடிந்த பிறகு மீண்டும் செக்சன் சென்று விவரத்தை தெரிவித்து விட்டு 2 கிமீ நடந்து அட்டன்டென்ஸ் கார்டு அடித்து விட்டு மெஸ்ஸிற்கு செல்ல 2 கிமீ, பிறகு வழக்கம் போல் அட்டன்டென்ஸ், செக்சன் என பட்டியல் மலைக்க வைக்கும். அட இவ்வளவு ஏங்க பணிபுரியும் இடத்தில் இருந்து ஒண்ணுக்கு அடிக்க வேண்டும் என்றால் கூட 1 கிமீ நடந்தால் தான் கழிவறையே வரும். குடி தண்ணீருக்கும் இதே கதி தான்.

என்னுடன் பணிபுரியும் மற்றவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. ஏனென்றால் அனைவரும் நடந்து பழகி விட்டனர். 59 வயதான என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் சர்வசாதாரணமாக நடக்கிறார். என்னுடன் புதிதாக இணைந்தவர்களுக்கு கூட பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து வர, செல்ல என நடந்து நடந்து பழகிவிட்டவர்கள் தான்.

நான் மட்டும் தான் இதுநாள் வரை வீட்டை விட்டு வெளியில் இறங்கியதும் பைக் எங்கு சென்றாலும் பைக் என காலத்தை கடத்தி விட்டதால் தினமும் 12 கிமீ களுக்கு குறையாமல் நடப்பது டங்குவாரை அறுக்கிறது. "நீ நடப்பது நல்லது தான், தினமும் இது போலவே நட" என்று மூளை சொன்னாலும் சோம்பேறியான மனசு "நீ நடப்பது சிரமம்" என பின்னால் இழுக்கிறது.

ஒன்று மட்டும் புரிந்து விட்டது. இன்னும் 29 வருடத்திற்கு இப்படித்தான் என் வாழ்க்கை முறை இருக்கப் போகிறது. இன்னும் சில வாரங்கள் சிரமமாக இருக்கும். பிறகு நடப்பது பழகி விடும். கொஞ்ச நாட்களில் உடல் எடையும் குறைய ஆரம்பித்து விடும் என்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த இரண்டு வாரத்திற்குள்ளேயே மூன்று கிலோ எடை இறங்கி விட்டது.

என்னைப் போல் எதற்கெடுத்தாலும் பைக்கையே நம்பி எதற்கும் நடக்காமல் இருப்பவர்களுக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இது போல் நடந்தே ஆக வேண்டும் என வந்தால் சிரமமாக இருக்கும் என அனுபவஸ்தனின் கருத்து. நடை பயிலுங்கப்பா.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment