Sunday 24 May 2015

சஞ்சய் காந்தியின் கடைசி நாள்... - பழசு 2012

.



அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர். ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33வது வயதில் மரணம் அடைந்தது, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி, விமானம் ஓட்டுவதில் பயிற்சி பெற்று, விமானி (பைலட்) ஆக வேலை பார்த்தார். அரசியலில் தாயாருக்குத் துணையாக இருந்து வந்த சஞ்சய் காந்தி, "மாருதி" கார் தொழிற்சாலையைத் தொடங்கினார். அத்துடன் சிறிய விமானங்களை ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுத்தேறினார். விமான ஓட்டுவோருக்கான சங்கத்தில் ("பிளையிங் கிளப்") உறுப்பினராக இருந்தார். காலை வேளையில், சிறிய விமானத்தில் ஏறி, டெல்லியை ஒரு சுற்று சுற்றி விட்டுத் திரும்புவது சஞ்சய் காந்தியின் பொழுது போக்கு. 1980 ஜுன் 23ந்தேதி காலை, சிறிய விமானத்தில் ஏறி டெல்லி மீது பறந்தார்.

சஞ்சய் பயணம் செய்த விமானம் "புஷ்பக்" என்ற சிறிய பயிற்சி விமானம் ஆகும். சஞ்சய் காந்தியுடன், விமானப் பயிற்சியாளர் சக்சேனாவும் பயணம் செய்தார். விமானத்தை சஞ்சய் காந்தி ஓட்டினார். காலை 8 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்திரா காந்தி வீட்டுக்கு மேல் விமானம் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்கெல்லாம், விமானம் நொறுங்கி விழுந்தது. "12, வெலிங்டன் கிரசென்ட்" என்ற இடத்தில் உள்ள சஞ்சய் வீட்டுக்குப் பின்புறத்திலேயே விமானம் விழுந்தது. விபத்து நடந்த இடம் பாராளுமன்றத்தில் இருந்து 2 மைல். விமானம் மூன்று முறை வட்டமிட்டதாகவும், 4வது முறை வட்டமிடும்போது மரத்தில் மோதி நொறுங்கி விழுந்ததாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். விபத்து நடந்த இடத்திலேயே சஞ்சய் காந்தி இறந்துவிட்டார்.

சஞ்சய் காந்தியுடன் பயணம் செய்த சக்சேனாவும் அங்கேயே மரணம் அடைந்தார். விமானம் தரையில் மோதிய வேகத்தில், சஞ்சய் காந்தியின் தலை நொறுங்கி விட்டது. கை, கால் எலும்புகள் நொறுங்கிப் போய்விட்டன. உடலில் தலை முதல் கால் வரை காயங்கள் இருந்தன. ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விமானம் நொறுங்கி விழுந்த செய்தி கிடைத்ததும், தீயணைக்கும் படையினர் விரைந்து சென்றார்கள். நொறுங்கிய விமான பாகங்களை உடைத்தும், அறுத்தும் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய் காந்தியின் உடலையும், சக்சேனா உடலையும் வெளியே எடுத்தார்கள். விமானம் நொறுங்கிய தகவல், இந்திரா காந்திக்கு டெலிபோன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். இதற்குள் சஞ்சய், சக்சேனா உடல்கள் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டன. ஆம்புலன்ஸ் வண்டி, ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சஞ்சய் காந்தி ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், காலை 8.15 மணி அளவில் அவர் இறந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சஞ்சய் காந்தி உடல் சிதைந்து போயிருந்ததால், டாக்டர்கள் பல மணி நேரம் ஆபரேஷன் செய்து, சிதைந்த பாகங்களை ஒன்று சேர்த்து தையல் போட்டனர். நெற்றியில் பெரிய தையல் போடப்பட்டது. சஞ்சய் உடல், இந்திரா காந்தி வீட்டுக்கு பகல் 1.40 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்ததும் இந்திரா காந்தி துயர மிகுதியால் கதறினார். பின்னர் சோகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். எனினும், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்து, அவர் மனைவி மேனகா கதறித் துடித்தார். சஞ்சய் காந்தியின் திடீர் மரணம், இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்தது. டெல்லியில் கடைகள் மூடப்பட்டன. மந்திரிகள், "எம்.பி"க்கள், பொதுமக்கள் சாரிசாரியாக இந்திரா காந்தி வீட்டுக்குச் சென்று சஞ்சய் காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

விமானம் நொறுங்கிக்கிடந்த இடத்துக்கு, இந்திரா காந்தி இரண்டு முறை சென்று பார்த்தார். நொறுங்கிக்கிடந்த பாகங்களில் எதையோ தேடினார். (சஞ்சய் காந்தியின் கெடிகாரத்தையும், சாவிக்கொத்தையும்தான் இந்திரா தேடினார் என்றும், சுவிஸ் பாங்கியில் சஞ்சய் காந்தி கணக்கு வைத்திருந்தார் என்றும், அதன் நெம்பர் சாவியிலோ, கெடிகாரத்திலோ இருந்திருக்கலாம் என்றும், பின்னர் சில பத்திரிகைகள் எழுதின.) விபத்து நடந்தபோது, ராஜீவ் காந்தி இத்தாலி நாட்டில் இருந்தார். அவருக்கு டெலிபோனில் இந்திரா தகவல் தெரிவித்தார். உடனே, விமானம் மூலம் ராஜீவ் டெல்லிக்குப் புறப்பட்டார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட டிரக் வண்டியில், சஞ்சய் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மந்திரிகளும், "எம்.பி"க்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். ஊர்வலம், யமுனை நதிக்கரையை அடைந்தது. அங்கு, நேரு சமாதிக்கு அருகே அமைக்கப்பட்ட "சிதை"யில் சஞ்சய் காந்தி உடல் தகனம் செய்யப்பட்டது.

சஞ்சய் காந்தியின் ஒரே மகன் வருண். சஞ்சய் இறந்தபோது, வருண் மூன்று மாதக்குழந்தை. எனவே, "சிதை"க்கு ராஜீவ் காந்தி தீ மூட்டினார். முன்னதாக, துணை ஜனாதிபதி இதயதுல்லா, பாராளுமன்ற சபாநாயகர் பலராம் ஜாக்கர், "எல்லை காந்தி" கான் அப்துல் கபார்கான், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, மாநில முதல் மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், "எம்.பி"க்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். "சிதை"யில் வைக்கப்பட்ட சஞ்சய் முகத்தை இந்திரா காந்தி கடைசி முறையாகப் பார்த்தபோது, துயர மிகுதியால் கதறினார்.

சஞ்சய் மனைவி மேனகா அழுதபடி மயக்கம் அடைந்தார். தனது அரசியல் வாரிசாக உருவாகி வந்த சஞ்சய் காந்தி திடீரென்று மரணம் அடைந்தது, இந்திராவுக்குத் தாங்கமுடியாத துயரம் அளித்தபோதிலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டார். விமானம் ஓட்டும் பைலட்டாக வேலை பார்த்த ராஜீவ்காந்தியை ராஜினாமா செய்யச்சொன்னார். அதன்படி வேலையை விட்டு விலகிய ராஜீவ் காந்தி, தாயாருடைய பணிகளில் அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment