Sunday 24 May 2015

நான் பழைய காங்கிரஸ்காரன் - பழசு 2012

இன்று மனதளவில் ஈழத்துரோகம் காரணமாக காங்கிரஸை தமிழ்நாட்டில் வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் சிறு வயதில் விபரம் தெரிந்த காலத்திலிருந்து நான் காங்கிரஸ்காரனாக இருந்திருக்கிறேன் என்பதை எண்ணும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம், நம்புங்கள் நான் போடுங்கம்மா ஒட்டு கை சின்னத்தைப் பார்த்து என்று பல தேர்தல்களுக்கு கூவிக் கூவி பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

திருவாரூரில் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் மாமா ஒருவர் இருந்தார். அவர் தான் எங்கள் வார்டில் உள்ள பசங்களின் ஆதர்ச நாயகன். ஏனென்றால் தீபாவளிக்கு அவர்களது வீட்டில் தான் மிக அதிக அளவில் பட்டாசுகள் வாங்குவார்கள். அதிகளவில் என்றால் இரண்டு சாக்கு சரம், ஒரு சாக்கு உலக்கை வெடி வாங்குவார்கள்.

எங்கள் வீட்டில் என் சிறுவயதில் பட்டாசு பட்ஜெட் நூறு ரூபாயைத் தாண்டாது. இப்பொழுதும் கூட எங்கள் அப்பாவிற்கு சில ரூல்ஸ்கள் இருக்கின்றன. வீட்டிற்கு மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்குவதும், தீபாவளி சமயத்தில் பட்டாசு வாங்குவதும், பொங்கல் சமயத்தில் கரும்பு வாங்குவதும் அவரது கடமையாக இன்றும் நினைக்கிறார். நானோ எனது தம்பியோ போய் வாங்கி வந்து விட்டால் அவரது உரிமை பறிக்கப்பட்டு விட்டதாக நினைத்து காச்மூச்சென்று கத்துவார். அதனால் நாங்கள் இவற்றினை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்று கூட 300 ரூபாய்க்குள் தான் பட்டாசு இருக்கும்.

மீண்டும் கட்டுரைக்குள் வருவோம். அவரது கட்டளைக்கு அடிபணிவதற்காகவே தெருவுக்குள் 20 பேர் இருந்தனர். அவற்றில் மிகவும் ஜூனியர் நான் தான். 7வயதிலேயே தேர்தல் பிரச்சாரங்களில் போடுங்கம்மா ஓட்டு கை சின்னத்தைப் பார்த்து என்று கூவுபவன் நானாகத் தான் இருக்கும்.

காங்கிரஸை பிடிக்க ஆரம்பித்ததற்கு காரணமெல்லாம் சொல்ல முடியாது. என் மாமா காங்கிரஸில் இருந்ததால், என்னை சிறு வயதில் கட்சிக் கூட்டங்களுக்கு கூட்டிச் சென்றதால், இந்திய சுதந்திரப் போராட்டம் காங்கிரஸின் தலைமையில் நடந்தது என சொல்லக் கேட்டதால் அந்த வயதிலேயே பிடிக்க ஆரம்பித்து விட்டது.

87 காலக்கட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் என் மாமா காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். வார்டுக்குள் இருந்த நான்கு தெருவையும் பிரித்துக் கொண்டு காலையிலிருந்து மாலை வரை ஒவ்வொரு வீடாக புகுந்து ஒட்டு கேட்பது நோட்டீஸ் வினியோகிப்பது என பிஸியாக இருப்பேன்.

மாமா ஜெயித்ததும் காங்கிரஸின் மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் அந்த வயதில் சுதந்திரப் போராட்டங்கள் பற்றி படிக்க ஆரம்பித்ததும் சுதந்திரத்திற்கு முன் இருந்த காங்கிரஸ் தான் தற்போதைய காங்கிரஸ் எ நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நடந்த 89 சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் 91 சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 13வது வார்டு பூத் அலுவலகத்தில் நான் தான் நிர்வாகியாக இருப்பேன்.

வருபவர்களுக்கு சட்டையில் கை சின்னம் ஸ்டிக்கரை ஒட்டி விடுவது, கை சின்னம் பேட்ஜ் மாட்டி விடுவது அவ்வப்போது ஒட்டுப்போட வரிசையில் நிற்பவர்களிடம் கை சின்னத்திற்கே ஒட்டு போடுங்கள் என்று கேன்வாஸ் செய்வது வரை நான் தான் முன்னணியில் இருப்பேன்.

ஜிகே மூப்பனார் மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு என்னை மிக நன்றாக தெரியும். அவர்கள் திருவாரூர் வரும்போது என் மாமாவிடம் யார் இவன், இந்த சிறுவயதில் சூட்டிகையாக கட்சி வேலை செய்கிறானே என்று விசாரிப்பர். என் மாமாவும் என் சொந்தக்காரப் பையன், கட்சி மீது ஆர்வம் என்று கூறுவார்.

ஆனால் கட்சியின் ஆர்வம் 14, 15 வயதில் குறைய ஆரம்பித்தது. அதுவும் இவர்களின் கோஷ்டி சண்டையை கவனிக்க ஆரம்பித்த பிறகு சுதந்திரத்திற்கு முன்பு உள்ள காங்கிரஸூக்கும் நிகழ்கால காங்கிரஸூக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. அத்துடன் காங்கிரஸூக்கு வணக்கம் சொல்லி விட்டு வந்து விட்டேன்.

ஆனால் என் மாமா அரசியல் பண்ணத் தெரியாமல் இன்றும் காங்கிஸில் கிடந்து அல்லாடுகிறார். திமுகவிலோ, அதிமுகவிலோ யாராவது இத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தால் கமிஷன், டெண்டர் என பிழைத்து பெரிய ஆளாகியிருப்பார்.

இன்று அவர் தான் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர். ஆனால் மனிதர் ஸ்கூட்டியில் தான் செல்கிறார். ரியல் எஸ்டேட்டில் தான் ஓரளவு சம்பாதிக்கிறார். அவரிடம் அரசியல் கற்றுக் கொண்ட சின்னப் பசங்களெல்லாம் மற்ற கட்சிகளில் சேர்ந்து சம்பாதித்து வீடு, கார் என செட்டிலாகி விட்டனர்.

என்றைக்குமே வில்லங்கமானவர்கள் மட்டுமே அரசியலில் பிழைக்க முடியும் போல.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment