Tuesday 26 May 2015

தாண்டவம் - பழசு 2012

இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ராக்கியில் காலை 8 மணிக்கு சிறப்பு காட்சி போட்டிருந்தார்கள். நானும் போக நினைத்தேன். வேலை காரணமாக போக முடியவில்லை. ஆனால் வேலைக்கு போகும் போது பார்த்தால் கூட்டம் பட்டையை கிளப்பிக் கொண்டு இருந்தது. சரி 11.30 காட்சிக்காவது போகலாம் என்று நினைத்திருந்தேன். வேலையை முடித்து கிளம்பிக் கொண்டு இருக்கும் போது சக ஊழியர் கண்ணை சிமிட்டினார்.

படமா சரக்கா என்று பட்டி மன்றம் நடந்ததில் அடுத்த காட்சிக்கு கூட போகலாம் என்று படத்தை ஒத்தி வைத்து பாருக்கு கிளம்பி வேலையை வெற்றிகரமாக முடித்து விட்டு 3 மணிக்கு காட்சிக்கு டிக்கெட் எடுக்க வந்தால் மொத்தமே 50 பேர் தான் இருந்தார்கள். நான் அப்போதே உசாராகியிருக்க வேண்டும். போதை சற்று கண்ணை மறைத்ததால் தடுமாறி விட்டேன். படம் பார்த்து விட்டு வெளியில் வந்தால் தக்காளி தலைவலி தான் மிச்சம். வீட்டுக்கு போய் வீட்டம்மாகிட்ட திட்டு வாங்கி்ட்டு தூங்கியிருந்தா கூட நல்லாயிருந்திருக்கு்ம் என்ற ஞானம் படம் முடிந்த பின்பே வந்தது.

உலகசினிமாவின் காப்பியாக இருந்தாலும் நான் முன்பே பார்க்காததால் தெய்வத்திருமகள் பிடித்திருந்தது. இந்த படம் எந்த ஒரு புதுமையும் இல்லாமல் சப்பென்று வந்தது தான் கொடுமையாகி விட்டது. அரதப்பழசான கதையை லண்டன், கண்பார்வையற்றவர் என்று கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். மனைவியை கொலை செய்த வில்லன்களை துவம்சம் செய்யும் அதே பழைய குரோதம் டைப் கதை தான்.
வழக்கம் போல் விக்ரம் நடிப்பு அருமை. கண்ணில்லாத ஒருவன் செய்யும் அனைத்து செயல்களையும் அதே இயல்புடன் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் தூள் தான். ஒரு சண்டையில் வில்லன்கள் சட்டையை கிழித்து உடம்பை காட்டும் காட்சியில் என்னை மறந்து விசிலடித்தேன். சில சமயங்களில் கழுத்துப் பகுதியில் தோல் தளர்ந்து வயதானது அப்பட்டமாக தெரிகிறது.

அனுஷ்கா முகமும் சரி, உடல் வனப்பும் சரி பார்ப்பவர்களையெல்லாம் ஜொள்ளு விட வைக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் முயற்சித்து இருக்கிறார். ஒரு காட்சியில் ஆபரேசன் முடிந்து ஒரு ஆண்ட்டி டாக்டரும் இவரும் வரும் போது இவரும் ஆண்ட்டி போலவே தெரிகிறது தான் மைனஸ்.

எமிஜாக்சன் அம்சமாக இருக்கிறார். இவர் தமிழில் பேசுவது கொச்சையாக இல்லாமல் இயல்பாகவே இருக்கிறது. மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார்கள் போல. விக்ரமை ஒருதலையாக காதலித்து காத்துகொண்டே இருக்கிறார். நமக்கெல்லாம் இது போல் வாய்க்காது போல.

சந்தானம் முதல் காட்சியிலிருந்து அதகளத்தை துவக்கி விடுகிறார். படத்தின் டென்சனை குறைத்து கலகலப்பாக மாற்றுகிறார். இவரது வசனங்கள் படபடவென திரையரங்கிற்குள் பட்டாசை வெடிக்க வைக்கின்றன.

நாசர் இலங்கை தமிழர் போலீஸ். ஓரு நாட்டை பூர்வீகமாக கொண்டவருக்கு எப்படி மற்றொரு நாட்டில் காவல்துறையில் உயரதிகாரி வேலை கொடுக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. வசனம் தமிழில் அமைய வேண்டும் என்பதற்காக இருக்குமோ.

ஜெகபதிபாபு நல்லவராக அறிமுகமாகி வில்லனாவது தான் எதிபாராத ட்விஸ்ட். லட்சுமி ராயும் துக்கடா கேரக்டரில் வந்து போகிறார். தம்பிராமையா, டெல்லிகணேஷ், சரண்யா போன்றோரும் இருக்கிறார்கள்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் உயிரின் உயிரே பாடலுக்கு பெண்கள் கூட தம்மடிக்க எழுந்து போகிறார்கள். கணவர் காவல்துறையில் என்னவாக இருக்கிறார் என்று கூட தெரியாமல் அனுஷ்கா இருப்பதெல்லாம் பூச்சுற்றும் வேலை.

அதுக்காக படத்தை மோசம், வேஸ்ட் என்று ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது. கொஞ்சம் பார்க்கிறார் போல கொடுத்திருக்கார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல் திரையரங்கிற்கு சென்றால் ஒருமுறை பார்க்கலாம்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment