Tuesday 26 May 2015

கேரள நாட்டிளம் பெண்கள் - பழசு 2012

பதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எழுதுவதற்கு ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இல்லை நம்மிடம் சரக்கு தீர்ந்து விட்டதா எனவும் தெரியவில்லை.

இனி கொஞ்ச நாட்களுக்கு நன்றாக இருக்கிறதோ இல்லை மொக்கையாக இருக்கிறதோ தோணுவதையெல்லாம் பதிவாக எழுதலாம் என்று இருக்கிறேன். பழைய ஆர்வம் வரும் வரை தான் வாரம் நான்கு பதிவு இருக்கும். சோதனையாக இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.


அதென்னவோ தெரியவில்லை. கேரள ஆண்களை பார்த்தால் எந்த அளவுக்கு கடுப்பாகிறதோ அதை விட கூடுதலாக கேரளத்து பெண்களை பார்த்தால் ஜொள்ளு விட தோன்றுகிறது. எப்படித்தான் செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்காங்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

எங்கள் ஊருக்கு மிக அருகில் தான் வேளாங்கண்ணி இருக்கிறது. பைக்கில் அரை மணிநேரத்தில் சென்று விடலாம். செல்லும் போதெல்லாம் கேரளத்து பெண்களை பார்க்கும் போது நம்மூரில் இது போன்ற பெண்களை பார்க்க முடிவதில்லையே என்ற ஏக்கம் எழும். அவர்களை தூர நின்று ஏக்கப்பெருமூச்சு விட்டு வந்து விடுவதோடு சரி.

திருச்சூரில் பூரம் திருவிழாவுக்காக ரயில்வேயின் சார்பாக ஸ்டால் போடுவார்கள். அதாவது மினியேச்சர் ரயில் செய்து அதற்கென தண்டவாளமும் செய்து அதில் ஓட விடுவது போல அமைக்கப்பட்ட கண்காட்சி கூடம்.

இதற்கென ரயில்வே குழு ஒன்று சென்னையிலிருந்து கிளம்புவதென முடிவெடுத்து விட்டால் இதற்கென தனியாக கோச்சு ஒன்று திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் இணைத்து விட்டு அதில் அனைத்து பொருட்கள், அப்ரெண்டிஸ்கள் 20 பேர், கண்காணிக்க இஞ்சினியர் இருவர் என குழு புறப்பட்டு இருபது நாட்கள் தங்கி கண்காட்சி கூடம் அமைத்து முடிந்ததும் அதே கோச்சில் அனைத்து பொருட்களையும் ஏற்றி திரும்ப சென்னை வருவது வழக்கம்.

1999ம் ஆண்டு சென்ற குழுவில் நானும் இருந்தேன். திருச்சூர் சென்று கண்காட்சி கூடத்தை அமைத்த பிறகு எங்களுக்கு நேரம் இருந்ததால் அனைவரும் குருவாயூர் கோயிலுக்கு செல்வதென முடிவெடுத்து விடியற்காலையிலேயே கிளம்பி சென்றோம். அங்கு இறங்கியதும் பெண்களை கண்டதும் எனக்கிருந்த ஆனந்தம் சொல்லில் வடிக்க முடியாது.

அட ஆண்டவா எதைப் பார்க்க எதை விட. மற்ற ஊர்களில் சாதாரணமாக இருக்கும் கேரளத்து பெண்கள் குருவாயூர் செல்லும் போது மட்டும் வெண்பட்டு புடவையில் தலைகுளித்து, நெற்றியில் சந்தனம் வைத்து வரும் போது நமக்கு தெரியும் அழகு இருக்கிறதே. எந்த சினிமா கதாநாயகிக்கும் மும்பை அழகிக்கும் வராத தெய்வீக அழகு அது.

அன்றே முடிவெடுத்து விட்டேன். நாம் திருமணம் செய்தால் இது போன்ற கேரளத்து பைங்கிளியைத்தான் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமென.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அழகு. சென்னையில் டொக்கு போல் திரியும் மலையாள பெண் கூட குருவாயூர் சென்றால் அந்த காஸ்ட்யூமில் பார்த்தால் நமக்கு அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றும்.

அதன் பிறகு திருச்சூர் வந்த பிறகு கூட பூரம் திருவிழாவில் இரவு பகலென அலைந்து சைட் அடித்துக் கொண்டு இருந்தேன். கண்களில் மலையாள பெண்ணின் அழகை தேக்கி தேக்கி அளவு கொள்ளாமல் வழிந்து ஒடிக் கொண்டு இருந்தது.

மீண்டும் சென்னைக்கு திரும்பியதும் அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த என்னுடன் படித்த மலையாளப் பெண் ஜெயஸ்ரீயை சைட் அடிக்க முயற்சிக்க அவளோ தன் காதலனான சங்குவிடம் போட்டுக் கொடுக்க அவன் என்னை தனிமையில் அழைத்து சிறுகத்தியை காட்டி மிரட்டி விட்டு சென்றதெல்லாம் நம்ம வரலாற்றில் வரும்.

ஜெயஸ்ரீயோ கடைசி வருடம் அவனையும் கழற்றி விட்டு இந்திரனை பதிவுத்திருமணம் செய்து கொண்டாள். கடைசி வரை இருவரும் தம்பதிகளாகவே வகுப்புக்கு வந்தது வேறு கதை. அதன் பிறகு சில காலம் கேரளாவுக்கு செல்லும் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் எங்காவது நெற்றியில் சந்தனம் இட்டிருக்கும் பெண்ணை கடக்கும் போது ஒரு நொடி தரிசித்து விட்டு செல்வதே வழக்கமாகி போனது.

ஒரு வார்த்தை கூட மலையாளம் தெரியாவிட்டாலும் சங்கம் திரையரங்கை கடக்கும் போது ஏதாவது மலையாள படம் போட்டிருந்தால் போய் பார்த்து கதாநாயகியை ஜொள்ளு விட்டு வந்ததும் வரலாற்றின் அடுத்தடுத்த பக்கங்கள். மஞ்சு பார்கவி எனக்கு பிடித்த நடிகை. அவருக்கு திருமணமாகியதும் காவ்யா மாதவன் மேல் பித்து பிடித்து திரிந்தேன்.

இதற்கிடையில் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு மலையாள அத்லெட் குடும்பம் குடிவந்தது. அவர்கள் வீட்டுக்கு வந்த கேரளத்து சிட்டை தனியாக முயற்சித்து நெருங்கி வரும் வேளையில் அதுவும் சத்தமின்றி கேரளாவுக்கு பறந்து சென்று என் சபதத்திற்கு முட்டுக் கட்டை போட்டது.

2005ம் ஆண்டு நான் வேலை பார்த்த கட்டுமான நிறுவனம் கேரளத்தில் கால் ஊன்ற திட்டமிட்டு சென்னையில் சிறந்த ஊழியர்களாக பார்த்து திருவனந்தபுரம் புதிய அலுவலகத்திற்கு பணிமாறுதல் செய்தது. நான் நிர்வாக அலுவலராக சென்றேன். அங்கு சென்ற பிறகு செய்த முதல் வேலை மலையாளம் கற்றுக் கொண்டது தான்.

நிறுவனத்திற்கு தற்காலிக பணியாளராக வந்த ஒரு மலையாளியை கூட்டு சேர்த்துக் கொண்டு சில வாரங்களில் சமாளிக்கும் அளவுக்கு பேசக் கற்றுக் கொண்டேன். சிறு அலுவலகம் என்பதால் நானே கணக்காளர் வேலையையும் சேர்த்து பார்த்தேன். பணம் எடுப்பதற்காக சாலையில் உள்ள வங்கிக்கு சென்ற திரும்புவேன்.

சாலைக்கு செல்லும் போதெல்லாம் எதிரில் இருக்கும் பத்மநாபசாமி கோயிலுக்கு சென்று தரிசித்து விட்டே திரும்புவேன். யாரை என்று நீங்கள் கேட்டால் உம்மை விட வாத்து யாரும் இருக்க முடியாது. ஆனாலும் கடைசி வரை நமக்கு திருவனந்தபுரத்தில் ஒரு கிளியும் சிக்கவில்லை.

முயற்சித்து கிடைக்காத தோல்வியுடன் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். எட்டுமாத காலம் அங்கு வேலை பார்த்ததால் எனக்கு கிடைத்தது மலையாள மொழி மட்டுமே. ஒரு கிளியும் சிக்கவில்லை.

ஒரு நல்ல நாளில் ஆந்திரத்து அந்தமைன அம்மாயி ஒன்றை கண்டு ஏகப்பட்ட சண்டைகள் போட்டு கடைசியில் திருமணமும் செய்து கொண்டதும் என் வரலாற்றின் முக்கிய திருப்பங்கள். இன்றும் கேபிளில் சானல் மாற்றும் போது சூர்யா டிவியை கடந்து போகும் போதெல்லாம் என் தோல்வியின் வடுவும் கடந்தே செல்கிறது.

அதற்காக நீங்களும் முயற்சித்தால் கிடைக்காதோ என்று எண்ண வேண்டாம். முயற்சியுங்கள், வெற்றியடையுங்கள். கேரள நாட்டிளம் பெண்களுடனே என பாரதியாரின் பாட்டை மெய்ப்பியுங்கள்.



ஆரூர் மூனா

No comments:

Post a Comment