Tuesday 26 May 2015

எனக்கு மெடுல்லா ஆப்ளிக்கேட்டா - பழசு 2012

என்னாச்சு

கிறிஸ்துமஸ் விடுமுறை விட்டாங்க.

இம்மி அண்ணன் பார்ட்டிக்கு நைட்டு கூப்பிட்டாரு.

புல்லா சரக்கடிச்சேன், நைட்டு 11.30 ஆகிடுச்சி

வீட்டுலேருந்து போன் பண்ணி சத்தம் போட்டதும் கிளம்பினேன்

வீட்டுக்குள் நுழைய படியேறினேன். முக்கால் தூரம் ஏறியதும் தடுமாறி டமால்...

படிகளில் ரெண்டு சம்மர் சால்ட் போட்டு கீழே விழுந்தேன்

எழுந்தால் பின் மண்டையில் பயங்கர ரத்தம், பெரிய காயம்

அங்கதான் மெடுல்லா ஆப்ளிக்கேட்டா இருக்கு

ஒரு வேளை நான் எல்லாத்தையும் தற்காலிகமா மறந்துடுவேனோ

என்னாச்சு

விளையாட்டுக்கு சொல்லலை. சத்தியமா இது நேற்று முன்தினம் இரவு எனக்கு நடந்தது . கிறிஸ்துமஸ் பார்ட்டி துவங்கி நேரம் கடந்து போய்க் கொண்டே இருந்தது. மறுநாள் விடுமுறை என்பதனால் சற்று அதிமாக சாப்பிட்டு இருந்தேன். வீட்டம்மா போன் செய்து சத்தம் போடவே கிளம்பினேன்.

முதல்மாடியில் வீடு இருப்பதால் படியேற வேண்டும். வீரமாக படியேறி சத்தம் போட்டுக் கொண்டே வர கோபமடைந்த வீட்டம்மா எதிர் வீட்டில் பாக்கிறாங்க, சத்தம் போடாம வா என்று சொல்ல எவன்டா அவன் என்ன பாக்குறது என்று வீர வசனம் பேசி திரும்பிய நான் நிலை தடுமாறி விழ ரெண்டு டைவ், சில குட்டிக்கரணம் போட்டு விழ தலையில் சுவற்றில் மோதி தெரித்தது.

கடுமையான காயம், ரத்தம் கொட்டிக் கொண்டு இருக்கிறது. வீட்டம்மாவுக்கு எங்கிருந்து தான தைரியம் வந்ததோ. 62 எடையுடைய வீட்டம்மா 100+ எடையுள்ள என்னை எவ்வாறு மாடிப்படியில் தூக்கி வந்து வீட்டில் போட்டாரோ தெரியவில்லை. இப்படி ஒரு பலசாலியிடம் இப்பல்லாம் குரலை உயர்த்தி பேசவே பயமாயிருக்கிறது.

உடனே நெருங்கிய டாக்டர் நண்பனுக்கு போனைப் போட்டார் வீட்டம்மா. அவன் வீட்டிலிருந்து கிளம்பி வந்து அவன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்தி விட்டு முதலுதவியை ஆரம்பித்தான். அதற்குள் நண்பர்கள் குழாமுக்குள் போன் போக ஆரம்பித்து அனைவரும் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதெல்லாம் தெரியாமல் நான் மட்டும் முழுப் போதையில் மயக்கத்தில் இருந்தேன். நள்ளிரவுக்கு பிறகு போதை தெளிய ஆரம்பித்தது. எழுந்து எனக்கு என்ன ஆச்சி என்று என் வீட்டம்மாவிடம் கேட்க பளாரென்று ஒரு அறை விட்டாள். சகலமும் கலங்கி விட்டது.

அதன் பிறகு நான் எங்க தூங்குறது. நினைவுகள் பயங்கரமாக சுழல ஆரம்பித்தது. எனக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல வர்ற மாதிரி அதே இடத்துல அடிப்பட்டது. ஆனால் எனக்கு காயத்தின் வீரியம் அதிகம். ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. அதனால் காலையில் விடிந்தால் சில வருடங்களுடைய நினைவுகள் மறந்து விடுமா அல்லது ஏற்கனவே மறந்து போய் விட்டதா எனவும் சந்தேகம்.

உடனடியாக எனக்கு கடைசியாக என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்று எனக்குள் ஒட்டிப் பார்த்துக் கொண்டேன். ஆனால் அது நேற்று நடந்தது என்பதை நான் எப்படி நம்புவது. பிறகு போனை எடுத்து கடைசியாக டயல் செய்திருந்த நம்பர்களை பார்த்தால் நான் பேசியது நினைவில் இருந்தது. அப்பாடா எனக்கு நினைவு தப்பவில்லை என்று சந்தோசம் வந்தாலும் போதை இறங்கியதால் தலை கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.

மல்லாக்கவும் படுக்க முடியாமல் உட்காரவும் முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன். வலியால் விடிய விடிய தூங்கவில்லை. விடிய ஆரம்பித்ததும் கிறிஸ்துமஸ் கொண்டாட சர்ச்சுக்கு சென்றிருந்த நண்பர்கள் குடும்பத்துடன் காலையிலேயே வீட்டு வர ஆரம்பித்தார்கள். கன்னாபின்னா அட்வைஸ்கள் வர ஆரம்பித்தன.

எனக்கே தெரியுது நான் செய்தது தப்பென்று, ஆனாலும் அவனவன் அட்வைஸ் பண்ணது தான் எனக்கு வாங்கிய அடியை விட வலித்தது. ஒரு வழியாக நண்பர்கள் வீட்டுக்கு சென்றவுடன் தான் தப்பிச்சோம்டா என்று எண்ணினேன். இன்னும் அப்பா, அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. நாளை ஊருக்கு போய் தான சொல்லனும், அங்கிருந்து எந்த மாதிரியான ரெஸ்பான்சிபிள் வருமோ தெரியாது.

இன்றைக்கு ரயில்வே மருத்துவமனையில் ஒரு ஒரு டிப்பார்ட்மெண்ட்டாக பார்த்து பார்த்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து சரிபார்த்து ஒன்றும் பிரச்சனையில்லை என்று டாக்டர் சொன்னதும் தான் அப்பாடா தப்பிச்சேன் என்று தோன்றியது.

ஒரு நாள் சபலப்பட்டு அதிகம் குடிச்சது, இன்னைக்கு எனக்கே வில்லங்கமாகி இனி எதுவும் செய்ய முடியாத அளவுக்கு மாட்டி விட்டு விட்டது. வேறு வழியே இல்லாமல் என் மனைவிக்கு பயந்து இன்று முதல் நான் டீடோட்லர்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment