Sunday 24 May 2015

மனம் கொத்திப் பறவை - பழசு 2012

காலையிலேயே இந்த சினிமாவுக்கு போகலாம்னு ப்ளான் போட்டேன். முன்பு போல் இல்லையே, இப்போது பணியில் இருக்கிறோமே, அதனால் என் நண்பனிடம் அட்டன்டென்ட்ஸ் கார்டை பார்த்துக்க சொல்லி விட்டு 11 மணிக்கு பேக்டரி டிரெஸ்ஸை மாற்றி விட்டு வெளிப்படும் முன் போன் வந்தது.

சிக் லீவில் சென்றிருந்த எங்கள் SS (Shop Superindent) பணிக்கு வந்து விட்டதால் எங்களை பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பியதாக நண்பன் அழைத்தான். போச்சுடா என்று சினிமா ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு SSஐ பார்க்க சென்றேன். அறிமுகம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் ஷெட்டுக்கு திரும்பி விட்டேன்.

மாலை வீட்டிற்கு வந்தால் கரண்ட் இல்லை. டிரான்ஸ்பார்மரில் ஏதோ பழுதாம், அதனால் இரவு எட்டு மணி வரை கரண்ட் வராது என்று என் இல்லாள் கூறினாள். அது வரை என்ன செய்வது என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு ராக்கி தியேட்டருக்கு சென்றேன். அப்பொழுது தெரியாமல் போய் விட்டது, சனியனை தூக்கி பனியனில் போட்டுக் கொண்டது.

படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே தெரிந்த விட்டது படம் மொக்கை என்று. எழிலின் இதற்கு முந்தைய படமான தீபாவளி நிறை பேருக்கு பிடிக்காது, ஆனால் எனக்கு பிடிக்கும். அதனால் தான் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சில காட்சிகளிலேயே தெரிந்து விட்டது படம் வேலைக்காகாது என்று.

படத்தின் கதை என்ன? எதிர் வீட்டுப் பெண்ணை காதலிக்கும் நாயகன் அவளின் முரட்டு சொந்தக்காரர்களின் எதிர்ப்புகளை சமாளித்து பின்னர் அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்யும், இதுவரை ஆயிரம் முறை வந்த அரதப்பழசான கதை தான். அதையாவது சுவையாக சொல்லியிருக்கிறார்களா என்றால் அதுக்கும் பெப்பே தான்.

படத்தில் ஏகப்பட்ட படங்களில் இருந்து சுடப்பட்ட காட்சிகளால் நிரப்பியிருக்கிறார்கள். தெரியாது என்று நினைத்தார்களா இல்லை தெரிந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்களா என்பது அந்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கே வெளிச்சம்.

சிவகார்த்திகேயன் காமெடியனாக நடிப்பதே அவருக்கும் அவரது எதிர்காலத்திற்கு நல்லது. 3 படத்தில் சில காட்சிகள் வந்தாலும் அதில் பெயரைத் தட்டிச் சென்றவர் அவர். சந்தானத்திற்கு அடுத்த இடத்திற்கு வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றால் கஷ்டம் தான்.

கதாநாயகி ஆத்மியா காதலன் படத்தில் வடிவேல் சொல்வது போல் முகத்தில் ஜக், உருவ அமைப்பில் பச்சக். சம்பளம் கம்மியாக கேட்டதால் நடிக்க வைக்கப்பட்டிருப்பார் போல. அவரது தோற்றமும் நடிப்பும் எனக்கு மட்டுமல்ல, திரையரங்கில் என்னுடன் படம் பார்த்த பெரும்பாலானோரின் கருத்தும் இதுதான்.

சிங்கம்புலி, சூரி, சாம்ஸ், ஸ்ரீநாத் மற்றும் இரண்டு நண்பர்கள் ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். நமக்குத்தான் சிரிப்பு வரமாட்டேன் என்கிறது. ரவிமரியா ஒரு பேட்டியில் இந்தப்படத்தில் தான் நகைச்சுவையாக நடித்திருப்பதாக கூறினார். இது தானா உங்க நகைச்சுவை.

யாருப்பா உங்களுக்கு முரட்டு மீசை வைத்தவனெல்லாம் வில்லனாகத்தான் இருப்பான் என்று சொன்னது. எங்க ஊருக்கு வாங்க இதை விட பெரிய மீசை வைத்தவனெல்லாம் எவ்வளவு சாதுவாக இருக்கானுங்கன்னு நான் காட்டுறேன்.

எவனோ ஒருத்தன் ஏதோ ஒரு பதிவில் படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாக போட்டிருந்தான். எவன்டா அவன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் அந்தப் பதிவில் நல்லா நாலு கெட்ட வார்த்தையுடன் கூடிய பின்னூட்டம் இடலாம் என்றிருக்கிறேன்.

படத்தின் ஒரே ஆறுதல் எங்கேயும் தென்படாத கவர்ச்சி தான். குடும்பமாக பார்த்தால் தாவணிக்கனவுகள் படத்தில் பாக்யராஜ் செய்வது போல் காசை கீழேப் போட்டு தேடச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

யாரோ நண்பர்கள் காசு கொடுக்கிறார்களே என்பதற்காக பார்க்கும் நம்மை இந்த அளவுக்கு சோதிக்க வேண்டுமா? சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். நமக்குதான் சிரிப்பு வரவில்லை. படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பதற்கு இவ்வளவு சிரமப்பட்டதற்கு பதிலாக தியேட்டருக்கு ஐந்து பேரை சம்பளத்திற்கு அமர்த்தி கிச்சுகிச்சு மூட்டியாவது சிரிக்க வைத்திருக்கலாம்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment