Sunday 24 May 2015

கலகலப்பு@மசாலா கேப் - பழசு 2012

ஒரு படத்தோட டிரைலர் நம்மை படத்தை பார்க்கும்படி தூண்ட வேண்டும் ஆனால் இந்தப் படத்தின் டிரைலர் பார்க்கும் போது என்னை முதல் காட்சிக்கு யோசிக்க வைத்தது. ஆனால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு எனக்கு இன்று நேரம் கிடைத்ததால் முதல் காட்சிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து ராக்கி தியேட்டருக்கு சென்றால் பாதிக்கும் குறைவான கூட்டமே இருந்தது. ஆனால் முடிந்து வரும் போது சிரித்து சிரித்து வயிற்று வலியுடன் வந்ததென்னவோ உண்மை.

படம் ஆரம்பித்ததும் கொஞ்ச நேரத்திற்கு டல்லடித்தது. ஆனால் சிவா வந்ததும் படத்தில் சிரிப்பே ஆரம்பிக்கிறது. இடைவேளைக்கு பிறகு சந்தானம் வந்ததும் சிரிப்பு இரட்டிப்பாகிறது. வெளியில் வரும் போது இதற்கெல்லாம் ஏன்டா சிரித்தோம் என்று யோசனை வருகிறது.

படத்தின் கதை என்ன? நஷ்டத்தில் இயங்கும் நூற்றாண்டு கண்ட ஹோட்டலின் உரிமையாளரான விமலும் அவரது தம்பி சிவாவும் மற்ற ஹோட்டலை விட வித்தியாசமாக ஒரு கான்செப்ட்டை கண்டுபிடித்து தங்களது ஹோட்டலை தரம் உயர்த்துகிறார்கள். அத்துடன் ஆளுக்கொரு பெண்ணுடன் காதல் வந்து சில பிரச்சனைகளுக்கு பிறகு கரம் பிடிக்கிறார்கள். அவ்வளவு தான் கதை.

படத்திற்கு மிகச்சிரிப்பு வரும்படியான ஐந்து சீன்களை வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல ஒரு டொக்கு கதையை யோசித்திருப்பார்கள் போல. மொத்தப்படமுமே அந்த ஐந்து காமெடியில் தான் உள்ளது.

கடன் கொடுத்த இளவரசுவை சிவா ஒரு தவறான தகவலுடன் இன்ஸ்பெக்டர் ஜானுடன் கோர்த்து விட ஜானுக்கு பயந்து மாறுவேடத்தில் சுற்றும் இளவரசுவை வேணுமென்றே தவறாக அடையாளம் காணும் சிவாவும் அதனை அவரிடமே கேட்கும் இளவரசுவின் நகைச்சுவை பயங்கர கலாட்டா. இப்பொழுது கூட நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

தனது மகளை சந்தானத்துடன் சேர்க்க வேண்டுமென்பதற்காக அஞ்சலியை கடத்தும் மனோபாலா, அது தெரியாமல் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக தாத்தாவுடன் தப்பிக்கும் விமல் அவரை துரத்தும் சந்தானம் என அந்த ஒரு காமெடி கலாட்டா தான்.

விமல் வீட்டில் வைரத்திற்காக வந்து மிரட்டும் சுப்பு பஞ்சு மற்றும் அவரது அடியாட்கள், மாட்டிக் கொண்ட விமல், சிவா மற்றும் இளவரசு, திடீர் பைத்தியமாகும் கான்ஸ்டபிள், வைரத்திற்காக சுப்புவின் பின்பக்கத்தை கொத்தாக கவ்வும் நாய் என் அதுவும் ஒரு காமெடி கலாட்டா தான்.

கடைசியாக ஹோட்டலில் வைரத்திற்காக நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை அதன் முடிவு கூட காமெடி கலாட்டா தான். அவ்வளவு தான் அத்துடன் நான்கு மொக்கப்பாடல்கள், இருபது சீன் சேர்த்து படத்தை முடித்து விட்டிருக்கிறார்கள்.

படத்தில் முதல் வேஸ்ட் பாடல்கள் தான். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் லாயக்கே இல்லை. பின்னணி இசையும் அப்படித்தான். அதுவும் ஹோட்டலில் புதுமையாக இருப்பதாக ஓரு ராப் போன்ற பாடல் இருக்கே மகா கொடுமை.

என் மனம் கவர்ந்த அஞ்சலியா அது, நெசமாத்தான் சொல்லுறியா என்று தமிழ் எம்ஏ வில் கொஞ்சியும், சேர்மக்கனியாக அங்காடித்தெருவில் வாழ்ந்தும், மணிமேகலையாக எங்கேயும் எப்போதும் படத்தில் அசத்திய அஞ்சலியை உரித்த கோழியாக்கி விட்டிருக்கிறார்கள். அஞ்சலிக்கு முகம் தான் அம்சம், ஒரு சாத்வீக பெண்ணை பிரச்சோதகமாக்கி இருக்கிறார்கள். நமக்கு தான் பயானகமாகி விட்டது.

ஓவியாவின் முகத்தை பார்த்து இதுவரை ஏதோ பள்ளி செல்லும் பெண்ணை நடிக்க அழைத்து வந்து விட்டிருக்கிறார்கள் என்று தான் பார்த்தேன். ஆனால் இந்தப்படத்தில் அம்மணிக்கு நெறஞ்ச மனசு என்பது தெரிகிறது. எப்பாடி எவ்ளோ பெரிய மனசு (சத்தியமா மனசை மட்டும் தான் சொன்னேன்). காசு கிடைக்கிறதே என்பதற்காக ஹோம்லி பிகர் என்ற கிடைத்த பெயரை ரூம்லி பிகர் என்று மாற்றி விடுகிறார்.

சந்தானத்திற்கு மற்றுமொரு படம் அவ்வளவு தான். அவரின் உதவியாளர்கள் அவரை விட பயந்தாங்கொள்ளியாக இருப்பதும் சரியான காமெடி. ஒரு சண்டைக்கு கிளம்பும் போது பாதியில் சுகர் மாத்திரை போட வேண்டுமென்பதற்காக எஸ்கேப்பாக முயற்சிக்கும் தினேஷின் காமெடியும், கடைசியில் எல்லோரும் படுங்கடா என்றதும் மூவரும் சேர்ந்து சந்தானத்தின் மீது படுத்து நசுக்குவதும், கடைசியில் கோழியிடம் மிதிபட்ட ..ஞ்சாக நசுங்கிப் போவதும் காமெடியும் சூப்பர் தான்.

கேபிள் அண்ணன் வசனத்தில் உதவியாக இருந்திருக்கிறார். வசனம் உண்மையில் அசத்துகிறது. எனக்கு தான் நம்ம சிபி போல ஞாபகத்தில் இருந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.

பார்க்க கூடாத படமும் அல்ல, பார்த்தே தீர வேண்டிய படமும் அல்ல, ஒரு முறை பார்த்து சிரித்து விட்டு வீட்டிற்கு வந்து யோசிக்கலாம் ஏண்டா இந்த மொக்க ஜோக்குக்கெல்லாம் சிரித்தோம் என்று.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment